Monday 30 January 2017

புன்னைநல்லூர் மாரியம்மன் பூச்சொரிதல் விழா!


தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூரில் கோயில் கொண்டிருக்கும் மாரியம்மனுக்கு, வருடம்தோறும் ஆடி மாத வெள்ளிக்கிழமையில் பூச்சொரிதல் விழா கொண்டாடப்படும்.



வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் பூச்சொரிதல் விழாவுக்கு, வியாழக்கிழமை அன்றே பத்து டிராக்டர்களை தேர் போல் அலங்கரித்து, ஒவ்வொரு தேரிலும் அம்மனின் பெரிய அளவிலான படத்தை அலங்கரித்து தஞ்சாவூரைச் சுற்றிலும் உள்ள பல ஊர்களுக்கு அனுப்புவார்கள். தேர் எந்த ஊருக்குச் செல்கிறதோ அந்த ஊரின் பெயரிலேயே அந்தத் தேர் அழைக்கப்படும். ஒவ்வொரு தேரிலும் மூன்று பேர்கள் இருப்பார்கள்.



தேர்கள் அந்தந்த ஊர்களுக்குச் சென்றதும், தேர்களில் இருப்பவர்கள் கூடைகளுடன் வீதி வீதியாகச் செல்வார்கள். அப்போது ஊர் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய் உடைத்து பூஜைகள் செய்து அம்மனை வணங்கி பூச்சொரிதல் வைபவத்துக்கு அவர்களால் முடிந்த அளவு பூக்களைத் தருவார்கள்.

இன்னும் பல ஊர்களில் கஞ்சி காய்ச்சி, பொங்கல் வைத்து அம்மனின் தேர் வரும் நேரத்தில் ஊரே திரண்டு வந்து சிறப்பு பூஜைகள் செய்து, பூக்களைக் கொடுத்து முகமலர்ச்சியுடன் அனுப்பி வைப்பார்கள்.


எல்லா ஊர்களில் இருந்தும் பூக்களை வாங்கிக் கொண்டு தேர்கள் எல்லாம் தஞ்சை அரண்மனை வளாகத்துக்கு வந்து சேரும். வியாழக்கிழமை புறப்பட்ட தேர்கள் வெள்ளிக்கிழமை அன்றுதான் கோயிலுக்கு வந்து சேரும். பக்தர்கள் கொடுத்த பூக்கள் மொத்தத்தையும் கோயில் வளாகத்தில் வைப்பார்கள். பக்தர்கள் கொடுத்த பூக்கள் மூன்று டன்களுக்கு மேல் இருக்கும்.

கோயில் வளாகத்தில் குவிக்கப்பட்ட பூக்களில் இருந்து ஒவ்வொரு பக்தரும் ஒரு கூடை நிறைய பூக்களை எடுத்துச் சென்று அம்மன் சந்நிதியில் வைத்து வணங்கிவிட்டு, தங்கள் வேண்டுதல் நிறைவேற சிறிது பூக்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்வார்கள்’’.

இந்த வைபவத்தில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மன் சந்நிதியை பூக்களால் நிரப்புவார்கள். பூச்சொரிதல் முடிந்ததும் அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.

பூக்களின் நறுமணத்திலும் பக்தர்களின் பரவசத்திலும் அம்மன் சந்நிதி நிறைந்திருக்க, பக்தர்கள் அனைவரையும் தன் அருள்விழிகளால் அம்மன் நோக்கிய அழகைக் காணக் கண் கோடி வேண்டும். விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள், ‘புன்னை நல்லூர் மாரிக்கு பூச்சொரிதல் நடக்குது; அந்தப் பூவோட வாசம் இந்த பூமி எங்கும் வீசுது’ என்ற பரவச உணர்வுடன் வீடுகளுக்குத் திரும்புவார்கள்.

No comments:

Post a Comment