Friday 25 December 2015

வளம் தரும் வியதீபாத தரிசனம்!


(மார்கழி 28, புதன்,   13.01.2016, அதிகாலை 04.30 மணி)

 இந்த மார்கழி மாதத்தில் (பஞ்சாங்கத்தில் ஒரு அங்கமாகிய) வியதீபாதம் என்னும் யோகம் வரும் நாளில் ஸ்ரீ சித்ஸபேசரை தரிசனம் செய்வது ஸர்வ பாபங்களையும் நீக்கி, பெரும் புண்யங்களையும், அனைத்து செல்வங்களையும் தரவல்லது. மார்கழி மாதத்தின் அனைத்து தினங்களிலும் நடைபெறும் திருப்பள்ளியெழுச்சி கால தரிசனங்களின் பலன்கள் அனைத்தும், (தனுர்) வியதீபாத தினத்தில் தரிசனம் செய்தால் கிடைக்கும்.

பஞ்சாங்கத்தின் யோகம் என்பது சிறப்பு வாய்ந்த ஒரு அம்சம். சூர்யனுக்கும், சந்திரனுக்கு இடையே உள்ள தொடர்பை நிறுவும் அம்சம்.

 யோகங்கள் என்பது மூன்று வகைப்படும்.

பிறக்கும்போது ஜாதகத்தில் கிரஹங்கள் இணைவதால் உண்டாகும் யோகம். (கஜகேசரி யோகம், சகடயோகம்)

நக்ஷத்திரமும், தினமும் இணைவதால் உண்டாகும் யோகம் (அமிர்த, சித்த மற்றும் மரண யோகம்). அஸ்வினி நக்ஷத்திரம் திங்கட்கிழமையில் அமைந்தால் அது சித்த யோகம்.

சூர்யனும், சந்திரனுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் யோகங்கள் 27. (விஷ்கம்பம் முதல் வைதிருதி வரை) இந்த 27 யே¡கங்களுள் ஒன்றுதான் வியதீபாத யோகம், யோக நாயகர்களுக்கு அதிபதியாக விளங்குவது.

மார்கழி மாதம் & வியதீபாத யோகம் இணையும் வேளையில் ஸ்ரீ நடராஜப் பெருமானை வழிபடுவது மிகுந்த யோகங்களைத் தரவல்லது.

வியதீபாத தினம் - மகேஸ்வரப் பெருமானும் மனோன்மனி எனும் சக்தியும் இணைந்த நாள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இறைவனும் இறைவியும் இரண்டறக் கலந்த நன்னாளில் மனம் ஒன்றுபட்டு சிவபெருமானை வழிபடுவது நல் இல்லற வாழ்வை நல்கும்.

சிதம்பரம்.

கோயில் என்றாலே பொருள்படுவது. ஆனந்த நடராஜராஜர் எப்பொழுதும் ஆனந்த நடனமிடுவது. வேண்டும் வரங்களை உடன் அருள்வது. தரிசித்தால் முக்தி தருவது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாச ஸ்தலமாக விளங்குவது. சித்ஸபையில் நடராஜர் உருவம், அருவம், உருவ அருவமாக காட்சி தரும் ஸ்தலம். சிதம்பர ரகசியம் விளங்குவது. அனைத்து தெய்வங்களும் ஆனந்த நடனப் பெருமானை தொழுதெற்றும் தலமாக விளங்குவது.

சிவபெருமானுக்கும் ஐந்து என்ற எண்ணுக்கும் அநேக தொடர்புகள் உள்ளன.

பஞ்சாக்ஷரம் ஐந்து எழுத்து. நடராஜராஜர் செய்யும் செயல்கள் ஐந்து (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் அருளல்,) பஞ்ச பூதங்களுக்கும் அதிபதியாக அமந்த ஸ்தலங்கள் ஐந்து. மகேஸ்வரனின் சக்தி ரூபங்கள் ஐந்து. (ஆதிசக்தி, பராசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி). சிதம்பர ஸ்தலத்தின் முக்கிய பிரகாரங்கள் ஐந்து. ஈஸ்வரனின் முகங்கள் ஐந்து. பரமேஸ்வரனின் முகங்கள் ஐந்து. சித்தாந்தக் கலைகளின் (சித்தாந்தம்) ஐந்திற்கும் நாயகராக விளங்குபவர்.

பஞ்சாங்கம் என்பது ஐந்து அம்சங்களை உள்ளடக்கியது. 1.திதி, 2.வாரம், 3. நக்ஷத்திரம், 4. யோகம், 5. கரணம்.

அண்டத்தின் பரம்பொருள் நடராஜப் பெருமான். அலகிலாத உருவம் உடையவர். அடிமுடி காணமுடியாதவர். அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருப்பவர். அவரன்றி அணுவும் அசையாது. இயங்கு சக்திகளை தாள கதியுடன் ஆட்டுவிப்பவர். அண்டத்தின் பால்வெளியில் அமைந்த நவக்ரஹங்களையே மாலையாக அணிந்தவர்.

சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜர் சன்னிதியில், பஞ்சாக்ஷர படிக்குக் கீழே, தினமும் பஞ்சாங்கம் படிக்கப்படுவது ஆண்டாண்டு காலம¡ நிகழ்ந்து வருவது.

நக்ஷத்திரங்களும், ராசி மண்டலங்களும் ஸ்ரீ நடராஜப் பெருமானின் கட்டளைக்கிணங்க இயங்குகின்றன.

1. திதி : திதிக்குக் காரணமாகிய சந்திரனை தலையில் சூடியவர்.

2. வாரம் : கிழமைகளுக்கு ¡யகராகிய சூர்யனை குண்டலமாக அணிந்தவர்.

3. நக்ஷத்திரங்கள் : இவற்றை மாலையாக அணிந்தவர்

4. யோகம் : வேண்டுவோருக்கு வேண்டும் யோகங்களை அருள்பவர்.

5. கரணம் : கரணங்களை தன்னுள் கொண்டவர்.

மார்கழி மாதம் அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த மாதமாக அமைகின்றது. ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில், மார்கழியில், அதிகாலைப் பொழுதாகிய பிரம்ம முஹூர்த்த நேரத்தில், மிகச் சிறப்பாக திருப்பள்ளியெழுச்சி காலம் நடைபெறும்.

புராண விளக்கம் :ஒரு சமயம், சந்திரன் குரு பகவானின் மனைவியான தாரையின் அழகில் மயங்குகிறார். இதை அறிந்த சூர்ய பகவான், சந்திர பகவானிடம் இது தகாத செயல் என எச்சரிக்கிறார். அச்சமயம் இருவரின் பார்வைகளும் ஒன்று சேர, அந்த சக்தியிலிருந்து ஒரு மிகப் பெரும் வடிவம் எழுந்து, உலகத்தையே விழுங்கப் பார்த்தது. அந்த உருவத்தைச் சாந்தப் படுத்திய சூர்ய சந்திரர்கள், யோகங்களில் ஒருவராக, வியதீபாதம் என்று பெயர் அளித்து, யோகங்களுக்கு அதிபதியாக பதவி அளித்தனர். உலகை விழுங்க ஆசைப்பட்டு, சாந்தப் படுத்தியதால், பூலோக மக்கள் உன் யோகம் வரும் நாளில் எந்தப் புனித காரியத்தையும் செய்யமாட்டார்கள் எனவும் கூறினர்.

மக்கள் புனித செயல்கள் செய்யாத திதிகளான, அஷ்டமி, நவமி திதிகள் மஹாவிஷ்ணுவை வேண்டிக்கொண்டு, அவரின் அவதார தினப் பெருமையைப் பெற்றனர்.

அதுபோல, வியதீபாத யோகம், தன் நாட்களில் எந்தப் புனித காரியமும் செய்யாதிருக்கிறார்களே என்று எண்ணி, நடராஜப் பெருமானின் குஞ்சிதபாதத்தை (தூக்கிய திருவடியை) சரணடைய, பக்தர்களுக்கு வேண்டியதை உடனடியாக வரமளிக்கும் நடேசர், மார்கழி மாதமும், வியதீபாதம் யோகம் வரும் நாளில், திருப்பள்ளியெழுச்சியில் என்னைத் தரிசனம் செய்வே¡ருக்கு அனைத்துப் பலன்களும் கிடைக்கும் என்று, அந்த யோகத்திற்கு மகிழ்வையும், நற்பேற்றையும் அளித்தார்.

வல்லமை வாய்ந்த இந்த யோகத்தில் தரிசனம் செய்தால் பதினாறு பேறுகளும் கொண்ட பெரு வாழ்வினை சித்ஸபேசர் அருளுவார்.

வானவியல் சாஸ்திரப்படி, மார்கழி மாதம் தனுர் அல்லது தனுசு மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த ராசிக்கு அதிபதி குரு பகவான். இந்த ராசியில் சூர்யன் சஞ்சரிக்கும்போது, சந்திரன் சூர்யனுக்கு முன்பு வரும்போது, வியதீபாதம் யோகம் ஏற்படுகிறது.

ஸ்ரீ உமாபதி சிவம் அருளிய குஞ்சிதாங்கிரிஸ்தவம் எனும் நூலில் (வியதீபாத யோகம் தோன்றக் காரணமான) சந்திரன், குரு பகவானின் மனைவியான தாரையை மோகித்ததால் ஏற்பட்ட தோஷத்தினை சிதம்பரத்தில் நடராசரைப் பணிந்து தோஷ நிவர்த்தி செய்துகொண்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் தனது சிவார்ச்சனா சந்திரிகையில் (தந்த சுத்தி படலம்), வியதீபாத யோகம் வரும் நாளில் பிரம்ம முஹூர்த்தத்தில் சிவனை வழிபடவேண்டும் என வலியுறுத்துகிறார்.

வியதீபாத யோக நன்னாளில் நடராஜப் பெருமானை தரிசனம் செய்வோம், நல்யோகங்கள் மற்றும் வளங்கள் அனைத்தயும் பெறுவோம்.

 

No comments:

Post a Comment