Thursday 29 October 2015

தஞ்சாவூர் சொர்ண காமாட்சி!


தஞ்சாவூர்  - பங்காரு காமாட்சி

சொர்ண மயமான தங்க காமாட்சியை பிரம்மா செய்தார். ஆனந்த அழுகையோடு தொழுதார்.
  சலிப்பூட்டாத அவளின் வழிபாட்டை தொடர்ந்தவர் பங்குனி மாதம் காஞ்சி ஏகாம்பரத்தில் தவமிருக்கும் ஏகாம்பரேஸ்வரருக்கு சாஸ்திர பூர்வமாக விவாகம் செய்வித்தார். திருக்கல்யாணம் முடிந்தவுடன் சுவர்ண காமாட்சியை த்ருவம் எனும் அசையா மூர்த்தமாக பிரதிஷ்டை செய்தார். அபிஷேக ஆராதனைகள் முரிந்தவுடன் ஒரு தாமரை மலரை ஆகாசத்தில் வீசி எறிந்தார். வானம் தொட்ட தாமரையினின்று ஆகாச பூபதி என்றொருவன் வெளிப்பட்டான். ஆண்டுதோறும் அன்னையின் திருக்கல்யாணத்தை நிகழ்த்து என அன்பாணையிட்டார். மெல்ல நகர்ந்து சத்திய லோகம் ஏகினார். சொர்ணகாமாட்சி வரலாற்றுப் பேரேடுகளில் சில பக்கங்களை எல்லோரையும் புரட்டும்படி செய்யும் காலம் நெருங்கியது. பதினெட்டாம் நூற்றாண்டின் உச்சிக் காலம்.

அந்நியதேசப் படையெடுப்பாலும்,
  வேற்று மதத்தினராலும் வட இந்தியாவும், தென் இந்தியாவும் ரணகளப்பட்டுக் கொண்டிருந்தது. திருக்கோயில்களின் விக்ரஹத்தில் ஏதுமில்லை அதை தூக்கியெறியுங்கள். உங்களின் வேத நூல்களை தீயிலிட்டு பொசுக்குங்கள் என இந்து மதத்தின்மீது கோரத் தாண்டவமாடினர், அந்நிய நாட்டினர். கோயிலுக்குச் சொந்தமான தங்க விக்ரஹங்களையும், வைர கிரீடங்களையும் கொள்ளை யடித்தனர். மக்கள் துடிதுடித்துப்போயினர். காஞ்சிக் கோயிலுக்கும் அந்தகதி வந்து விடுமோ என்று அஞ்சினர். மஞ்சள் ரூபிணியான சொர்ண காமாட்சியை விஜயநகர மன்னர்கள் தெலுங்கில் பங்காரு காமாட்சி என்று அழைத்தனர். அவளும் அவர்களுக்கருகே செல்லலாம் திருவுள்ளம் பூண்டாள். ஆதிகாமாட்சியும் ஆஹா... என்றாள். சோழதேசத்தின் நெல் வயல்கள் தங்கமுலாம் பூசியதுபோன்று செழித்துக் கிடந்தது. தங்க பங்காரு காமாட்சியும் அங்கேயே சென்று தங்கலாம் என்று உறுதி பூண்டாள்.

 தஞ்சை மராட்டிய மன்னனான ஏகோஜியின் ஆட்சியில் இருந்தது. 1737ம் ஆண்டு வாரிசு இல்லாது ஏகோஜி உயிர் நீத்தான். 1739ம் வருடம் பிரதாப சிம்மன் அரியணை ஏறினான். அப்போதைய காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (கி.பி. 1746 - 1783) மகிழ்ச்சியுற்றார். பிரம்மனால் பிரதிஷ்டை செய்ததாயிற்றே என கண்கலங்கினார். நிலவறையில் சொக்கத் தங்க காமாட்சியை பத்திரமாக பாதுகாத்தனர். ஒரு குழு பீடாதிபதியுடன் கோயில் ஸ்தானிகர்கள் சொர்ண காமாட்சியை கையில் பத்திரமாக சுற்றி எடுத்துக்கொண்டு கண்களில் நீர் கொப்புளிக்க காஞ்சியைவிட்டு வெளியேறினர். சில ஆண்டுகள் செஞ்சியிலும், உடையார்பாளையம் ஜமீன்தாரர்களின் பேரன்பும், ஆதரவாலும் சுவர்ண காமாட்சியோடு ஸ்தானிகர்கள் நிம்மதியோடு பூஜித்தனர். தஞ்சை மன்னரின் நெருங்கிய நண்பரும் அனக்கடி மிராசுதாரரும் சங்கராச்சாரியாரை வரவேற்று சில காலம் தங்க வைத்தார்.

பிரதாபசிம்மன் சுவர்ண காமாட்சி வருகிறாள் என்றவுடன் அகமகிழ்ந்தான். ஓரிடத்தில் பிரம்மன் நிறுத்திய த்ருவம் எனும் சொர்ண காமாட்சி இப்போது எல்லா துருவங்களுக்கும் பயணித்து அருளை இரைத்துக் கொண்டே நாகூர், சிக்கல், திருவாரூர் விஜயபுரம் வழியாக தஞ்சையில் தன் பூப்பாதம் பதித்தாள். தஞ்சை பெருவுடையார் அருவமாக பரவசப்பட்டார். ஆதிமாதாவானவள் இவ்வளவு அருகிலா என்று பிரதாபசிம்மன் நெக்குருகினான். ஓடிச்சென்று ‘‘நா பங்காரு.... நா பங்காரு...’’ என்று தெலுங்கில் ஆனந்தக்கண்ணீர் பொங்கி கதறித் தீர்த்தான். அவளும் மென்மையாக சிரித்தாள். காஞ்சியில் எல்லோரும் கவலை மறந்தனர். தஞ்சை விழாக்கோலம் பூண்டது. கி.பி. 1746 முதல் 1887ம் ஆண்டு வரை எல்லா மன்னர்களாலும் கோயில் கட்டி முடிக்கப்பட்டது.

கருவறை, விமானம், திருமதில், மண்டபம், கோபுரம் எல்லாமுமே வெவ்வேறு காலங்களில் பல்வேறு மன்னர்களால் கட்டி முடிக்கப்பட்டது. புராண காலத்தில் உதித்த பங்காரு காமாட்சி இன்று தஞ்சைவரை யாத்திரை செய்து நிலைபெற்றதென்பது அவளுடைய சங்கல்பம் தானே வேறு எதுவுமன்று. அந்த மகானின் திருநாமம் சியாமா சாஸ்திரிகள் என்பதாகும். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான அவரின் இயற்பெயர் வேங்கடசுப்ரமணியம். சியாமா சாஸ்திரிகள் சொர்ண காமாட்சி
  சிலகாலம் திருவாரூரில் இருக்கும்போதே மெய்மறந்து அவளின் திருவழகில் லயித்திருப்பார். இப்போது தஞ்சையில் குடியேறியபோது அம்மனின் அழகை வெகு அருகே நின்று ஆராதித்தார். கலையையும், ஞானத்தையும் அருள்வதில் இணையிலா நாயகியாக விளங்கும் காமாட்சி சியாமா சாஸ்திரிகளுக்கு அநாயாசமாக அள்ளித் தந்தாள். ஞானத்தை பதிலுக்கு ஏராளமான கீர்த்தனைகளை அவளின் திவ்ய பாதங்களில் சமர்பித்துப் பாடிக் களித்தார்.

அவர் பார்த்துக் களித்த பங்காரு காமாட்சியை நாமும் தரிசிப்போமா. கோயில் சிறிய ராஜகோபுரத்தோடு அழகுற அமைந்துள்ளது. கோயில் எளிமையாக இருந்தாலும், சிறியதாக இருந்தாலும் உள்ளிருக்கும் மூர்த்தினி புராணப் பெருமையுற்றவள். கோயிலின் வாயிலுக்கும், கருவறைக்கும் இடையே ஒரு மண்டபம் உள்ளது. துவார பாலகிகளின் அனுமதியோடு கருவறையை நெருங்கும்போது குங்குமத்தின் மணம் மண்டபத்தையே நிறைக்கிறது. விளக்குச் சுடரொளியில் பங்காரு காமாட்சி சுடர்விட்டுப் பிரகாசிக்கிறாள். ஸ்ரீபுரத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும் லலிதையே இப்படித்தான் இருப்பாள் என்பது போல அவளின் பிரகாசம் கருவறையை நிறைக்கிறது.

கிளியை தாங்கி நிற்கும் கைகளும், சற்றே இடுப்பை ஒடித்து நளினமாக காட்சி தரும் த்ரிபங்கதாரியின் ஒயிலும், அவள் ஏன் இங்கு வந்து அமர்ந்தாள் எனும் புரியாத வியப்பும் நம்மை பிரமிக்கச் செய்திருக்கின்றன. ஏதோ சற்றுநேரம் முன்னர்தான் பிரம்மனால் வடிக்கப்பட்டவள்போல பேரழகியாக காட்சி தருகிறாள். பிரார்த்தனைகூட செய்ய வேண்டாம். ஏனெனில் பசியறிந்து பிள்ளைக்கு உணவளிக்கும் தாயாயிற்றே இந்த தேவி. காஞ்சி மடமும்,
  இந்து அறநிலையத்துறையினரும் இணைந்து இக்கோயிலை நிர்வகிக்கின்றனர். பூஜைக்கான உரிமையை காஞ்சி முதல் தஞ்சை வரை பங்காரு காமாட்சியுடன் பயணித்து பிரதிஷ்டை செய்து உதவிய மூன்று கோத்திரக்காரகளான ஸ்தானிக பரம்பரையினர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சி மடத்தில் எந்த ஒரு விழாவானாலும் முதல் பிரசாதம் பங்காரு காமாட்சியிடமிருந்து பெற்றுக் கொள்வர். ஆறுகால வழிபாடுகள் நாள்தோறும் நடைபெறுகின்றன. சிவசக்தி ஐக்கியமாக இவள் இருப்பதால் இவளுக்கு பூணூல் உண்டு. காமாட்சியம்மனுக்கு ஆண்டுதோறும் பதினொன்று அபிஷேகங்கள் மட்டும்தான் நிகழ்த்தப்படுகின்றன. பங்காரு காமாட்சியம்மன் மூல ஸ்தானத்தை விட்டு வெளியில் வருவதில்லை. காமகோடி அம்மன் எனும் உற்சவ மூர்த்திக்கும் கனுப் பொங்கல் அன்று முழுத் தேங்காயை, உடைக்காமல் நிவேதனம் செய்யும் சம்பிரதாயம் இங்கு மட்டும்தான் உண்டு. பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் தஞ்சை அரச குடும்பத்தினர் அம்மனுக்கு திருமாங்கல்யம் அளிப்பர்.

No comments:

Post a Comment