Sunday 5 June 2016

அரசர் கோவில் ஆறுவிரல் பெருந்தேவி தாயார்!



ஆறு விரல்கள் கொண்ட பெருந்தேவித் தாயார் வாழும் கோவில், திருஊரல் திருவிழாவிற்கு புகழ்பெற்ற ஆலயம், குச்சியை நான்காகப் பிளக்கும் அதிசய கல் துளை கொண்ட ஆலயம், சுக்ரன் ஐக்கியமான கோவில்  எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட  தலமாகத் திகழ்கிறது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசர்கோவில். இந்த ஆலயத்தில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் அருள்பாலித்து வருகிறார்.

சகல ஐஸ்வர்யங்களையும் நமக்கு தருபவர்கள், அறுபத்தி நான்கு லட்சுமிகள். எல்லா லட்சுமிகளுக்கும் தாயார் இந்த சுந்தர மகாலட்சுமி தான். இவருக்கு பெருந்தேவி தாயார் என்ற திருநாமமும் உண்டு. சுந்தர மகாலட்சுமி தாயாருடன் உடனுறைபவர் ‘கமல’ வரதராஜ பெருமாள். கமல வரதராஜர் காஞ்சி வரதருக்கும் மூத்தவராம்.

கமல வரதராஜர் உடனுறை சுந்தர மகாலட்சுமியும் அரசர் கோயிலில் எழுந்தருளியது குறித்து புராண வரலாறு என்ன சொல்கிறது?

பிரம்மா பாப விமோசனம் தேடிக் கொண்டிருந்த சமயம். பல தவச் சீலர்களை கலந்தாலோசிக்கிறார் பிரம்மா. மண்ணாளும் வேந்தனும், விண்ணாளும் மாதவனும் சேர்ந்து எங்கு காட்சி தருகிறார்களோ அந்தத் திருத்தலத்தில் அவர்களின் தரிசனம் கிடைத் தால் தான் பாப விமோசனம்" என்று முனிவர்கள் சொல்கிறார்கள். இதெல்லாம் வைகுண்டவாசனின் விளையாட்டுதானே!

பூலோகத்துக்கு வரும் நாராயணன், பாலாற்றங்கரையில் வாசம் செய்கிறார். அந்த சமயம் ஜனக மகாராஜாவும் அங்கே வருகிறார். ஆண்டவரும் அரசரும் அங்கே சந்திக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட பிரம்மா விரைந்து வந்த இருவரையும் தரிசனம் செய்கிறார். நாராயணர் அவருக்கு பாபவிமோசனம் கொடுத்து, பாலாற்றிலிருந்து மண் எடுத்துச் சென்று யாக குண்டம் கட்டி வேள்வி செய்யச் சொல்கிறார். பிரம்மா மண்ணை எடுத்துக் கொண்டு போய் காஞ்சிபுரத்தில் வேள்வியைத் துவக்குகிறார்.

இந்த நிலையில் பாற்கடல்வாசனைக் கண்ட ஜனகர் தினசரி அவருக்கு பூஜை செய்து வருகிறார். ஒரு நாள் ஜனகர் ஏதோ வேலையாகச் சென்றவர் பூஜை நேரம் முடிந்ததும் திரும்புகிறார். வந்து பார்த்தால் பூஜை நடந்து முடிந்ததற்கான தடயங்கள் தெரிகின்றன. அதிர்ச்சியடைகிறார் ஜனகர். பெருமாளே வந்து தனக்குத் தானே பூஜை செய்துவிட்டு போனதாக சொல்கிறார் காவலாளி. அதிர்ச்சியடையும் ஜனகர், ‘இப்படி நடந்து விட்டதே’ என்று மனம் கலங்குகிறார்.

இதற்கிடையில் பெருமாள் ஜனகர் இருந்த இடத்துக்குப் போய் தனக்குத் தானே பூஜை செய்து கொண்டதைக் கேள்விப்பட்ட மகாலட்சுமி கோபப்படுகிறார். அவரை சமாதானப்படுத்தும் விதமாக இங்கே வந்து என்னை தரிசிப்பவர்களைவிட உன்னை தரிசிப்பவர்களுக்கே, ஐஸ்வரியங்கள் சேரும்" என்று சொல்கிறார்.

தன் தவறுக்கு பரிகாரமாக ஜனகர் பெருமாளுக்கு தேவ சிற்பி விஸ்வகர்மா மூலம் கோயில் கட்ட, அது அரசர் கோயிலென அழைக்கப்பட்டது. அங்கே ‘கமல’ வரதராஜரும் சுந்தர மகாலட்சுமியும் எழுந்தருளி கால, காலமாக மக்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார்கள்.


இந்தக் கோயிலில் முதலில் தாயாரைத்தான் வணங்க வேண்டும்.

கிழக்கு நோக்கி அமைந்துள்ள பெருந்தேவி தாயார் சன்னிதி பாலாற்றின் அழகையும், அழகிய கல் மண்டபத்தையும் நோக்கியபடி உள்ளது. பெருந்தேவி தாயார் முப்பெரும் சக்திகளின் ஆதாரப் பீடத்தில், பத்மாசனம் இட்டு அமர்ந்த நிலையில் காட்சி தருகின்றார். தாயாரின் காதுகளில் பத்தி, குண்டங்கள், கைகளில் அணிகலன்கள், சங்குக் கழுத்தில் மூன்று துளசி மணி மாலைகள், துளசி மணி மாலையின் முடிவில் துளசிப் பத்திரம் போன்றவையும், நெற்றியில் சூரிய –சந்திர பிரபைகளும் அமைந்துள்ளது  தனிச்சிறப்பு ஆகும்.

இந்த தாயாரின் வலது காலில் காணப்படும் ஆறுவிரல்கள் ஒரு அதிசய அமைப்பாகும். ஆறு  என்ற எண்ணிக்கை சுக்ரனுக்குரியதாகும். சுக்ரன் இந்தத் தாயாரிடம் ஐக்கியமானதாகத் தலபுராணம் கூறுகிறது. இத்தலத்தின் மேற்கே பழமையான ஆஞ்சநேயர் கோவிலும் இருக்கிறது




தாமரை பீடத்தில் பத்மாசன நிலையில் காட்சி கொடுக்கிறார் தாயார். மேல் இரு கரங்களில் தாமரை. கீழ் இரு கரங்கள் அபய, வரத முத்திரையுடன் ரட்சிக்கின்றன. பத்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் தாயாரின் வலது பாதத்தில் சுண்டு விரலுக்கு அடுத்து ஆறாவது விரல். பெயருக்கு ஏற்றார் போல் ‘சுந்தர’மாக காட்சியளிக்கிறார்.
 
வெள்ளிக் கிழமையன்று சுக்கிர ஹோரையில் தரிசனம் செய்தால் எல்லா ஐஸ்வர்யங்களையும் கொடுப்பாள் மகாலட்சுமி. தாயார் சன்னிதி சடாரியில் மேல் உள்ள பாதத்திலும் ஆறு விரல்கள்.

தாயாருக்கு பலாச்சுளை நைவேத்தியம் சிறப்பு. இப்படி பலாச்சுளைகளை கொடுத்த சித்தரின் சிற்பம் மண்டபத்தில் இருக்கிறது. தாயார் கருவறை முன் மண்டபம் முழுக்க சிற்பங்களின் அணிவகுப்பு.

அபிஷேக நீர் வெளிவரும் கோமுகம் குபேர கோமுகம் என்கிறார்கள்.



பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம். வலது கரத்தில் தாமரை மொட்டு. தாயார் கொடுத்தது. ‘கமல’ வரதராஜர் என்ற திருநாமத்துக்கு காரணம் புரிந்திருக்குமே! பிள்ளையார் தும்பிக்கை ஆழ்வார் என்று வணங்கப்படுகிறார். பெருமாள் சன்னிதியில் விஷ்வக்சேனர், மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகன் ஆகியோர் உற்சவர் கோலத்தில் இருக்கிறார்கள்.  கருவறையில் அழகிய லட்சுமி நரசிம்மர் உற்சவத் திருமேனியும் இருக்கிறது.

கோயிலில் கஜபூஜை செய்தால் விசேஷம். மேலும் பின்புறம் ஓடும் பாலாற்றில் பித்ரு காரியம் செய்வது சிறப்பு. விஜயநகர பேரரசர்கள், மூன்றாம் ராஜராஜன், ஜடாவர்மன், சுந்தர பாண்டியன் ஆகியோர் கோயிலுக்கு திருப்பணி செய்ததை கல்வெட்டுக்கள் சொல்வது மட்டுமல்லாமல்; தொன்மையையும் வெளிப்படுத்துகின்றன.

கோயிலின் தலம் அரசமரம். இறைவன் திருப்பெயர் திருவரசு நாயனார், திருவரசூர் எம்பெருமாள் என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அரசர் கோவில் வரதராஜப் பெருமாளை, பிரம்மா தவமிருந்து வழிபட்டதால்  பூலோக வைகுண்டம் என்ற சிறப்புப் பெயரை இத்தலம் பெற்றுள்ளது.

வெள்ளிக்கிழமை தோறும் சுக்ரன், இத்தல தாயாரை வழிபடுவதாகத் தலபுராணம் தெரிவிக்கிறது. மேலும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் பாலாறு, அரசர் கோயில் தலத்தில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் அதிசயம் கொண்டதாக அமைந்துள்ளது. இது தட்சிண பிரவாகம் என்று அழைக்கப்படுகிறது.

ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரம் இல்லை. பலிபீடம், கொடிமரத்தை ஒட்டி, கருடாழ்வார் சன்னிதி, கிழக்கு முகமாய் காணப் படுகிறது. திருச்சுற்றின் வலதுபுறம் கிழக்குநோக்கிய ஆண்டாள் சன்னிதி, வலதுபுறம் கிழக்கு நோக்கிய பெருந்தேவி தாயார் சன்னிதிகள் இருக்கின்றன. கருடாழ்வார் சன்னிதியின் எதிரே 24 தூண்கள் கொண்ட அழகிய கல் மண்டபம் உள்ளது.

குச்சியை நான்காக பிளக்கும் கல் தூண்

பெருந்தேவி தாயார் சன்னிதியின் முன்மண்டபம் சிற்பக் கலைநயம் மிக்கதாகும். தாயார் சன்னிதி கருவறை முன் மண்டபத்து தூண்கள் ஒவ்வொன்றையும் தட்டினால் வித்தியாசமான சப்தத்தை எழுப்புகின்றன. அமர்ந்த நிலையில் உள்ள சிறிய யாழிகளின்  தலையில் இருந்து எண் பட்டையிலான கல்தூண்கள் ஐந்து அமைந்துள்ளன. இவற்றை பதினாறு பட்டைகள் கொண்ட தூண்  ஒன்று உள்ளே நின்று இணைக்கிறது. அனைத்து தூண்களையும் இணைத்து ஒரே கல்லில் செதுக்கியுள்ள கலைநயம் போற்றத் தக்கதாகும். தாமரை இதழ்களோடு ஒவ்வொரு தூணுமே அமைந்துள்ளன.

மண்டபத்தின் வலதுபுறம் உள்ள தூணின் உச்சியில் தாமரை இதழ்களில் குச்சி நுழையும் அளவிலான துளை ஒன்று காணப்படுகிறது. அதில் ஒரு சிறு  ஈர்க்குச்சியை நுழைத்தால் மறுபுறம் உள்ள துளை வழியே அது நான்காகப் பிளந்து வெளிவருகிறது. இந்த அதிசயம் சிற்பியின் கைவண்ணத்தைப் பறைசாற்றுவதாகவே அமைந்துள்ளது.

திருஊரல் விழா
இவ்வாலயத்தின் மற்றொரு தனிச்சிறப்பு, சித்ரா பவுர்ணமியில் பாலாற்றில் நடைபெறும் திருஊரல் திருவிழாவாகும். ஊரல் என்பதற்கு நீர் சுரத்தல், குளிர்ச்சி என்பது பொருள். சித்திரையின் வெப்பத்தைத் தணிக்க, பாலாறு தன்னையும், தன்னைச் சார்ந்த  மக்களையும் குளிர்விப்பதாக இவ்விழா அமைந்துள்ளது.

சித்திரையில் வரும் பவுர்ணமி அன்று காலை வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியோடு, லட்சுமி நாராயணபுரம், பூதூர் வழியே ஈசூர் சென்று அங்குள்ள பாலாற்றங்கரைக்கு எழுந்தருள்வார். அங்கே பெருமாளுக்குத் திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும். (காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் சார்பாகவும், காஞ்சிக்கு அருகே ஓடும் பாலாற்றில் சித்திரா பவுர்ணமி அன்று திருஊரல்விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது)

பாலாற்றில் சுமார் 100 சதுர மீட்டர் மணல் திட்டு உருவாக்கப்பட்டு, அதைச் சுற்றி 2 மீட்டர் அகலத்தில் மணலை அகழ்ந்து எடுத்து நீர் சுரக்கச் செய்வார்கள். பெருமாள் மணல் திட்டில் வீற்றிருக்க, சக்கரத்தாழ்வார் அந்த நீரில் சுற்றி வந்தபின், தீப ஆராதனைகள் காட்டப்படும். பிறகு நிலவொளியில் விழா முடியும் வரை, விடியும் வரை அங்கேயே  காட்சி தருவார். விடியலில் மீண்டும் சக்கரத்தாழ்வார் நீரில் சுற்றி வருவார். அதன்பின் தீபாராதனைகள் முடிந்து பழையபடியே, அரசர் கோவில் வந்து சேர்வார். இவ்விழாவே திருஊரல் விழா என்று அழைக்கப்படுகிறது. இந்த விழாவைக் காண பல்வேறு ஊர்களில் இருந்தும், பல்லாயிரக்கணக்கானோர் திரள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


விழாக்கள்!
சித்திரை தமிழ்ப்புத்தாண்டு, சித்ரா   பவுர்ணமி, திருஊரல் விழா, ஆனித் திருமஞ்சனம், ஆடிப் பூரம், புரட்டாசி மூன்றாம் சனி, பங்குனி உத்திரம் என விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. வார நாட்களில் ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய மூன்று நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப் படுகின்றன. காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரயிலும் கோவில் நடை திறந்திருக்கும்.
 

அமைவிடம்

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில், படாளம் அருகே பலாற்றங்கரையில் அரசர் கோவில் அமைந்துள்ளது. சென்னைக்கு தென்மேற்கே 67 கி.மீ, செங்கல்பட்டிற்குத் தென்மேற்கே 27 கி.மீ, காஞ்சிபுரத்திற்குக் கிழக்கே 60 கி.மீ. தொலைவிலும், படாளம் கூட்டுச் சாலையின் கிழக்கே 7 கி.மீ. தொலைவிலும், தாம்பரம் – திண்டிவனம் ரெயில் மார்க்கத்தில் படாளம் ரெயில் நிலையத்திற்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவிலும் அரசர் கோவில் இருக்கிறது.


தொடர்புக்கு: 88706 30150
 
 
 
 
 

No comments:

Post a Comment