Wednesday 30 November 2016

அகிலம் போற்றும் அஸ்வாரூடா தேவி!



இராஜ ராஜேஸ்வரி தேவியின் குதிரைபடைத் தலைவியாக வலம் வருபவள். கையிலே உலக்கை கொண்டு உலாவரும்போது தண்டினியாகக் காட்சி அளிப்பவள்.

வெள்ளைக் குதிரையின் மீது இடக்கையிலே கடிவாளத்தைப் பற்றிக் கொண்டு வலக்கையில் உருவிய வாளினை ஏந்திக் கொண்டு ஆரோகணித்து வரும்போது அஸ்வாரூடப்பரமேஸ்வரியாகப் பவனி வருபவள்.



வெள்ளைவெளீர் என பளிச்சிட்ட அவளது குதிரை யாராலும் என்றுமே வெல்ல முடியாத சக்தி மிக்க குதிரையாக இருந்ததினால் அந்த சக்தியை குறிக்கும் சொல்லான அபராஜிதா என்ற பெயரை அந்தக் குதிரை பெற்றது.

சப்த மாதாக்களில் ஒருவராகப் போற்றி வணங்கப்பட்டு வருபவள் வாராஹி தேவி.

சப்த மாதாககளில் ஒருவராகக் கருதப் பட்டாலும் இந்த அம்மையே மூவரும் யாவரும் தேவர்களும் போற்றத்தக்க ஆதிபராசக்தியாகவும் கருதி வழிபடுதலும் ஒரு மரபாக இருந்து வருகிறது. இதனைக் கீழ்வரும் வாராஹி மாலை பாடல் விளக்கும்.

“வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ்வையகத்தில்
காலையும் மாலையும் உச்சியும் ஆக எக்காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹி தன் பாதத்தை அன்பில் உன்னி
மால் அயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே”
 
வாராஹிதேவி சரஸ்வதி தேவியின் ஓர் அம்சமாக விளங்குவதால் இவளே வாக்குக்கு அரசி.
வலிமைக்கு அரசி.
வளமைக்கு அரசி.
செழுமைக்கு அரசி.
செங்கோலுக்கு அரசி.

கருணையின் மொத்த வடிவமாகக் காட்சி தருபவள் வாராஹிதேவி. வாராஹியை வார்த்தாளி என்றும் சொல்லுவார்கள் ஏனெனில் அவள் தன்னுடைய குழந்தைகளின் வாக்கு வன்மையை வலுப் படுத்துகிறாள். எதிரிகளின் வாக்கினைச் சீர்குலைக்கிறாள். அடக்கி வைக்கிறாள்.

 "தேவீம் நித்யப்ரசன்னாம்" என்று தியான ஸ்லோகத்தில் வர்ணிக்கப்படும் வாராஹி தேவி கேட்டதைக் கேட்டவுடனே கேட்டவாறு வழங்கும் இயல்புடையவள்.

தென் திசைத் தெய்வம் என்று வாராஹி அம்மை தியான சுலோகத்தில் போற்றப்படுகிறாள். செந்தமிழால் போற்றினாலும் பேசினாலும் இந்த அம்மைக்கு மிகவும் பிடிக்கும். அப்படியே நெகிழ்ந்து போய் அவர்களது நெஞ்சக் கமலத்தில் எழுந்தருளி பரவசத்தில் ஆழ்த்திடுவாள்.

திருவானைகாவில் எழுந்தருளியிருக்கும் அகிலாண்டேஸ்வரி அம்மன் வாராஹியின் அம்சத்தில் உதித்தவள் என்று சொல்லப்படுகிறது. அரசியல் செல்வாக்குடன் திகழவேண்டுமானால் இவளையே சரணம் அடைதல் வேண்டும். அரசு கட்டிலில் இருப்பவர்கள் தவறு செய்தால் அவர்களை உடனடியாகத் தண்டிப்பதற்கு வாராஹிதேவியின் அம்சமான அஸ்வாரூடா தேவியால்தான் முடியும்.

தர்மம் தழைத்திடவும், அதர்மம் அழிந்திடவும், எங்கும் அமைதி நிலவிடவும், வாராஹி தேவியை ஒருமையுடன் சிந்திப்போம்.

"ஓம் ஐம் க்லெளம் ஐம் மகா வாராஹியே நமக" என்று உச்சாடனம் செய்வோம்.

வாராஹி தேவியின் தரிசனம் காண்போம். அவள் வாரி வழங்கும் பரிசில்களைப் பெற்று ஆனந்தமாக வாழ்வோம்.

”ஐம் க்லெளம் ஐம் எனத் தொண்டர் போற்ற அரிய பச்சை
மெய்யும் கருணை வழிந்தோடு கின்ற விழியும் மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கணெதிரே
வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே”
 
 ஒவ்வொரு வளர்பிறை பஞ்சமியிலும் வாராஹி தேவிக்குச் சிறப்பு வழிபாடு உண்டு. வெள்ளைதாமரை பூவினாலும் ரூபாய் நாணயங்களாலும் அர்ச்சனை செய்யப்படுகின்றது. அர்ச்சனை செய்யப்படும் நாணயத்தி முதல்ல்கக் கொண்டு எந்த செயலை தொடங்கினாலும் அது வெற்றியாக முடியும்.

வாராஹி தேவியை சரணடைந்து வளர்பிறையாகத்  வெற்றிகள் பெறுவோம்!

தினமும் குளித்தப் பின் 108 முறை கீழ்கண்ட ஸ்லோகத்தை ஜபம் செய்தால் நமக்கு ஏற்ப்படும் தீமைகள் அழியும் என்பார்கள்.  அந்த ஸ்லோகம் இது:

அம்பிகா அனாதினிதான அஸ்வாரூட அபராஜிதா
 
இந்த பிரார்த்தனையின் பொதுவான அர்த்தம் இது!

''உலகைக் காக்கும் அம்பிகையின் சக்தியில் இருந்து வெள்ளை குதிரை மீது அமர்ந்தபடி வெளிவந்துள்ள அஸ்வாரூடை தேவியே, உன்னை நான் மனதார தியானிக்கிறேன். நீயே என்னுடன் இருந்துகொண்டு, அலைபாயும் என் மனத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியை கொடுத்து என்றும் அமைதியோடு இருக்க எனக்கு அருள் புரிய வேண்டும். தேவியே உன்னிடமே நான்   முழுமையாக சரணடைகின்றேன்.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள  வைகோம்  மகாதேவர் ஆலயத்தில் அஸ்வாரூடையின் யாகமும், ஹோமமும் நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள்.


 

நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சனேயர்!


திருத்தணியில் இருந்து திருப்பதிக்கு செல்லும் சாலையில் திருத்தணியை அடுத்த நல்லாட்டூர் கிராமத்தின் அருகில் உள்ள கொற்றலை ஆற்றின் கிளை நதிக்கரையில் அமைந்துள்ளது குசஸ்தலை ஸ்ரீ வீரமங்கள ஆஞ்சனேயர் ஆலயம். சென்னையில் இருந்து சென்றால் சுமார் இரண்டு மணி நேரத்தில் நல்லாட்டூரை அடையலாம். ஆந்திரவின் கிருஷ்ணாவரம் கிருஷ்ணா நீர்தேக்கத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர், பள்ளிப்பட்டு மற்றும் குமாரராஜபேட்டை எனும் கிராமத்தில் லவா மற்றும் குசா எனும் பெயர்களில் உள்ள ஆறுகளுடன் இணைந்து குசஸ்தலை எனும் சிறு ஆறாக மாறி இதன் வழியே ஓடுகிறது.
 
 
கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக் காலத்தில் அவருடைய ராஜகுருவாக இருந்தவரும் 1460 முதல் 1539 ஆம் ஆண்டு காலத்தில் வாழ்ந்திருந்தவருமான வியாசராயர் எனும் ராஜகுருவினால் பல இடங்களிலும் ஆஞ்சநேயர் ஆலயங்கள் எழுப்பப்பட்டன என்றும் அவற்றில் ஒன்றே இந்த நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சநேயர் ஆலயமும் ஒன்றாகும் என்கின்றார்கள்.
 
திருத்தணியை அடுத்த நல்லாட்டூரில் எழுந்தருளியுள்ள இந்த ஸ்ரீ வீரமங்கள ஆஞ்சனேயர் ஆலயத்தின் ஹனுமார் ஸ்வயம்பு மூர்த்தி என்று கூறுகிறார்கள்.
 

இந்த ஹனுமானின் சிலை கரும் பச்சை நிறத்திலான பாறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.  இந்த  சிலையின்  சிறப்பு பல உண்டு. இந்த சிலை ஹனுமாரை பால உருவிலான ஹனுமான் என்கின்றார்கள். வலது பக்கத்தை நோக்கி பார்த்தபடி அவர் நின்று இருப்பது விசேஷமானது. வலது கை மேலே தூக்கியபடி இருக்க அதில் அபய முத்திரை காணப்படுகிறது. சிலையின் சிறப்பு இன்னும் பல உள்ளது.
 
 ஹனுமான் நீண்ட வாலின் நுனியில் மணி, தலையில் நாமம், காதுகளில் குண்டலங்கள், கோரப்பற்களுடன் சங்கு, தலை உச்சியில் தாழம்பூ, அருகில் சுதர்சன சக்கரம், கழுத்தில் சாலிக்கிராமத்திலான மாலை, இடுப்பில் துஷ்டர்களை வதம் செய்யும் கத்தி போன்றவற்றுடன் காட்சி தரும் ஆஞ்சநேயர் தனி ஆஞ்சநேயர் அல்ல.
 


சாதாரணமாகவே வாயுவின் புத்திரரான ஆஞ்சநேயரை சிவனின் அவதாரம் அல்லது சிவனின் அம்சம் என்பார்கள். ஆகவே மகாபாரத யுத்த காலத்திலே பூலோகத்தில் கொடுமைகளை செய்து வந்திருந்த அரக்கர்களை வதம் செய்து மக்களை துயரங்களில் இருந்து மீட்க இங்கு வந்து அவதரித்திருந்த ஆஞ்சநேயருக்கு அநேக சக்தி தரும் வகையில் அவருடைய உருவில் பல்வேறு அம்சங்களை சிவபெருமான் கொடுத்தார். 
 
  தலையில் ராமர்  பாதம், இடது கையில் தாமரைப் பூ உருவில் மகாலஷ்மி, காதுகளில் அணிகலன்களாக காளி தேவி, கோரைப் பற்களாக துர்க்கை, இடுப்பில் கத்தியாக பரசுராமர், நெற்றியில் திருநேத்ரமாக (கண்) சிவபெருமான், இருபுறங்களிலும் சங்கும் சக்கரமுமாக விஷ்ணு பகவான், கால்களில் தண்டையாக கிருஷ்ணர் என பல தெய்வங்கள் ஆஞ்சநேயரின் உடலில் குடியேற, அங்கு வந்த பார்வதி தேவி அனைவரும் அனைத்து இடத்தையும்  அனைவரும் ஆக்ரமித்துக் கொண்டு விட்டதினால் தனக்கு தங்க ஒரு இடம் இல்லையே என அனுமானிடம் கூற அவரும் தனது வாலை உயர்த்திக் காட்டி அதில் கட்டப்பட்டு இருந்த சிறு மணி கட்டப்பட்டு உள்ள இடமே மீதம் உள்ளது என்று கூற பார்வதி அவர் வாலில் மணியாக அமர்ந்து கொள்ள, அங்கு வந்த வியாசர் ஒரு பூணூலாக மாறி அந்த ஹனுமாரின் உடலில் அமர்ந்து கொண்டாராம்.
 
 
 அந்த ஆஞ்சநேயர் இப்படியாக பல்வேறு தெய்வங்களின் சக்திகளைக் கொண்டவராக இருந்து கொண்டு அங்கு வந்து தன்னை வணங்கித் துதிக்கும் அனைத்து பக்தர்களுக்கும் செல்வமும், வாழ்க்கையில் வளத்தையும் குறைவில்லாது அள்ளித் தந்து வருகிறார் என்கின்றார்கள். மனதில் அமைதியையும், ஆனந்தத்தையும் அள்ளித்தரும் ஸ்ரீ வீர மங்கள ஆஞ்சநேயரை வணங்கினால் வெற்றியும், செல்வமும் வீடு தேடி வருவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

 
இந்த ஆலயத்தில் தனித் தனி சன்னதிகளில் வினாயகரும், குடும்ப சமேதகர்களாக ஸ்ரீராமர், லட்சுமணர், சீதாதேவி போன்றவர்களும், தனி சன்னதியில் நவகிரகங்கள் தமது வாகனங்களுடன் காட்சி தந்தபடி இருக்கிறார்கள். ஹனுமானைப் நேராகப் பார்த்தபடி சனிபகவானும் உள்ளார் என்பதும் இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பாகும். அதனால்தான் இங்கு வந்து சனி பகவானையும் ஹனுமானையும் வணங்கிச் சென்றால் சனியின் எந்த தொல்லை இருந்தாலும் அவை பூரணமாக விலகிவிடும் என்கிறார்கள்.
 
மூலஸ்தானத்தில் நின்றிருக்கும் ஸ்ரீவீரமங்கள ஆஞ்சநேயர் தன்னிடம் வந்து வேண்டிடும் பக்தர்களுக்கு காட்சி தந்து அபயம் அளிக்க, அதே சன்னதியின் இடப்புறத்தில் நாகதேவதை சன்னதியும் இருக்க சன்னதியின் பின்னால் இரண்டு சந்தன மரமும், நாக சன்னதியின் பின்புறத்தில் சிவப்பு செம்பருத்தி மரமும் உள்ளன. அந்த நாக சன்னதியில்தான் ஹனுமானின் பாறையைக் காலம் காலமாக காத்து நின்ற நாகத்தின் வம்சமும் தொடர்ந்து வசிப்பதாகக் கூறுகிறார்கள். ஆகவேதான் அந்த பாம்பு புற்றை அகற்றாமல் பூஜித்து வருகிறார்கள். இன்றும் அந்த புத்தில் நாகம் வந்துவிட்டுச் செல்வதாகவும், ஆனால் யாரும் அதற்கு இடையூறு செய்வதில்லை என்றும் கூறுகிறார்கள்.
 
 
இந்த ஆலயத்தின் ஒரு முக்கிய அம்சம் இங்கு நடைபெறும் வருடாந்திர ஸ்ரீ சீதா திருக்கல்யாண உற்சவம் ஆகும். மாலை 6 மணியிலிருந்து ஸ்ரீராமரும், சீதையும் திருமணக் கோலத்தில் சன்னதியில் இருந்து புறப்பட அதைத் தொடர்ந்து மாலை மாற்றும் வைபவம், மாங்கல்ய தாரணம், அர்ச்சனை, தாம்பூலப் பிரசாதம் என பல நிகழ்ச்சிகளும் நடைபெறுமாம். இந்த சுப வைபவத்தின் பிரதான அம்சமே ராமர்- சீதை இருவரும் தம்பதி சமேதகர்களாக காப்புக் கயிறு கட்டிக் கொள்வதுதான்.
 
ஆகவே திருமண வயதை எட்டிவிட்ட ஆனால் திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலாரும் இங்கு வந்து ராம-சீதை திருமணத்தன்று வழங்கப்படும் காப்புக் கயிற்றைக் கட்டிக் கொண்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நீண்ட கால நம்பிக்கை ஆகும். அந்த நிகழ்ச்சியன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மற்றும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் காப்புக்கயிறு கட்டுவார்கள்.

சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் பிரதான சாலையில் இருந்து திருத்தணி மலைக்  கோவிலுக்கு செல்லும் பாதையின் எதிர்புறமாக அதாவது நேர் எதிரில் அமைந்துள்ள சின்ன சாலை வழியே தாழவேடு, பூனிமாங்காடு போன்ற கிராமங்களின் வழியே இருபுறத்திலும் இயற்கை எழில் தரும் விவசாய நிலங்களின் வழியே போடப்பட்டு உள்ள நல்ல பாதையில் சென்று இந்த ஆலயத்தை அடையலாம். இருபுறமும் பச்சைப்பசேலென பரந்து விரிந்துள்ள விளை நிலங்களின் வழியே செல்லும்போது நமது மனம் அமைதி அடைகிறது.
 

ஆலய வளாகத்தின் நுழை வாயில் அருகே உள்ள மைதானத்தில் அமர்ந்து கொண்டு தியானிக்கும் காட்சியில் பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளில் இருந்தும் திருத்தணிக்கு வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்துக்கும் வந்து ஆஞ்சநேயரை வணங்கி செல்கின்றனர்
 
 
 

அற்புதம் செய்யும் உப்பு!

 எந்த லட்சியத்தையும் அடைய லவண (உப்பு) வழிபாடு!

"உப்புக்குப் பெறாத விஷயத்தைப் போய் பெரிசா எடுத்துக்கிட்டுப் பேசிட்டிருக் கீங்களே!' என்று, எதற்கும் உதவாத பொருளோடு உப்பை ஒப்பிட்டுப் பேசுவர்.

விலை குறைவானதாக- கடல் தண்ணீரில் மலிந்து கிடக்கும் இந்த உப்பைத்தான் கடல் தங்கம், சமுத்திரமணி, பூமிகற்பம், சமுத்திர ஸ்வர்ணம், ஜலமாணிக்கமென்று வர்ணிக்கிறார்கள் மீனவ நண்பர்கள்.
 
இந்த உப்பை வைத்து ஒரு உயர்வான பிரார்த்தனை முறை செய்து, பலர் வெற்றியும் கண்டுள்ளனர். இந்த அரிய வெற்றி முறை இன்று மறந்தேபோய்விட்டது.             

உப்பின் பௌதிகவியல் சக்தி

சைவ அனுட்டான வகைகளில் ஸ்பரிச தீட்சை என்ற ஒரு வகையை அறிவீர்கள். ஸ்பரிசம் என்றால் தொடுதல் என்று பொருள். அதாவது ஆசிரியர் மாணவனின் தலையைத் தொட்டு மந்திரங்கள், சாஸ்திர முறைகளைக் கூறும்போது, அவருடைய உடலிலுள்ள உப்புத்தன்மையும் மாணவனுடைய உப்புத்தன்மையும் 40 + 60, 55 + 45, 35 + 65 என்ற சதவிகித அடிப்படையில், மாணவனிடம் பௌதிகவியல் சக்தியாகக் கலந்துவிடுகிறது. இது மாணவனிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

பல் மருத்துவர்கள் தினமும் உப்புக் கலந்த வெந்நீரில் வாய் கொப்பளித்து வந்தால், வேறு மருந்துகளே தேவைப்படாது என்று சொல்வார்கள்.

நம் உடலில் புண் ஏற்பட்டால், குப்பைமேனி இலையோடு உப்பு சேர்த்து பற்றிட்டால் குணமாகிவிடும்.
 
மிளகை உப்புடன் சேர்த்துவைத்தால், வீட்டில் துர்சக்திகள் நெருங்காது.
 
கடல்நீரில் மூழ்கியெழுந்து சூரியனை வணங்கும் வழக்கம் நம்மிடையே உள்ளது. இதன் நற்பலனைக் கண்டு ஆங்கிலமுறை மருத்துவர்களே வியக்கின்றனர்.

முத்தும், சங்குகளும் கடலில் பிறப்பது உப்புத்தன்மை இருப்பதால்தான் என்று கடல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முற்காலங்களில், "வீடுகளில் திருஷ்டிகள், துர்சக்திகளின் தாக்கம் ஏற்பட்டுள்ளது' என்று ஜோதிடர்கள் சொன்னால், ஒரு பாத்திரத்தில் உப்பு நீரை நடுவீட்டில் வைத்து, அதை மூன்று நாட்கள் கழிந்தபிறகு கால்படாத இடத்திலோ நீர் நிலைகளிலோ ஊற்றி விடுவது ஐதீகமாக இருந்தது.
மகாலட்சுமியே உப்பு

அலைகடலிலிருந்து மகாலட்சுமி தோன்றியதாகப் புராணங்கள் சொல்கின்றன. அத்தகைய கடலிலிருந்து எடுக்கப்படுகிற உப்பில்தான் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

அதனால்தான் இரவு நேரத்தில் லட்சுமிதேவி விரும்பித் தங்குகிற உப்பை கடன் கொடுக்கக் கூடாது என்று சொல்வார்கள். தெய்வத்தன்மை கொண்ட உப்பை விற்பனை செய்தால் இடர்கள் வருமென்று முற்காலத்தில் சொல்வழக்கம் இருந்தது.

உப்பை ஏன் பானையில் மட்டும் போட்டு வைத்தார்களென்றால், மண்பானைக்கு ஸ்வர்ணம் என்ற பெயருள்ளது. அதாவது தங்கமென்று பொருள். இதில் தங்கமகளாம் மகாலட்சுமி வடிவ உப்பைப் போட்டு வைத்தால் பணக்கஷ்டமே வராது என்ற நம்பிக்கை இருந்தது.

உப்பு தொடர்புடைய வழிபாட்டு நியதிகள்

"உப்பில்லாப் பண்டம் குப்பையிலே; உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்றபழமொழிகளால் இதன் சக்தியை அறிந்துள்ளோம். ஊறுகாய் முதல் மனிதவுடல் வரை பக்குவப்படுத்திட உப்பே மூலப்பொருளாக இருக்கிறது. உப்பு எந்த வகைகளில் பிரார்த்தனைக்குப் பயன்படுகிறது என்பதைப் பார்த்தால் வியப்பாக இருக்கும்.

எதிரிகளை அடங்கிப்போகும்படி செய்ய, உப்பால் விநாயகர் செய்து வழிபட்டு வந்ததை விநாயகர் பிரார்த்தனை வரிசையில் காணலாம்.

தீட்டுக்காலம், பித்ருக்களுக்குச் செய்யப்படுகிற திவச வழிபாடு தினங்களில் உப்பில்லாத பண்டங்களைச் செய்து படையலிடுவதன் காரணம், வருகை தரும் முன்னோர்களுக்கு உப்பு கூட்டிச் சமையல் செய்துவைத்தால், இங்கேயே தங்கிவிடுவதாக ஐதீகம். அரை உப்புதான் போட வேண்டுமென்று ஒருசாரர் கருத்து.

கடற்கரைகளில் மாளய அமாவாசை, தை அமாவாசை போன்ற பித்ரு வழிபாட்டுக் காலங்களில் தர்ப்பணம் செய்வதால், அவர்கள் உப்புக்காற்றை வாங்கியபடி மகிழ்ச்சியடைந்து வாழ்த்துவதாக ஐதீகம் உள்ளது.

கடலிலிருந்து தோன்றும் உப்பை தலையில் போட்டு அதற்குரிய மந்திரம் சொன்னால் நோய்கள் யாவும் விலகிவிடும். மந்திரிக்கவும், திருஷ்டி கழித்து விடவும் மிளகாயுடன் உப்பு, மிளகு சேர்த்து வெள்ளிக்கிழமை, அமாவாசை தினங்களில் இரவில் அடுப்பிலிட்டு வாசலில் போடுவது வழக்கம்.

ஆலயங்களிலுள்ள பலிபீடத்தின்கீழ் உப்பையும் மிளகையும் போட்டால், நமக்குப் பிடிக்காதவர்கள் துன்பம் எய்துவர் என்ற வழக்கம் சமீபகாலங்களில் நிலவுகிறது. இது தவறான சிந்தனை. ஆலயத் தொட்டிகளில் சிறிது உப்பைப் போட்டு, "என் துன்பங்கள் நீரில் உப்புபோன்று கரைந்திடச் செய்வாய் இறைவா' என்று பிரார்த்தனை செய்துவருவதே முறையான வழிபாடாக அமையும்.

வெளிநாடுகளில் புரட்சியை ஏற்படுத்திய உப்பு வழிபாடு!

வெளிநாடுகளில் இந்த உப்புப் பிரார்த்தனை ஒரு ஆன்மிகப் புரட்சியை ஏற்படுத்திவிட்டது. தாங்கமுடியாத வறுமை, கடன், கஷ்டங்கள் ஏற்பட்டதால் டேவிட்சன் என்ற அமெரிக்க தொழிலதிபர் தனது மனைவி பிரேவ், இளம் மனைவி கிளாரா, மகள் லிவியாவுடன் கடலில் முழுகித் தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.

தங்களை தெய்வம் கைவிட்டுவிட்டதாகக் கதறி வாழ்வின் இறுதிக்கட்டத்தில் பிரார்த்தித்தபோது, ராட்சதக் கடல் அலை ஒன்றுடன் வந்த மூன்று பெண் உருவங்கள் கரைக்கு இழுத்து வருவதுபோல்  ஒரு பிரமையை உணர்ந்து, கரைக்குத் திருப்பப்பட்டார்.

"கடவுளே! வாழ்க்கை எங்களுக்கு இன்னும் இருக்கிறது என்று நினைத்தால் நன்றாக வாழவிடு! எங்களுக்குள் நம்பிக்கையை வளர்த்துவிடு!' என்று, அங்கிருந்த உப்புப் படிமங்களை நால்வருமே இருகைகளிலும் வைத்துக்கொண்டு, சூரியன் உதிக்கும் திசைநோக்கி பத்து நிமிடங்கள் பிரார்த்தித்தனர்.

பின்னர் வீடு திரும்பினர். வீட்டு வாசலிலிருந்த கடிதப்பெட்டியில் ஒரு கவர் சிரித்தபடி வரவேற்றது. என்னே ஆச்சரியம்! இவர்கள் கட்டிவந்த மாதச் சீட்டுக்கு ஜாக்பாட் தொகைமுப்பத்திரண்டு கோடி டாலர்கள் கிடைத்தி ருந்தது.

உப்பு பிரார்த்தனையை டேவிட்சன் கூற, இச்செய்தி எல்லாருக்கும் போய்ச் சேர்ந்தது. ஆம்! வாழ்வில் சோதனைகளிலிருந்து மீண்டுவர, புனர்வாழ்வு கிடைக்க சிறந்த ஆன்மிக சாதனம் இந்த எளிய உப்பு பிரார்த்தனை!

லட்சியம் நிறைவேற லவண மந்திர ஜெபமுறை

ஆதிசங்கரர் எழுதிய சௌந்தர்ய லகரியில் 33-ஆவது ஸ்லோகம் "சௌபாக்கிய மந்திரம்' எனப்படுகிறது. "ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம்' எனத் தொடங்கும் இந்த விசேடத் துதியை, இரு கைகளிலும் காசுகள் வைத்துக்கொண்டு ஜெபித்தால் நிறைவாகப் பணம் சேரும் என்ற கருத்துண்டு.
 
அதேபோன்று உப்பை இரு கைகளிலும் வைத்துக்கொண்டு, அதிகாலை ஐந்தரை மணி முதல் 16 முறை நமது பிரார்த்தனையைச் செய்தல்வேண்டும். இப்படியாக ஜெபம் செய்த உப்பை சேகரித்துவைத்து, 48 தினங்கள் கழித்து நீர்நிலைகளில் போட்டு வரவேண்டும். உண்மையான முறையில் சில மாற்றங்களைச் செய்துவிட்டார்கள். சரியான முறையை எல்லாரும் தெரிந்துகொள்ளவேண்டும்.

லவணம் என்பதற்கு வடமொழியில் உப்பு என்று பொருள். லவண பிரார்த்தனா நிகண்டு (A Prayer Method of Lavana) என்ற பெயரில் உப்பு பிரார்த்தனை பற்றி (மலர் மருத்துவத்தில் ஆல்ஃபா தியானம் போன்று) தனியாக ஜெபம் செய்யும் முறை, மந்திரங்கள் ஒரு சிறு கையேடு வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. உப்பு வழிபாட்டை சரியாகச் செய்திட அதன் விதிகளை அறிவோம்.

பௌர்ணமி அன்றும், சுபநாளிலும் காலை ஐந்தரை மணிக்கும், லாப வேளையிலும், நல்லவை நடக்க, லட்சுமி அருள்கிட்ட, வேலை பெற போன்ற பிரார்த்தனைகளைச் செய்யலாம். இதற்கு பூர்வபாக- சுப பல பிரார்த்தனை என்று பெயர்.
 


அமாவாசை அன்றும் சமநோக்கு நாளிலும் எதிரி விலக, மாமியார்- மருமகள் தகராறு அகன்று ஒற்றுமையாக, தொழில்கூட்டு நண்பர்கள் ஒன்றுபட, பிரிந்திருக்கும் கணவன்- மனைவி சேர்ந்திட பிரார்த்தனை செய்யலாம். உதாரணமாக,
 
வட்டம் ஒன்றை வரைந்து, அதில் ஆசனமிட்டு கிழக்கு முகமாக அமர்ந்து இரு கைகளிலும் உப்பு வைத்தபடி,
 
"ஓம் க்ருணி சூர்ய ஆதித்யோம்: மம சௌக்யம் தேகிமே ஸதா'
 
என்று மானசீக முறையில் 108 முறை ஜெபித்து சூரியனை வணங்கிவிட்டு, 16 நிமிடங்களில் எழுந்து பூஜையறையில் மற்ற தெய்வங்களை நினைத்து வழிபடவேண்டும். இப்படி 48 தினங்கள் செய்து வந்தபின் சேர்த்துவைத்த உப்பை கடல்நீரில் போட்டுவிடவேண்டும். ஒவ்வொரு தசைக்கும் அந்தந்த கிரக மூல மந்திரங்களை ஜெபித்தபின் நம்பிக்கையூட்டும் தியானம் செய்தல் அவசியம்.

மாணவர்களுக்குக் கல்வி அறிவு வளர...

"நான் நன்றாகத் தேர்வு எழுதிவிடுவேன். அனைத்துப் பாடங்களையும் படித்து மனதில்பதிந்துள்ளேன். உள்ளமும் உடலும் புத்துணர் வோடு உள்ளது. எனக்கு ஹயக்ரீவர், சரஸ்வதி தேவி துணை நிற்கிறார்கள். நான் சாதிப்பது உறுதி' என்று தியானிக்கவேண்டும். சதுர வட்டத்தில் அமர்க.

உடல்நலம் பெற...

"ஆரோக்கியம் என்னுடனே உள்ளது. உழைத்துக் களைத்ததால் இன்று சோர்வாக உள்ளேன். என் உடல்நிலை சீராகவே உள்ளது. அதற்கு ஆயுர் தேவியும், தன்வந்திரி பகவானும் துணை செய்கிறார்கள். நான் விரைவாக பூரண நலத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன்.' இதற்கு நட்சத்திர வட்டம் போடுக.

செல்வ வளம்பெற்று தொழிலில் உயர்ந்திட...

பத்மம் என்கிற தாமரை வரைந்து, இரு சதுரா காரம் வரைந்து, அதிலமர்ந்து சர்வ முத்ராவில் (இருகைகளைச் சுருக்கி) அல்லது சிவாகம முறையில் உள்ள ரிஷப முத்திரை முறையில் உப்போடு கைகளை மேலே தூக்கியபடி வைத்துக்கொண்டு, "நான் தொழிலில் அபரிமித வளர்ச்சி காண்பது உண்மை. என் தொழில் கூட்டாளிகள் நல்லவர்கள். எங்கள் கம்பெனி லாப திசை நோக்கிச் செல்கிறது. அதற்கு சௌபாக்கிய லட்சுமி, குபேரன் துணை நிற்கிறார்கள். "ஓம் ஐம் க்லீம் க்லௌம் சௌம் லக்ஷ்மீ குபேராய மம ஐஸ்வர்யம் தேகிமே சதா' என்று 108 முறை வழிபடவேண்டும்.

ஜபத்திற்கும் முத்திராவுக்கும் உப்புக்கும் தொடர்புகள் உண்டு. இவற்றில் வெற்றிபெற சிவதீட்சா முறை, இரு சிவாகம முத்திரைகளை அறிந்து கொண்டால் போதும். உங்கள் லட்சியங்கள் எதுவாயினும் லவண (உப்பு) பிரார்த்தனையால் நிறைவேறும்; பிரச்சினைகள் அகலும் என்பது லவண சாஸ்திரம் கூறும் உண்மை. உப்பு வழிபாட்டைச் செய்து வாழ்வில் வெற்றி காண்பீர்.

குறிப்பிட்ட ஆசனங்களில் அமர்ந்து தான் மந்திர ஜெபம், பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டுமென்று ஆகம பூஜா சாஸ்திர விதி கூறுகிறது. வெறும் தரையில் அமர்ந்துசெய்தால் ஜெப பலன்கள் பூமிக்குச் சென்றுவிடும்.

ஆசனம், ஜெபம் சொல்லிக் கொடுப்பவர்கள், "முதல் ஜெபமந்திரத்தை பூமாதேவிக்கு அர்ப்பணம் செய்துவிடுக' என்று கூறுவதைப் பார்த்திருப் பீர்கள். அதற்காகவே குறிப்பிட்ட ஜெப பிரார்த்தனைக்குரிய ஆசனங்களை வரைந்து, அதில் அமர்ந்து சக்தி சிதறலைத் தடுத்துக்கொண்டு, உடலுக்கு கவசமாகவும் பயன்படுத்துகிறோமென்று பிரார்த்தனை மந்திரநிகண்டு கூறுகிறது. தற்காலத்தில் சிலர் மடியில் பேப்பர் வைத்தபடி எல்லா இடங்களிலும் அமர்ந்து உப்பு பிரார்த் தனை செய்யச் சொல்கிறார்கள். இது அவரவர்களுடைய  சொந்தக் கருத்துகளாகும். ஆன்மிக மும் அறிவியலும் கலந்த உப்பு வழிபாட்டை முறையாகச் செய்வோம்; லட்சியங்களை அடைந்திடுவோம்.
 
 
கையில் இருக்கிற உப்பு எப்படி வேலை செய்யும்?
 
இந்த உப்பு மந்திரத்தைக் கற்றுத் தந்த டாக்டர் ஜிதேந்திராவிடம் கேட்டோம்.

“இது ஒண்ணும் புதிசில்லை. காலங்காலமா நம்ம மக்கள் மத்தியில புழக்கத்தில இருக்கிற ஒரு விஷயம்தான். மந்திரிக்கும் போதும், திருஷ்டி சுத்தும்போதும் நம்ம மக்கள் கையில உப்பு வச்சு சுத்துவாங்க. சில கோயில்கள்ல உப்பு வாங்கிக் கொட்டுவாங்க. ‘பாவத்தைப் போக்குறோம்’னு சொல்லி கடல்ல குளிக்கிறது, கடல் தண்ணியை தலையில அள்ளித் தெளிக்கிறது, கடலோரத்துல ஈமக்கிரியைகள் செய்றது, கடல்ல கால் நனைக்கறதுன்னு சொல்றதுக்கெல்லாம் காரணம் என்ன? இதையெல்லாம் சர்வசாதாரணமா மூடநம்பிக்கைன்னு அறிவாளிகள் புறம் தள்ளிடுவாங்க. உண்மையிலேயே அதுக்குள்ள அறிவியல் இருக்கு. அந்த அறிவியலை ora scienceனு சொல்வாங்க.

“அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும் கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து உட்கார்ந்துக்கணும். மடியில ஒரு நியூஸ்பேப்பர் வச்சுக்கணும். மாமியாரால பிரச்னைன்னு வச்சுக்கோங்க... கண்ண மூடிக்கிட்டு எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்க சந்தோஷமா இருக்கோம். என் மாமியார் ரொம்ப நல்லவங்க. நான் அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். என் மேல அவங்களுக்கு ரொம்ப பாசம்னு திரும்பத் திரும்பச் சொல்லணும். அதேபோல பணப் பிரச்னைன்னு வச்சுக்கோங்க... கண்ணை மூடிக்கிட்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும்... என்னோட கஷ்டம் எல்லாம் தீர்ந்திடும்’னு சொல்லணும். உடம்புல ஏதாவது பிரச்னைன்னா, எனக்கு எந்த நோயும் இல்லை... உடம்புல இருக்கிற பிரச்னை எல்லாம் தீர்ந்துடுச்சு... நான் ஆரோக்கியமா இருக்கேன்னு சொல்லணும். மனசுக்குள்ளயும் சொல்லலாம்... வாய்விட்டு சத்தமாவும் சொல்லலாம். 10 நிமிஷம் சொன்னாப் போதும். முடிச்சதும் கையில வச்சிருந்த உப்பை மடியில வச்சிருக்கிற நியூஸ் பேப்பர்ல கொட்டி, சிந்தாம மடிச்சு ஓடுற தண்ணியில கலந்து விட்டுடணும். நீங்களும் செஞ்சு பாருங்க... பத்து நாளுக்குள்ள பலன் தெரியும் என்று நமக்கே மந்திரம் கற்றுத் தருகிறார் ஷீலா.

நெகட்டிவ் எனர்ஜி, பாசிட்டிவ் எனர்ஜி... இது ரெண்டும்தான் மனிதனோட குணநலன்களையும் வாழ்க்கையையும் தீர்மானிக்குது. உப்பு, நெகடிவ் எனர்ஜியை வெளியேத்துற சக்தி கொண்ட ஒரு பொருள். கைக்குள்ள உப்பை வச்சுக்கிட்டு பாசிட்டிவ்வா நினைத்தாலோ, பேசினாலோ உடம்புக்குள்ள இருக்கிற நெகட்டிவ் எனர்ஜி வெளியேறிடும். இது மாயமோ, மந்திரமோ இல்லை. முற்றிலும் அறிவியல். உடம்புல நெகட்டிவ் எனர்ஜி வெளியாகி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்போது, அதுவே வைபரேஷனா வெளியில வந்து எதிராளிக்கிட்ட போகும். எதிராளியோட அணுகுமுறையும் பாசிட்டிவ்வா மாறும். ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லும்போது நாம் அதுவாவே மாறிடுவோம். இதுவும் அறிவியல்தான். எப்பவும் திட்டிக்கிட்டே இருக்கிற மாமியார், மருமகளை மரியாதையா நடத்துறதும், எப்பவோ விட்டுட்டுப் போன அம்மா மகளைத் தேடி வந்ததும், விபத்துல இருந்தவங்க குணமாகுறதும் இப்படியான பாசிட்டிவ் எனர்ஜியோட விளைவுதான். இன்னைக்கும் கிராமங்கள்ல உப்பை மட்டும் ஓசி வாங்கக்கூடாதுன்னு சொல்வாங்க. அப்படியே வாங்கினாலும் கையால வாங்க மாட்டாங்க. அப்படி வாங்கினா கொடுக்கிறவங்களோட நெகட்டிவ் எனர்ஜி வாங்குறவங்களுக்கு வந்திடும். இந்த உண்மை கிராமத்து மக்களுக்குத் தெரிஞ்சிருக்கு... என்கிறார் டாக்டர் ஜிதேந்திரா.

‘‘18 வருஷம் முன்னாடி எங்க அம்மா என்னை எங்க சொந்தக்காரங்க வீட்டுலவிட்டுட்டு போயிட்டாங்க. தினமும் அவங்களை நினைச்சு அழுவேன். இங்கே வந்த பிறகு உப்பு மந்திரம் பத்தி சொன்னாங்க. அம்மா என்னைப் பாக்க வரணும்னு நினைச்சு அஞ்சு நாள் உப்பு மந்திரம் செஞ்சேன். இவ்வளவு நாள் என்னைப் பாக்க வராத அம்மா ஆறாவது நாள் வந்து நின்னாங்க. இப்போ நினைச்சாலும் ஆச்சரியமா இருக்கு...

‘‘எனக்கு ரெண்டு குழந்தைங்க... கூட்டுக் குடும்பமாத்தான் இருந்தோம். நிறைய மனக்கஷ்டம். நான் எதைச் செஞ்சாலும் மாமியார் குத்தம் சொல்வாங்க. நானும் பதிலுக்குப் பதில் பேசுவேன். என் வீட்டுக்காரர் ஆபீஸ் விட்டு வந்ததும் அவர்கிட்ட சொல்லி சண்டை போடுவேன். ஒரு கட்டத்துல அந்தக் குடும்பத்துல வாழவே முடியாதுங்கிற நிலை... கிளம்பி வந்துட்டேன். உப்பு மந்திரம் பத்தி சொன்னாங்க... பத்து நாள் தொடர்ந்து செஞ்சேன். பதினோராவது நாள் காலையில என் வீட்டுக்காரர் வந்து நின்னார். அடுத்த சில நாட்கள்ல என் மாமியார் போன் பண்ணி பேசினாங்க. என் மேல உள்ள தவறுகளையும் நான் புரிஞ்சுக்கிட்டேன். இப்போ நாங்க சந்தோஷமா இருக்கோம்...

கண்ணீர் ததும்ப கோவை அவினாசிலிங்கம் மக்கள் கல்வி நிறுவனத்தில் தொழிற்கல்வி படிக்கும் பெண்கள் சொல்கிற கதைகளைக் கேட்க மிரட்சியாக இருக்கிறது. இங்கு படிக்கும் 600 பெண்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது இந்த உப்பு மந்திரம். மருத்துவ உலகத்தில் எவ்வளவோ நவீன ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அவற்றுக்குச் சவால் விடுவது போல உப்பு மந்திரத்தின் மகத்துவங்களை அடுக்குகிறார்கள் இந்தப் பெண்கள்!

திருப்பம் தரும் திருக்காப்புச் சீட்டு : சமயபுரம்!


திருச்சி மாவட்டத்தில் சமயபுரத்தில் வீற்றிருக்கிறாள் மாரியம்மன். ஆதியில் இந்தப் பகுதி ‘கண்ணனூர் அரண்மனை மேடு’ என்றழைக்கப்பட்டது. முதலில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில்தான் அம்மனின் திருவுரு இருந்தது. அது உக்கிரம் மிகுந்ததாகக் கருதப்பட்டதால் அங்கிருந்து சமயபுரத்திற்கு இடம் பெயர்ந்தது. அச்சிலையை எடுத்து வந்தபோது இனாம் சமயபுரம் என்ற இடத்தில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தார்கள். இதையொட்டியே சமயபுர கோயில் திருவிழாவின் எட்டாம் நாள் வைபவத்தில் இன்றும் அம்மன் இனாம் சமயபுரம் சென்று ஓய்வெடுக்கிறாள். விஜயநகர மன்னர் ஒருவர் இப்பகுதிக்குப் படையெடுத்து வந்தபோது அரண்மனை மேடு அம்மனை வணங்கி வழிபாட்டு போரில் வெற்றியும் பெற்றார். அதன் நன்றிக்கடனாக அவர் உருவாக்கியது தான் இக்கோயில் என்றும் சொல்கிறார்கள். மூலவர் மாரியம்மனின் திருவுருவம் மரத்தால் ஆனது; அதன்மேல் சுதை வேலைப்பாடுகள் மேற்கொள்ள பட்டிருக்கிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இச்சிலையை மறுசீரமைப்பு செய்கிறார்கள். தங்கஜடா மகுடத்துடன், மேனி குங்கும நிறத்தில் திகழ, நெற்றியில் அழகிய வைரப்பட்டைகள் மின்ன, கண்களில் அருளொளி வீச, வைரக் கம்மல்களுடனும், மூக்குத்தியுடனும் அன்னை அற்புதமாகக் காட்சி தருகிறாள். தனது எட்டுக் கைகளில் இடப்புறமாக கபாலம், மணி, வில், பாசம்; வலப்புறமாக கத்தி, சூலம், அம்பு மற்றும் உடுக்கை ஆகிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளாள். இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்ட சுகாசன நிலையில் அமர்ந்திருக்கிறாள். வலது காலின் கீழே மூன்று அசுரர்களின் தலைகள். கோயிலின் தல விருட்சம், சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் வேப்ப மரம். இந்த மரத்தில் மக்கள் திருக்காப்பு சீட்டை சமர்ப்பிக்கிறார்கள். தம் குறைகளை எழுதி இம்மரத்தில் கட்டிவிட்டு மாரியம் மனை வேண்டிக்கொண்டால் கோரிக்கை நிறைவேறுகிறது என்கிறார்கள். அம்மனுக்கு பூஜைகள் நடத்தும்போது இந்தத் தலவிருட்சத்துக்கும் பிரத்யேகமாக பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்த வேப்ப மரத்தினடியிலுள்ள புற்றிலிருந்து, ஆயிரம் கண்ணுடையாள் என்ற அம்பிகையின் அழகிய செப்புத் திருமேனி கண்டெடுக்கப்பட்டது. இந்த அம்பிகை தற்போது துணைச் சந்நதியில் வீற்றிருக்கிறாள். இவளுடைய நேரடிப் பார்வையில் வேப்ப மரம்! காவிரியின் உபநதியான பெருவளை வாய்க்கால், இக்கோயிலின் புனித சக்தித் தீர்த்தமாக விளங்குகிறது. இதன் படித்துறையில் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆடிப்பூர தீர்த்த வாரியும், ஆடி பதினெட்டு தீர்த்தவாரியும் சிறப்பாக நடைபெறுகின்றன. கோயிலின் வடமேற்கே மகமாயி தீர்த்தம் அமைந்துள்ளது. விஜயநகர நாயக்கர்கால திருப்பணிகளில் இக்குளமும் ஒன்று. இத்திருக்குளத்திற்கு பெருவளை வாய்க்கால் வழியாக நீர் கொண்டு வரவும், எஞ்சிய நீரை வெளியேற்ற தரையில் நிலத்தடி நீர்வழி வாய்க்காலும் அந்த காலத்திலேயே அமைக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பு. இன்னொன்று, மகாமக தீர்த்தம். புராண காலத்தில் சப்த கன்னியர் ஒவ்வொரு மகாமகத் திருவிழாவிற்கு முன்பும் கங்கா தேவியை இப்புனிதத் தீர்த்தத்தில் ஆவாகனம் செய்து, இங்கிருந்து பெருக்கெடுத்து ஓடும் புனித நீரை கும்பகோணம் மகாமகத்தில் சேர்ப்பதாக ஐதீகம். தை மாத தைப்பூச திருவிழா 10 நாட்களுக்கு நடைபெறும். பத்தாம் திருநாளன்று மாரியம்மன் கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று ரங்கநாதரிடமிருந்து சீர்வரிசை பெறுகிறாள். மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பக்தர்களுக்காக அம்மனே பட்டினி கிடந்து விரதம் மேற்கொள்கிறாள். இதனை ‘பச்சை பட்டினி விரதம்’ என்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி அன்று இரவு முழுவதும் சமயபுரம் சந்நதி வீதியில் தங்கியிருந்து காலை நீராடிவிட்டு அம்மனை தரிசனம் செய்தால் சகல நோய்களையும், தோஷங்களையும் நீக்கி, வேண்டும் வரம் தருவாள் மாரியம்மன். கருவறையைச் சுற்றி பிராகாரம் காணப்படுகிறது. இப்பிராகாரத்தில் விமானத்தின் அதிஷ்டான பகுதியில் தொட்டி அமைக்கப்பட்டு நீர் நிரப்பப்பட்டுள்ளது. அம்பாள் உக்கிரத்தைத் தணிப்பதற்காகவே இந்த அமைப்பு. கருவறையின் இடப்புறம் உற்சவ அம்பாளின் சந்நதி உள்ளது. இத்திருமேனிக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இந்தக் கோயிலுக்கு வடக்கே உள்ள செல்லாண்டியம்மன் கோயில் உற்சவருக்கும் இங்குதான் நாள்தோறும் அபிஷேகம் செய்யப்படுகிறது. மாரியம்மன் உற்சவருக்கு காலை, மாலையில் செய்யப்படும் அபிஷேக தீர்த்தம் திருக்கோயிலின் வடக்குப் பிராகாரத்தில் பக்தர்கள் மீது தெளிக்கப்படுகிறது. இதனால் அம்மை நோய் கண்டவர்கள் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளவர்கள் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு விரைவில் நலம் பெறுகின்றனர்.

சகல நலன்களும் அருளும் சப்தாவரண கணபதிகள்!

‘‘வாரணாசி’’ என்னும் ‘‘காசி’’ மாநகரத்தில் சப்த ஆவரணத்தில் (ஏழு பிரிவுகளில்) ஐம்பத்தாறு கணபதி மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.  அந்த மூர்த்தங்களின் பெயர்களைச் சொல்லி பூஜை செய்து காலங்காலமாக பல நன்மைகளை அடைந்து வருகிறார்கள் பக்தர்கள். இதை விநாயக  புராணமும் உயர்வாக கூறுகின்றது.

முதல் ஆவரணம் துண்டி கணபதியே நம: துர்கை கணபதியே நம: அர்க்க கணபதியே நம: பிரஸன்ன கணபதியே நம: பீம கணபதியே நம: சுந்தர  கணபதியே நம: (ஆக ஆறு மூர்த்தங்கள்)

இரண்டாவது ஆவரணம் சித்ருப கணபதியே நம: லம்போதர கணபதியே நம: கூப தந்த கணபதியே நம: சலாடக கணபதியே நம: குலப்பிரிய கணபதியே  நம: சதுர்த்தி கணபதியே நம: பஞ்சமி கணபதியே நம: முண்ட கணபதியே நம: சசிமுக கணபதியே நம: விடங்க கணபதியே நம: நிஜ கணபதியே நம:  ராஜபுத்ர கணபதியே நம: பிரணவ கணபதியே நம: உபதாப கணபதியே நம: (ஆக பதினான்கு மூர்த்தங்கள்)

மூன்றாவது ஆவரணம் வக்ர துண்ட கணபதியே நம: ஏக தந்த கணபதியே நம: த்விமுக கணபதியே நம: பஞ்சமுக கணபதியே நம: ஏரம்ப கணபதியே  நம: விக்னராஜ கணபதியே நம: வரத கணபதியே நம: மோதகப்பிரிய கணபதியே நம: (ஆக எட்டு மூர்த்தங்கள்)

நாலாவது ஆவரணம் ஏகோபயப்ரத கணபதியே நம: சிங்கமுக கணபதியே நம: கூர்ணிதாக்ஷ கணபதியே நம: க்ஷிப்ரப்ரசாத கணபதியே நம: சிந்தாமணி
கணபதியே நம: தந்த வக்த்ர கணபதியே நம: அயிசண்டி கணபதியே நம: ஊர்த்தி வாண்ட முண்ட கணபதியே நம: (ஆக எட்டு மூர்த்தங்கள்)

ஐந்தாவது ஆவரணம்: மணி கர்ண கணபதியே நம: ஆசார சிருஷ்டி கணபதியே நம: கஜகர்ண கணபதியே நம: கண்டா கணபதியே நம: சுமங்கல  கணபதியே நம: மந்திர கணபதியே நம: (ஆக ஆறு மூர்த்தங்கள்)

ஆறாவது ஆவரணம் மோதக கணபதியே நம: ஸுமுக கணபதியே நம: துர்முக கணபதியே நம: கண கணபதியே நம: அமர கணபதியே நம: ஆக்கினை
கணபதியே நம: துவார கணபதியே நம: அவிமுக்த கணபதியே நம: (ஆக எட்டு மூர்த்தங்கள்)

ஏழாவது ஆவரணம் ஆமோதக கணபதியே நம: பரகீரத கணபதியே நம: ஹரி சந்திர கணபதியே நம: கபர்த்தி கணபதியே நம: பந்து கணபதியே நம:
கனக கணபதியே நம: (ஆக ஆறு மூர்த்தங்கள்)

காசி க்ஷேத்ரத்தை மனதில் நினைத்து இந்த கணபதி மூர்த்தங் களைப் போற்றி வழிபடுவோம்.

 

திருச்செந்தூர் மாசித் திருவிழா!

சிகப்பு சாத்தி, பச்சை சாத்தி உலா :

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாக்கள், கந்த சஷ்டி விழா, வைகாசி விசாகம், தைப்பூசம் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

மாசித் திருவிழா மிகவும் விசேஷம். இதுவே முருகனுக்குரிய மகோற்சவம். மாசி மாத அஸ்வினி நட்சத்திரத்தில் தொடங்கி, மகம் வரை 12 நாட்கள், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருகப் பெருமானின் அருளைப் பெறும் பெருந்திருவிழா.
 
திருச்செந்தூரில் முருகன்தான் மூலவர். திருச்செந்தூர் முருகனுக்கு இரண்டு உற்சவர்கள். பிரதான உற்சவர் சண்முகக் கடவுள். இன்னொரு உற்சவர் ஜெயந்திநாதர். உற்சவர்களுக்கே உற்சவர்கள் உள்ளது திருச்செந்தூரின் சிறப்பம்சமாகும். குமரவிடங்கப் பெருமான் சண்முகரின் உற்சவர்.
அலைவாயகந்தப் பெருமான் ஜெயந்திநாதரின் உற்சவர். இந்த நான்கு உற்சவர்களுக்குமே கோயிலில் தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. இந்த உற்சவ சுவாமிகள் மாசித்திருவிழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் செந்தூர் நகரின் ரத வீதி உலாக்களில் தரிசனம் கொடுத்து பக்தர்களுக்கு முருகனின் திருவருளை அளிக்கின்றனர்.
 
சப்பரத்தில் வீதி உலா
மாசித் திருவிழாவின் முதல் நாளில் கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப பூஜை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து காலை 5.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் திருக்கோயில் செப்புக் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்படும்.
 
மாலையில் திருச்செந்தூர் நகரின் சன்னதி தெருவில் உள்ள அருள்மிகு அப்பர் சுவாமிகள் திருக்கோவிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் முருகப்பெருமான் “தந்தப் பல்லக்குச்” சப்பரத்தில் திருவீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
 
ஐந்தாம் நாள் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோவிலில் இரவு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
 
ஏழாம் நாள் திருவிழா மற்றும் எட்டாம் நாள் திருவிழாவில் மட்டுமே பிரதான உற்சவர் சண்முகக் கடவுளின் தரிசனம் பக்தர்களுக்கு கிடைக்கின்றது. ஏழாம் திருவிழா அன்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் 5.00 மணிக்குள் சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும்.அதனைத் தொடர்ந்து காலை சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்தடைவார்.
 
அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை நான்கு மணிக்கு மேல் சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தியில், சிகப்புப் பட்டாடைகளாலும் சிகப்பு மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். “சிவபெருமானும் தானும் ஒருவரே” என்பதைக் குறிப்பாக உணர்த்தும் விதத்தில் முருகப்பெருமான் இவ்வாறு காட்சி தருகிறார்.
 
பிரம்மாவும் நானே
எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலை பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தியில் சண்முகர் எழுந்தருளி, திருவீதி வலம் வருகிறார். “படைக்கும் தொழிலைப் புரிகின்ற பிரம்மாவும் நானே” என்பதை உணர்த்தும் விதத்தில் இவ்வாறு வலம் வருகிறார். பின் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்று பகல் 12.00 மணிக்கு மேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோவில் சேர்கிறார்.
 
“காத்தல் தொழிலைச் செய்கின்ற திருமாலும் நானே” என்பதைக் குறிக்கும் விதமாகக் காட்சி தருகிறார். பச்சை சாத்தியில் வருகின்ற முருகப்பெருமானை லட்சக் கணக்காண பக்தர்கள் பன்னீர் அபிஷேகம் செய்து தேங்காய், பழம் படைத்து வழிபடுவார்கள். இதனால் நகரின் ரத வீதிகளில் பன்னீர் வாசனையை நாள் முழுவதும் பக்தர்கள் உணர முடியும்.
 
கயிலாய வாழ்வுக்குச் சமம்
ஒன்பதாம் நாள் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் முக்கிய நாளான பத்தாம் திருவிழாத் தேரோட்டம் அன்று காலை 6 மணிக்கு மேல் துவங்கும். பிள்ளையார் ரதம், சுவாமி தேர், அம்மன் தேர்கள் திரு வீதி வலம் வந்து நிலை சேர்கிறது.
 
பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பத் திருவிழா நடக்கிறது. சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி செந்தூர் நகரின் ரத வீதிக்கு மெற்கே உள்ள தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை சுற்றி வரும் தெப்போற்சவம் நடைபெறும். 12-ம் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறும்.
 
“கயிலை மலையனைய செந்திற்பதிவாழ்வே” என திருச்செந்தூரில் வாழ்வது கயிலாய வாழ்விற்குச் சமமானது என்று அருணகிரியார் போற்றிப் புகழ்கிறார். அப்புகழ் பெற்ற திருச்செந்தூரில் மாசித்திருவிழாவில் முருகப் பெருமானை தரிசனம் செய்வது மனதிற்கு நிம்மதியையும் நிறைவையும் தரக்கூடியது.
 
ஒன்பதாம் நாள் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் முக்கிய நாளான பத்தாம் திருவிழாத் தேரோட்டம் அன்று காலை 6 மணிக்கு மேல் துவங்கும். பிள்ளையார் ரதம், சுவாமி தேர், அம்மன் தேர்கள் திரு வீதி வலம் வந்து நிலை சேர்கிறது.
 
பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பத் திருவிழா நடக்கிறது. சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி செந்தூர் நகரின் ரத வீதிக்கு மெற்கே உள்ள தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை சுற்றி வரும் தெப்போற்சவம் நடைபெறும்.
 
12-ம் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறும். “கயிலை மலையனைய செந்திற்பதிவாழ்வே” என திருச்செந்தூரில் வாழ்வது கயிலாய வாழ்விற்குச் சமமானது என்று அருணகிரியார் போற்றிப் புகழ்கிறார். அப்புகழ் பெற்ற திருச்செந்தூரில் மாசித்திருவிழாவில் முருகப் பெருமானை தரிசனம் செய்வது மனதிற்கு நிம்மதியையும் நிறைவையும் தரக்கூடியது.


 

Tuesday 8 November 2016

திருவருள் பொழியும் திருச்செந்தூர் கந்தசஷ்டி!

ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டி திதி முருகனுக்கு உகந்த நாள். 

இந்நாளில்தான் சூரசம்ஹாரம் நடந்தது. அதனால் சஷ்டி திதி மேலும் சிறப்பு பெற்றது. பக்தர்கள் ஆறு நாட்கள் சஷ்டி விரதம் இருப்பார்கள். செந்தில்நாதன் சூரபத்மனை சம்ஹரித்த, சூரசம்ஹாரம் நிகழ்ந்த தலம் திருச்செந்தூர்.அசுரகுருவான சுக்ராச்சாரியார், அசுரகுலம் தழைக்க அசுரகுல மங்கையான மாயை என்பவளை அழைத்து கஸ்யப முனிவரை மயக்கும்படி கூறினார். அவளும் அப்படியே செய்தாள். அதனால் கஸ்யப முனிவருக்கும், மாயைக்கும் மூன்று பிள்ளைகளும், ஒரு பெண்ணும் பிறந்தனர். பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன்; மகள் அஜமுகி. பிள்ளைகள் பிறந்ததும் மாயை முனிவரைவிட்டு விலகினாள்.அசுரப் பிள்ளைகள் மூவரும் கடும் தவம்புரிந்து பல வரங்களைப் பெற்றனர். அதில் முக்கியமான- இயற்கைக்கு மாறான ஒரு வரத்தையும் பெற்றனர். அது என்னவென்றால்- தாயின் கர்ப்பத்தில் பிறக்காத ஒரு ஆண் மகனால் மட்டுமே இறப்பு நேரவேண்டும் என்பதே. அதனால் ஆணவம் அதிகமாகி மக்கள், தேவர்கள் அனைவருக்கும் பற்பல கொடுமைகளை 108 சதுர்யுகங்கள் புரிந்தனர்.தேவர்கள் அசுரர்களின் கொடுமைகளை சிவனிடம் முறையிட்டனர். அவர்கள் குறைதீர்க்க சிவபெருமான் நெற்றிக் கண்களிலிருந்து தீப்பொறிகளை உருவாக்கினார். அவை சரவணப் பொய்கையில் சேர்ந்தன.முருகன் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாகப் பிறந்ததும், கார்த்திகைப் பெண்கள் அறுவரால் வளர்க்கப்பட்டனர். பிறகு பார்வதி அக்குழந்தைகளை பாசமுடன் ஒருசேர அணைத் தாள். ஆறு குழந்தைகளும், ஓருடலாக, ஆறு தலை, 12 கரங்களுடன் தோன்றின. அவன் வளர்ந்ததும் சிவன் அவனது அவதார நோக்கத்தை விளக்கி, சூரபத்மனுடன் போரிடக் கூறினார்.பார்வதி முருகனுக்காக தன் சக்தியனைத்தையும் திரட்டி ஒன்றாக்கி சக்தி வேலாயுதம் என்ற பெயரில் முருகனிடம் கொடுத்தாள். (இந்த நிகழ்ச்சிதான் தீபாவளிக்குப்பின் 5-ஆம் நாள் சிக்கல் தலத்தில் சிங்காரவேலர் தன் தாயிடம் வேல் வாங்கும் படலமாக நிகழ்கிறது. வேல் வாங்கும் சமயம் முருகனின் முகத்தில் வியர்வை வழியும் அற்புத காட்சியை ஆண்டுதோறும் இன்றளவும் காணலாம். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்பர்.)பார்வதி தந்த சக்தி வேலாயு தம், சிவன் உருவாக்கித் தந்த வீரபாகு தலைமையிலான படையுடன் போர்புரிய முருகன் சென்றான். ஐந்து நாள் போரில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் கார்களின் படைகள் அனைத்தையும் பாலமுருகன் அழித்தான். 6-ஆம் நாள் எஞ்சியவன் சூரபத்மன் மட்டும்தான். மற்றவர்கள் அனைவரும் அழிந்தனர்.குமரன் சூரனை வதம்செய்ய போரிடும்போது, சூரபத்மன் இந்த சிறுவனையா கொல்வது என எண்ணினான். இருப்பினும் போர்தானே என எண்ணிப் போரிட்டான். இதையறிந்த கந்தன் ஒரு நொடி தன் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டி மறைத்தான். அந்த ஒரு நொடியில், "ஆஹா, இவன் தன் பேரனல்லவா' என எண்ணினான் சூரன். ஆனால் மறுநொடியே மாயை அதை மறைத்துவிட, மீண்டும் போர் செய்ய ஆரம்பித்தான். சூரன் மாமரமாகி கடலில் தலைகீழாக நின்றான். (அந்த இடம் மாம்பாடு எனப்படுகிறது. இங்கு இப்போதும் மாமரம் தழைப்பதில்லை.)முருகன் அந்த மாமரத்தை இரு கூறாக்கி ஒரு பகுதியை மயிலாகவும் ஒரு பகுதியை சேவலாகவும் மாற்றினான். அப்போது சூரன் மனம்திருந்தி தன்னை மன்னிக்கும்படி கேட்க, மயிலை வாகனமாக்கி சேவலை கொடியாக்கினான்.
முருகன் சூரனைக் கொல்லவில்லை. அவனை மனம் திருந்தச் செய்து ஏற்றுக்கொண்டான்.சூரபத்மன் முருகனின் தாத்தா. முற்பிறவியில் சூரபத்மன் தட்சனாக இருந்தான். தட்சன் மகள் தாட்சாயிணி. அவளை சிவபெருமானுக்குத் திருமணம் செய்து கொடுத்ததால் சிவனின் மாமனாரானான். சிவனது மாமனார் முருகனுக்கு தாத்தா முறையல்லவா? பேரனை தாத்தா சுமப்பது சரிதானே.ஞானப்பழம் வேண்டி முருகன் மயில்மீது உலகைச் சுற்றிவந்தான். அது மந்திர மயிலாகும். சூரனுடன் போரிடச் செல்லும்போது இந்திரன் மயிலாகி முருகனைச் சுமந்தான். அது இந்திர மயில். திருச்செந்தூரில் சம்ஹாரத்திற்குப்பின் சூரபத்மன் மயிலானான். அது அசுர மயில். எனவே முருகனுக்கு மூன்று மயில்கள் உள்ளன.செந்தூரில் சஷ்டி விழாவின்போது மட்டுமே முருகனின் ஆறு முகங்களையும், 12 கரங்களையும் முழுமையாக தரிசிக்கலாம். மற்ற நேரம் அங்கவஸ்திரத்தால் மூடிவைத்திருப்பார்கள். ஒரு முகம், இருகரம் மட்டுமே தரிசிக்கமுடியும். சூரசம்ஹாரம் முடிந்தபின், முருகன் சிவபூஜை செய்வதற்காக உருவானது தான் திருச்செந்தூர் கோவில். இங்கு முருகன் கையில் ருத்ராட்ச மோலை, ஜெபமாலை, பூமாலையுடன் தவக்கோலத்தில் உள்ளார். கருவறையின் பின்னுள்ள சுரங்க அறையில் முருகன் வணங்கிய பஞ்சமுக லிங்கங்கள் உள்ளன. அவற்றை இப்போதும் காணலாம்.தேவர்களுக்கு உதவிசெய்த முருகனுக்கு நன்றி சொல்லும்விதமாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்துக் கொடுத்து, தன் வெள்ளை யானை ஐராவதத்தையும் திருமணப் பரிசாகக் கொடுத்தான்.
திருச்செந்தூரில் சஷ்டி விழா

சஷ்டி விழாவின் ஆறு நாட்களிலும் வேள்விக்கூடத்தில் காலையும் மாலையும் வேள்வி நடத்துவார்கள். பின் செந்தில்நாதன், வள்ளி, தெய்வானை உற்சவர்களை தங்க சப்பரத்தில் வைத்து ஊர்வலம் வருவார்கள். சண்முக விலாச மண்டபத்தில் அமரவைத்து தீபாராதனை செய்வார்கள்.சுவாமி வலம்வரும்போது அடியார்கள் கந்தசஷ்டி கவசம், வேல் வகுப்பு, திருப்புகழ், வீரவாள் வகுப்பு, கந்தர் அனுபூதி பாடியபடி பின்னே வருவார்கள். ஆறாம் நாள் மாலை கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும். அப்போது கடல் அலைகள் உள்வாங்கி இடம்தரும் அதிசயத்தை ஆண்டுதோறும் கண்டிப்பாகக் காணலாம். இவ்விழாவைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தலையா, கடல் அலையா என எண்ணத் தோன்றும். முருகனின் ஒரு திருநாமம் கோடி நாமாக்களுக்குச் சமம்.
சஷ்டி விழா நியதிகள்

தீபாவளி அமாவாசைக்கு மறுநாள்தொடங்கி விரதம் மேற்கொள்ளவேண்டும். இந்த ஆறு நாட்களில் பகல் ஒருபொழுது மட்டும் பிரசாதத்தை உண்டு காலை, மாலை, இரவு பட்டினி இருக்கவேண்டும். துவைத்து உலர்த்திய ஆடைகளையே அணியவேண்டும். மௌன விரதம் கடைப்பிடித்தால் மிகவும் நல்லது. மாலையில் தம்பம், பிம்பம், கும்பத்தில் முருகப் பெருமானை ஆவாஹனம் செய்து பூஜிக்கவேண்டும். வெல்ல மோதகம் நிவேதனம் செய்யவேண்டும்.ஆறநாட்களும் கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அனுபூதி, கந்தர் அலங் காரம், கந்த சஷ்டி கவசம் ஆகியவற்றைப் பாராயணம் செய்யவேண்டும். அல்லது படிப்பதைக் கேட்கவேண்டும். 6-ஆம் நாள் கந்த சஷ்டி பூஜை செய்யவேண்டும். 7-ஆம் நாள் சிவனடியார்களுக்கு அன்னமிட்டு அவர்களுடன் உடனமர்ந்து உண்டு விரதத்தை முடிக்கவேண்டும். இப்படியாக ஆறு ஆண்டுகள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு முருகன் பேரருள் பூரணமாகக் கிடைத்து நல்வாழ்வு பெறலாம்.கந்த சஷ்டி தொடங்கி ஒவ்வொரு மாத வளர்பிறை சஷ்டியன்றும் தவறாமல் விரதம் கடைப்பிடித்தால் குழந்தைச்செல்வம் கிட்டும். அத்துடன் முருகன்போன்ற பிள்ளை பிறப்பான். ஏன், முருகனேகூட வந்து பிறந்துவிடுவான். சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பர். இதன் பொருள் யாதெனில் சஷ்டி விரதம் இருந்தால் அகப்பையான கருவறையில் குழந்தை உருவாகி பிள்ளை பிறக்கும் என்பதுதான். அகம் என்னும் நெஞ்சில் ஞானமும் பிறக்கும்.
சரவணபவனை மனமாரத் தொழுதால் அபயகரம் நீட்டி தவறாமல் காப்பான்!

சஷ்டி தேவி (தேவசேனை) அருளிய துதி!

 

சஷ்டி தேவி (தேவசேனை) அருளிய துதி!

"நமோ தேவ்யை மஹாதேவ்யை
ஸித்யை சாந்த்யை  நமோ நம:

ஸுபாயை தேவஸேனாயை
ஷஷ்ட்யை தேவ்யை நமோ நம:

வரதாயை புத்ரதாயை
தனதாயை நமோ நம:

ஸுகதாயை மோக்ஷதாயை
ஷஷ்ட்யை தேவ்யை நமோ நம:

 

ஸ்ருஷ்ட்யை ஷஷ்டி அம்ச
ரூபாயை ஸித்தாயை நமோ நம:

மாயாயை ஸித்தயோகின்யை
ஷஷ்டி தேவ்யை நமோ நம:

ஸாராயை ஸாரதாயை 
பரா தேவ்யை நமோ நம:

பால அதிஷ்டாத்ரு தேவ்யை 
ஷஷ்டி தேவ்யை  நமோ நம:

கல்யாணதாயை கல்யாண்யை
பலதாயை  கர்மணாம்

ப்ரத்யக்ஷாயை ஸ்வபத்தானாம்
ஷஷ்டி தேவ்யை நமோ நம:

ஸுத்த ஸத்வ ஸ்வரூபாயை
வந்திதாயை ந்ருணாம்ஸதா

தேவரக்ஷண காரிண்யை
ஷஷ்டி தேவ்யை நமோ நம:

பூஜ்யாயை ஸ்கந்த காந்தாயை
ஸர்வேஷாம் ஸர்வகர்மஸி

ஹிம்ஸா கோடி வர்ஜிதாயை
ஷஷ்டி தேவ்யை நமோ நம:

தனம் தேஹி யசோ தேஹி
புத்ரம் தேஹி ஸுசரேஸ்வரி

மானம் தேஹி ஜயம் தேஹி
த்விஷோ ஜஹி மஹேஸ்வரி

தர்மம் தேஹி ஸுகம் தேஹி
ஷஷ்டி தேவ்யை நமோ நம,

தேஹி பூமி ப்ரஜாம் தேஹி
வித்யாம் தேஹி ஸுபூஜிதே

கல்யாணம்  ஜயம் தேஹி
ஷஷ்டி தேவ்யை நமோ நம:


அபிஷேக பூஜை, தூப, தீப, நிவேதன ஆராதனைகளுடன்,

"ஓம் ஹ்ரீம் ஷஷ்டி தேவ்யை ஸ்வாஹா'

என்னும் சஷ்டிதேவி அஷ்டாட்சர ஜெபத்தைக் கூறி வணங்கி இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஓதினால் குழந்தைப் பேறு கிட்டும்.

குமாரசஷ்டியில் ஆரம்பித்து, ஒவ்வொரு வளர்பிறை சஷ்டியிலும் கந்தனுடன் சஷ்டி தேவியையும் (தேவசேனை) துதித்து பலன் பல பெற்று நலமுடன் வாழ்வோமே!
 
 

இஷ்ட வரங்கள் அருளும் கந்த சஷ்டி!

ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டி திதி முருகப் பெருமானுக்கு உகந்த நாள். இந்த நாளில் சூரசம்ஹாரம் நடந்ததால் சஷ்டி திதி மேன்மேலும் சிறப்பு பெறுகிறது.

காசிப முனிவருக்கும் மாயை என்னும் அரக்கிக்கும் பிறந்தவர்கள் சூரபன்மன், சிங்கமுகன், தாருகாசுரன் ஆகிய அசுரர்கள். இந்த அசுரர்கள் மூவரும் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவமியற்றி அரிய பல வரங்களைப் பெற்றிருந்ததோடு, தாய் வயிற்றில் பிறக்காத சிவனது சக்தி மட்டுமே தங்களை அழிக்க முடியும் என்ற வரத்தையும் பெற்றிருந்தனர். வரங்கள் தந்த வலிமையைப் பயன்படுத்தி ஆணவம்கொண்டு தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர்.

அசுரர்கள் பெற்றிருந்த வரத்தை அறிந்த தேவர்கள் அவர்களை அழிக்க சிவபெருமானை சரண டைந்தனர். யோகத்தில் ஆழ்ந்திருந்த சிவபெருமானின் தவம் கலைந்தால்தான் தங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்த தேவர்கள், சிவபெருமானது தவத்தைக் கலைக்க மன்மதனை அனுப்பினர். மன்மதனின் பாணத்தால் தவம் கலைந்த சிவபெருமான், அவன்மீது கோபம் கொண்டு அவனைத் தன் நெற்றிக்கண்ணால் எரித்தார்.

இந்த நிலையில் தேவர்கள் தங்களை அசுரனின் கொடுமையிலிருந்து காக்குமாறு வேண்டிப் பணிந்தனர். அதையேற்ற சிவபெருமான் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறுமுகனாகிய முருகப் பெருமானைத் தோற்றுவித்தார்.

முருகப்பெருமான் சூரனை அழிக்கப் புறப்பட்டார். சூரபன்மன் சிறந்த சிவபக்தன் என்பதால், அவன் திருந்துவதற்கு வாய்ப் பளிக்கும்விதமாக வீரபாகுத் தேவரை அவனுக்கு நல்லுரைகள் கூறிவருமாறு அனுப்பினார்.

வீரபாகுவின் அறிவுரைகளை ஏற்காத சூரபன்மன், ஆணவத்தால் தன் படைகளுடன் முருகப் பெருமானை எதிர்த்துப் போருக்குப் புறப்பட்டான்.

முருகப் பெருமானுக்கும் அசுரர்களுக்கு மிடையே ஆறு நாட்கள் போர் நடந்தது. சூரபன்மனின் படைகள் அழிந்தன. சிங்கமுகனும் தாருகாசுரனும் போரில் முன்னதாகவே மாண்டு விட,
சூரபன்மன் நேரடியாக முருகனை எதிர்க்க சக்தியின்றி சக்கரவாகப் பறவையாக மாறிப் போரிட்டான். பிறகு கடல் நடுவே மாமரமாகி நின்ற சூரனை முருகன் வேல்கொண்டு இருகூறாக்கினார்.

அவை சேவலும், மயிலுமாகிப் போரிட வந்தன.

அவற்றுக்கு மெய்யுணர்வு வழங்கி அவற்றை முருகப்பெருமான் தன்னருகில் இருக்கும் நிலை வழங்கினார். இவ்வாறு போரின் இறுதி நாளான சஷ்டியன்று சூரன் சம்ஹரிக்கப்பட்டான். சூரசம்ஹாரம் நடந்த இடம் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்.

சூரபன்மனை முருகப்பெருமான் அழித்த பிறகு, இந்திரன் தன் மகளான தெய்வானையை முருகப் பெருமானுக்குத் திருமணம் செய்துவைத்தார்.


கந்தப்பெருமான் சூரர்களை அழிக்கப் போர்புரிந்த நிகழ்வே கந்தசஷ்டி விழாவாக விரதமிருந்து அனுஷ்டிக்கப்படுகிறது. தீபாவளி அமாவாசைக்கு அடுத்தநாள் வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி ஆறாவது நாள் சஷ்டி திதியில் விரதத்தை முடிக்கவேண்டும்.

கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்கள் விரத நாட்கள் ஆறிலும் பூரண உபவாசம் இருக்கவேண்டும். இயலாதவர்கள் முதல் ஐந்து நாட்கள் பால், பழம் உண்டு ஆறாவது நாளான சஷ்டி தினத்தன்று மட்டுமாவது பூரண உபவாசம் மேற்கொள்ளவேண்டும். தினந்தோறும் அன்றாடக் கடமைகளை முடித்த பின் முருகன் கோவிலிலோ, வீட்டிலோ முருகனை மலர்கொண்டு வழிபட்டு திருப்புகழ், கந்தர்சஷ்டி கவசம், கந்தர் கலிவெண்பா போன்ற முருகன் துதிகளைப் பாராயணம் செய்யவேண்டும். ஏழாவது நாள் சப்தமியன்று வழிபாட்டை முடித்துவிட்டு ஆறு அடியார்களுக்கு உணவளித்து உபசரிக்கவேண்டும்.

கந்தசஷ்டி விரதம் முருகப்பெருமானுக்குரிய விரதங்களுள் முதன்மையானது. இவ்விரதத்தை முறைப்படி மேற்கொள்பவர்கள் மற்ற எல்லா விரதங்களையும் அனுஷ்டித்த பலனைப் பெறுவர்.
 
கந்தசஷ்டி தொடங்கி ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி திதியன்று விரதம் கடைப்பிடித்தால் குழந்தைச் செல்வம் கிட்டும்; உடல் வளம் பெறும்; குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்; சுபகாரியங்கள் நடக்கும்.
 
ஐப்பசி மாத தீபாவளி அமாவாசைக்குப் பின் தொடர்ந்து விரதம் கடைப்பிடிக்க இயலாதவர்கள் கந்தசஷ்டி திருநாளில் விரதம் கடைப் பிடித்து, அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று வழிபட்டாலும் பேறுகள் பெற்றுச் சுகமுடன் வாழலாம்.
 
 

பஞ்சாரண்ய திருத்தலங்கள்!

பாவங்கள் போக்கும் பஞ்சாரண்ய திருத்தலங்களுள் ஒன்று திருக்கொள்ளம்புதூர் எனப்படும் வில்வவனம். மற்றவை திருக்கருகாவூர் எனப்படும் பாதிரிவனம்; அவனியநல்லூர் என்ற முல்லைவனம்; அரித்துவாரமங்கலம் என்னும் வன்னிவனம்; திருஇரும்பூளை என்னும் ஆலங்குடி. இவை ஐந்தும் தொன்மையான தலங்களாகும்.மேற்கண்ட தலங்களனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். அதிகாலை துவங்கி நள்ளிரவு வரை அடுத்தடுத்த காலபூஜையில் கலந்துகொள்ள வசதியிருப்பதால், இந்த ஐந்து கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்க இயலும்.பஞ்சாரண்ய தலங்களில் முதல் தலம் திருக்கருகாவூர். இது தஞ்சை மாவட்டம், பாபநாசத்திலிருந்து தெற்கே ஆறு கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. வாகன வசதிகள் உள்ளன. விடியற்காலையில் தரிசிக்கவேண்டிய தலமாகும். சோழ நாட்டில் போர் நடந்தபோது கர்ப்பிணிப் பெண்கள் திருக்கருகாவூருக்கு அனுப்பி பாதுகாக்கப்பட்டார்கள் என்பது வரலாறு.இங்குள்ள சிவலிங்கத்திருமேனி சுயம்புலிங்கம். முன்பு இப்பகுதி முல்லைக்காடாக இருந்தபோது, லிங்கத்திருமேனியின்மீது முல்லைக்கொடிகள் படர்ந்திருந்தன. அதனால் ஏற்பட்ட தழும்பினை லிங்கத்திருமேனியில் இப்போதும் காணலாம். இந்தச் சுயம்புமூர்த்திக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாற்றப்படுகிறது.கௌதமர், கார்கேய முனிவர்கள் இங்கு தவம் செய்தபோது, அவர்களுக்கு நித்ருவர் என்ற சிவபக்தரும், அவருடைய மனைவி வேதிகையும் பணிவிடை செய்துவந்தனர். பிள்ளைப்பேறு இல்லாத அவர்களின் ஏக்கத்தை அறிந்த முனிவர்கள், இறைவன் முல்லைநாதரையும் இறைவியையும் வேண்டிக்கொள்ளுமாறு உபதேசம் செய்தார்கள். அதன் பலனால் வேதிகை கருவுற்றாள்.
ஒருசமயம், வேதிகையின் கணவர் வெளியே சென்றிருந்த போது, கர்ப்பிணியான வேதிகை மயக்கநிலையில் சோர்ந்து படுத்திருந்தாள். அந்த வேளையில் ஊர்த்துவபாதர் எனும் முனிவர் அங்குவந்து பிட்சை கேட்க, மயக்கநிலையிலிருந்த வேதிகையால் எழுந்து பிட்சையிட முடியாமல்போனது. அதனால் கோபமடைந்த முனிவர் சாபமிட, வேதிகையின் கரு கலைந்தது. இதனால் வருந்திய அவள் அம்பாளிடம் கதறியழுதாள். உடனே தேவியானவள் கர்ப்பரட்சகியாகத் தோன்றி, சிதைந்த கருவை ஒரு குடத்திலிட்டுப் பாதுகாத்து, பத்து மாதம் கழித்து "நைநுருவன்' எனும் குழந்தையாக அவளிடம் கொடுத்தருளினாள். மகிழ்ச்சியடைந்த வேதிகை தன்னைப்போல மற்றவர்களையும் காத்தருளவேண்டுமென்று தேவியிடம் வேண்டினாள். அன்னையும் இசைவுதந்தாள். அன்றிலிருந்து இந்த அன்னை கர்ப்பத்தை ரட்சிக்கும் அன்னையாக ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை என்று போற்றப்படுகிறாள். இந்த அம்பிகையை வேண்டிட, குழந்தைச் செல்வம் கிட்டும். கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவமும் நடைபெறும். உஷத் காலமாகிய காலை 5.00 மணிமுதல் 6.00 மணிக்குள் இத்தல இறைவனையும் இறைவியையும் தரிசிக்கவேண்டும்.அடுத்து, பஞ்சாரண்ய தலங்களில் இரண்டாவதான அவனியநல்லூர் செல்லவேண்டும். அங்கு காலை 8.30 மணிமுதல் 9.30 மணிக்குள் சௌந்தரநாயகி சமேத பாதிரிவனேஸ்வரரை தரிசிக்கவேண்டும். இத்தல இறைவன், இறைவியை வழிபட கண்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். பார்வை நன்கு தெரியும். தஞ்சாவூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் இக்கோவில் உள்ளது. வாகன வசதிகள் உள்ளன. இத்தல இறைவன் பாதிரி மரத்தடியில் சுயம்புமூர்த்தியாக விளங்கியதால், பாதிரி மரமே இத்தல விருட்சமாகக் கருதப்படுகிறது.பஞ்சாரண்ய திருத்தலங்களில் மூன்றாவது தலம் அரித்துவாரமங்கலம். கும்பகோணத்திலிருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. உச்சிக்காலமாகிய காலை 11.00 மணிமுதல் 12.30 மணிவரை இத்தல இறைவனை வழிபடவேண்டும். இறைவன் ஸ்ரீபாதாளேஸ்வரர்; இறைவி அலங்கார அம்மை. கருவறையில் லிங்கத்திருமேனியின்முன் பெரியபள்ளம் இருக்கிறது. பள்ளத்தை பாழி என்றும் சொல்வர். இத்தலத்திற்கு திரு அரதைப் பெரும்பாழி என்ற பெயரும் உண்டு.இத்தலத்தில் இறைவனின் திருவடியைக் காண திருமால் பன்றியாகத் தோன்றி பாதாளத்தை ஏற்படுத்தினார் என்றும்; இறைவன் அந்த பள்ளத்தை கல்லால் மூடினார் என்றும் தலபுராணம் கூறுகிறது. இத்தல இறைவனையும் இறைவியையும் வழிபட, மனஆழத்தில் பதிந்திருக்கும் கவலைகள், குழப்பங்கள், மனஅழுத்தம் ஆகியவை நீங்குமென்பது ஐதீகம்.
அடுத்து தரிசிக்கவேண்டிய தலம் ஆலங்குடி. இங்கு கோவில் கொண்டிருக்கும் இறைவன் ஆபத்சகாயேஸ்வரர்; இறைவி ஏலவார்குழலி. நவகிரகத் தலங்களில் குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. தஞ்சாவூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில், நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது, துர்வாச ரிஷி சிவபூஜை பிரசாதமாகிய மாலையைக் கொண்டுவருகையில், வழியில் இந்திரனைக் கண்டு அவனிடம் கொடுத்தார். அதை இந்திரன் அலட்சியமாக வாங்கி யானைத்தலையில் வைத்தான். அது அந்த மாலையைக் கீழேபோட்டு காலால் மிதித்து நாசமாக்கியது. இதனைக் கண்ட துர்வாசர் கோபம் கொண்டு, ""உன் பதவி, செல்வம் எல்லாம் அழியட்டும்'' என்று சாபமிட்டார். முனிவரின் சாபம் உடனே பலித்தது. அவன் அமர்ந்திருந்த ஐராவதம் யானை மறைந்தது. பிச்சைக்காரன்போல் நடுவீதியில் நின்றான் இந்திரன். பின்னர் தன் தவறை உணர்ந்து வருந்தி, இத்தல இறைவனை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதாக தலபுராணம் குறிப்பிடுகிறது.இத்தல இறைவனை மாலை நேர பூஜையில் தரிசித்தால் குரு தோஷம் நீங்கும். குருவின் திருவருளால் வேண்டியது கிட்டும். மேலும், தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் விசேஷமானதால், வியாழக்கிழமைதோறும் வழிபட தடைகள் நீங்கி, விரைவில் நல்ல இடத்தில் திருமணம் கைகூடும். நல்ல பதவிகிட்டும்; கல்வியில் சிறந்து விளங்கலாம்.ஐந்தாவதாக தரிசிக்கவேண்டிய திருத்தலம் திருக்கொள்ளம்புதூர். இது தீபாவளித் திருநாளுடன் தொடர்புடையது. தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் கொரடாச்சேரிக்கு அருகில் இத்தலம் உள்ளது. இறைவன் வில்வவனேஸ்வரர்; அம்பாள் சௌந்தராம்பிகை. இங்கு அர்த்தஜாம வழிபாடு புகழ்பெற்றது. இத்தலத்தின் மேற்கில் அகத்திய காவேரி என்கிற வெட்டாறு ஓடுகிறது. இதற்கு முள்ளியாறு என்ற பெயரும் உண்டு. ஓடம்போக்கி ஆறு என்று உள்ளூர் மக்கள் அழைப்பர். இத்தலத்தில்தான் இறைவன் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் வழங்கி அருள்புரிந்தார் என்று புராணம் கூறுகிறது.கொள்ளாம்புதூர் ஆலயத்தில், தீபாவளித் திருநாளன்று நள்ளிரவில் நடைபெறவேண்டிய அர்த்தஜாம பூஜை அதற்கு அடுத்த நாள் காலையில் நடைபெறுகிறது. இதற்குக் காரணமானவர் திருஞானசம்பந்தர்.திருக்கருகாவூரில் உஷத்காலபூஜை, அவனியநல்லூரில் காலசந்தி, அரித்துவார மங்கலத்தில் உச்சிக்காலபூஜை, ஆலங்குடியில் சாயரட்ச பூஜை என்று கலந்துகொண்டு, திருக்கொள்ளம்புதூர் சென்று அர்த்தஜாம பூஜையில் கலந்துகொள்ள விரும்பினார் திருஞானசம்பந்தர்.அன்று ஐப்பசி மாத அமாவாசை தீபாவளி தினம். இருள்சூழ்ந்த அந்த வேளையில் தம் அடியார்களுடன் புறப்பட்டார் திருஞானசம்பந்தர். வழியில் முள்ளியாற்றைக் கடந்து செல்லவேண்டும். ஆனால் ஆற்றில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. சம்பந்தருடன் வந்த சீடர்கள் எல்லாம் வெள்ளத்தைக் கண்டு அஞ்சினர். பூஜை நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆற்றங்கரையில் படகுகள் இருந்தாலும் துடுப்புகள் இல்லை.ஞானசம்பந்தர் துணிச்சலுடன் படகை அவிழ்த்து ஏறியமர்ந்து, சீடர்களையும் அழைத்தார். வெள்ளத்தையும் திக்கு திசை அறியமுடியாத அமாவாசை இருளையும் கண்டு சீடர்கள் தயங்கினர். உடனே சம்பந்தர் திருப்பதிகம் பாட, அவர்கள் தைரியம் பெற்று ஓடத்தில் அமர்ந்தனர். ஓடம் நீரில் இப்படியும் அப்படியும் அசைந்துகொண்டிருந்தது. துடுப்பில்லாமல் எப்படி ஓடத்தை சரியாக செலுத்தமுடியும் என்று சீடர்கள் யோசித்தனர். அப்போது சம்பந்தர், "கொட்டமே கமழும்' என்ற பதிகத்தைப் பாடினார். இறையருளால் ஓடம் அமைதியாக நகர்ந்துகொண்டிருந்தது.திருக்கொள்ளம்புதூர் கோவில் அர்ச் சகர்கள், திருஞானசம்பந்தர் வருகையை முன்னரே அறிந்திருந்ததால் அவரை வரவேற்க கோவில் வாசலில் காத்திருந்தார்கள். நேரம் நகர்ந்துகொண்டிருந்தது. அர்த்தஜாம பூஜைக்கான நேரம் கடந்துவிட்டது. சம்பந்தர் வராதால் அர்ச்சகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். சிறிது நேரத்தில் சூரியன் உதித்துவிடுமே என்று வருந்தினார்கள். அதேபோல் அதிகாலை நேரத்தில் சீடர் களுடன் திருஞானசம்பந்தர் கோவிலுக்கு வந்தார். அவருக்காக அர்த்தஜாம பூஜை உஷத்காலத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வு இப்பொழுதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஐப்பசி அமாவாசையன்று துவங்கும் தீபாவளித் திருவிழா மறுநாளும் நீடிக்கப் படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.திருஞானசம்பந்தர் இக்கோவிலுக்கு வருகைதந்த சம்பவத்தை நினைவுகூரும் விதமாக ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் ஓடத்திருநாள் கொண்டாடப்படுகிறது.மேலும், இத்தலத்தின் தனிச்சிறப்பு என்னவெனில், இந்த ஊரில் இறப்பவர்களுக்கு சிவபெருமான் பஞ்சாட்சார மந்திரத்தை வலது செவியில் தாமே ஓதி முக்தியளிப்பதாக ஐதீகம்.பஞ்சாரண்ய திருத்தலங்களை ஒரே நாளில் தரிசித்தால் முற்பிறவிப் பாவங்கள், வினைகள், இப்பிறவி தோஷங்கள் அனைத் தும் விலகுமென்பது ஐதீகம்.