Saturday 12 March 2016

சுகமான வாழ்வு தரும் துளசி கல்யாணம்!


   கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு "பிருந்தாவன துவாதசி' என்று பெயர். அன்று துளசியை மகாவிஷ்ணு திருமணம் செய்துகொண்டதாக புராணம் கூறுகிறது.
மகாவிஷ்ணு நான்கு மாதம் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். அவரை மேற்படி நாளில் "உத்திஷ்டோ உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ' என்று கூறி எழுப்புவதாக ஐதீகம்.

துவாதசியன்று காலையில் சுமங்கலிப் பெண்கள் எண்ணெய் தேய்த்து நீராடியபின், துளசி மாடத்தைச் சுற்றி தூய்மை செய்து மெழுகிக் கோலமிட்டு காவி இடவேண்டும். துளசிச் செடிக்கு பஞ்சினாலான மாலையும், வஸ்திரமும் அணிவிக்க வேண்டும். கருகமணி, நகைகள் அணிவித்து அலங்காரம் செய்யலாம். வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள், மணமுள்ள மலர்கள், தேங்காய் படைத்து, குத்துவிளக்குகள் ஏற்றி வைக்கவேண்டும். சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யலாம்.

மகாவிஷ்ணு நெல்லிமரமாகத் தோன்றினார் என்பதால், ஒரு சிறிய நெல்லிக்கொம்பை ஒடித்து துளசி மாடத்தில் சொருகி வைத்து, இரண்டுக்கும் பூஜை செய்யவேண்டும். அப்போது,

"அநாதி மத்ய நிதனத்ரைலோக்ய ப்ரதிபா
இமாம் க்ருஹான துளஸிம் விவாஹ விதி நேச்வர
பயோக்ருதைஸ்ச ஸேவாபி கன்யாவத் வந்திதாம் மயா
த்வத் ப்ரியாம் துளஸிம் துப்யம் தாஸ்யாமித்வம் க்ருஹாணபோ'


என்ற சுலோகத்தைச் சொல்லி துளசி கல்யாணம் செய்யவேண்டும். நல்ல முகூர்த்த நேரத்தில் வழிபாட்டினை மேற்கொள்வது சிறப்பு.
துளசி என்ற சொல்லுக்கு "தன்னிகரற்றது' என்று பொருள். துளசி பூஜை செய்வதால் எட்டுவகை செல்வங்களும் கிட்டும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். சுமங்கலிகள் சுகமுடன் நீடூழி வாழ்வர்.

துளசி தளம் திருமாலுக்கும் திருமகளுக்கும் உகந்தது. மகாலட்சுமி சொரூபமானது. துளசி இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு வாசம் செய்வார். அதனால் துளசிக்கு "விஷ்ணுப்ரியா, ஹரிப்ரியா' என்ற பெயர்களும் உண்டு.

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

சிவபெருமானுக்கும் ஜலந்திரனுக்கும் போர் நடந்துகொண்டிருந்த சமயம், மகாவிஷ்ணுவே ஜலந்திரன்போல் வடிவம் கொண்டு பிருந்தையிடம் வந்து, ""தேவி, போரில் நான் வென்றுவிட்டேன்''

என்றார். மகிழ்ச்சிகொண்ட பிருந்தை அவருக்கு பாதபூஜை செய்து நெற்றியில் திலகமிட்டாள். பிருந்தை திலகமிட்டதும், மகாவிஷ்ணுவாகக் காட்சி கொடுத்தார் பகவான். அதைக் கண்ட பிருந்தை,

""பிற ஆடவரைத் தொடும்படி நேரிட்டதே'' என்று துடிதுடித்து, ""கல்மனம் கொண்ட நீர், உருவமற்ற சாளக்கிராமக் கல்லாக மாறி கண்டகி நதியில் கிடக்கக் கடவீர்'' என்று சாபமிட்டாள். ""பிருந்தை, உன் சாபம் பலிக்கும். ஆனால் நீ எனக்கு அன்புடன் பாதபூஜை செய்தாய். எனவே நான் சாளக்கிராமக் கல்லில் உறைந்திருக்கும்போது, நீ துளசியாக மாறி எனக்கு மகிழ்ச்சியூட்டுவாய். அப்போது உன்னை எல்லாரும் போற்றுவர்'' என்றார்.

கடந்த பிறவியில் சிறந்த விஷ்ணு பக்தையாக இருந்து, விஷ்ணுவையே கணவராக அடையவேண்டும் என்று தவமிருந்து, அந்தத் தவத்தின் பலனால் இந்தப் பிறவியில் ஜலந்திரனின் மனைவியாக இருந்து,  பிறகு தீக்குளித்து மாண்டதால் பிருந்தா என்ற துளசியாக மாறினாள். அதன்பின் அவளை மகா விஷ்ணு மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. மேலும், கிருஷ்ணாவதாரத்தில் துளசிதான் ருக்மணியாக அவதரித்து கிருஷ்ணனை மணந்தாள் என்ற தகவலும் உள்ளது. துளசி பாற்கடலில் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. துளசி தெய்வீக சக்தி கொண்டது.

துளசிக்கு ஸுலபா, ஸரசா, அம்ருதா, ச்யாமா, வைஷ்ணவி, கௌரி, பகுமஞ்சரி என்று வடமொழிகளில் பல பெயர்கள் உள்ளன.

மேலும், ஒன்பது வகையான துளசிச் செடிகள் உள்ளன. அவை: கரியமால் துளசி, கருந்துளசி,  கற்பூர துளசி, செந்துளசி, காட்டுத்துளசி, சிவதுளசி, நீலத்துளசி, பெருந்துளசி, நாய்த்துளசி. ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம் கொண்டவை.

இதேபோல் ஆன்மிகத்திலும் இதற்கு தனிப்பெயர்கள் உள்ளன. அவை: திருத்துழாய், துளபம், துளவம், சுகந்தா, பிருந்தா, வைஷ்ணவி, லட்சுமி, கவுரி, மாதவி, ஹரிப்ரியா, அம்ருதா, சுரபி.

துளசி இலையின் நுனியில் பிரம்மனும், அடியில் சிவனும், மத்தியில் மகாவிஷ்ணுவும் வாசம் செய்கிறார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. துளசிச் செடியில் 12 ஆதித்யர்களும், 11 ருத்ரர்களும், எட்டு வசுக்களும், அஸ்வினி தேவர்களும் வசிக்கிறார்கள். எனவே துளசி இலையுடன் கூடிய நீர், கங்கை நீருக்கு சமமாகக் கருதப்படுகிறது.

ஆண்கள் காலையில் நீராடியபின் தெய்வத்தை மனத்தால் வணங்கி துளசியைப் பறிக்கவேண்டும். அப்போது,

"துளசி ஸ்யமருத ஜந்மாஸிஸதாத்வம்
கேஸவப் பிரியே
கேஸவார்தாம் லு நாமித்வாம் வரதாபவ
ஸோபதே'

என்ற சுலோகத்தை சொல்லிப் பறிக்க வேண்டும். நான்கு இலைகளுக்கு நடுவில் தளிரும் இருப்பதுபோல் (ஐந்து தளங்கள்) துளசியைக் கிள்ளிச் சேகரிக்க வேண்டும். பௌர்ணமி, அமாவாசை, துவாதசி திதிகளிலும்; ஞாயிற்றுக்கிழமை, மகரசங்கராந்தி, நண்பகல், இரவுப்பொழுது, சூரிய உதயத்திற்கு முன்பும் துளசியைப் பறிக்கக்கூடாது. குளிக்காமலும் துளசி இலையைப் பறிக்கக்கூடாது.

சளித்தொல்லை, விஷக்காய்ச்சலுக்கு நல்ல மருந்து துளசி. துளசிச் செடி வீட்டிலிருந்தால் விஷப்பூச்சிகள், பாம்பு, தேள் போன்றவை வராது. இடி இடிக்கும்போது, இடியின் தாக்கம் நம் வீட்டின்மீது விழாமல் தடுக்கும் சக்தி துளசிக்கு உண்டு. நல்ல கிருமிநாசினியாகச் செயல்படுவதோடல்லாமல், ஆன்மிக வழிபாட்டிற்கு உகந்ததாகவும் போற்றப் படுகிறது.

வயிறு உபாதை உள்ளவர்கள் தினமும் சிறிதளவு துளசி இலையை மென்று தின்றுவந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும். ஜீரணசக்தியையும் புத்துணர்ச்சி யையும் அளிக்கவல்லது துளசி. மேலும் பல நோய்களை குணமாக்கும் சக்திகொண்டது.

வீட்டின் தென்மேற்குப் பகுதியில் சூரிய உதயத்தைப் பார்த்த நிலையில் துளசி செடியை தொட்டியில் வைத்து வழிபட வேண்டும். துளசி மாடத்திற்கு தினமும் நீர் ஊற்றி கோலமிட்டு, மாடத்தின் கீழ்ப்பகுதியில் சிறிய அகல்விளக்கு ஏற்றி வழிபட, அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும்.  திருமால் ஆலயங்களில் துளசிவனம் இருக்கும். மேலும் துளசிமாடம் இருப்பதையும் காணலாம். துளசி மாடத்திற்கு தினமும் பூஜைகள் நடைபெறும்.

பூலோக வைகுண்டம் என்று போற்றப் படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில், ஸ்ரீஆண்டாள் சந்நிதிக்குச் செல்லும் வழியில் மிகவும் போற்றக்கூடிய துளசி மாடம் ஒன்றுள்ளது. இது மற்ற துளசிமாடத்தைவிட மாறுபட்டது. ஆமையின் திருவுருவத்தின்மேல் அமைந்துள்ளது இந்தத் துளசி மாடம். இதன் அருகில் வில்வமரமும் உள்ளது.

ஜலந்திரனை அழிக்க சிவபெருமானுக்கு உதவிய மகாவிஷ்ணு ஆமை அவதாரத்தில் இருக்க, அவருக்குப் பிடித்தமான பிருந்தையான துளசி அவர் முதுகில் மாடத்தில் உள்ளாள். இந்தத் துளசிமாடத்திற்கருகில் நெய்விளக்கு ஏற்றி கணவனும் மனைவியும் வலம் வந்தால் அவர்கள் மகாவிஷ்ணு, மகாலட்சுமியின் அம்சமாக அப்பொழுது மாறுவதாக ஐதீகம். இந்தத் துளசி மாடத்தை கன்னிப் பெண்கள் விளக்கேற்றி வழிபட, அவர்களுக்குப் பிடித்தமான வரன் அமையும்; சுமங்கலிகள் நீடூழி வாழ்வர்.

வீட்டில் துளசிமாடம் இல்லாதவர்கள் பெருமாள் கோவிலில் உள்ள துளசி மாடத்திற்கு நெய் விளக்கேற்றி வழிபட்டால் சுகமான வாழ்வு கிட்டும். 


 

No comments:

Post a Comment