Friday 19 August 2016

மங்களமூர்த்தி மகாராஜா!


நாம் எந்த ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும்போதும், விக்கினங்களைத் தீர்த்து அருள்பவராகிய விநாயகக் கடவுளை வணங்கிவிட்டேஆரம்பிக்கிறோம்.



பிள்ளையார் சுழி

பிள்ளையார் சுழி என்பது அகரம் ( அ ), உகரம் ( உ ), மகரம் ( ம ) ஆகிய மூன்றையும் அடக்கியுள்ள ‘ ஓம் ‘ என்னும் பிரணவ மந்திரத்தின் ஆரம்ப வடிவம். அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம்; கோடு சிவலிங்கத்தைக் குறிக்கிறது.

எளிமையானவர் பிள்ளையார். ஏழை எளியவர்களுக்கெல்லாம் சுவாமி இந்த பிள்ளையார்தான். மற்ற தேவ விக்கிரகங்களை பிராணப் பிரதிஷ்டை செய்வதுபோல பிள்ளையாருக்குச் செய்ய வேண்டியதில்லை. மஞ்சளிலோ சாணத்திலோ பிடித்துவைத்து வேண்டினாலே போதும்; உடனே வந்து அருளைத் தந்துவிடுவார். பிள்ளையார் பூஜை ஆடம்பரமில்லாதது. நம்மால் முடிந்தவற்றை வைத்து எளிமையாக நைவேத்தியம் செய்துவிடலாம்.


விநாயகரின் திருவுருவம் விலங்கு, பூதம், மனிதன், தேவர் என்கிற நான்கின் இணைப்பாக காட்சி தருகிறது. இவருடைய யானைத் தலை, செவி, தும்பிக்கை- விலங்கு வடிவமாகும்.
 
பேழை வயிறு, குறுகிய கால்கள்- பூதவடிவமாகும். புருவம், கண்கள்- மனித வடிவமாகும். இரண்டிற்கும் மேற்பட்ட கைகள்- தேவ வடிவமாகும்.

இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மொழி, இன வேறுபாடின்றி கொண்டாடும் பண்டிகை பிள்ளையார் சதுர்த்தி.

மனிதர்கள் மட்டுமின்றி தேவர்களும் இவரை வழிபட்டே எச்செயலையும் தொடங்குவார்கள். நான்கு வேதங்களும், 18 புராணங்களும், இரண்டு இதிகாசங்களும் முழுமுதற் கடவுளான விநாயகரைப் போற்றுகின்றன.

இவரை நினைத்து அனுசரிக்க வேண்டிய விரதம்தான் விநாயகர் சதுர்த்தி விரதம். ஆவணி மாத அமாவாசையின் 4-ஆம் நாள், சுக்லபட்ச சதுர்த்தியன்று நம் முதல்வனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம்.

விநாயகர் சதுர்த்தி பூஜை!


விநாயகர் சதுர்த்தியன்று குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்று பிள்ளையாரை வணங்கியபின், நம்  வீட்டுப் பூஜைக்குரிய மண் பிள்ளையாரை வலஞ்சுழியாகப் பார்த்து வாங்கி வரவேண்டும். அதற்குமுன் நிவேதனப் பொருட்கள், பூஜைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துவிட்டு வரவேண்டும். பிள்ளையார் வாங்கி வந்தபின் தண்ணீர், எண்ணெய், சீயக்காய்ப்பொடி, கதம்பப் பொடி, பால், தயிர், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் வரிசைப்படி நிதானமாக அபிஷேகம் செய்யவேண்டும். அதன்பின் சந்தனம் இட்டு, அதன்மீது குங்குமப் பொட்டிட்டு, இடுப்பில் பிள்ளையார் துண்டுகட்டி, தொப்பை யில் காசு வைக்கவேண்டும்.

பூமாலை, வன்னி இலைமாலை, அறுகம்புல் மாலை, எருக்கம்பூ மாலை ஆகியவற்றுடன் முப்புரிநூலும் அணிவிக்கவேண்டும். பின்னர் பூஜையறையில் நாம் தயாராக வைத்திருந்த கோலமிட்ட மனைப்பலகையில் மெதுவாக பிள்ளையாரை அமர்த்தியபின், குன்றிமணியால் பிள்ளையாரின் கண்களைத் திறக்கவேண்டும். பின்னால் குடை வைக்கவேண்டும். இப்போது பூஜைக்கு பிள்ளையார் தயார்.


இருபுறமும் குத்துவிளக்கை வைத்து ஐந்துமுக தீபம் ஏற்றவேண்டும். நிவேதனப் பொருட்களை தட்டுகளில் பிள்ளையார்முன் வைக்கவேண்டும். கொழுக்கட்டை, சுண்டல், வடை ஆகியவை முக்கியம். அதன்பின் பொரி, கடலை, வெல்லம், அவல் ஆகியவையும் வேண்டும். பிறகு நம் வசதிப்படி போளி, அல்வா, லட்டு போன்றவற்றை வைக்கலாம். வாழைப்பழம், திராட்சை, ஆப்பிள், கொய்யா, விளாம்பழம், பேரிக்காய், நாவல்பழம், சோளக்கதிர், கம்பங்கதிர், கேழ்வரகுக் கதிர் போன்றவற்றை பிள்ளையார்முன் வைத்தபின் பூஜையை ஆரம்பிக்கலாம். சர்க்கரைப் பொங்கலும் வைக்கவேண்டும்.
எளிமையான பிள்ளையார் பாடல்களைப் பாடலாம். விநாயகர் துதி, விநாயகர் அகவல், நான்மணி மாலை போன்றவற்றைப் படிக்கலாம்.

முதலில்,
“சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் பிரசன்னவதனம்
யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே’
என்னும் விநாயகர் மந்திரம் கூறிவிட்டுதான் பூஜையை ஆரம்பிக்கவேண்டும்.

அதன்பின்,
“ஓம், ஸ்ரீம், ஹ்ரீம், க்லௌம், கம், கணபதயே வரவரத
சர்வஜனமேய வஸமானய ஸ்வாஹா’
என்னும் கணபதி மூலமந்திரத்தை 21 முறை, 108 முறை என நம் வசதிப்படி ஜெபிக்கலாம்.
 
குழந்தைகளையும் சொல்லச்செய்யலாம். பழக்கிவிட்டால் தானாக வந்துவிடும். அதன்பின் தூப, தீபம் செய்தபின் கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவுசெய்யவேண்டும்.

பூஜை முடிந்தபின் பலகாரங்களை அனைவருக்கும் கொடுத்துவிட்டு, நாமும் சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும். மண் பிள்ளையாரை நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து நீரில் கரைக்கவேண்டும்.
 
அதுவரை பிள்ளையாரை பின்னமாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அன்றேயும் செய்யலாம். 3-ஆம் நாள், 5-ஆம் நாள், 7-ஆம் நாள், 9-ஆம் நாள் என ஒற்றைப் படைநாளில் செய்யலாம்.

பிள்ளையாரை நீரில் விடும் நாள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமையாக இருக்கக்கூடாது. இவ்வாண்டு வியாழனன்று பிள்ளையார் சதுர்த்தி வருவதால், 3-ஆம் நாள், 5-ஆம் நாள், 7-ஆம் நாள் செய்யலாம். அப்படி செய்ய எடுத்துச் செல்லும்போது தொப்பை யிலுள்ள காசை எடுத்து பூஜையறையில் வைத்துவிடவேண்டும்.

“மங்களமூர்த்தி மகாராஜா, அடுத்த வருடமும் வா ராஜா’ எனக் கூறி வழியனுப்பி வைக்கவேண்டும். இதை ஆண்கள் மட்டுமே செய்யவேண்டும். எத்தனை நாள் பிள்ளையார் நம் வீட்டில் உள்ளாரோ, அத்தனை நாளும் விளக்கேற்றி மூன்று வேளையும் நிவேதனம் செய்யவேண்டும்
 
 

கணபதியே வருவாய்! அருள்வாய்!

விநாயகர்-21

விநாயகரை இருபத்தியொரு எண்ணிக் கையிலான பூஜைப் பொருட்களால் வழி படுதல் வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.


மலர்கள் 21, இலைகள் 21, பழங்கள் 21, அறுகம்புல் 21, மோதகம் 21, அதிரசம் 21, அப்பம் 21.மனிதனுக்குள் இருக்கும் இந்திரியங்கள் 21.அவை: ஞானேந்திரியங்கள் 5; அதன் செயல்கள் 5; கர்மேந்திரியங்கள் 5; அதன் செயல்கள் 5; மனம் 1. ஆக இந்திரியங்கள் 21. இந்த 21 இந்திரியங்களிலும் நிறைந்து அருள்பாலிக்கும் ஓங்கார உருவம் படைத்தவர் விநாயகர் என்று ஞான நூல்கள் கூறுகின் றன.


21 பொருட்களை சமர்ப்பித்து வழிபட நமக்கு 21 அம்சங்களை அள்ளிக்கொடுப்பார் விநாயகர்.
தர்மம், பொருள், இன்பம், சௌபாக்கியம், கல்வி, பெருந்தன்மை, நல்வாழ்வு, அழகு, வீரலட்சுமியின் அருள், விஜயலட்சுமியின் கடாட்சம், எல்லாரும் விரும்பும் தன்மை, குடும்பத்தில் ஒற்றுமை, மக்கட்செல்வம், நல்லறிவு, பதவி, நற்புகழ், துன்பம் வராமை, தீயதை அகற்றுதல், செல்வாக்கு, சாந்த
குணம், பிறர் நம்மீது பொறாமைப்படாமல் இருத்தல் ஆகிய 21 சிறப்புகளை நமக்கு அள்ளித்தரும் மாபெரும் வள்ளல் விநாயகப் பெருமான்!


விநாயகப் பெருமானுக்குரிய மூல மந்திரங்கள் பல உள்ளன. இருந்தாலும் கீழ்க்கண்ட பிள்ளையார் மந்திரம் நல்ல பலன் தருமென்பர்.


நமோ வ்ராத பதயே நமோ கணபதயே
நம, ப்ரமதே பதயே, நமஸ்தே அஸ்து                     லம்போதராய
ஏக தந்தாய விக்ன நாசினே
சிவ சுதாய வரதமூர்த்தயே நமோ நம:


விநாயகப் பெருமானுக்குரிய எல்லா மந்திரங்களையும் மேற்கண்ட மந்திரம் உள்ளடக்கியதாகக் கருதப்படுகிறது. இந்த “மாலா’ மந்திரத்தை தகுந்த குருவிடம் உபதேசம் பெற்று 48 நாட்கள் விநாயகர் சந்நிதிமுன் 21 முறை தியானித்து வழிபட்டால் நினைத்த நற்காரியங்கள் வெகுவிரைவில் சித்தியாகும் என்று விநாயகர் வழிபாட்டு நூல்கள் கூறுகின்றன.

விநாயகருக்கு எந்தெந்த அபிஷேகம் என்னென்ன நட்சத்திரங்களில் செய்ய வேண்டும் தெரியுமா?

பாலபிஷேகம் - உத்திராடம்
சந்தன அபிஷேகம் - பரணி, ரோகிணி, புனர்பூசம், அஸ்தம், மூலம்
தேனபிஷேகம் - ரேவதி
திருநீறு அபிஷேகம் - மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம்
மஞ்சள் அபிஷேகம் - மிருகசீரிஷம், பூரம், அனுஷம்
செந்தூரக் காப்பு - திருவாதிரை
அன்னாபிஷேகம் - பூரம்
ஸ்வர்ண (தங்க இலை) அபிஷேகம்) - திருவோணம்

விநாயகரின் ஐந்து கைகள் :

விநாயகப்பெருமானுக்கு ஐந்து கைகள் உள்ளன. இதனால் இவர் ஐந்து கரத்தான் என அழைக்கப்படுகிறார். இந்த ஐந்து கைகளும் சிவாயநம என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உணர்த்துகிறது.
அங்குசம் தாங்கிய வலது மேல் கை - சி
பாசம் பற்றிய இடது மேல் கை - வா
தந்தம் ஏந்திய வலது கை - ய
மோதகமுள்ள இடது கை - ந
துதிக்கை - ம

வெல்லப் பிள்ளையார் :

விநாயகரை மஞ்சள், வெள்ளெருக்கு வேர் ஆகியவைகளில் செய்து வழிபடுவார்கள். அத்துடன் சாணம், புற்றுமண், வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் செய்து வழிபாடு செய்தால் மறுபிறப்பில்லா நிலையை அடையலாம் என புராணங்கள் கூறுகின்றன.

விநாயகர் விளக்கு

விநாயகர் சதுர்த்தியன்று கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விநாயகர் விளக்கேற்றி வழிபடலாம். இதற்காக விநாயகர் உருவத்துடன் அமைந்த விளக்குகள், குத்து விளக்கின் உச்சியில் விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற அமைப்பிலும் கிடைக்கிறது. விநாயகர் தன் கையில் விளக்கை பிடித்து, அதில் தும்பிக்கையை வைத்தபடி ஒரு விளக்கு வந்துள்ளது. பரந்த வயிற்றுடன் இருக்கும் விநாயகரின் வயிறு, உலகத்தை குறிக்கிறது. அதாவது ஜீவராசிகள் அனைத்தும் அவருக்குள் ஐக்கியம் உணர்த்தும் வகையில் இவ்விளக்கு உள்ளது.



 

விநாயகரின் 16 வடிவங்கள்!

பாலகணபதி:
மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும் கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும்.

தருண கணபதி:
பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், தெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டு கைகளில் ஏந்தி, சூரியோதய கால ஆகாயத்தின் செந்நிற மேனியுடைய இளைஞனாகக் காட்சி தருபவர். இவரை வழிபடுவதால் முகக்கலை உண்டாகும்.

பக்த கணபதி:
தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினாலான பாயாசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தி நிலா ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடன் காட்சியளிப்பவர். இவரை வழிபடுவதால் இறை வழிபாடு உபாசனை நன்கு அமையும்.

வீர கணபதி:
தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி, ரவுத்ராகாரமாக வீராவேசத்தில் செந்நிற மேனியுடன் விளங்கும் ரூபத்தை உடையவர். இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.

சக்தி கணபதி:
பச்சைநிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர். பாசம், அங்குசம் ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவர். செந்தூர வண்ணம் கொண்டவர். இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும்.

துவிஜ கணபதி:
இரண்டு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சயமாலையும், தண்டமும், கமண்டலமும் ஏந்தியவர். வெண்ணிற மேனி கொண்டவர். இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும்.

சித்தி கணபதி:
பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்கும் ஆகியவற்றைக் ஏந்தி ஆற்றலைக் குறிக்கும். சித்தி சமேதராகவும் பசும்பென் நிறமேனியானவரான இவருக்குப் பிங்கள கணபதி என்ற பெயர் வந்தது. வழிபடுவதால் சகல காரியம் சித்தியாகும்.

உச்சிஷ்ட கணபதி:
வீணை, அட்சமாலை, குவளை மலர், மாதுளம் பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளார். கருநீல வண்ணமேனியுடைய இவரை வழிபடுவதால் வாழ்க்கை உயர்வு, பதவிகளை பெறலாம்.

விக்னராஜ கணபதி:
சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடாரி, பாசம், அங்குசம், ரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தி ஸ்வர்ண நிறமேனியுடன் பிரகாசமாக விளங்குபவர். இவரை வழிபடுவதால் விவசாயம் விருத்தியாகும்.

க்ஷிப்ர கணபதி:
கற்பகக்கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களிலும் ரத்தினங்களை பதித்த கும்பத்தை தனது துதிக்கையிலும் ஏந்திய செம்பருத்தி மலரைப் போன்ற சிவந்த மேனியுடைய இவர் சீக்கிரமாக அருள்புரிபவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும்.

ஹேரம்ப கணபதி:
அபய ஹஸ்தங்களுடன் (கரங்கள்), பாசம், அங்குசம், தந்தம், அட்சமாலை, கோடாரி, இரும்பினாலான வலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தி, பத்துகைகளும், ஐந்து முகங்களும் அமைந்து வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சி தருகிறார்.

நேபாள நாட்டில் காணப்படும் இவர் திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய ஐந்தாவது முகத்துடனும் விளங்குகிறார். இவரை வழிபடுவதால் விளையாட்டு, வித்தைகள் இவற்றில் புகழ் பெறுவார்கள்.

லட்சுமி கணபதி:
பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்திதன் இருபுறமும் இரு தேவிகளை அணைத்துக் கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர். இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.

மகா கணபதி:
பிறை சூடி, மூன்று கண்களுடன் தாமரை மலர் ஏந்தி தன் சக்தி நாயகராகிய வல்லபையை அணைத்த வண்ணம் கைகளில் மாதுளம்பழம், கதை, கரும்பு, கரம்,பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும் துதிக்கையில் ரத்தின கவசத்தையும் ஏந்தி சிகப்புநிற மேனியாய் விளங்குபவர். இவரை வழிபடுவதால் தொழில் விருத்தியாகும்.

புவனேச கணபதி: வி
நாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால் அசுரனது சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு வடிவத்துடன் ஓடினான் கஜமுகாசுரன். அவன் மீது பாய்ந்து ஏறிஅவனை தன் வாகனமாக்கிக் கொண்ட இவர் செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருகிறார். இவரால்விவகாரம், வியாஜ்ஜியம் வெற்றியாகும்.

நிருத்த கணபதி:
மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதிரம் ஜொலிக்கும் ஆறாவது கையான துடக்கையை உயர்த்தி ஒற்றைக்காலில் ஆனந்த நடனமாடும் இவர் நர்த்தன கணபதியாகக் காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.

ஊர்த்துவ கணபதி:
பொன்னிற மேனியுடைய இவர் எட்டு கைகள் கொண்டவர். பச்சை நிற மேனியுடன் விளங்கும் தேவியை தன் இடதுபுறம் அணைத்துக் கொண்டு வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்.
 

விக்னெஷ்வரர் ராஜ வஸியம்!

ஐயும் கணபதி கிலியும் கணபதி ஸவ்வும் கணபதி வா வா கணபதி
சர்வ தேவாதி தேவர்களும் உன் வசமானார்போல் நீ என் வஸமாக ஸ்வாகா.


இந்த மந்திரத்தை உதடு அசையாமல் நாக்கு உச்சரிக்காமல் மனதிற்குள் ஆழமாக, மிக ஆழமாக இருபது நிமிட நேரம் தொடர்ச்சியாக சொல்ல,  சில நாட்களிலேயே  வாழ்க்கையில் நல்ல மாறுதல் ஏற்படுவதை  உணரலாம்!    ஆற்று சுழலில் அகப்பட்டு வெளியில் வர முயற்சிப்பவனுக்கு கையில் கிடைக்கும் கட்டை போன்றது இந்த மந்திரம். இதை பற்றிக் கொண்டால் கரைசேரலாம். முயன்றால் வெற்றி நிச்சயம்.
 
 

ஆனைமுகனின் ஆறுபடைவீடு!

 
முருகப் பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பதை எல்லோரும் அறிவோம். அதேபோல பிள்ளையாருக்கும் அறுபடை வீடுகள் உண்டு. பிள்ளையார் லீலா விநோதமாக சில தலங்களில் நிகழ்த்திய அற்புதங்களை கொண்டு இத்தலங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆற்றுப்படை என்பது ஆற்றுப்படுத்துதல், சாந்தப்படுத்துதல் எனும் பொருள்களில் வழங்கப்படுகிறது. அதிலிருந்துதான் அறுபடை வீடுகள் வந்ததாக சிலர் கூறுவர். ஆனாலும் இங்கு விநாயகரின் சாந்நித்தியம், புகழ், கீர்த்தி போன்றவை ஓங்கியிருக்கும் தலங்களில் முக்கியமானவையாக இந்த அறுபடை தலங்கள் விளங்குகின்றன.


பிள்ளையார்பட்டி. ஊரின் பெயரே இறைவனின் திருப்பெயரால் அழைக்கப்படுகிறது. ராஜகோபுரத்தோடு கூடிய பொலிவு மிக்க தலம் இது. வரலாற்றுப் பெருமையும் புராணத் தொன்மையும் சுமந்து நிற்கும் பூமி. முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன் அமைந்த கோயில். திருவீங்கைக்குடி மகாதேவர் எனும் திருவீசர், ஈசனாக அருளும் மகத்தான ஆலயமாகவும் இது விளங்குகிறது. இந்த ஆலயத்தில் குடைவரை அமைப்பிற்குள் கற்பக விநாயகர் அருட்காட்சி தருகிறார். மகேந்திரவர்மனின் வாதாபி வெற்றிக்குப்பின் பல்லவர் ஆட்சி மிகுந்த அமைதியோடு நடைபெற்றது. அந்த சமயத்தில்தான் நரசிம்மவர்மன் தன் தந்தை நிறைவேற்றி வந்த கோயில் திருப்பணிகளில் தன்னையும் முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்டான். மேலும் சிறுத்தொண்ட நாயனாரும், திருச்செங்காட்டங்குடி கணபதியும் இவன் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதால் கோயிற் பணிகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டான். அப்படி பிள்ளையாருக்கென அமைத்த இத்தலத்தில் பின்னாளில் பாண்டிய அரசர்களும் திருப்பணி செய்தார்கள்.

பிள்ளையார்பட்டியில் அருளும் பிள்ளையார் வலம்புரியாக இருப்பதால் மிகுந்த தத்துவம் பொதிந்த மூர்த்தமாக கருதப்படுகிறார். ஓங்கார ஒலியின் வரி வடிவம்தாம் ஓம் என்பதாகும். வலப்புற தந்தம் பகுதியிலிருந்து ஓ என்ற எழுத்தின் தொடக்கச் சுழி கிடைத்து விடுகிறது. அங்கிருந்து மேல்நோக்கி வலஞ்சுழித்து இடக்காது வரை சென்று, வளைந்த இடத்தந்தத்தின் வழியாக கீழ்நோக்கி துதிக்கை
நுனிவரை கோடிட்டால் ‘ஓ’ என்ற வடிவம் தோன்றுவதை காணலாம். கையிலுள்ள சிவலிங்கம் ‘ம்’ எழுத்தை உணர்த்துகிறது. இவ்வாறு வலம்புரி பிள்ளையாராகவே இத்தலத்தில் அருள்வதால் மற்ற மூர்த்தங்களை விட இவர் சிறப்பு பெற்று விளங்குகிறார். பொதுவாக மற்ற தலங்களில் இருப்பதைப்போல அல்லாமல், இரண்டு கரங்களோடு இங்கு விநாயகர் அருள்கிறார். அதனால் அங்குசம், பாசம் இல்லை. அர்த்தபத்ம ஆசனம் போன்று கால்கள் மடிந்திருக்க, வயிறு ஆசனத்தில் படியாமல் அமர்ந்தருள்கிறார். இடக்கரத்தை கடிஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலத்தில் தோன்றுகிறார். வலக்கரத்தில் சிவலிங்கத்தைத் தாங்கியிருக்கிறார். பிள்ளையார் வணக்கம் தமிழகத்தில் தோன்றிய ஆதிநாளிலேயே இந்த மூர்த்தம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கற்பக விநாயகரை தரிசிக்க வாழ்வு வளம் பெறும். காரைக்குடியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.



கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில். விருத்தாம்பிகை-பாலாம்பிகை சமேதராக அருள் பரப்பி வருகிறார் விருத்தகிரீஸ்வரர். நடுநாட்டு சிவாலயங்களில் ஒன்பதாவது திருத்தலம் இது. விருத்த காசி, பழமலை, திருமுதுகுன்றம் என்றெல்லாமும் அழைக்கப்படுகிறது. புராணப் பெருமையோடு வரலாற்றுச் செறிவும் நிறைந்தது. நால்வரால் பாடல் பெற்ற பெருமை கொண்டது. இத்தல ஈசனை
வள்ளலார், குருநமச்சிவாயர், குமாரதேவர் போன்ற ஞானியர் பாடிப் பரவியுள்ளனர். இத்தலம் ஐந்தின் சிறப்புகளை கொண்டது. இங்கு திருச்சுற்றுகள், கோபுரங்கள், கொடிமரங்கள், நந்திகள், தீர்த்தங்கள், மூர்த்திகள், லிங்கங்கள், தேர்கள், திருக்கோயில் உள்மண்டபங்கள், விநாயகர்கள் என்று எல்லாமே ஐந்தைந்து மயம்தான். கைலாச பிராகாரத்தில் ‘28 ஆகமக் கோயில்’ இருக்கிறது. இருபத்தெட்டு ஆகமங்களும் சிவலிங்கங்களாக அமைக்கப்பட்டு இத்தலத்தில் பூஜிக்கப்படுகின்றன. வடக்கு கைலாச பிராகாரத்தில் அன்னை பெரியநாயகி அருள் பொங்க தரிசனம் தருகிறாள். அன்னையின் தரிசனம் மன இருளை நீக்கி உள்ளத் தெளிவு தரும்.

பிள்ளையாரின் அறுபடை தலங்களில் இதுவும் ஒன்று. நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால், ஆழத்து பிள்ளையார், கிழக்கு முகமாக, 18 அடி ஆழத்தில் கோயில் கொண்டிருக்கிறார். மனம் என்பது பூமி. இவ்வாறு மனம் எனும் பூமியைத் தோண்டி ஆழமாகச் சென்று உற்று நோக்கின் அதையே இயக்கும் சக்தியாக பிள்ளையார் என்ற பரமாத்ம வஸ்துவை கண்டறியலாம். இதன் நிரூபணமாகவே இங்கு பூமியிலிருந்து 18 அடி ஆழத்தில் பிள்ளையார் அருள்கிறார். உள்சென்று அவரை தரிசிக்க 16 படிகளில் இறங்க வேண்டும். இந்த பதினாறு படிகளும் பிள்ளையாரின் முக்கியமான பதினாறு திருப்பெயர்களை சொல்வதாக அமைந்துள்ளன. இதை ஷோடச நாமாக்கள் என்பார்கள். ஷோடச என்றால் பதினாறு. அந்த பெயர்கள் என்னென்ன? ஸுமுகர், ஏகதந்தர், கபிலர், கஜகர்ணர், லம்போதரர், விகடர், விக்நராஜர், விநாயகர், தூமகேது, கணாத்யக்ஷர், பாலசந்திரர், கஜானனர், வக்ரதுண்டர், சூர்ப்பகர்ணர், ஹேரம்பர், ஸ்கந்தபூர்வஜர். எனவே, ஒவ்வொரு படிக்கட்டில் இறங்கும்போதும் இந்த விநாயகரின் திருநாமங்களை ஒவ்வொன்றாகச் சொல்லலாம். இப்படி இறங்கி, இந்த நாமத்திற்குரிய பெருமானை தரிசிக்கலாம். ‘திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்’ என்று தொடங்கி, ‘பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவோம்’ என்று முடியும் பதிகம் இந்த நாயகனைப் பற்றியதுதான். பொதுவாகவே வீட்டிலும் பிள்ளையார் கோயில்களிலுமே இந்த நாமங்களை கூறித்தான் அர்ச்சனையே செய்வார்கள். எனவே, ஆழத்துப் பிள்ளையாரை நம் ஆழ் மனதிற்குள் எப்போதும் பதித்துக் கொள்வோம்.


திருநாரையூர், பெருஞ் சிறப்பு வாய்ந்த தலமாகும். தமிழின் பொற்கிடங்கான தேவாரம் முதலான பதிகங்களை காட்டியருளிய திருத்தலம். பல்லவர்கள், முற்காலச் சோழர்களின் காலத்தில் தேவாரப் பாடல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் கோயில்களில் பாடப்பட்டன. பல பாடல்கள் மறைந்து விட்டிருந்தன. ராஜராஜசோழன்தான், பெரிய குழுக்களை அமைத்து விட்டுப்போன பதிகங்களை தேடச் செய்தான். இதற்காகவே ஏராளமான பொருட் செலவு செய்தான். இப்படி ஈசனோடு கொண்டிருந்த பக்தியால்தான் தன்னையே சிவபாத சேகரன் என்றும் அழைத்துக் கொண்டான். இறுதியில் நம்பியாண்டார் நம்பி எனும் சைவப் பெருந்தகையாரின் பெரும் உதவியோடு பதிகங்களை கண்டுபிடித்து சகலத்தையும் தொகுத்தான். இவ்வாறு ராஜராஜரும் நம்பியாண்டார் நம்பியும் செய்த முயற்சியைத்தான் திருமுறை கண்ட புராணம் என்று உமாபதி சிவாச்சாரியார் பாடி வைத்தார்.

தொடக்கத்தில், ராஜராஜருக்கு ஏன் இப்படி சில பதிகங்கள் மட்டும்தான் கிடைத்துள்ளன. மற்ற பதிகங்கள் எங்கேயிருக்கின்றன என்கிற குறை இருந்து கொண்டேயிருந்தது. அப்போதுதான் திருநாரையூரில் நம்பியாண்டார் நம்பி என்பார் தான் பாலகனாக இருந்தபோதே பாலசந்திரரான பிள்ளையாருக்கு அமுது படைத்து, அவரை உண்ணவும் செய்திருந்தார் என்பதையும் அத்தலத்திலுள்ள பொல்லாப் பிள்ளையாரின் அருள் பெற்றிருப்பதையும் அறிந்தார். உடனேயே அங்கு சென்று, ஆதியில் மகாபாரதம் எழுதிய விநாயகப் பெருமான்தான் இப்போதும் தேவாரம் உள்ளிட்ட திருப்பதிகங்களை கண்டுபிடித்துத் தர விரும்பினான் மன்னன். நம்பியாண்டார் நம்பியை வணங்கி, ‘‘தாங்கள் ஆதிநாயகனோடு அளவளாவுவதாக அறிந்தோம். தாங்கள்தான் பெருமானிடம் பதிகங்கள் எங்குள்ளன என்பதை கேட்டுச் சொல்ல வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டான். பொல்லாப் பிள்ளையாரிடம் அதீத நம்பிக்கை வைத்திருந்த நம்பியாண்டார், பெருமானின் கருணைப் பாதம் பற்றி, ‘‘எங்கேயிருக்கின்றன பதிகங்கள்?’’ என்று கேட்டார். ‘‘ஆதித்தலமான சிதம்பரத்தில், மேற்குப் பிராகாரத்தில் ஓர் அறையில் ஏடுகளாக உள்ளன’’ என்று பிள்ளையார் தெரிவிக்க, அதை மன்னரிடம் நம்பியாண்டார் கூற, எல்லோரும் சிதம்பரம் நோக்கி விரைந்தனர்.

தில்லை மூவாயிரவர்களிடம் இதைத் தெரிவித்தபோது அவர்கள் அனுமதி மறுத்தார்கள். ‘‘தேவாரம் படைத்த மூவர் வந்தால்தான் ஏடுடை அறையைத் திறப்போம்’’ என்றனர். ராஜராஜன் சிலா விக்ரகங்களாக மூவரையும் நிறுத்த, தில்லை அந்தணர்கள் என்ன செய்வதென்று அறியாது முதலில் திகைத்து பின்னர் திறந்தனர். ஏடுகளை கரையான் அரித்திருந்தது. வேண்டியதை மட்டுமே வைத்துவிட்டு, மீதியை மண்மூடச் செய்ததாக அசரீரி மூலமாக ஈசனே அப்போது அறிவித்தார். அதற்குப் பிறகு ஏடுகளை பத்திரமாக பிரித்து, பாடம் செய்து பதிகங்களாக தொகுத்து அளித்தார், நம்பியாண்டார் நம்பி. அவருக்குப் பின்னால் இருந்து எல்லாவற்றையும் செய்து பதிகங்களை கொணர்ந்ததே கஜமுகனான பொல்லாப் பிள்ளையார்தான் என்பதை சொல்லத்தான் வேண்டுமா? திருப்பதிகங்களை அளித்த வேழ முகத்தோனை மறவாது தொழுவோம். திருநாரையூர், சிதம்பரத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில்  உள்ளது.

திருக்கடையூர் கள்ளவாரணப் பிள்ளையார்

சிறந்த சிவபக்தனான மார்க்கண்டேயனை எமன் பாசக்கயிற்றால் சுருக்கிட்டார். ‘என் பக்தனையா பிடித்திழுத்தாய்’ என்று ஈசன் கொதித்தெழுந்தார். எமனான காலனையே சம்ஹாரம் செய்து காலசம்ஹாரமூர்த்தியாக இத்தலத்தில் அருட்கோலம் காட்டினார். எமனால் தீண்ட முடியாத தலமாக இது மாறியது. மேலும் ஈசனின் திருப்பெயரே அமிர்தகடேஸ்வரர் என்பதாகும். அம்பாளின் திருப்பெயரோ அபிராமியன்னை. அபிராமி பட்டர் நெக்குருகி துதித்த ஞானதேவதை இவள்.

ஒருமுறை தேவர்கள் விநாயகப் பெருமானை துதிக்க மறந்து, அமிர்தத்தை அடைய நினைத்தனர். கொழுக்கட்டைக்குள் பூர்ணமான அமுதத்தை ஏந்தி நிற்கும் விநாயகரை மறந்து, அமுதத்தைப் பெற முடியுமா என்ன? அமுதம் வேண்டும் என்கிறபோதே அதை கையில் கொண்டிருக்கும் விநாயகப் பெருமானும் நினைவுக்குள் வர வேண்டாமா? தன்னை நினைக்க மறந்த தகப்பனையே மண்டியிட வைத்த பெரிய கடவுளல்லவா அவர். எனவே, தேவர்களும் திசை தவறினார்கள். அதனால் ஆதிநாயகன் அமுதத்தை மறைத்தான். அதுவும் அமுத லிங்கமாக தன் தந்தை உறையும் அமிர்தகடேஸ்வரன் ஆட்சி செய்யும் தலத்திலேயே தன் லீலையை நிகழ்த்தினான்.

தேவர்கள் தொடர்ந்து தேடினார்கள். ஈரேழு லோகங்களிலும் அலைந்தார்கள். யாரை முதலில் தொழவேண்டுமோ அவரைத் தொழ மறந்தோமே என்று இறுதியாகத்தான் ஞானம் உதித்தது. உடனே, விநாயகரின் பாதம் பணிந்தார்கள். ஆதிநாயகன் அமுதக் கும்பத்தை கொடுத்தான். தேவர்கள் ‘இனி உம்மை மறக்காது துதிப்போம்’ என்றனர். இவ்வாறு விகடமாக பிள்ளையார் லீலை செய்த தலமே திருக்கடையூர். இவ்வாறு லீலைசெய்த தலங்களை ‘விகட விநாயகத் தலங்கள்’ என்பார்கள். அப்படி விகடமாகவும் விவேகத்தோடும் நிகழ்த்திய லீலையாதலால் கள்ளவாரணப் பிள்ளையார் எனும் திருட்டு பெயரையும் தன்னோடு விளையாட்டாகவே இத்தலத்தில் சேர்த்துக் கொண்டார் இவர். ஈசனின் சந்நதிக்கு வலதுபுறத்தில் நந்திக்கு அருகேயுள்ள வெளிப் பிராகாரத்தில் கையில் அமுத கலசத்தை ஏந்தியபடி மறைந்திருக்கிறார், இந்த உள்ளம் கவர் கள்வன். மயிலாடுதுறையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் திருக்கடையூர் உள்ளது. பொதுவாகவே இங்கு அறுபதாம் கல்யாணம் என்கிற சஷ்டியப்த பூர்த்தி திருமணத்தை நடத்துவர்.



ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பட்டாபிஷேகம் நிறைவுற்றது. விபீஷணன் உள்ளமும் கண்களும் குளிரக் குளிர ஸ்ரீராமரையும் சீதாப் பிராட்டியாரையும் தரிசித்தான். புறப்பட வேண்டுமே என்று கொஞ்சம் வருத்தமுற்றான். ஸ்ரீராமரும் பிரிய மனமிலாது விடையளித்தார். ஏதேனும் கொடுக்க வேண்டுமே என்று நினைத்தார். தன்னுடைய நினைவுப் பரிசாக தன் குலப்பதியான ஸ்ரீரங்கநாதரை அளித்தார். விபீஷணன் அகமகிழ்ந்து ஏற்றான். அயோத்தியிலிருந்து புறப்பட்டு திரிசிரபுரம் எனும் இன்றைய திருச்சிக்கு வந்தான். அகண்ட காவிரியையும் சுற்றிலும் இருந்த எழில் வனப்பையும் கண்டு மகிழ்ந்தான். அங்கேயே சற்று ஓய்வெடுக்கவும் நினைத்தான்.

காவிரிக்கு அருகேயே அங்கு சிறுவனாக வந்திருந்த விநாயகரிடம் ரங்கநாதரின் சிலையை கொடுத்து விட்டு சென்றான். இத்தலத்தில்தான் இந்த ரங்கநாதர் பிரதிஷ்டையாக வேண்டுமென்று அந்த ஞானமுதல்வனே தீர்மானித்துவிட்டான் போலிருக்கிறது! ஏனெனில் இப்போது விபீஷணன் ஓய்வுபெற வந்திருக்கும் கரையைத் தொட்டுக்கொண்டு ஓடும் காவிரியை கொண்டு வந்ததே பிள்ளையார்தானே! காக்கை உருவில் சென்று அகத்தியரை ஏமாற்றி அவர் கமண்டலத்திலிருந்து நீரை தட்டி விட்டவரே இவர்தானே! அதுபோல இங்கும் ஓர் விகட லீலையை நிகழ்த்தினார். விபீஷணன் கைகளில் கொடுத்த ரங்கநாதரை அங்கேயே வைத்தார். மறைந்தார். அருகேயுள்ள மலையின் உச்சியில் சென்று அமர்ந்து கொண்டார்.

விபீஷணன் திரும்ப வந்தான். சிறுவனை காணவில்லையே என்று அதிர்ந்தான். அருகேயே ரங்கநாதர் பிரதிஷ்டை ஆகியிருப்பது பார்த்து திகைத்தான். சரி, ரங்கநாதரை எடுத்துச் செல்லலாம் என்று நினைத்து முயன்றபோது அவ்வாறு செய்ய இயலவில்லை. இது அந்த ஆதிநாயகனின் லீலைதான் போலும் என்றுணர்ந்து அரங்கனை அங்கேயே - ஸ்ரீரங்கத்திலேயே விட்டுச் சென்றான். சிலையைப் பார்த்துக்கொள்வதாகச் சொன்ன சிறுவன் மலையின் மீதுள்ளதை அறிந்த விபீஷணன் அங்கு சென்று, ‘‘ஏன் அப்படி கீழே வைத்தாய்?’’ என்று பொய்க்கோபம் காட்டி குட்டு வைத்ததாகவும் உச்சிப் பிள்ளையாரின் தலையில் இன்றும் அந்த குட்டின் வடு உள்ளதாகவும் சொல்வார்கள். உச்சி என்பது எல்லாவற்றையும் கடந்து மேலேயுள்ள மகாசக்தி என்றும் பொருளுண்டு. திருச்சியின் அடையாளமாகவே இந்த உச்சிப் பிள்ளையார் ஆலயம் கொண்ட மலைக்கோட்டை அமைந்துள்ளது. காவிரியையும் ஸ்ரீரங்கத்தையும் இன்று முழு உலகமுமே தரிசிக்கச் செய்தவரே விநாயகப் பெருமான்தான். ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த குணாபரன் என்கிற மகேந்திர பல்லவர் ஆட்சியில் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆலயத்தின் கீழேயே தேவாரப் பாடல் பெற்ற தாயுமானவர் கோயிலும் மிகவும் சக்தி வாய்ந்த மாணிக்க விநாயகர் சந்நதியும் உள்ளன. உச்சிப்பிள்ளையை நினைக்க மெச்சும் வாழ்வு அமையும் என்பது அறிஞர்கள் வாக்கு.



‘அண்ணா’ என்றால் ‘தலைவன்’ என்று பொருள். திரு அண்ணா மலை என்றால் எல்லா மலைகளுக்கும் அரசனாக விளங்கும் மலை என்று அர்த்தம். ஏனெனில், இங்கு சிவன் மலையாக மாறியிருக்கிறார். அதனால்தான் ‘கிரியுருவாகிய கிருபைக் கடலே’ என்று பகவான் ஸ்ரீரமணர் உள்ளிட்ட ஞானியர் போற்றுகின்றனர். பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் ஈசனின் அடிமுடியை காணும் போட்டி முளைத்தது. பிரம்மா பறவையாகவும் விஷ்ணு வராகராகவும் உருவம் கொண்டார்கள். பறவை, ஈசன் முடி காணும் பொருட்டு, விண்ணுயறப் பறக்க, வராகர் ஈசன் அடி காணும் பொருட்டு பூமியை குடைந்து சென்றார். இருவராலும் ஈசனின் முடி-அடியைக் காண இயலவில்லை. அப்படியே ஈசன் அக்கினி ஸ்தம்பமாக நின்றான். இந்த புராண விஷயம்தான் லிங்கோத்பவர் எனும் சிலை வடிவில் பெரும்பாலான சிவாலயங்களின் கருவறை கோஷ்டத்தில் இடம்பெற்றிருக்கிறது. மேலும் அருணகிரிநாதரை முருகப் பெருமான் ஆட்கொண்டருளிய தலமும் இதுவேயாகும். ஞானத்தை தேடும் ஆன்மிக சாதகர்களை காந்தம் போல் இழுக்கும் மலையும் இதுவே. ஆதியில் நெருப்பாக இத்தலம் இருந்தது. ஈசன் கருணை கொண்டு குளிர்ந்து மண் மலையாக மாறினான். எல்லோரையும் அருகே அழைத்து ஞானத்தை ஈந்தளித்துக் கொண்டிருக்கிறான். இத்தலத்திலும், விநாயகரின் அறுபடை வீடுகளில் ஒன்றாக, அல்லல் போக்கும் விநாயகர் சந்நதி அமைந்துள்ளது.

ஆனால், திருவண்ணாமலை கோயிலில் அருளும் செல்வ கணபதி, சிவகங்கை விநாயகர், ஆனைத் திரை கொண்ட விநாயகர், செந்தூர விநாயகர் எனும் சம்பந்த விநாயகர், க்ஷேத்ர விநாயகர் என்று ஐந்து முக்கிய விநாயகர் சந்நதிகள் உள்ளன. இவற்றில் அறுபடை வீடாக எதைக் கொள்ளலாம் எனும் ஐயம் உள்ளது. ஆனாலும், விவேக சிந்தாமணி எனும் பழமையான நூலில் இத்தலத்திலுள்ள ஒரு விநாயகர் மீது இயற்றியிருக்கும் பாடலை ஆதாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ளலாம் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

அல்லல் போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்லகுணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வ கணபதியைக் கைதொழுதக் கால் -‘‘

எல்லாவிதமான தொல்லைகளும் போகும். நன்மை, தீமை போன்றவற்றால் விளையும் வினைகளும் போகும். பிறவி எடுக்கக் காரணமாக உள்ள, அன்னை வயிற்றில் பிறக்கும் தொல்லையும் இனி இருக்காது. அது எப்படியெனில் இந்தத் திருவண்ணாமலை எனும் அருணை கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வ கணபதியை தொழுது கும்பிட்டால் போதும்; உங்களின் சகல வினைகளும் தீர்ந்துபோகும். ஞானம் கைமேல் கனியாக வரும்’’ என்று சொல்கிறது. இப்படியாக அருணை கோபுரத்துள் என்று சொல்லும்போது கோயிலின் முக்கிய வாயிலான கிழக்கு ராஜகோபுரத்திற்குள்ளேயே அருளும் செல்வ கணபதியைத்தான் இப்பாடல் குறிப்பிடுகிறது. ஆகவே இவரே அறுபடைவீட்டு விநாயகர் என்றே கொள்ளலாம். அதோடு, அருணையின் வாயிலிலேயே முதல் தரிசனம் தருபவர், இந்த முழுமுதற் கடவுளாகவே இருப்பதால், இந்த செல்வ கணபதியைத்தான் ஆதியில் ஞானிகளும் தரிசித்து அந்த ஆனந்தத்தில் இந்தப் பாடலை பாடியிருக்கக் கூடும் என்பது துணிபு. அதனால் இந்த செல்வ கணபதியை தரிசித்து வணங்குவோம்; கோயிலின் இதர விநாயகர் சந்நதிகளையும் மறக்காது தொழுவோம்.




 

வித்தக விநாயக விரைகழல் சரணே!

32 Forms of Ganapathi க்கான பட முடிவு

விநாயகர்   மிக எளிமையானவர். அவரது வழிபாடும் எளிமையானது. ஆனால் ஆழ்ந்த பொருள் கொண்டது.

விநாயகருக்கு கொழுக்கட்டை படைக்கிறோம். மேலே மாவு மூடியிருக்க, உள்ளே வெல்லமும் தேங்காயும் கலந்த பூரணம் இருக்கும். இதன் பொருள் என்ன? மாவுதான் மாயை- அதாவது ஆசை முதலான உலகப்பற்றுகள். அந்த மாயையை விலக்கினால் உள்ளே இருப்பது பூரணம் என்னும் ஆனந்தம்.

அருணகிரியார் கந்தரனுபூதியில், “ஆசாநிகளம் (மாயை) துகள் ஆயினபின் பேசா அனுபூதி பிறந்ததுவே’ என்கிறார்.


கணபதியின் வடிவம் கூறும் பொருள் யாது?
சிறிய கண்கள்- கூர்ந்து கவனி.
பெரிய காதுகள்- நற்கருத்துகளை அகன்று, ஆழ்ந்து கேள்.
நீண்ட துதிக்கை- பரந்த மனப்பான்மையோடு தேடு.
சிறிய வாய்- பேசுவதைக் குறை.
பெரிய தலை- பரந்த அறிவு, ஞானம் தேடு.
பெரிய வயிறு- செயல்களில் சிக்கல்கள், தடைகள், தோல்விகள் வரலாம். அனைத் தையும் ஜீரணித்து முன்னேறு.


கணபதிக்கு சித்தி, புத்தி என்னும் இரு மனைவியர் உள்ளதாகச் சொல்வர். இவர்கள் பிரம்மபுத்திரிகள்- சக்திகள்.


கணபதியை வணங்கினால் புத்திக்கூர்மை அதிகரிக்கும்; எடுத்த காரியங்கள் எல்லாம் சித்திக்கும்- வெற்றியாகும் என்பதே இதன் தத்துவம்.


வியாசர் கந்தபுராணத்தை எழுதத் தொடங் கும்முன் கீழ்க்கண்ட பதினாறு பெயர்களால் கணபதியைத் துதிக்கிறார்.
ஸுமுகன்- மங்கள முகமுடையவர்.
ஏக தந்தன்- ஒற்றைத் தந்தம் கொண்டவர். (மற்றொன்றை ஒடித்துதான் மகாபாரதம் எழுதினார்.)
கபிலன்- மேக- சாம்பல் வண்ணர்.
கஜகர்ணகன்- யானைக் காதுகள் கொண்டவர்.
லம்போதரன்- பருத்த வயிறு கொண்டவர்.
விகடன்- குள்ளமாக இருப்பவர்.
விக்னராஜன்- இடையூறுகளுக்கு அதிபர்.
விநாயகன்- எல்லாருக்கும் நாயகர்; முதன்மையானவர்.
தூமகேது- அக்னியைப்போல பிரகாசிப்பவர்.
கணாத்யக்ஷன்- பூதங்களுக்குத் தலைவர்.
பாலசந்திரன்- சந்திரனை தரித்தவர்.
கஜானணன்- யானைமுகம் கொண்டவர்.
வக்ரதுண்டன்- வளைந்த துதிக்கை கொண்டவர்.
கும்பகர்ணன்- முறம்போன்ற காதுகள் கொண்டவர்.
ஹேரம்பன்- பக்தர்களுக்கு அருள்புரிபவர்.
ஸ்கந்தபூர்வஜன்- கந்தனுக்கு முன்னவர்.
இந்தப் பதினாறு பெயர்களைத் துதித்துத் தொடங்கினால் எக்காரியமும் வெற்றிபெறும்; எல்லா தடைகளும் விலகும்.


கணபதிக்கு 21 கொழுக்கட்டைகள் நிவேதனம் செய்வதால் கிட்டும் பலன்கள் கூறப்பட்டுள்ளன.
1 முதல் 4- தர்மம், பொருள், இன்பம், சௌபாக்கியம்.
5 முதல் 8- கல்வி, பெருந்தன்மை, மோட்சம், அழகான முகம்.
9 முதல் 12- வீரம், விஜயம், மற்றவர்களின் அன்பு, கர்ப்பரட்சை.
13 முதல் 16- குழந்தை, நுண்ணறிவு, நற்புகழ், துக்க நிவாரணம்.
17 முதல் 19- அசுபம் அகலல், வாக்கு சாதுர்யம், கோபம் தணிதல்.
20, 21- பிறர் செய்த ஆபிசாரம் நீங்குதல், துயர் களைதல்.


எளிமையான கொழுக்கட்டை நிவேதனத் திலேயே எவ்வளவு பலன்கள் இருக்கின்றன.
ஒருசமயம் ஔவையார் கணபதி பூஜை செய்துகொண்டிருந்தபோது சுந்தரரும் சேரமானும் கயிலை செல்வதைப் பார்த்தார். உடனே தானும் கயிலை செல்ல விரும்பி அவசரமாக பூஜை செய்தார். அப்போது விநாயகர் “நிதானமாகவே பூஜை செய்யுங்கள்’ என்றார். அதன்படி ஔவை, விநாயகர் அகவல் பாடி கணேசனைப் பூஜித்தார். அடுத்த கணம், சுந்தரர் கயிலை அடையும் முன்னரே ஔவையை கொண்டுபோய் சேர்த்துவிட்டார் விநாயகர். அத்த கைய விநாயகர் அகவலின் சில வரிகளைக் காண் போமா.

“எல்லையில்லா ஆனந்த மளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டி
சத்தத் துள்ளே சதாசிவம் காட்டி
சித்தத் துள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற் கணுவாய்
அப்பாலுக் கப்பாலாய்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சுஅக்கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறிவித்து
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே.’
 
 

 
 
 

விநாயகர் பெருமைகளும் அவதாரங்களும்!

1.ஆதி விநாயகர்
விநாயகர் என்றதும் சட்டென்று நினைவுக்கு வருவது யானைத்தலை. ஆனால் யானை முகம் வருவதற்கு முன் இருந்த மனித முகத்துடன் காட்சிதருவது நன்னிலத்துக்கு அருகில் உள்ள திலதர்ப்பணப்பதி எனும் தேவாரப் பாடல் பெற்ற தலத்திலாகும்.     
 
2. கற்பக விநாயகர்
சிவகங்கைச் சீமை, பிள்ளையார் பட்டி எனும் தலத்தில் மலையடியில், குடவறையில் வடக்கு நோக்கி அருளும் கற்பக விநாயகர் கற்பக மரத்தைப் போல, கேட்டதை வழங்குபவர். இரு கரங்களுடன் காட்சி தருவது வித்தியாசமான தோற்றமாகும்.
 
3. வெள்ளை விநாயகர்
திருவலஞ்சுழி எனும் தேவாரப் பாடல் பெற்ற சிவாலயத்திற்குள் நுழைந்தவுடன் வெள்ளை நிறத்தில் இந்திரனால் ஸ்தாபிக்கப்பட்ட விநாயகர் ‘வேத விநாயகர்’ என்று அருளுகிறார்.
 
4. நேத்திர விநாயகர்
சுவாமிமலை சுவாமிநாதப்பெருமான் சன்னதி நுழையும் முன் தென்திசை நோக்கி அமர்ந்த நிலையில், வேண்டுபவர்களின் கண் நோய் தீர்ப்பதால் இப்பெயர் வந்தது. 
 
5. கள்ளவாரணப் பிள்ளையார்
திருக்கடவூர் அபிராமி சமேத அமிர்தகடேசுவரர் ஆலயத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தரும் பிள்ளையார். அமிர்த கலசத்தை மறைத்து வைத்ததனால் இப்பெயர் வந்தது.
 
6.கைகாட்டி விநாயகர்
திருநாட்டியத்தான்குடி எனும் தேவாரத் தலத்தில் இறைவனை தரிசிக்க சுந்தரமூர்த்தி நாயனார் உள்ளே நுழைய முற்பட்ட போது அங்கே சிவபிரான் இல்லாமையை உணர்ந்து கொண்டு விநாயகரை நோக்க... சிவன், சுந்தரரோடு திருவிளையாடல் செய்வதற்காக நாற்று நடும் உழவனாக வயற்பக்கம் நிற்பதனைக் காட்டியதால் ‘கைகாட்டி விநாயகர்’ ஆனார்.
 
7. துணையிருந்த விநாயகர்
திரு ஆரூருக்கு அருகில் உள்ள திருப்பனையூர் எனும் சிவத்தலத்தில், பங்காளிகளுக்குப் பயந்து தன் தாயோடு இளவயதில் இவ்வூரில் தலைமறைவாகத் தங்கி வளர்ந்து வந்த கரிகால் சோழனுக்குத் துணையாய் இருந்து அருளி அவனைப் பேரரசனாக்கினார்.
 
8. பிரளயங்காத்த விநாயகர்
மூவரின் பாடல் பெற்ற திருப்புறம்பயம் சிவபிரானுக்கு வலப்புறம் உள்ள விநாயகர், பிரளயமாக வெள்ளம் வந்த போது காப்பாற்றினார். மேலும் சதுர்த்தி அன்று இரவு நடைபெறும் தேனாபிஷேகத்தை முழுவதும் உள்ளிழுத்துக் கொள்வது பெருஞ் சிறப்பு.
 
9. படிக்காசு விநாயகர்
திருவீழிமிழலை எனும் பதிக்கு அப்பரும் சம்பந்தரும் வந்த போது பஞ்சம் நிலவியது. இறைவனைப் பாடிப் பரவியதால் இருவருக்கும் தினம் ஒரு பொற்காசு பீடத்தில் கிடைக்கும் படி செய்தார். எனவே அங்கே உள்ள தல விநாயகர் ‘படிக்காசு விநாயகர்’ எனப்படுகிறார்.
 
10. வாதாபி  கணபதி
பல்லவ மன்னனின் தளபதியாக இருந்த பரஞ்சோதிவாதாபியில் அங்குள்ள கணபதியை வழிபட்டு, போர் செய்து வெற்றி பெற்றார். வெற்றிப் பரிசாக அங்கிருந்து கணபதியைக் கொண்டு வந்து தன் ஊரான திருச்செங்காட்டாங்குடி எனும் கணபதிசுரத்தில் வைத்து வழிபட்டார். பின் பரஞ்சோதி சிறுத் தொண்டரானார்.
 
11. மாற்றுரைத்த விநாயகர்
திரு ஆரூர் தியாகராசசுவாமி மேலைக் கோபுரத்தின் எதிர் குளக்கரையில் உள்ள விநாயகர். சுந்தரருக்கு, சிவன் கொடுத்த பொன் தரமுள்ளதா என்று உரைத்துப் பார்த்து சோதித்து அறிந்தார்.
 
12. பொய்யாப்பிள்ளையார்
‘அருணகிரிநாதரை ‘குமார வயலூருக்கு வா’ என்று முருகன் அசரீரியாகச் சொல்ல அவர் வயலூருக்கு வந்தார். ஆனால் முருகப்பெருமான் அங்கே காட்சிதரவில்லை. உடனே அருணகிரி நாதர் ‘அசரீரி பொய்யோ’ என்று உரக்கக் கூறினார். ‘அசரீரி பொய்யில்லை’ என்று சொன்ன பிள்ளையார் சுப்பிரமணியரைச் சுட்டிக்காட்டினார்.
 
13. பொள்ளாப்பிள்ளையார்
உளிபடாமல் உருவான பிள்ளையார் திருநாரையூரில் நம்பிக்கு கருணை செய்து அவர் தந்த பிரசாதத்தை உண்டவர்.
 
14. செவி சாய்த்த விநாயகர்.
திருவேதிக்குடி எனும் தேவாரத் தலத்தில் சிவனை நான்கு வேதங்களும் வழிபடும் போது தலை சாய்த்து வேதங்களைச் செவி மடுத்ததால் ‘செவி சாய்த்த விநாயகர்’ வேத விநாயகர் எனப்படுகிறார்.
 
15. கற்கடக விநாயகர்.
குடந்தைக்கு அருகே உள்ள திருந்து தேவன்குடி எனும் தலத்தில் நண்டு வழிபட்டதால் (கற்கடகம்) இறைவன் கற்கடகேசுவரர் என்றும் பிள்ளையார் ‘கற்கடகப்பிள்ளையார்’ என்றும் அழைக்கப் படுகின்றனர்.
 
16. ஆண்ட விநாயகர்
திருஇடைமருதூரில் பஞ்சாட்சர விதிப்படி மகாலிங்கப் பெருமானை வழிபட்டு வருவதால் சுவாமி சன்னிதிக்குத் தென்புறம் உள்ள விநாயகர் ‘ஆண்ட விநாயகர்’ ஆகிறார். திருநறையூர்  சித்தீசுரத்திலும் இதே பெயர் பெறுகிறார்...
 
 

கோலாகல கோகுலாஷ்டமி!


கோலாகல பகவான் மகா விஷ்ணு பூமி பாரம் குறைப்பதற்காகவும் நல்லவர்களைக் காப்பதற்காகவும் ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி உள்ள நாளில் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்தார். இந்தியா முழுவதும் இந்த விழாவானது கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி என்று பலவிதமான பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

கோகுலாஷ்டமி தினத்தன்று கிருஷ்ண பகவானை வழிபடுபவர்களுக்கு சந்தான பாக்கியம் ஏற்படும். இந்த நாளில் குழந்தை கிருஷ்ணர் நம்மைத் தேடி வருவதன் அடையாளமாக சின்னஞ்சிறு பாதத்தை வீட்டு வாசலில் இருந்து பூஜையறை வரை கோலமாக வரைவது வழக்கம். கிருஷ்ணன் கோவில்களில் உறியடித்தல் வழுக்குமரம் ஏறுதல் போன்ற விளையாட்டுகள் நடைபெறும்.

பூஜை செய்யும் முறை!

கிருஷ்ணர் இரவில் பிறந்தார் என்பதால், முதிர் மாலை வேளையில் பூஜை செய்வது வழக்கம். இல்ல வாயிலில் கோலமிட்டு, செம்மண் வரைய வேண்டும். கண்ணனை குழந்தையாகவே பாவிப்பதால், சின்னச் சின்னப் பாதங்களை வாசலிலிருந்து இல்லத்தின் உள்ளே வருவதுபோல கோலமாக வரைவர்.
வாயிலில் தோரணம் கட்டி, மாவிலை வைத்து வாயில் நிலைப்படியை அலங்கரிக்க வேண்டும்.
 
கிருஷ்ணரின் பிறந்தநாள் என்பதால், குழந்தைகளுக்குப் பிடித்த பட்சணங்கள் செய்ய வேண்டும். அதில் வெல்லச் சீடை, உப்புச் சீடை, கைமுறுக்கு, தட்டை, களவடை- வெல்லச் சீடை மாவில் செய்வது, தேங்காய் பர்பி, திரட்டுப் பால் உட்பட பல பட்சணங்கள் செய்ய வேண்டும்.
 
முன்னதாக அலங்கரித்து வைத்துள்ள கிருஷ்ணர் படத்திற்கு அவரது பல நாமங்களை கூறிப் பூக்களாலும், அட்சதைகளாலும் அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் அவரவர் வேண்டுதல்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். உலகத்தில் உள்ள அனைவரும் சுகமாக வாழட்டும் (சர்வே ஜனா சுகினோ பவந்து) என்று வேண்டிப் பூஜையை நிறைவு செய்வது வழக்கம். கண்ணனை வேண்டிக்கொண்டால் அவன் நம் கவலைகள் யாவையும் தீர்ப்பான் என்பது ஐதீகம்.

எட்டு வகை கிருஷ்ணர்கள்!

ஸ்ரீகிருஷ்ணன் எட்டு வகையாக உருவகப்படுத்தி வணங்கப்படுகிறார்.


1. சந்தான கோபால கிருஷ்ணன்: யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.



2. பாலகிருஷ்ணன்: தவழும் கோலம். ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம்.

 
 

3. காளிய கிருஷ்ணன்: காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன்.



4. கோவர்த்தனதாரி: கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.


5. ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்): வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.



6. முரளீதரன்: கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.



7. மதனகோபாலன்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணன்.



8. பார்த்தசாரதி: அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

கிருஷ்ண ஜன்மாஷ்டமி:

ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற விழாவாகும். பொதுவாக சிவராத்திரியானது சிவனுக்கு சிறப்பாகும், நவராத்திரி அம்பாளுக்கு விசேஷம், ராமநவமி ராமர் பெயரில் இருக்கிறது. கந்த ஷஷ்டி சுப்ரமண்யருடைய பெயரில் இருக்கிறது. ஆனால் கிருஷ்ணருக்கு மட்டும் அவருடைய பெயரில் இல்லாமல் அவர் பிறந்த இடமான கோகுலத்தை வைத்து, அவர் பிறந்த திதியான அஷ்டமியை வைத்து கோகுலாஷ்டமி என்று வழங்கப்படுகிறது.

ஏனெனில், கிருஷ்ண பகவான் முழுவதுமே ஈஸ்வர ஸ்வரூபமாக அவதரித்தவர். மற்றவர்களெல்லாம் அம்சாவதாரம் என்று சொல்லுவார்கள். முழுமையான அவதாரமாக கிருஷ்ண பகவானை கருதுவதால் அவர் பிறந்த இடத்தையும், திதியையும் வைத்து மரியாதையுடன் கோகுலாஷ்டமி என்று அழைக்கப் படுகிறது.



ஸ்ரீ ஜெயந்தி!

கோகுலாஷ்டமியை ஸ்ரீ ஜெயந்தி என்றும் சொல்லுவார்கள். காரணம் லட்சுமியை பிரதானமாக வைத்துக்கொண்டு ஜயந்தி கொண்டாடும்போது ஸ்ரீஜயந்தி என்று வைஷ்ணவர்கள் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். மற்ற அனைவரும் பொதுவாக கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறார்கள்.

மதுராவில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து, துவாரகையிலே ராஜ்ய பரிபாலனம் செய்து பன்னிரெண்டு ஜோதிர்லிங்க ஷேத்திரங்களில் ஒன்றான சோமநாத் ஷேத்திரத்தில் பிரதாபபட்டம் என்ற இடத்தில் தன்னுடைய கடைசி காலத்தில் இருந்துகொண்டு வைகுண்டம் சென்றதாக வரலாறு சொல்லுகிறது.



வீட்டிற்கு வரும் கண்ணன்

பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று காலையில் இருந்து ஸ்ரீமத் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், கிருஷ்ணன் கதைகள் படிக்க வேண்டும்.

துவாதச மந்திரமான ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை நூற்றியெட்டு முறை ஜெபித்து, மலர்களையும் பழங்களை இனிப்பு வகைகளையும் அவருக்கு படைத்து தூப தீபம் (மணமிக்க ஊதுபத்தி, கற்பூரம் ஆரத்தி) காட்ட வேண்டும்.

வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றைக் கண்டு மகிழ்வது சிறப்பு.

கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை உள்ளது.




 

கரு காத்து அருளும் நாயகி கர்ப்பரட்சாம்பிகை!


 


திருத்தல வரலாறு:

முன்னொரு காலத்தில் இத்தலம் இருக்குமிடம் முல்லைவனமாக இருந்தது. அந்த அழகிய வனத்தில் கௌதமர், கார்க்கேயர் என இரு முனிவர்கள் இறைவனை வேண்டி தவமிருந்தனர். இந்த இரு இறை அன்பர்களுக்கும் நித்துருவர்-வேதிகை தம்பதியினர், முல்லை வனத்திலேயே தங்கி இருந்து சேவை செய்து வாழ்ந்து வந்தனர். தம்பதியர் இருவரும் இறைப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மனதில் பெரிய குறை ஒன்றிருந்தது. தங்களுக்கு குழந்தைப் பேறு இல்லையே என்று வருத்தம் இருந்தது. அந்த மனக்குறையை முனிவர்களிடம் கூறினர். அதற்கு அம்முனிவர் பெருமான்கள் இந்த முல்லைவனத்தில் எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் வணங்கிட நீங்கள் வேண்டி நிற்பது கிடைக்கும் என வாழ்த்தினர். அவ்வாறே அம்மையப்பனை வணங்கி மக்கட்பேறு கிடைக்கப் பெற்றனர்.

இவ்வாறு வேதிகை கருவுற்றிருந்த சமயம், கணவர் இல்லாமல் வேதிகை மட்டும் தனித்திருந்த நேரத்தில் சுகமான சுமையான கருவை சுமந்திருந்த காரணத்தினால் சற்றே மயக்கத்தில் கண்ணயர்ந்த சமயத்தில் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து பிட்சை கேட்க, உடல் சோர்ந்த காரணம் வேதிகையால் முனிவருக்கு எழுந்து வந்து உணவிட முடியவில்லை. இதனை அறியாமல் கோபம் கொண்ட முனிவர் சாபமிட, இறைவன் அருளினால் அவள் பெற்ற கரு கலைந்தது. அம்பாளிடம் சென்று தன் நிலையை எடுத்து இயம்பினாள் வேதிகை.

 
தன் பக்தையின் நிலை அறிந்து அன்னை கர்ப்பரட்சகியாக தோன்றி கலைந்த கருவினை ஒரு குடத்தினுள் வைத்து பாதுகாத்து குழந்தை உருவாகும் நாள் வரை வைத்து காப்பாற்றி நைந்துருவன் என்ற பெயர் சூட்டி வேதிகையிடம் தந்தருளினாள் அன்னை.
 


கருகாத்த நாயகியின் மகிமையை நேரடியாக அனுபவித்த வேதிகை, இறைவியிடம் இனி இத்தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாக எழுந்தருளி, இப்பூவுலகில் கருத்தரித்தவர்களையும் கருவையும் ஒருசேர காப்பாற்ற வேண்டும் என பிரார்த்தனை செய்ய அன்னை அவ்வாறே இத்தலத்தில் வீற்றிருந்து நமக்கெல்லாம் அருளுகின்றாள். இதன் காரணமாகவே இத்தலம் திருக்கருகாவூர் என்றும், இத்தல இறைவி கர்ப்பரட்சாம்பிகை என்றும் பெயர் விளங்கப் பெற்றது.


இந்த நேரத்தில் அருட்குழந்தை நைந்துருவனுக்கு கொடுக்க வேதிகையிடம் தாய்ப்பால் இல்லாத காரணத்தால், அம்பாள் காமதேனுவை அனுப்பி பால் கொடுக்கச் செய்தாள். காமதேனு தன் கால் குளம்பினால் பூமியில் கீறியதன் காரணத்தால் பால்குளம் தோன்றியது.



இந்த புனித குளம் இன்றும் திருக்கோயிலின் முன்புறம் க்ஷீரகுண்டம் என்ற பெயரில் இருந்து வருகிறது. இத்தல கருகாத்த நாயகியை மனதார வேண்டி வணங்கிட கரு உண்டாகிறது, கரு கலையாமல் நிலைக்கிறது, சுகப்பிரசவம் உண்டாகிறது என்பது மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

தலமூர்த்தி: 
 


முல்லைவனநாதர் (மூவலிங்கமூர்த்தி, மாதவிவனேச்சுவரர், கர்ப்பபுரீச்சுவரர், கருகாவூர் கற்பகம்) திருக்கருகாவூர் மகாதேவர், திருக்கருகாவூர் ஆழ்வார், திருமுல்லைவனமுடைய மகாதேவர்
 
இத்தல இறைவன் முல்லைவனநாதர் சுயம்புலிங்கமாகத் தோன்றியவர். இந்த லிங்கத்தின் சிறப்பு புற்று மண்ணினால் ஆன லிங்கம் என்பதே. அதனாலேயே இந்த லிங்க மேனிக்கு புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. ஆகவே இறைவனுக்கு வளர்பிறை பிரதோஷ நாளில் புனுகு சாத்தி வணங்கினால் சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. லிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்து இருந்தமைக்கான வடுவினை, அடையாளத்தினை இன்றும் காணலாம்.
 

தல இறைவி:
கர்ப்பரட்சாம்பிகை (கருகாத்தநாயகி, கரும்பானையாள்)

தல விருட்சம்: முல்லைக்கொடி

தல தீர்த்தம்:
க்ஷீரகுண்டம் (பாற்குளம்) (கோவிலின் முன்புறம்), சத்திய கூபம் (சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் இடையில்), பிரம்ம தீர்த்தம் (இவ்வூரின் தென்மேற்கே), விருத்த காவிரி (முள்ளிவாய்) (திருக்கோயிலுக்கு தென்மேற்கே)
 


பிரம்மன் பூஜித்த வரலாறு:
படைப்புக் கடவுளான பிரம்மன் தன் படைப்புத் தொழிலின் காரணமாக மிகுந்த கர்வம் கொண்டு அந்த ஆணவத்தினால் அத்தொழில் செய்ய முடியாமல் போனது. அதன் காரணமாக இங்கு வந்து திருக்கோயிலின் தென்மேற்கு மூலையில் ஒரு தீர்த்தத்தை நிறுவி அதில் நீராடி முல்லைவனநாதரை வணங்கி மீண்டும் படைப்புத் தொழிலை மேற்கொண்டான்.

கார்க்கியர் பூஜித்த வரலாறு:
ஸ்வர்ணகாரன் என்ற வைசியன் தான் செய்த தீய செயல் காரணமாக பேயுரு அடைந்தான். அந்த உருவில் இருந்து தன்னை மீட்க வேண்டி கார்க்கியர் என்னும் முனிவரை நாடினான். அவரும் திருவாதிரை நன்னாளில் வைசியனை இத்திருக்கோயில் பிரம்ம தீர்த்தத்தில் நீராடச் செய்தார். அவனும் பேயுரு நீங்கப் பெற்றான்.

கௌதமர் பூஜித்த வரலாறு:
ஒரு சமயம் தன்னிடம் புகலிடம் அடைந்த சில முனிவர்களின் சூழ்ச்சியினால் கௌதம முனிவர் பசுவதை செய்த பாவத்திற்கு ஆளானார். அந்த நேரத்தில் போதாயனர் என்னும் முனிவரின் சொல்படி கௌதமர் திருக்கருகாவூர் வந்து புனித நீரில் நீராடி சிவலிங்கம் வைத்து பூஜித்தார். அவர் செய்த பசுவதை பழியும் நீங்கியது. அவர் வழிபட்ட லிங்கம் கௌதமேசுவரர் என்ற பெயருடன் அம்மன் சன்னதியின் எதிரே தனிச் சன்னதியில் அமைந்துள்ளது.

மன்னர் குசத்துவன் சாப நீக்க வரலாறு:
மன்னன் குசத்துவன் ஒரு சமயம் சத்திய முனிவரின் சொல்லைக் கேட்காமல் அவர் வசித்த வனத்திலேயே வேட்டையாடினான். அதனால் முனிவரது சாபத்திற்கு ஆளாகி புலியின் உருவத்தைப் பெற்றான். தன் தவறை உணர்ந்து அம்முனிவரை மன்னன் வணங்கிட, அவர் இத்தலத்தில் உள்ள சத்தியகூப தீர்த்தத்தில் நீராடச் சொன்னார். அவ்வாறு செய்தமையால் மன்னன் தன் பழைய உருவினை அடைந்தான்.

சங்குகர்ணன் என்ற அந்தணனும் தன் சாபம் நீங்கப்பெற்ற தலம் இத்திருத்தலம். தட்சனது சாபத்தால் வேதனையுற்ற சந்திர பகவான் இங்கு வந்து பங்குனி பௌர்ணமி நாளில் சிவ பூஜை செய்து நல்ல கதி அடைந்தான். இன்றும் பங்குனி பௌர்ணமி நாளில் நிலவின் ஒளி இறைவன் திருமேனியில் படுவதைக் காணலாம்.

இத்தலத்தலம் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் போன்றவர்களால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். ராமலிங்க அடிகளாரும் இத்திருக்கோயிலைப் பாடியுள்ளார்.



திருக்கோயில் அமைப்பு:

திருக்களாவூர் என்னும் திருக்கருகாவூர் திருக்கோயிலில் தல இறைவன், விநாயகமூர்த்தி, நந்தி பகவான் மூவரும் சுயம்பு வடிவமாகவும், சிவன் சன்னதியின் பின்புறம் லிங்கோத்பவர் அமைந்திருக்கும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரரும் அமைந்திருப்பது இத்தல சிறப்பாகும்.

பஞ்சாரண்யத் தலங்கள் என அழைக்கப்படும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து ஒரே நாளில் தரிசிக்க வேண்டிய தலங்களில் முதலாவதாக அமைந்துள்ளது இந்த திருக்கருகாவூர் தலம். இத்திருத்தலத்திற்கு மாதவி வனம், முல்லைவனம் என மேலும் பல பெயர்கள் உள்ளன.




திருக்கருகாவூரைச் சேர்த்து ஒரே நாளில் தரிசித்துப் பலனடைய வேண்டிய திருக்கோயில்கள் பற்றிய விபரங்கள்:


1) முல்லைக்கொடி தலவிருட்சமாக உள்ள திருக்கருகாவூரில் விடியும் முன்னரே உஷத் காலத்தில் தரிசிக்க வேண்டும்.

2) பாதிரிமரம் தலவிருட்சமாக அமைந்துள்ள அவளிவனல்லூரில் காலை சந்தி காலத்தில் தரிசனம் செய்ய வேண்டும்.

3) வன்னிமரம் தலவிருட்சமாக உள்ள அரப்பெரும்பாழி என்னும் அரித்துவாரமங்கலத்தில் உச்சி காலத்தில் தரிசிக்க வேண்டும்.

4) பூளைமரம் தலவிருட்சமாக உள்ள இரும்பூளை ஆலங்குடியில் சாயங்காலத்தில் தரிசனம் மேற்கொள்ளவேண்டும்.

5) வில்வமரம் தலவிருட்சமாக உள்ள திருக்கொள்ளம்பூதூரில் அர்த்தஜாமப் பொழுதில் திருக்கோயில் தரிசனம் செய்யவேண்டும்.


திருக்கருகாவூர் சென்று கடவுள் வழிபாடு செய்வது முக்திக்கு வழிவகுக்கும் என்பதை,

தில்லை வனங் காசி திருவாரூர் மாயூரம்
முல்லை வனம் கூடல் முதுகுன்றம் நெல்லை களர்
காஞ்சி கழக்குன்றம் மறைக் காருடணை காளத்தி
வாஞ்சிய மென் முத்தி வரும்


இப்பாடல் மூலம் அறிய முடிகிறது.

பல்வேறு சிறப்புகளுடன் அமைந்துள்ள இத்தலம் சோமாஸ்கந்த வடிவத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவனது சன்னதிக்கும், இறைவி சன்னதிக்கும் இடையினில் வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதி அமைந்துள்ள, இந்த சோமாஸ்கந்த அமைப்பினை சேர்ந்தாற்போல் வலம் வந்து வணங்குதல் சிறப்பு.


 
சுவாமி சன்னதிக்கு முன்னால் கொடிமரம், பலிபீடம், நந்தி போன்றவையும், பிராகாரத்தில் மடப்பள்ளி, அறுபத்துமூன்று நாயன்மார்களும், நடராஜர் சபா மண்டபமும், யாக சாலையும் உள்ளன. நடராஜர் சன்னதி, நவக்ரகங்கள், சோமஸ்கந்தர் சன்னதி, தல விநாயகர் கற்பக விநாயகர் சன்னதி, நடராஜருக்கு எதிரே, சேக்கிழார், சந்தனாச்சாரியார், நால்வர் சன்னதி, தட்சிணாமூர்த்தி, நிருதி விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், மகாலட்சுமி சன்னதிகளும், ஆறுமுகர், பிரம்மன், துர்க்கை, சண்டேசுவரர் சன்னதிகளும், தலவிருட்சமாகிய முல்லைக்கொடியும் அமையப் பெற்றுள்ளன. இந்த முல்லைக்கொடி சண்டேசுவரருக்கும் திருமஞ்சனக் கிணற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது.
 
திருமணம் கூடிவர படிக்கு நெய்மெழுகுதல்:-
 
திருமணம் கூடிவராத கன்னியர்கள், இக்கோயிலுக்கு நேரில் வந்து அம்மன் சன்னதியில் நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
 
குழந்தை பாக்கியம் பெற!
 
 
 
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கரு உண்டாவதற்கு அம்பாள் பாதத்தில் நெய் பிரசாதம் வைத்து மந்திரிக்க வேண்டும். மந்திரித்த நெய் பிரசாத்துடன் அறை கிலோ சுத்தமான நெய் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும். இந்த நெய்யை தினமும் இரவு தூங்கச்செல்லும் முன், அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை அம்பாளை நினைத்து வணங்கி தம்பதிகள் சாப்பிடவேண்டும். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட வேண்டும்.
கணவனால் தினமும் நெய் சாப்பிடமுடியாவிட்டாலும் மனைவி சாப்பிட்டுவரவும். நெய் சாப்பிடும் காலங்களில் உணவில் மற்றும் இதர பழக்கவழக்கங்களில் பத்தியங்களோ கட்டுப்பாடுகளோ இல்லை. இதர மருந்து சாப்பிடுகிறவர்கள் அதனையும் சாப்பிடலாம்.
 
பெண்கள் மாதவிலக்கு காலங்களில் ஐந்து நாட்கள் நெய் சாப்பிடக்கூடாது. இவ்வாறு செய்து வந்தால் கர்ப்பரட்சாம்பிகை அம்பாளின் அருளால் மகப்பேறு உண்டாகும். நேரில் வர இயலாத வெளியூர் அன்பர்கள் ஆலய நிரவாகிக்கு நூறு ரூபாய் மணியார்டர் மூலம் அனுப்பி தபால்மூலம் மந்திரித்த நெய் பிரசாதத்தை பெற்றுக்கொள்ளலாம்.

சுகப்பிரசவம் அடைய!
 
 
கர்ப்பினி பெண்கள் சுகப்பிரசவம் அடைய இத்திருக்கோயிலின் கர்ப்பரட்சாம்பிகை திருப்பாதத்தில் விளக்கெண்ணெய் வைத்து மந்திரித்து கொடுக்கப்படுகிறது.
இந்த விசேஷமான எண்ணெய்... பிரசவ வலி ஏற்படும்போது கர்ப்பிணியின் வயிற்றில் தடவினால்  சுகப்பிரசவம் ஆகும் என்பது நெடுங்கால நம்பிக்கை.

 
தங்கத்தொட்டில் பிரார்த்தனை!
 
 
தமிழக திருக்கோயில்களிலேயே முதன் முறையாக தங்கத்தொட்டில் பிரார்த்தனை இக்கோயிலில் அறிமுகப்பப்படுத்தப் பட்டுள்ளது.
 
 
குழந்தை பேறு பெற்றுவர்கள் தங்கத்தொட்டில் பிரார்த்தனை நிறைவேற்றலாம். அதாவது குழந்தையை தொட்டிலில் இட்டு தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக்கொள்ளலாம். தங்கத்தொட்டில் பிரார்த்தனைக்கு திருக்கோயில் அலுவலகத்தில் 550 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும். 
 
 
குழந்தை இல்லாத தம்பதிகள் அம்பாள் பாதத்தில் உள்ள ஸ்கந்தரை தங்கள் முந்தானையில் ஏந்தி அதனை தங்கத்தொட்டிலில் இட்டு சன்னதியை வலம் வந்தால் விரைவில் குழந்தை பேறு கிடைக்கும். 

இத்திருக்கோயிலை சுற்றி முல்லை மாகாளியம்மன் திருக்கோயிலும், வரதராஜ பெருமாள் திருக்கோயிலும், பிள்ளையார் கோயில் ஒன்றும், திரௌபதி அம்மன் திருக்கோயிலும்,  மாரியம்மன் கோயிலும், ஐயனார் திருக்கோயில் ஒன்றும் அமைந்துள்ளன.

இத்திருக்கோயில் சோமஸ்கந்தர், நடராஜர், ஆறுமுகர் ஆகிய உற்சவ மூர்த்தி சிலைகள் அழகாம்சம் நிறைந்தவை.

திருவிழாக்கள்:

சுவாமிக்கு வைகாசி விசாக பிரம்மோற்சவமும், அன்னைக்கு ஆடிப்பூரம், நவராத்திரி விழாக்களும், நடராஜருக்கு ஆறு அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. மேலும், அன்னாபிஷேகம், கந்தர் சஷ்டி விழா, கார்த்திகை சோமவாரம், கார்த்திகை தீபத் திருவிழா, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், பிரதோஷ விழாக்கள் போன்றவையும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

முதலில் சிவ வணக்கமும் சக்தி வணக்கமும் தனித்தனியாக இருந்து பின்னர் இரண்டு வணக்கமும் ஒன்றாகத் திகழந்தது. காஞ்சிபுரம், கருகாவூர் தலங்களில் சோமஸ்கந்தர் அமைப்பைக் காணலாம். போகச்சக்திக்கு சிவசன்னதிக்கு அருகில் ஆலயம் இருக்கும். இங்கே தனியே அம்பாள் சன்னதி அமைந்துள்ளதால், இது வீரசக்தி என அழைக்கப்படுகிறது.

பிரதோஷ வழிபாடு:


இத்திருக்கோயிலில் வளர்பிறை பிரதோஷ தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப் படுகிறது. சுக்கில பட்ஷம், கிருஷ்ண பட்ஷம் என்னும் இரண்டு பட்சத்திலும் வருகின்ற திரயோதசி திதியில் சூரியன் மறைவதற்கு முன்னதாக மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்னர் மூன்றே முக்கால் நாழிகையும் பிரதோஷ காலம் என்கின்றனர். (மாலை 4:30 முதல் 7:30 மணி வரை உள்ள காலம்). இந்த நேரத்தில் சிவபிரான் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் நின்று நடனம் புரிகிறார் என்பது ஐதீகம்.

திருமூல நாயனார் அருளிய கரு உற்பத்தி மந்திரம்!


ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
சாக்குகின் றானவ னாதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான் கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
தாக்குநின் றான் அவன் ஆவதறிந்தே!!

அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறை நின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பரிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே!!

இன்புறு காலத் திருவர்முன் பூறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத் தமைந் தொழிந்தானே!!

கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்துமற் றோரார்
திருவின் கருங்குழி தேடித் புகுந்த
துருவம் இரண்டாக ஓடி விழுந்ததே!!

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல் ஐந்தும் ஈரைந்தொ டேறிப்
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதல் உச்சி உள்ளே ஒளித்ததே!!

பூவின் மணத்தை பொருந்திய வாயுவுந்
தாவி உலகின் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவினில் மெல்ல நீள் வாயுவுங்
கூவி அவிழுங் குறிகொண்ட போதே!!

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடானெனிற் பன்றியு மாமே!!

ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரரசாளுமே!!

ஏயங் கலந்த இருவர்தரு சாபத்துப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயங் கலந்தது காண பதிந்தபின்
மாயங் கலந்த மனோலய மானதே!!

கர்ப்பத்துக் கேவல மாயால் கிளைகூட்ட
நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழ
வற்புறு காமியம் எட்டாதல் மயேயஞ்
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே!!

என்பால் மிடைந்து நரம்பு வரிகட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து
இன்பால் உயிர்நிலைசெய்த இறையோங்கும்
நன்பால் ஒருவனை நாடுகின் றேனே!!

பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப்பகலோன்
இதஞ்செய்யும் மொத்துடல் எங்கும் புகுந்து
குதஞ் செய்யும் அங்கியின் கோபந்தணிப்பான்
விதஞ்செய்யு மாறே விதித்தொழிந்தானே!!

ஒழிபல செய்யும் வினையுற்ற நானே
வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைக்
கழிபல வாங்கிச் சுடாமல் வைத்தானே!!

சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால் விரல்
அக்கரம் எட்டும் எண் சாணது வாகுமே!!

போகத்துள் ஆங்கே புகுந்து புனிதனுங்
கோசத்துள் ஆகங்கொணர்ந்த கொடைத் தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்து
மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே!!

பிண்டத்தின் உள்ளுறுபேதைப் புலன் ஐந்தும்
பிண்டத்தினூடே பிறந்து மரித்தது
அண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத் தமர்ந்திடுந் தானே!!

இலைப்பொறி யேற்றி யெனதுடல் வைத்தமன் ஈசன்
துலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டி
நிலைப்பொறி முப்பத்து நீர்மை கொளுவி
உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே!!

இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே!!

அறியீ ருடம்பினி லாகிய வாறும்
பிறியீ ரதனிற் பெருகுங் குணங்கள்
செறியீ ரவற்றினும் சித்திகள் இட்ட
தறியவீ ரைந்தினு ளானது பிண்டமே!!

உடல் வைத்த வாறும் உயிர் வைத்த வாறும்
மடை வைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம் வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடை வைத்த ஈசனைக் கைகலந் தேனே!!

கேட்டுநின் றேன் எங்குங் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்
கூட்டுகின் றான்குழல் பின்கரு வையுரு
நீட்டிநின் றாகத்துநேர்பட்ட வாறே!!

பூவுடன் மொட்டு பொருந்த அலர்ந்தபின்
காவுடை தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே!!

எட்டினுள் ஐந்தாகும் இந்திரியங்களும்
கட்டிய மூன்று காரணமு மாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்றுங் காயப்பை
கட்டி அவிழ்த்திடுஙகண்ணுதல் காணுமே!!

கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிட
பண்ணுதல் செய்து பசுபாவம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாக எடுத்துவைத் தானே!!

அருளள்ள தில்லை அரனவன் அன்றி
அருளில்லை யாதலின் அவ்வோர் உயிரைத்
தருகின்ற போதிரு கைத்தாயார் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே!!

வகுத்த பிறவியை மாதுநல் லாளுந்
தொகுத்திருள் நீக்கிற சோதி யவனும்
பகுத்துணீர் வாகிய பல்லுயிர் எல்லாம்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பதுவாமே!!

மாண்பதுவாக வளர்கின்ற வன்னியுங்
காண்பது ஆண்பெண் அலியெனுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தானச் சோதி தன் ஆண்மையே!!

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாரும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே!!

பாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் னாலோடில பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலுமாமே!!

பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு விளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே!!

மாதா உதரம் மலமிகில் மந்தனும்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே!!

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அழியாகுங் கொண்டதால் ஒக்கிலே!!

கொண்டநல்வாயு இருவர்க்கும் ஒத்தொழில்
கொண்ட குழவியுங் கோமள மாயுடுங்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாங் கோல்வளை யாட்கே!!

கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந்துள்ளே பகலவன் பொன்னுருப்
போல் வளர்ந்துள்ளே பொருந்துருவாமே!!

உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்திற்
பருவம் தாகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடு மாயையி னாலே
அருவம் தாவதிங் காரறிவாரே!!

இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன் இம்மாயையின் கீழ்மை யெவ்வாறே!!

இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்
துன்புற பாசத்தில் தோன்றி வளர்ந்த பின்
முன்புற நாசி நிலத்தின்முன் தோன்றிய
தொன்புற நாடிநின் றோதலுமாமே!!

குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டிட்டால்
அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்
இயக்கில்லை போக்கில்லை ஏனென்பதில்லை
மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே!!

முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின்
அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்
அதற்கது வாய் இன்ப மாவதுபோல்
அதற்கது வாய் நிற்கும் ஆதிப் பிரானே!!

ஏனோர் பெருமைய னாகினும் எம்மிறை
ஊணே சிறுமையுள் உட்கலந் தங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியுந் தவத்தினுள்ளே!!

பரத்திற் கரைந்து பதிந்தநற் காயம்
உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டித்
திரைகடல் உப்புத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்குந் திருவரு ளாலே!!

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்:
முத்திலங்கு முறுவல் லுமையஞ்சவே
மத்தயானை மருகவ் வுரிவாங்கியக்
கத்தை போர்த்த கடவுள் கருகாவூர்ரெம்
அத்தர் வண்ணம் மழலும் அழல் வண்ணமே!!

அப்பர் திருத்தாண்டவம்:
குருகாம் வயிரமாம் கூறு நாளாம்
கொள்ளும் கிழமையாம் கோளேதானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகால் உமையாளோர் பாகனுமாம்
உள்நின்ற நாவிற்கு உரையாடியாம்
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றுங்
கண்ணாம்கருகாவூ ரெந்தைதானே!!

பாபநாசத் திருப்பதிகம்:
மருகல் உறையும் மாணிக்கத்தை
வலஞ்சுழியில் மாமாலையைக்
கருகாவூரில் கற்பகத்தைக் .
காண்டற்கரிய கதிரொளியைப்
பெருவேளூர் எம்பிறப்பிலியை
பேணுவார்கள் பரிவரிய
திருவாஞ்சியத் தெம் செல்வனை
சிந்தையுள்ளே வைத்தேனே!!

க்ஷேத்திரக் கோவைத் திருப்பதிகம்:
திண்டிச்சரம் செய்ஞலூர் செம்பொன்பள்ளி
தெவூர்சிராபுரம் சிற்றேம் சேறை
கோண்டீச்சுரம் கூந்தலூர் கூழையூர்
கூடல் குருகாவூர் வெள்ளடை குமரிகொங்கு
அண்டர்தொழும் அதிகை வீரட்டானம்
ஐயாறு அசோகந்தி ஆமத்தூரும்
கண்டியூர் வீரட்டம்கருகாவூரும்
கயிலாய நாதனையே காணலாமே!!
- அப்பர்

 
 
திருக்கோயில் அமைவிடம்:

ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை சன்னதி
திருக்கருகாவூர் அஞ்சல்,
பாபநாசம் தாலுக்கா,
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு.
தொலைபேசி : 04374....273423
www.garbaratchambigaitemple.org
e.mail id: garbaratchambigai@ sancharnet.in

 
வழித்தடம் : 
 
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூருக்கு பஸ் வசதி உள்ளது. சென்னையில் இருந்து கும்பகோணம் மற்றும் தஞ்சாவூருக்கு ரயில் வசதியும் உள்ளது.  கும்பகோணம், தஞ்சாவூரில் இருந்து திருகருகாவூருக்கு பஸ் வசதி உள்ளது.

 

மங்கலங்கள் பொங்கிப் பெருகச் செய்யும் மாதங்கி!


பராசக்தி எடுத்த தசமகாவித்யா அவதாரங்களில் ஒன்பதாவதான மாதங்கி, பெரிதும் போற்றி வணங்கப்படுகிறாள். லலிதா திரிபுரசுந்தரியின் கரும்பு வில்லில் இருந்து தோன்றியவள் மாதங்கி. அமுதமயமான கடலின் நடுவில் ரத்தினத் தீவில், கற்பக மரங்கள் செறிந்த காட்டில், நவமணிகளால் இழைக்கப்பட்ட மண்டபத்தினுள், தங்க சிம்மாசனத்தில் இந்த தேவி அமர்ந்தருள்கிறாள். மதங்க முனிவரின் தவத்திற்கு மகிழ்ந்து அவருக்கு மகளாக அவதரித்ததால் மாதங்கி எனப் பெயர் பெற்றாள்.

மகிஷாசுர வதத்தின்போது இவள் சும்ப-நிசும்பர்களை வதைத்தவள் என சப்தசதீ பெருமையுடன் போற்றுகிறது. மகாதிரிபுரசுந்தரி, பண்டாசுரனுடன் வதம் செய்ய முற்பட்டு நிகழ்த்திய பெரும் போரில், மாதங்கி, விஷங்கன் எனும் அசுரனை அழித்தாள் என லலிதோபாக்யானமும் இவள் புகழ் பாடுகிறது. வாக்விலாசத்திற்கும் அறிவின் விருத்திக்கும் இவள் அருள் கட்டாயமாகத் தேவை. புலவர்களை மன்னர்களுடன் சரியாசனத்தில் வைக்கக் கூடிய வல்லமை இவளுக்கு உண்டு.  இவளை ராஜசியாமளா என்றும் அழைப்பர்.



மாதங்கியின் மந்திரம், 98 எழுத்துக்கள் கொண்டதாகும். மாதங்கி மந்திரம் ஒருவருக்கு சித்தியாகிவிட்டால் உலகில் உள்ள மற்ற வேத மந்திரங்கள் உட்பட அனைத்துமே ஒரு முறை படிப்பதாலேயே சித்தியாகும் என மதங்கமனுகோசம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சரஸ்வதியின் தாந்த்ரீக வடிவமே மாதங்கி. லலிதாம்பிகையின் கரும்பு வில்லில் இருந்து தோன்றியவள் இவள், அந்த லலிதா பரமேஸ்வரிக்கே ஆலோசனை கூறும் மந்த்ரிணீயானவள். இவளின் ரதம் கேயசக்ர ரதம் என அழைக்கப்படுகிறது. கேயம் எனில் பாட்டு. கேயசக்ர ரதம் அசைந்து வரும்போது, அதன் ஒலி, சங்கீதமாய் கானம் இசைக்கும்.

எப்போதும் தவழும் புன்முறுவலுடனும் சுழன்று மயக்கும் விழியுடையவளாக இத்தேவி விளங்குகிறாள். கதம்ப மலர்கள் தேவியின் கூந்தலை அலங்கரிக்கும் பேறு பெற்றன. மடியில் வீணையை வைத்துக் கொண்டு கீழ் இரு திருக்கரங்களால் அதை மீட்டிக் கொண்டும் மேலிரு கரங்களில் சம்பா நெற்கதிர்களையும் கரும்பு வில்லையும் ஏந்தியுள்ளாள். மற்ற நான்கு திருக்கரங்களில் கிளி, சாரிகை ஆகிய பறவைகளும் பாசமும் அங்குசமும் அலங்கரிக்கின்றன.

திருமுகம் பொலிவாய்த் துலங்க, நெற்றியில் கஸ்தூரி திலகம் பளிச்சிடுகிறது. திருமுடியில் சந்திர கலையுடன் கூடிய கிரீடம் மின்னுகிறது. சர்வாலங்கார பூஷிதையாக தேவி பொலிகிறாள். பருத்து நிமிர்ந்த மார்பகங்களின் கனத்தால் இடை துவண்டு உள்ளது. மரகத மணியின் நிறத்தைப் போல ஜொலிக்கும் பச்சை நிற மேனியள். வலது பாதத்தை மடித்து, இடது பாதத்தை தொங்கவிட்ட நிலையில் அருள்பவள். செவிகளில் சங்கினால் ஆன காதணிகளை அணிந்துள்ளாள். சில நூல்களில் பனை ஓலையால் ஆன காதணிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவள் கரங்களில் உள்ள நெற்பயிர் உலகியல் இன்பங்களின் தொகுதியையும் கரும்பு வில், அழகு சாதனங்களையும், பாசம், ஆகர்ஷண சக்தியையும் சாரிகை, உலகியல் ஞானத்தையும் கிளி, ஆன்மிக அறிவையும் வீணை, பர-அபர போகங்களையும் காட்டுகின்றன. இத்தேவியின் வழிபாட்டில் உலகியல் இன்பம் துறக்கப்படுவதில்லை. மாதங்கி உபாசனை சகல கல்வி கேள்விகளிலும் தேர்ச்சியை அதி சீக்கிரத்தில் அருளும்; விசேஷமான இன்பக் கலைகளில், நுண்கலைகளில், இன்னிசைக் கலைகளில் உபாசகனுக்கு வெற்றி எளிதில் கிட்டுகிறது.



இந்த மாதங்கியைப் பற்றி அபிராமி பட்டர், தனது அபிராமி அந்தாதியின் எழுபதாவது பாடலில், 

கண் களிக்கும்படி கண்டு கொண்டேன், கடம்பாடவியில்
பண்களிக்கும் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமுமாகி மதங்கர் குலப்
பெண்களிற் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே!

-என்று போற்றுகிறார்.

மகாகவி காளிதாஸர், மாதங்கி உபாசனையால் பல அற்புத சக்திகளைப் பெற்றார். அவர் இந்த மாதங்கியைப் போற்றி ‘ச்யாமளா தண்டகம்’ எனும் அதியற்புத துதியைப் பாடியுள்ளார். அதில் இந்த மாதங்கியே சர்வ தீர்த்தம், சர்வ மந்த்ரம், சர்வ தந்த்ரம், சர்வ சக்தி, சர்வ பீடம், சர்வ தத்வம், சர்வ வித்யை, சர்வ யோகம், சர்வ நாதம், சர்வ சப்தம், சர்வ ஸ்லோகம். சர்வ தீக்ஷை, முதலான சர்வ ஸ்வரூபிணியாகவும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளவளாகவும் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

லலிதா திரிபுரசுந்தரி வாசம் புரிந்தருளும் ஸ்ரீநகர ஸாம்ராஜ்யத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த மாதங்கியுடையதே.

இவளால் செயல்படுத்த முடியாதது என்று எதுவுமே இல்லை. எப்போதும் எல்லாவற்றையும் பெறக்கூடிய வாக்கு வல்லமை, சக்தி, பிறரைத் தன் வசமாக்கிக் கொள்ளும் தன்மை, பயமற்ற நிலை, மனதில் பதட்டப்படாத நிலை, எடுத்த செயலை சிரமம் இல்லாமல் நடத்தி முடிக்கும் தன்மை, பின்வரக்கூடிய இடையூறுகளை முன்னதாகவே யோசித்து அதனைச் சரிப்படுத்தும் வல்லமை போன்றவை இந்த மாதங்கி உபாசனையால் ஏற்படும் பலன்கள்.

லலிதையின் மந்திரிணியாக, பூரண மகாசக்தியாக, மதுரையம்பதியில் பிரகாசிக்கும் மீனாட்சி, மாதங்கியின் வடிவம்.

மாதங்கி உபாசனை, கல்வி கேள்விகளில் அதி சீக்கிரத்தில் தேர்ச்சியை அருள்கிறது. விசேஷமான இன்பக் கலைகளிலும் நுண்கலைகளிலும் இன்னிசைக் கலைகளிலும் உபாசகன் வெற்றியை வெகு எளிதில் அடைகிறான்.

வாக்வாதினி, நகுலீ என இவளுக்கு இரு தோழிகள். வாக்வாதினி தேவி நம்மை நன்றாகப் பேச வைக்கும் சக்தி. நகுலீயின் சக்தி எதிரிகளின் வாக்கை அடைத்து, பிறரை விட ஆயிரம் மடங்கு இனிமையாக, தெளிவாகப் பேசி, தன் வயமாக்குவதே. ஞானம் பெற்றாலும் தவறுகள் செய்ய வாய்ப்புகள் உண்டு. அத்தவறுகள் விஷம் போன்றவை. நகுலம் எனில் கீரிப்பிள்ளை. தவறுகள் என்ற விஷத்தால் பாதிக்கப்படாமல் இருக்க இவள் தயவு அவசியம்.

நாம் பேசும் வார்த்தை இனிமையாக இருந்தால் அதை சங்கீதம் என்பதுண்டு. இனிமையான பேச்சு, கிளியை நினைவுறுத்தும். எனவே, அதை தேவி தன் கைகளில் ஏந்தியுள்ளாள். இந்த தேவியை அறுபத்தி நான்கு முக்கியமான யோகினிகள் எப்போதும் பூஜித்துக் கொண்டும் பணிவிடை செய்து கொண்டும் இருப்பர்.

இந்த மாதங்கியைக் குறித்து சியாமளா தண்டகம், சியாமளா நவரத்னமாலை, சியாமளா ஆவரணம், சியாமளா அஷ்டோத்திரம், சியாமளா கவசம், ராஜமாதங்கி மந்த்ரம், மாதங்கி ஸ்தோத்திரம், மாதங்கி ஸுமுகி கவசம், மாதங்கி ஹ்ருதயம், மாதங்கி ஸஹஸ்ரநாமம், ஸ்யாமளா ஸஹஸ்ரநாமம் என பல்வேறு துதிகள் உண்டு.

கீழ்க்காணும் பதினாறு நாமங்களால் அன்னை மாதங்கியை அர்ச்சித்து அனைத்து நலன்களையும், விரைவாகப் பெறலாம்.

சங்கீதயோகினி, ச்யாமா, மந்த்ரநாயிகா, ச்யாமளா, மந்த்ரிணீ, ஸசிவேசானீ, ப்ரதானேஸ்வரி, ஸுகப்பிரியா, வீணாவதி, வைணிகீ, முத்ரிணீ, ப்ரியகப்ரியா, நீபப்ரியா, கதம்பேசீ, கதம்பவனவாஸினி, ஸதாமதா.

மேற்கூறியவறு இவளை சஞ்சலமின்றி அர்ச்சிப்பவர்களின் இல்லங்களில் லட்சுமி தேவி நித்யவாசம் செய்வாள். ருதுவாகாத பெண்கள் இவள் ஆராதனையால் ருதுவாவார்கள். கருத்து வேற்றுமையால் பிரிந்த கணவன், மனைவி மீண்டும் ஒன்று சேர்வர். சோம்பல், பயம், துக்கம் இம்மூன்றும் இவளை ஆராதிப்பவர்களுக்குக் கிடையாது.

எல்லா பாக்கியங்களையும் பெற மல்லிகை, ஜாதி மல்லி ஆகிய மலர்களால் இத்தேவியை அர்ச்சிக்க வேண்டும்.

அரச போகங்களை வேண்டுவோர் வில்வதளங்களாலும் விசேஷமாக தாமரை மலர்களாலும் பூஜிக்க வேண்டும்.

சொல்வன்மை, கவிபாடும் திறமை வேண்டுவோர் செம்பருத்திப்பூக்களால் இத்தேவியை ஆராதனை புரியவேண்டும். செல்வவளம் சிறக்க கருங்குவளை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.


மாதங்கி த்யானம்!

த்யாயேயம் ரத்னபீடே ஸுககலரணிதம்
             ஸ்ருண்வதீம் ஸ்யாமகாத்ரீம்
ந்யஸ்தைகாங்க்ரிம் ஸரோஜே ஸஸிஸகல
                 தராம் வல்லகீம் வாதயந்தீம்
கல்ஹார பத்தமாலா நியமித விலஸச்சூலிகாம்
                                    ரக்தவஸ்த்ராம்
கர்ணோத்யச்சங்க பத்ராம் கடிநகுசபர
                க்லாந்தகாந்தாவலக்நாம்

மாதங்கி காயத்ரி!

ஓம் மாதங்க்யை வித்மஹே
      ரத்னேஸ்வர்யை தீமஹி
தன்னோ மாதங்கி ப்ரசோதயாத்.


தரிசனம்!

இந்த ராஜசியாமளாவின் அழகான திருவுருவை காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் காயத்ரி மண்டபத்திற்கு வலப்புறத்தில் தரிசித்து மகிழலாம்; புதுக்கோட்டை புவனேஸ்வரியின் கருவறையின் முன்னும், சென்னை ஆதம்பாக்கம் புவனேஸ்வரி ஆலய கருவறை முன்னும் மாதங்கியின் நின்ற கோல திருவுருவங்களை தரிசிக்கலாம்.

அபரிமித செல்வத்தையும் ஞானத்தையும் நல்ல புகழையும் முக்தியையும் தரவல்ல மதங்கமுனிவரின் மகளான மாதங்கி அனவரதமும் அடியவர்களைக் காக்கட்டும்.