Saturday 16 April 2016

தமிழ் புத்தாண்டு: கனி காணுதலும் கை நீட்டமும்

 

 
 

ஒரு வருடத்தின் தொடக்கம் என்பது மகிழ்ச்சியானதாக இருக்கவேண்டும். தொடக்கம் சரியாக இருந்தால் அந்த வருடம் முழுவதும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் என்பது நம்பிக்கை.
 
 
 
சித்திரை முதல் நாளான தமிழ் வருடப்பிறப்பும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கவேண்டும் என்பதற்காகவே வீட்டில் கனி காணுதலோடு புத்தாண்டை தொடங்குகின்றனர். தமிழ்நாட்டில் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்த கனி காணுதல் சிறப்பாக நடைபெறுகிறது. குமரி, நாகர்கோவில், திருப்பூர், கோவை போன்ற ஊர்களில் கனி காணுதல் நடைபெறுவது வழக்கம்.


வாழைப்பழம், மாம்பழம், ஆரஞ்சு, கொய்யா, ஆப்பிள், மாதுளை இப்படி பலவகை பழங்களை ஒரு தட்டில் வைத்து அலங்கரித்து மையப்பகுதியில் புதிய ரூபாய் நோட்டுக்களை வைத்து, அதன் மேல் தங்க, வெள்ளி நகைகளை வைத்து அலங்கரிப்பார்கள். வருடப்பிறப்பிற்கு முதல்நாள் இரவே பூஜை அறையில் ஒரு கண்ணாடியை வைத்து அதன் முன்பாக இந்த பழத்தட்டினை வைத்து விடுவார்கள்.
 
 
 
விடிந்த உடன் குழந்தைகளின் கண்களை மூடிக்கொண்டு பூஜை அறைக்கு அழைத்து செல்லும் அம்மா அந்த பழத்தட்டிலும், கண்ணாடியிலும் விழிக்கச் சொல்வார்கள். இதுபோன்ற மங்கலப் பொருட்களைப் பார்த்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. கை நீட்டம் கொடுங்களேன்... குளித்து முடித்து புத்தாடை உடுத்தி சாமி கும்பிட்ட பின்னர், பெரியவர்கள், தட்டில் வைத்த புது ரூபாய் நோட்டுக்களை எடுத்து வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், மற்றவர்களுக்கும் கொடுப்பார்கள் இதனை கைநீட்டம் என்கின்றனர். இதன் மூலம் ஆண்டுதோறும் பணம் குறையாமல் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாகும்.

 
இந்த பழக்கம் மலையாள மக்களிடம் இருந்து வந்ததுதான் என்றாலும் அன்றைய தினம் கனி காணுதலையும், கை நீட்டம் நிகழ்ச்சியையும் பார்க்கும் போது புது வருட தினத்தன்று உற்சாகத்தைத்தான் தருகிறது.

ஆசிர்வாதம் எனும் மிகப்பெரிய சக்தி!

 
ஆசிர்வாதம் எனும் மிகப்பெரிய சக்தி நமக்கு பெரும் பலத்தை கொடுக்கிறது..

ஆசிர்வாதம் பெறுவது மட்டுமல்ல..ஆசிர்வாதம் செய்வதும் உங்களுக்கு சக்தியை கொடுக்கும்..நல்ல வார்த்தைகளை தேர்ந்தெடுத்து சொல்வதில்தான் விசயம் இருக்கிறது.

108 வயது பெரியவரிடம் ஆசி வாங்னேன்..தீர்க்காயுசா இருப்பா என்றார் எவ்வளவு நாளா ஐயா இந்த வார்த்தைகளை பயன்படுத்தி ஆசி கொடுக்குறீங்க என்றேன்.. அது ஒரு 60 வருசமா அப்படித்தான் ஆசி கொடுக்கிறேன் என்றார்..அவரது தீர்க்காயுளுக்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கும்...

சிலர் காலில் விழுந்தால் இருக்கட்டும் எந்திரிங்க என்பார்கள்..அய்யோ என் கால்ல விழுந்துட்டு என பதறுவர். இதெல்லாம் தவறு.நம்மை விட வயதானவர் என்றாலும் ஆசி கொடுக்காமல் புறக்கணித்தல் பாவம் என்கிறது சாஸ்திரம்.புது மணமக்கள் காலில் விழுந்தால் தீர்க்காயுஸ்மான் பவ என ஆணுக்கும், தீர்க்க சுமங்கலிமான் பவ என பெண்ணுக்கும் ஆசி கொடுக்கலாம்...

வயதானவர்கள்  சகல செல்வங்களும் பெற்று ,குடும்ப ஒற்றுமையுடன் , நல்ல தொழில் வளத்துடன், நீண்ட ஆயுளுடன் வாழுங்க! வாழ்க வளமுடன் என்று ஆசிர்வாதிக்கலாம் ...

 தமிழில் அழகான வார்த்தைகளுக்கு பஞ்சமில்லை
 உங்களுக்கு என்னென்ன தேவையோ அதை பிறருக்கு ஆசியாக கொடுங்கள்
 அவர்களுக்கும் அவை கிடைக்கும் உங்களுக்கும் அவை கிடைக்கும்....


வாழ்க வளமுடன் என வாழ்த்துவதால் பிரபஞ்ச சக்தி அந்த வார்த்தைகளை உங்களுக்கும் உங்களை சார்ந்தோரையும் வளமாக வாழ வைக்கிறது என்பது பலரது அனுபவ உண்மை..

மந்திரம்,உச்சாடனம்,அபிசேகம்,ஆராதனை எல்லாமே கடவுளுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் சேர்த்துதான் என இந்துமதம் மறைபொருளாக உணர்த்தி வருகிறது..

நாம் ஏன் காலில் விழுகிறோம் என்பதற்கு அறிவியல் ரீதியான காரணம் உண்டு. ஆய்வின் படி மனிதனின் காலில்தான் சக்தி ஓட்டம் அதிகமாக இருக்கிறது. ஒரு ஞானியையோ அல்லது மகானையோ பார்க்கும் போது அவர்களின் காலைத் தொட்டு ஆசி பெறும் போது அவர்களின் சக்தி நமக்கும் கிடைக்கிறது. காலை தொடுதலின் மூலம் இந்த சக்தி பரிமாற்றம் நடக்கிறது

கோயிலுக்குச் சென்றால் தரையில் விழுந்து கடவுளை வணங்குவதற்கும் காரணம் உண்டு. நீங்கள் தரையில் விழுந்து வணங்குவதை சாஷ்டாங்க நமஸ்காரம் என்பார்கள். கோயிலில் இருக்கும் சக்தி பெற்றுக் கொள்ளும் தன்மையானது அனைவரின் உடலுக்கும் இருப்பதில்லை. சக்தியை இயல்பாக பெற்றுக் கொள்ளும் தன்மை இல்லாத பட்சத்தில் உங்கள் உடலுக்கும் கோயிலில் இருக்கும் சக்திக்கும் ஒரு தொடர்பை உருவாக்க வேண்டும் என்றால் கோயிலின் தரையில் அமர வேண்டும் அல்லது இந்த சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்

சொல்லும் வார்த்தைகளில் சக்தி இருக்கிறது..மனப்பூர்வமாக ஒருவர் ஆசி வழங்கும்போது அதன் சக்தி அளவிட முடியாதது...

பல பாவங்களையும்,தோசங்களையும் போக்குகிறது பெரியோர் காலில் விழுந்து ஆசி பெறுங்கள் உங்கள் சக்தியை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்..

ஜோதிடம்,ராசிபலன் ,சாஸ்திரம்,மத நம்பிக்கைகள் இவற்றை கடைபிடிப்போர் கூட பலர் அடுத்தவருக்கு மரியாதை கொடுப்பதில் தயக்கம் காட்டுவர்.


பெரியோர், மகான்கள்,சாதனை புரிந்தோர்,மகான்களை சந்தித்தோர், நம் வீட்டுக்கு வரும் மூத்த தம்பதிகள் இவர்களிடம் நாம் ஆசி பெறுவதால் அவர்களின் நல்ல எண்ணங்கள் நம்மை பலப்படுத்தும்.


வாழ்க வளமுடன்!



 

No comments:

Post a Comment