Wednesday 30 November 2016

அகிலம் போற்றும் அஸ்வாரூடா தேவி!



இராஜ ராஜேஸ்வரி தேவியின் குதிரைபடைத் தலைவியாக வலம் வருபவள். கையிலே உலக்கை கொண்டு உலாவரும்போது தண்டினியாகக் காட்சி அளிப்பவள்.

வெள்ளைக் குதிரையின் மீது இடக்கையிலே கடிவாளத்தைப் பற்றிக் கொண்டு வலக்கையில் உருவிய வாளினை ஏந்திக் கொண்டு ஆரோகணித்து வரும்போது அஸ்வாரூடப்பரமேஸ்வரியாகப் பவனி வருபவள்.



வெள்ளைவெளீர் என பளிச்சிட்ட அவளது குதிரை யாராலும் என்றுமே வெல்ல முடியாத சக்தி மிக்க குதிரையாக இருந்ததினால் அந்த சக்தியை குறிக்கும் சொல்லான அபராஜிதா என்ற பெயரை அந்தக் குதிரை பெற்றது.

சப்த மாதாக்களில் ஒருவராகப் போற்றி வணங்கப்பட்டு வருபவள் வாராஹி தேவி.

சப்த மாதாககளில் ஒருவராகக் கருதப் பட்டாலும் இந்த அம்மையே மூவரும் யாவரும் தேவர்களும் போற்றத்தக்க ஆதிபராசக்தியாகவும் கருதி வழிபடுதலும் ஒரு மரபாக இருந்து வருகிறது. இதனைக் கீழ்வரும் வாராஹி மாலை பாடல் விளக்கும்.

“வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ்வையகத்தில்
காலையும் மாலையும் உச்சியும் ஆக எக்காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹி தன் பாதத்தை அன்பில் உன்னி
மால் அயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே”
 
வாராஹிதேவி சரஸ்வதி தேவியின் ஓர் அம்சமாக விளங்குவதால் இவளே வாக்குக்கு அரசி.
வலிமைக்கு அரசி.
வளமைக்கு அரசி.
செழுமைக்கு அரசி.
செங்கோலுக்கு அரசி.

கருணையின் மொத்த வடிவமாகக் காட்சி தருபவள் வாராஹிதேவி. வாராஹியை வார்த்தாளி என்றும் சொல்லுவார்கள் ஏனெனில் அவள் தன்னுடைய குழந்தைகளின் வாக்கு வன்மையை வலுப் படுத்துகிறாள். எதிரிகளின் வாக்கினைச் சீர்குலைக்கிறாள். அடக்கி வைக்கிறாள்.

 "தேவீம் நித்யப்ரசன்னாம்" என்று தியான ஸ்லோகத்தில் வர்ணிக்கப்படும் வாராஹி தேவி கேட்டதைக் கேட்டவுடனே கேட்டவாறு வழங்கும் இயல்புடையவள்.

தென் திசைத் தெய்வம் என்று வாராஹி அம்மை தியான சுலோகத்தில் போற்றப்படுகிறாள். செந்தமிழால் போற்றினாலும் பேசினாலும் இந்த அம்மைக்கு மிகவும் பிடிக்கும். அப்படியே நெகிழ்ந்து போய் அவர்களது நெஞ்சக் கமலத்தில் எழுந்தருளி பரவசத்தில் ஆழ்த்திடுவாள்.

திருவானைகாவில் எழுந்தருளியிருக்கும் அகிலாண்டேஸ்வரி அம்மன் வாராஹியின் அம்சத்தில் உதித்தவள் என்று சொல்லப்படுகிறது. அரசியல் செல்வாக்குடன் திகழவேண்டுமானால் இவளையே சரணம் அடைதல் வேண்டும். அரசு கட்டிலில் இருப்பவர்கள் தவறு செய்தால் அவர்களை உடனடியாகத் தண்டிப்பதற்கு வாராஹிதேவியின் அம்சமான அஸ்வாரூடா தேவியால்தான் முடியும்.

தர்மம் தழைத்திடவும், அதர்மம் அழிந்திடவும், எங்கும் அமைதி நிலவிடவும், வாராஹி தேவியை ஒருமையுடன் சிந்திப்போம்.

"ஓம் ஐம் க்லெளம் ஐம் மகா வாராஹியே நமக" என்று உச்சாடனம் செய்வோம்.

வாராஹி தேவியின் தரிசனம் காண்போம். அவள் வாரி வழங்கும் பரிசில்களைப் பெற்று ஆனந்தமாக வாழ்வோம்.

”ஐம் க்லெளம் ஐம் எனத் தொண்டர் போற்ற அரிய பச்சை
மெய்யும் கருணை வழிந்தோடு கின்ற விழியும் மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கணெதிரே
வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே”
 
 ஒவ்வொரு வளர்பிறை பஞ்சமியிலும் வாராஹி தேவிக்குச் சிறப்பு வழிபாடு உண்டு. வெள்ளைதாமரை பூவினாலும் ரூபாய் நாணயங்களாலும் அர்ச்சனை செய்யப்படுகின்றது. அர்ச்சனை செய்யப்படும் நாணயத்தி முதல்ல்கக் கொண்டு எந்த செயலை தொடங்கினாலும் அது வெற்றியாக முடியும்.

வாராஹி தேவியை சரணடைந்து வளர்பிறையாகத்  வெற்றிகள் பெறுவோம்!

தினமும் குளித்தப் பின் 108 முறை கீழ்கண்ட ஸ்லோகத்தை ஜபம் செய்தால் நமக்கு ஏற்ப்படும் தீமைகள் அழியும் என்பார்கள்.  அந்த ஸ்லோகம் இது:

அம்பிகா அனாதினிதான அஸ்வாரூட அபராஜிதா
 
இந்த பிரார்த்தனையின் பொதுவான அர்த்தம் இது!

''உலகைக் காக்கும் அம்பிகையின் சக்தியில் இருந்து வெள்ளை குதிரை மீது அமர்ந்தபடி வெளிவந்துள்ள அஸ்வாரூடை தேவியே, உன்னை நான் மனதார தியானிக்கிறேன். நீயே என்னுடன் இருந்துகொண்டு, அலைபாயும் என் மனத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியை கொடுத்து என்றும் அமைதியோடு இருக்க எனக்கு அருள் புரிய வேண்டும். தேவியே உன்னிடமே நான்   முழுமையாக சரணடைகின்றேன்.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள  வைகோம்  மகாதேவர் ஆலயத்தில் அஸ்வாரூடையின் யாகமும், ஹோமமும் நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள்.


 

No comments:

Post a Comment