Monday 27 February 2017

திருக்கோகர்ணம் பிரகதாம்பாள்!



உமாதேவி, விநாயகர், முருகன் ஆகியோருடன் சிவபெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலங்கள் தமிழ்நாட்டில் நிறைய உண்டு. அப்படிப்பட்ட தலங்களில் திருக்கோகர்ணமும் ஒன்று. புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலம் வெள்ளாற்றின் வடகரையிலும் புதுக்கோட்டை நகரின் மேற்குப் பகுதியிலும் அமைந்துள்ளது. 


ஆதிகாலத்தில் மகிழ மரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் மகிழவனம் என்று அழைக்கப்பட்டது.  


இங்கு கபில முனிவரும் மங்கள முனிவரும் ஆசிரமம் அமைத்து சிவபெருமானை வழிபட்டு வந்தனர்.  ஒருநாள் தேவலோகத்தில் இந்திர சபை கூடியது. தேவர்களும் முனிவர்களும் சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். 


ஆனால், தேவலோக பசுவான காமதேனு குறித்த நேரத்தில் வராமல் காலதாமதமாக வந்தது. இதனால் கோபமடைந்த தேவேந்திரன் காமதேனுவை பூலோகத்தில் காட்டுப் பசுவாக ஆகும்படி சாபமிட்டான். இதனால் வேதனைப்பட்ட காமதேனு இந்திரன் மனைவியான இந்திராணியின் வழி காட்டுதலால் கபில வனத்தில் காட்டுப்பசுவாக வந்து சேர்ந்தது. கபில வனத்தில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கத்தை தினமும் கங்கை நீரைக் கொண்டு வந்து பூஜித்தால் சாப விமோசனம் பெறலாம் என கபில முனிவரும் மங்கள முனிவரும் கூறினர். அதன்படி அப்பசு கங்கை நீரை தன் காதுகளில் நிரப்பிக் கொண்டு வந்து மகிழவனேசுவரருக்கு தினம் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. அபிஷேகம் செய்த பின் எஞ்சிய நீரைத் தன் கொம்புகளால் பாறையைக் கீறி ஏற்படுத்திய பள்ளத்தில் விட்டு வந்தது. 



அந்த பள்ளத்தில் தற்போது நீர் நிறைந்திருக்கும் காட்சியை இப்போதும் காணலாம். நீர் நிறைந்த அந்த பள்ளம் கங்கா தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. 


இந்தப் பசுவின் பக்தியை சோதிக்க விரும்பினார் இறைவன். ஒருநாள் காமதேனு இறைவனை வழிபட்டுக் கொண்டு வரும்போது இறைவன் வேங்கை உருவம் கொண்டு அந்த பசுவின் முன்னே வந்து நின்றார்.  வேங்கையைப் பார்த்த பசு திகைத்து நின்றது. வேங்கை பசுவைத் தின்னப் போவதாகப்பயமுறுத்தியது. அப்போது பசு வேங்கையிடம் இறைவனை வழிபட்டு தன்  கடமைகளை முடித்து விட்டுத் திரும்பி  வருவதாகவும் அப்போது தன்னைக் கொன்று பசியாறலாம் என்றும் வேங்கையிடம் சத்தியம் செய்தது.  வேங்கையும் இதற்கு சம்மதம் தெரிவித்தது.


காமதேனு சொன்னபடியே சென்று தன் கடமைகளை முடித்து விட்டு திரும்பி வந்து வேங்கையின் முன் நின்றது. காமதேனுவின் கடமை உணர்வையும் கடவுள் பக்தியையும் கண்டு மனம் நெகிழ்ந்த வேங்கை உருவில் இருந்த இறைவனும் உமாதேவியும் காளை மீது அமர்ந்து காமதேனுக்கு காட்சி தந்தனர்.

காமதேனு சாப விமோசனம் பெற்றது. காமதேனு பசு தன் காதுகளில் அபிஷேக நீர் கொண்டு வந்து வழி பட்டதால் இத்தலத்திற்கு திருக்கோகர்ணம் (கோ என்றால் பசு. கர்ணம் என்றால் காது என்று பொருள்) என்ற பெயர் ஏற்பட்டது. 

இத்தலத்திலுள்ள ஆலயம்தான் அருள்மிகு பிரகதாம்பாள் ஆலயம். ஆலயம் தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. 


பெரிய கோயிலென்று அழைக்கப்படும் இந்த ஆலயம் 2000 ஆண்டுகள் பழமையானது. நீண்ட அலங்கார மண்டபத்தைத் தாண்டியதும் மகா மண்டபம் உள்ளது. மண்டபத்தின் இடது புறம் அன்னை பிரகதாம்பாள் சந்நதி உள்ளது. அன்னை நின்ற கோலத்தில் இன்முகத்துடன் அருள்பாலிக்கிறாள். 


ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தான மன்னருக்கு நாணயம் அடிக்கும் உரிமை வழங்கப்பட்டது. மன்னர் தன் மக்களையும் தன்னையும் காக்கும் பிரகதாம்பாள் உருவம் பதித்த நாணயத்தை வெளியிட்டார்.  அதை அம்மன் காசு என்று மக்கள் கொண்டாட,  அந்தப் பெயர் நாளடைவில் மருவி அரைக்காசு  என்றானது.  அம்மனும் அரைக்காசு அம்மன் என்றே அழைக்கப்படலானாள்.  




அந்த செப்புக்காசை வீட்டின் பூஜையறையில் வைத்து வேண்டிக்கொண்டால் களவுபோன பொருள் கிடைக்கும்.  நினைத்த செயல் நடக்கும்.  வீட்டில் ஐஸ்வரியம் பெருகும்  என நம்புகின்றனர் பக்தர்கள். 

இந்த ஆலயம் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டதாகவே தெரிகிறது. மண்டபத்தின் நடுவே பிள்ளையாரும் தட்சிணாமூர்த்தியும் ஒரே சந்நதியில் அருள்பாலிக்கின்றனர். இது அபூர்வமான அமைப்பு என்கின்றனர். 





அதையடுத்து கோகர்ணேஸ்வரரின் சந்நதி உள்ளது. இங்கு வடதிசை நோக்கி ஒரு பிள்ளையாரும், தென்திசை நோக்கி கங்காதரரும், அருள்பாலிக்கின்றனர்.

 


கொடிமரம் வந்து படிகள் வழியே மேலே சென்றால் சுனை இருப்பது தெரியும். இதுவே கங்கா தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. 

சுனைக்கு கிழக்கில் ஜ்வரேஷ்வரர் சந்நதி உள்ளது. 

கடுமையான ஜூரம் குறைய இவருக்கு இரண்டு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்தால் ஜூரத்தின் கடுமை குறையும் என்கின்றனர் பக்தர்கள். 

இந்த ஆலயத்தில்  நவகிரகங்கள் இல்லை. ஆனால், சூரிய சந்திரர் இருவர் மட்டும் உள்ளனர். 





இந்த ஆலயத்தின் ஆதிமூர்த்தி மகிழவனநாதர். இந்த லிங்கத்தின் மீது பசுவின் காலடிச் சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறுகின்றனர். 



இறைவியின் பெயர் மங்கள நாயகி. 

ஆலயத்தின் தல விருட்சம் மகிழமரம்.  

இந்த ஆலயத்தில் திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லை. சித்திரையில் சித்திரை பெருந்திருவிழாவும், வைகாசியில் வசந்த விழாவும், ஆனியில் ஊஞ்சல் திருவிழாவும், ஆவணி மூல நாளில் காமதேனுவுக்கு  மோட்சம் கொடுத்த திருவிழாவும் நடைபெறுகிறது. ஐப்பசியில் கந்த சஷ்டி விழா, சூரசம்ஹாரவிழா, அன்னாபிஷேகமும், புரட்டாசியில் ஒன்பது நாட்கள் நடைபெறும் விழாவைத் தொடர்ந்து 10ம் நாள் அம்பு போடும் விழாவும் நடைபெறும். 


திருமணம் நடந்தேற வேண்டியும் குழந்தை  பேறு வேண்டியும் வருவோர் பள்ளியறையில் 48 நாட்கள் பால் வாங்கி வைத்தால் நினைத்த காரியம் கைகூடும் என்கின்றனர் பக்தர்கள். கார்த்திகையில் சொக்கப்பனை கொளுத்தும் விழாவும், மார்கழியில் திருப்பள்ளி எழுச்சி விழாவும், தை மாதத்தில் தைப்பூசத் திருவிழாவும் மாசி மாதத்தில் மகா சிவராத்திரி விழாவும், பங்குனியில் உத்திரத் திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது. புதுக்கோட்டை செல்லும்போது நாமும் ஒருமுறை  அரைக்காசு  அம்மனை தரிசித்துவிட்டு வரலாமே!







No comments:

Post a Comment