Sunday 7 May 2023

குங்கும பஞ்சதசி!

 குங்கும பஞ்சதசி.

இந்தபஞ்சதசியை பாடினால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

குங்குமமாவது குறைகளைத் தீர்ப்பது
குங்குமமாவது குடியினைக் காப்பது
குங்குமமாவது குணமத ளிப்பது
குங்குமமாவது கொல்வினைத் தீர்ப்பதே…………(1)

விதிகளை வெல்வது விமலையின் குங்குமம்
நிதிகளை ஈவது நிமலையின் குங்குமம்
பதிதனைக் காப்பது பதிவ்ரதை குங்குமம்
கதிகளை ஆள்வதும் குங்குமமாமே………………..(2)

தஞ்சமென்றோரைத் தடுத்தாட்கொள்வதும்
பஞ்சமா பாதகம் பரிந்துமே தீர்ப்பதும்
அஞ்சின பேருக்கு அபய மளிப்பதும்
காஞ்சி காமாக்ஷியின் குங்குமமாமே……………….(3)

நற்பதமீவது நாரணீ குங்குமம்
பொற்பினை ஈவது புரணீ குங்குமம்
சிற்பரமாவது ஸ்ரீ சக்ர குங்குமம்
கற்பினைக் காப்பதும் குங்குமமாமே………………..(4)

செஞ்சுடர் போன்றது சீரான குங்குமம்
கொஞ்சும் அழகைக் கொடுப்பது குங்குமம்
ஐந்து புலன்களை அடக்கி யருள்வதும்
காசி விசாலாக்ஷியின் குங்குமமாமே………………..(5)

நோயினைத் தீர்ப்பதும் நுண்ணறி வீவதும்
பேயினைத் தீர்ப்பதும் பெரும் புகழீவதும்
சேயினைக் காப்பதும் செல்வம் தருவதும்
தாயினை அர்ச்சித்த குங்குமமாமே…………………..(6)

சக்தி கொடுப்பதும் சத்தியம் காப்பதும்
பக்தி யளிப்பதும் பரகதி யீவதும்
முக்தி கொடுப்பதும் மும்மலம் தீர்ப்பதும்
சித்தி தருவதும் குங்குமமாமே…………………………..(7)

நெஞ்சிற் கவலைகள் நீக்கி யருள்வதும்
செஞ்சொற் கவிபாடும் சீரினை யீவதும்
வஞ்சப் பகைவரை வாட்டி யருள்வதும்
மதுரை மீனாக்ஷியின் குங்குமமாமே…………………….(8

சிவசிவ என்றுமே திருநீறணிந்தபின்
சிவகாமியே எனச் சிந்தித் தணிவதும்
தவமான மேலோருந் தரித்துக் களிப்பதும்
பலவினை தீர்ப்பதும் குங்குமமாமே………………………(9)

எவையெவை கருதிடின் அவையவை யீவதும்
நவவகை சக்தியின் நலனைக் கொடுப்பதும்
குவிசெய் கரத்துடன் கும்பிட்ட பேருக்கு
குவிநிதி யீவதும் குங்குமமாமே………………………….(10)

அஷ்டலெக்ஷ்மி அருள் தந்தளிப்பதும்
இஷ்டங்களீவதும் ஈடற்ற குங்குமம்
கஷ்டம் தவிர்த்தென்னைக் காத்தருள்வதும்
சிஷ்டனாய்ச் செய்வதும் குங்குமமாமே………………..(11)

குஷ்டமுதலான மகாரோகந் தீர்ப்பதும்
நஷ்டம் வராதொரு நலனைக் கொடுப்பதும்
எட்டும் இரண்டும் அறிவித்தோர் வீடினை
கிட்டவே செய்வதும் குங்குமமாமே…………………….(12)

பட்ட காலிலே படுமெனக் கஷ்டங்கள்
விட்டிடாமலே வந்துமே வாட்டினும்
பட்டான பார்வதி பாதம் பணிந்தே
இட்டார் இடர்தவிர்த்த குங்குமமாமே…………………(13)

சித்தந்தனை சுத்தி செய்வதற் கெளியதோர்
எத்துந் தெரியாதே ஏமாந்த மாந்தரே
நித்தம் தொழும் அன்னை குங்குமம்
நித்தியம் தரித்துமே மேன்மை யடைவீரே…………….(14)

மிஞ்சும் அழகுடன் குங்கும ஆடைகள்
செஞ்சுடர் ஆகுமோர் ஸ்ரீசக்கர லலிதை
கஞ்சமலர் முகம் தன்னில் திகழ்வதும்
பஞ்ச நிதிதரும் குங்குமமாமே…………………………..(15)
……………………. சுபம் …………..




No comments:

Post a Comment