Wednesday 30 November 2016

திருப்பம் தரும் திருக்காப்புச் சீட்டு : சமயபுரம்!


திருச்சி மாவட்டத்தில் சமயபுரத்தில் வீற்றிருக்கிறாள் மாரியம்மன். ஆதியில் இந்தப் பகுதி ‘கண்ணனூர் அரண்மனை மேடு’ என்றழைக்கப்பட்டது. முதலில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில்தான் அம்மனின் திருவுரு இருந்தது. அது உக்கிரம் மிகுந்ததாகக் கருதப்பட்டதால் அங்கிருந்து சமயபுரத்திற்கு இடம் பெயர்ந்தது. அச்சிலையை எடுத்து வந்தபோது இனாம் சமயபுரம் என்ற இடத்தில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தார்கள். இதையொட்டியே சமயபுர கோயில் திருவிழாவின் எட்டாம் நாள் வைபவத்தில் இன்றும் அம்மன் இனாம் சமயபுரம் சென்று ஓய்வெடுக்கிறாள். விஜயநகர மன்னர் ஒருவர் இப்பகுதிக்குப் படையெடுத்து வந்தபோது அரண்மனை மேடு அம்மனை வணங்கி வழிபாட்டு போரில் வெற்றியும் பெற்றார். அதன் நன்றிக்கடனாக அவர் உருவாக்கியது தான் இக்கோயில் என்றும் சொல்கிறார்கள். மூலவர் மாரியம்மனின் திருவுருவம் மரத்தால் ஆனது; அதன்மேல் சுதை வேலைப்பாடுகள் மேற்கொள்ள பட்டிருக்கிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இச்சிலையை மறுசீரமைப்பு செய்கிறார்கள். தங்கஜடா மகுடத்துடன், மேனி குங்கும நிறத்தில் திகழ, நெற்றியில் அழகிய வைரப்பட்டைகள் மின்ன, கண்களில் அருளொளி வீச, வைரக் கம்மல்களுடனும், மூக்குத்தியுடனும் அன்னை அற்புதமாகக் காட்சி தருகிறாள். தனது எட்டுக் கைகளில் இடப்புறமாக கபாலம், மணி, வில், பாசம்; வலப்புறமாக கத்தி, சூலம், அம்பு மற்றும் உடுக்கை ஆகிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளாள். இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்ட சுகாசன நிலையில் அமர்ந்திருக்கிறாள். வலது காலின் கீழே மூன்று அசுரர்களின் தலைகள். கோயிலின் தல விருட்சம், சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் வேப்ப மரம். இந்த மரத்தில் மக்கள் திருக்காப்பு சீட்டை சமர்ப்பிக்கிறார்கள். தம் குறைகளை எழுதி இம்மரத்தில் கட்டிவிட்டு மாரியம் மனை வேண்டிக்கொண்டால் கோரிக்கை நிறைவேறுகிறது என்கிறார்கள். அம்மனுக்கு பூஜைகள் நடத்தும்போது இந்தத் தலவிருட்சத்துக்கும் பிரத்யேகமாக பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்த வேப்ப மரத்தினடியிலுள்ள புற்றிலிருந்து, ஆயிரம் கண்ணுடையாள் என்ற அம்பிகையின் அழகிய செப்புத் திருமேனி கண்டெடுக்கப்பட்டது. இந்த அம்பிகை தற்போது துணைச் சந்நதியில் வீற்றிருக்கிறாள். இவளுடைய நேரடிப் பார்வையில் வேப்ப மரம்! காவிரியின் உபநதியான பெருவளை வாய்க்கால், இக்கோயிலின் புனித சக்தித் தீர்த்தமாக விளங்குகிறது. இதன் படித்துறையில் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆடிப்பூர தீர்த்த வாரியும், ஆடி பதினெட்டு தீர்த்தவாரியும் சிறப்பாக நடைபெறுகின்றன. கோயிலின் வடமேற்கே மகமாயி தீர்த்தம் அமைந்துள்ளது. விஜயநகர நாயக்கர்கால திருப்பணிகளில் இக்குளமும் ஒன்று. இத்திருக்குளத்திற்கு பெருவளை வாய்க்கால் வழியாக நீர் கொண்டு வரவும், எஞ்சிய நீரை வெளியேற்ற தரையில் நிலத்தடி நீர்வழி வாய்க்காலும் அந்த காலத்திலேயே அமைக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பு. இன்னொன்று, மகாமக தீர்த்தம். புராண காலத்தில் சப்த கன்னியர் ஒவ்வொரு மகாமகத் திருவிழாவிற்கு முன்பும் கங்கா தேவியை இப்புனிதத் தீர்த்தத்தில் ஆவாகனம் செய்து, இங்கிருந்து பெருக்கெடுத்து ஓடும் புனித நீரை கும்பகோணம் மகாமகத்தில் சேர்ப்பதாக ஐதீகம். தை மாத தைப்பூச திருவிழா 10 நாட்களுக்கு நடைபெறும். பத்தாம் திருநாளன்று மாரியம்மன் கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று ரங்கநாதரிடமிருந்து சீர்வரிசை பெறுகிறாள். மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பக்தர்களுக்காக அம்மனே பட்டினி கிடந்து விரதம் மேற்கொள்கிறாள். இதனை ‘பச்சை பட்டினி விரதம்’ என்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி அன்று இரவு முழுவதும் சமயபுரம் சந்நதி வீதியில் தங்கியிருந்து காலை நீராடிவிட்டு அம்மனை தரிசனம் செய்தால் சகல நோய்களையும், தோஷங்களையும் நீக்கி, வேண்டும் வரம் தருவாள் மாரியம்மன். கருவறையைச் சுற்றி பிராகாரம் காணப்படுகிறது. இப்பிராகாரத்தில் விமானத்தின் அதிஷ்டான பகுதியில் தொட்டி அமைக்கப்பட்டு நீர் நிரப்பப்பட்டுள்ளது. அம்பாள் உக்கிரத்தைத் தணிப்பதற்காகவே இந்த அமைப்பு. கருவறையின் இடப்புறம் உற்சவ அம்பாளின் சந்நதி உள்ளது. இத்திருமேனிக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இந்தக் கோயிலுக்கு வடக்கே உள்ள செல்லாண்டியம்மன் கோயில் உற்சவருக்கும் இங்குதான் நாள்தோறும் அபிஷேகம் செய்யப்படுகிறது. மாரியம்மன் உற்சவருக்கு காலை, மாலையில் செய்யப்படும் அபிஷேக தீர்த்தம் திருக்கோயிலின் வடக்குப் பிராகாரத்தில் பக்தர்கள் மீது தெளிக்கப்படுகிறது. இதனால் அம்மை நோய் கண்டவர்கள் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளவர்கள் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு விரைவில் நலம் பெறுகின்றனர்.

No comments:

Post a Comment