Sunday 6 March 2016

சர்வ மங்களம் தரும் சிவராத்திரி விரதம்!


சிவராத்திரி என்பதற்கு மங்களமான இரவு, இன்பம் தரும் இரவு என்று பொருள் சொல்லப்படுகிறது.

சிவராத்திரி வழிபாடு செய்வதனால் கிட்டும் பலன்கள் பற்றி சாஸ்திரங்கள் பலவாறு புகழ்கின்றன. மாசி மாத தேய்பிறை சதுர்த்த சியான மகாசிவராத்திரி நள்ளிரவு பதினான்கு நாழிகையில் செய்யும் சிவவழிபாடு கோடி பிரம்மஹத்தி தோஷங்களைக்கூட போக்குமளவு புனிதமானது.
சிவபெருமானை அபிஷேகப் பிரியர் என்பர். பொதுவாக சிவாலயங்களில், பிரதோஷத்தன்றும் விசேஷ நாட்களிலும் சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதைக் காண்கிறோம். இந்த அபிஷேக வகைகளில் பலவிதங்கள் உள்ளன என்று சிவாகமம் கூறுகிறது.

பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், மஞ்சள், விபூதி, சந்தனம், பழரசம், கரும்புச்சாறு, எலுமிச்சம்பழச்சாறு, பஞ்சாமிர்தம், நெய், அரிசி மாவு, நல்லெண்ணெய், புனித நதி தீர்த்தம் ஆகிய பதினாறு வகை பொருட்களை சிவலிங்கத்திற்கு அபிஷேகிக்க வேண்டுமென்று லிங்கபுராணம் கூறுகிறது.

மகாசிவராத்திரியானது நான்கு காலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு  காலத்திற்கும் ஒவ்வொரு வகை அபிஷேகங்கள், அலங்காரங்கள், நிவேதனங்கள் சமர்ப்பணம் செய்யப் படுகின்றன.

முதல் ஜாமத்தில் (மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை) இறைவனுக்கு பஞ்ச கவ்வியத்தால் அபிஷேகம் நடைபெறும். சந்தனம், வில்வம், தாமரை மலர்களால் அலங்காரம் செய்வர். சிவப்பு பட் டாடை அணிவிப்பர். அன்னம், பலகாரங்கள் நிவேதனம் செய்வர். ரிக்வேதம் ஓதுவார் கள். விளக்கெண்ணெய் தீபம் ஏற்றப்படும். அப்போது பக்தர்கள் சிவபுராணத்தைப் பாராயணம் செய்வது புண்ணிய பலன்களைத் தரும். இக்காலத்தில் சோமாஸ்கந்தரையும் வழிபடவேண்டும்.

இரண்டாம் ஜாமத்தில் (இரவு 9.00 மணி முதல் 12.00 மணி வரை) சிவலிங்கத்திற்கு தேன், சர்க்கரை, தயிர், பால் கலந்த பஞ்சாமிர்தம் ஆகியவற்றை அபிஷேகம் செய்வர். சிவலிங்கத்தின்மீது பச்சைக்கற்பூரம் பூசுவர். மஞ்சள் நிற பருத்தி ஆடையை அணிவிப்பர். பாயசமும் லட்டும் நிவேதிப்பர். அப்போது, ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பிக்கப்படுகிறது. இலுப்பை எண்ணெய்யில் தீபம் ஏற்றுவர். யஜுர் வேதம் ஓதுவார்கள். வழிபாட்டிற்கு தாமரை மற்றும் வில்வ மலர்களைப் பயன்படுத்துவார்கள். பலாப் பழத்தை நிவேதிப்பார்கள்.

மூன்றாம் ஜாமத்தில் (இரவு 12.00 மணி முதல் அதிகாலை 3.00 மணி வரை) லிங்கோத்பவரை வழிபடுதல் சிறப்பாகும். இது லிங்கோத்பவ காலம் எனப்படுகிறது. திருவண்ணாமலையில் இந்த நேரத்தில்தான் லிங்கோத்பவ உற்பத்தி ஆயிற்றாம். மார்க்கண்டேயரைக் காக்க சிவபெருமான் காலசம்ஹாரராக வெளிப்பட்டதும் இந்த நேரத்தில்தான் என்று புராணம் கூறுகிறது. இந்த மூன்றாம் காலத்தில் சிவலிங்கத்திற்கு தேனாபிஷேகம் செய்வர். சந்தனம் பூசுவர். வெள்ளை நிற கம்பளி ஆடை அணிவிப்பர். மாவுடன் நெய் கலந்து செய்த பலகாரங்களும், பாயசமும் நிவேதனம் செய்யப்படும். நெய் விளக்கேற்றி, கும்ப தீபம் காட்டுவார்கள்.

அறுகு மற்றும் தாழம்பூவைப் பயன்படுத்துவர். மாதுளம்பழம் நிவேதனம் செய்யப்படும். சாமவேதம் ஓதுவர்.

மூல லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதுடன் கருவறைக்குப் பின்னுள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடைபெறும். நெய்யபிஷேகம் செய்தவுடன் வெந்நீரால் அபிஷேகம் செய்து, பின் கம்பளி ஆடையை அணிவிப்பர். தாழம்பூ சாற்றப்படும். பொதுவாக சிவனுக்கு தாழம்பூ சாற்றுவதில்லை. வருடத்திற்கு ஒரே ஒருமுறை மட்டும் இந்தக் காலத்தில் தாழம்பூ சாற்றப் படுவதை தரிசிக்கலாம். லிங்கோத்பவருக்கு நெய்பூசி அபிஷேகிக்கும்போது ஸ்ரீருத்ரம் ஜெபிப்பார்கள். அந்த சமயத்தில் பக்தர்கள் லிங்கபுராண திருக்குறுந்தொகையையும் ஓதுவதால் புனிதம் சேரும். லிங்கோத்பவருக்கு எள்சாதம், சிவந்த நிறமுள்ள பழங்கள், நெற்பொரியும் வெல்லமும் சேர்த்து தயாரித்த பொரி உருண்டைகள், சுண்டல் ஆகியவற்றை நிவேதிப்பார்கள்.

நான்காம் ஜாமத்தில் (அதிகாலை 3.00 மணி முதல் காலை 6.00 மணி வரை) செய்யப்படும் பூஜை மிகவும் முக்கியமானது. கரும்புச்சாறால் அபிஷேகம் செய்து கஸ்தூரி பூசுவார்கள். பச்சை நிற மலராடைகள் சாற்றுவார்கள். கோதுமை, நெய், சர்க்கரை சேர்த்துச் செய்த பலகாரங்களை நிவேதிப்பார்கள். நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவார்கள். மகாமேரு தீபம் என்ற தத்துவதீப ஆராதனை நடைபெறும். வாழைப்பழம் உள்ளிட்ட எல்லாவிதமான பழங்களையும் நிவேதனம் செய்வர். அதர்வண வேதம் பாராயணம் செய்யப்படும். பக்தர்கள் திருநாவுக்கரசர் அருளிய போற்றித் திருத்தாண்டகத்தை பாராயணம் செய்தால் முக்திக்கு வழிகாட்டும்.

விஷ்ணுவும் பிரம்மனும் "யார் பெரியவர்?' என்று போட்டியிட்டபோது, சிவன் ஜோதி வடிவாக அடிமுடி காணாதவனாக நின்ற காலமே சிவராத்திரி.

பிரளய காலத்தில் உலகம் நீரில் மூழ்கியதும், மீண்டும் உலகம் தோன்ற வேண்டுமென்று ஓரிரவின் நான்கு ஜாமங்களிலும் உமையவள் விழித்திருந்து சிவபூஜை செய்து பலன் பெற்ற நாள் சிவராத்திரி. இது கிருத யுகத்திற்கு முன்னர் நடந்த நிகழ்வாகும்.

திரேதா யுகத்துக்குமுன் முருகனும், துவாபர யுகத்துக்குமுன் விநாயகரும், கலியுகத்திற்குமுன் திருமாலும் சிவபூஜை செய்து, பிரளய காலத்தில் மூழ்கிய உலகம் மீண்டும் தோன்ற வழிவகுத்தார்கள் என்று லிங்கபுராணம் கூறுகிறது.

பாற்கடலில் தோன்றிய விஷத்தை உண்டதால் சிவபெருமான் மயங்கினார். உமையவள் பக்கத்திலிருந்து ஆசுவாசப்படுத்தி, நான்கு காலமும் கண்விழித்து தன் முந்தானையால் விசிறிக்கொண்டிருந்தாள். அதனால், சிவனின் மயக்கம் தெளிந்தது. உமையவளுடன் தேவர்களும் அப்போது சிவபெருமானைப் பூஜித்தார்கள். திரயோதசி மாலை வேளையில் சந்தியா நடனம் ஆடினார். அதைத் தொடர்ந்து வந்த சதுர்த்தசி இரவு நான்கு காலங்களிலும் தேவர்கள் ஈசனை அர்ச்சித்து பூஜை செய்தார்கள். அந்த நாள் மகாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது.

மாசி மாத மகாசிவராத்திரியைப்போல் ஒவ்வொரு மாதம் வரும் சிவராத்திரியும் போற்றப்படுகிறது.

சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி சிவராத்திரி உமாதேவியாலும்;
வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி சிவராத்திரி சூரியனாலும்;
ஆனி மாத வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி ஈசானனாலும்;

ஆடி மாத தேய்பிறை சிவராத்திரி முருகனாலும்;
ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி சிவராத்திரி சந்திரனாலும்;
புரட்டாசி மாத வளர்பிறை திரயோதசி சிவராத்திரி ஆதிசேஷனாலும்;
ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி சிவராத்திரி இந்திரனாலும்;
கார்த்திகை மாத இரண்டு சப்தமி திதியும், தேய்பிறை அஷ்டமியும் சரஸ்வதியாலும்;
மார்கழி மாத இரண்டு மாத சிவராத்திரிகள் மற்றும் வளர்பிறை, தேய்பிறையில் வரும் சதுர்த்தசிகள் லட்சுமியாலும்;
தை மாத வளர்பிறை திரிதியை நந்திதேவராலும்;
மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரி தேவர்களாலும்;
பங்குனி வளர்பிறை திரிதியை சிவராத்திரி குபேரனாலும் வழிபடப்பட்டது என்று லிங்கபுராணம் கூறுகிறது.

சிவராத்திரி காலங்களில் நடைபெறும் அபிஷேகங்கள் தவிர, மேலும் சில அபிஷேகங்கள் உண்டு. சிவாகமம் கூறும் அந்த அபிஷேக நியதிகள் சற்று சிரமமாக இருந்தாலும், புகழ்பெற்ற சிவாலயங்களில் அந்த பத்தொன்பது விதமான அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

இந்த சிறப்பு அபிஷேகத்தின்போது 19 மேடைகள் அமைத்து, 19 கலசங்களில் புனித நீர் நிரப்பி, அந்தக் கலசங்களில் ஒவ்வொரு பொருட்களையும் இட்டு, மந்திரங்கள் ஜெபித்து, கலச நீரினை சிவலிங்கத்திற்கு அபிஷேகிப்பர்.

வஜ்ரம், மாணிக்கம், முத்து, இந்திர நீலம், பத்மராகம், பவளம், புஷ்பராகம், வைடூர்யம், ஸ்படிகம் ஆகியவற்றை கலசநீரிலிட்டு மந்திரம் சொல்வர். அந்தப் புனிதத் தீர்த்தமே ரத்னோதகம் எனப்படும்.

பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம், ஈயம், இரும்பு ஆகியவை இடப்பட்ட நீர் கொண்ட கலசம் லோகோதகம்.

பச்சை, நற்செங்கற்பொடி, பொன்னரிதாரம், மனோசிலை, கோரோசனை ஆகியவை கலந்த நீர் கொண்டது தாகோதகம்.

சாமை, தினை, எள், குறுவை சம்பா, அறுவாதம், யவநெல், கடுகு, செந்நெல் ஆகியவை கலந்த நீர் பீஜோதகம்.

முத்தக்காசு, கச்சோலம், சமுத்ரபச்சை, குங்குமப்பூ ஆகியவை கலந்த நீர் சுத்தோதகம்.

கடல் மண், மலை மண், ஆனைக்கோட்டு மண், புனிதத்தல மண், ஆற்று மண், தர்ப்பையடி மண், நண்டளை மண்- இப்படி புனித மண் கலந்த  நீரினை மிருதோதகம் என்பர்.

விஷ்ணுகிராந்தி, மஞ்சள், ஆனை வணங்கி, நெருஞ்சி, செங்கழுநீர், வாகையிலை, கருநெய்தல் ஆகியவை ஊறிய நீர் மார்ஜனோதகம்.

வெண்கடுகு, அறுகு, தர்ப்பை, பிள்ளைப் பூண்டு, தாமரைப்பூ ஆகியவை கொண்ட நீர் பரிமார்ஜனோதகம்.

தமால இலை, வன்னி இலை, துளசி, கரிசலாங்கண்ணி, வில்வம், நாயுருவி போன்றவை ஊறிய நீர் பத்திரோதகம்.

செண்கப்பூ, நிலத்தாமரை, புன்னைப்பூ, நந்தியாவட்டை, மகிழம்பூ, நாகப் பூ, பாதிரிப்பூ, வெள்ளெருக்கு, மல்லிகை ஆகிய மலர்கள் ஊறிய நீர் புஷ்போதகம்.

செங்கழுநீர், அகில், சந்தனம், முத்தக்காசு, வெட்டிவேர், கற்பூரம், குங்குமப்பூ ஆகியவை கலந்த நீர் மான்யோதகம்.

சூலம், வச்சிரம், கத்திமணி, துறட்டி, பாசம், பரிசை ஆகிய ஆயுதங்களைப் போட்ட நீர் அஸ்திரோதகம்.

மாம்பழம், மாதுளம்பழம், வாழை, எலுமிச்சை, பலாப்பழம், தேங்காய்த்துருவல் ஆகியவை ஊறிய நீர் பலோதகம்.

நாவல், பாதிரி, அரசு, அத்தி, பலாசு, ஆல் ஆகியவற்றின் பட்டைகள் ஊறிய நீர் காஷாயோதகம்.

தேன்மெழுகு, குறிஞ்சித் தேன்மெழுகு, பெருந்தேன் மெழுகு, கிருஷ்ணாப்பிரம், விஜ்ஜிராப்பிரம், லோகாப்பிரம், வாணக்கெந்தகம், சுரைக்காய் கந்தகம் ஆகியவை ஊறிய நீர் சுர்க்கோதகம்.

ஆனைக்கெந்தகம், சூரிய காந்தம், சந்திர காந்தம், அயக்காந்தம், ஊசிக்காந்தம், பொன் காந்தம் ஆகியவற்றுடன் சேர்ந்த நீர் காந்தோதகம்.

சந்தனவேர், நொச்சி வேர், நச்சுப்புல் வேர், வெட்டி வேர், கீழ்க்காய் வேர், நெல்லி வேர் ஆகியவை ஊறிய நீர் மூலோதகம்.

பஞ்சகவ்யம், கூருச்சப்பட்டை, குச்சலம் பட்டை, தர்ப்பை, மயிர்க் கொன்றை, நாயுருவி, கையாந்தகரை, கோரோசனை ஆகியவை ஊறிய நீர் சாந்தியோதகம்.

வெள்ளை லோத்தி கிராம்பு ஊறிய நீர் புஷ்கரோதகம் எனப்படும்.

கோதுமை, குளச்செந்நெல், சந்தனாதித் தைலம், நெல்லிமுள்ளி, மஞ்சள், மாவிலைகள் தனித்தனியாகப் போட்ட நீர் ஐந்து உதகங்களாகக் கொள்ளப்படும்.

மேற்கண்ட பொருட்களை சுத்தமான நீரில் தனித்தனி கலசத்தில் (குடம்) போட்டு, பூஜை செய்து, ஆகமங்களில் கூறியபடி வேதபாராயணம் ஓதி, பயபக்தியுடன் தெய்வத் திருமேனிக்கு (சிவலிங்கம்) அபிஷேகம் செய்வதனால் உலகமெங்கும் சுபிட்சங்கள் கூடும்; அமைதி நிலவும்.

பதினோரு ருத்ர ஜெபத்துடன் இந்த அபிஷேகத்தைச் செய்வார்கள். பூஜைக்குரிய பொருட்களை பக்தர்கள் அளித்து, இந்த வழிபாட்டில் கலந்துகொண்டால் சுகமான வாழ்வும், புனிதமும் சேரும்.

ஒருமுறை மகாசிவராத்திரி விரதமிருந்து, நான்கு காலபூஜையில் கலந்துகொண்டு, தங்களால் இயன்ற பொருளுதவி, தொண்டு செய்தால் நூறு ஏகாதசி விரதமிருந்த பலன் கிட்டுவதுடன் சிவனருளும் பெறலாம் என்று சிவாகமம் கூறுகிறது.






No comments:

Post a Comment