Sunday 17 April 2016

வசந்தங்கள் வாழ்த்தும் வசந்த பஞ்சமி!

 
இந்தியாவில் காலத்தைக் கணக்கிடும்போது ஓர் ஆண்டை சூரியனின் சுழற்சி கதிக்கேற்ப உத்தரா யனம் (தை மாதம் முதல் ஆனி மாதம் வரை) என்றும்; தட்சிணா யனம் (ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை) என்றும் இரண்டு அயனங் களாகப் பிரித்துள்ளனர். இந்த இரண்டு அயனங்களை ருதுக்கள் எனப்படும் ஆறு பருவங்களாகப் பிரித்துள்ளனர்.
 
சித்திரை- வைகாசி வசந்த ருது (இளவேனில்); ஆனி-ஆடி, கிரீஷ்ம ருது  (முது வேனில்); ஆவணி- புரட்டாசி வர்ஷ ருது (கார்); ஐப்பசி- கார்த்திகை சரத் ருது (குளிர்); மார்கழி- தை ஹேமந்த ருது (முன் பனி);  மாசி- பங்குனி சிசிர ருது (பின் பனி) என்று ஆறு பருவங்கள் உள்ளன. இவற்றில் சித்திரை- வைகாசி மாதங்களுக்குரிய வசந்த ருது அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு பருவ நிலையாக உள்ளது.

 
வசந்தத்தின்போதுதான் மலர்கள் மலர்ந்து, இயற்கை எங்கும் இனிமையாகவும் கண்களுக்கு விருந்தாகவும் காட்சியளிக்கிறது. வட மாநிலங்களில்- குறிப்பாக மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம், ஒரிசா, அசாம் போன்ற இடங்களில் இந்த வசந்தகாலத் துவக்கத்தில் சரஸ்வதிதேவியை வழிபடும் வழக்கம் நிலவுகிறது.

 
தமிழகத்தைப் பொறுத்தவரையில் சரத் நவராத்திரி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திரியின் ஒன்பதாவது நாளான நவமியன்று சரஸ்வதி பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் மாகமாதத்தில் (ஜனவரி- பிப்ரவரி) வருகின்ற சுக்ல பட்ச (வளர்பிறை) பஞ்சமி திதி பசந்த் (வசந்த) பஞ்சமி என்ற பெயரில் சரஸ்வதி தேவிக்குரிய நாளாகக் கொண்டாடப்படுகிறது.

 
  இந்த வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி வழிபாடு நடைபெற்றதாக வேதங்களிலும் புராணங் களிலும் குறிப்புகள் காணப்படு கின்றன. உலகத்தில் உயிர்களைப் படைத்த பிரம்ம தேவன், தன் படைப்புத் தொழிலில் சோர்வு ஏற்பட, அதை நீக்கிக் கொள்ளும் வகையில் வசந்த பஞ்சமி நாளன்றுதான் சரஸ்வதிதேவி யைப் படைத்ததாகக் கூறப்படுகிறது. சரஸ்வதி தேவியின் கையில் வீணையைக் கொடுத்து அதன்மூலம் உலக மக்களுக்குப் பேசும் சக்தியை பிரம்மா அளித்ததாகப் புராணம் கூறுகிறது.  

வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணா வாதினி, வாணி தையானி என்றும் போற்றப் படுகிறாள் சரஸ்வதிதேவி. நல்லொழுக்கம், அறிவு, ஞானம், இசை, அறிவு, வாக்கு வன்மை, கவித்திறன் போன்ற குணநலன்கள் மக்களுக்குக் கிட்ட இந்த நாளில் வட மாநிலத்தவர் சரஸ்வதிதேவியை வழிபடுகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர்கூட இந்த வசந்த பஞ்சமி நாளில்தான் சாந்தீபனி குருகுலத்தில் சேர்ந்து பதினாறு கலை களைக் கற்றதாகக் கூறப்படுகிறது.

 
தென்மாநிலங்களில் விஜயதசமி நாளன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் துவக்குவது போன்று, மேற்கு வங்கத்தில் இந்த வசந்த பஞ்சமி நாளன்றுதான் வித்யா ரம்பம் துவக்கப்படு கிறது. இந்நாளில் கல்வியைத் துவக்கவுள்ள குழந்தைகள் முன்பாக, பென்சில், பேனா, சிறிய இசைக் கருவிகள், தொழிற் கருவிகள் போன்றவற்றை வைத்து அவற்றில் ஏதாவது ஒன்றை எடுக்கச் சொல்வர். குழந்தை எடுக்கும் பொருளின் அடிப்படையில் அதன் எதிர்காலம் அமையும் என்று நம்பிக்கை. உதாரணமாக பேனாவை எடுத்தால் பெரிய அறிவாளியாக ஆவர் என்றும், சங்கீத உபகரணங் களை எடுத்தால் சங்கீத மேதையாவான் என்றும், தொழிற் கருவியினை எடுத்தால் தொழில் முனைவராக ஆவான் என்றும் நம்பப்படுகிறது.
 
இந்த வசந்த பஞ்சமி நாளன்று பூஜை அறையில் சரஸ்வதி தேவியின் சிலை அல்லது படம் மஞ்சள் மலர்களால் அலங்கரிக்கப்படு கிறது. மஞ்சள் சாமந்தி மலர்கள் வட மாநிலங் களில் பூஜைக்கும், மலர் மாலைகளுக்கும் உரிய முக்கிய மலராகத் திகழ்கிறது. சரஸ்வதிதேவி சிலைக்கும் மஞ்சள் ஆடை அணிவிக்கப்படுகிறது. வீடுகளில் மக்களும் அன்று மஞ்சள் ஆடைகள் அணிகின்றனர். பூஜையில் வைக்கும் விநாயகர் கூட மஞ்சள் பிள்ளையார்தான்! மஞ்சள் நிறச் சேலைகள், சல்வார் கமீஸ், துப்பட்டாக்கள், ஜரிகை மற்றும் கோட்டாவினால் அலங்கரிக் கப்பட்டு, பளிச்சென்று எங்கு பார்த்தாலும் மஞ்சள் நிறம் கண்களைப் பறிக்கிறது.

 
பஞ்சாப் மாநிலத்தில் மிகச் சிறப்பாக வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகிறது. இந்தப் பருவத்தில் எங்கு பார்த்தாலும் கடுகுச் செடிகள் மஞ்சள் நிற மலர்களைப் பூத்துச் சொரிய, அதற்குப் பொருத்தமாக மக்கள் மஞ்சள் வண்ண ஆடைகளை அணிந்து பாங்க்ரா நடனம் ஆடுகின்றனர்.
 

காஷ்மீர் மாநிலத்தில் வசந்தத் திருவிழாவாகக் கொண்டாடப் படும் இந்த வசந்த பஞ்சாமி நாளில் மக்கள் எல்லாரும் மஞ்சள் நிற ஆடைகளை அணிகின்றனர். இந்த மஞ்சள் நிறம் தேவர்களால் விரும்பப் படுவதாகக் கூறப்படுகிறது.


ராஜஸ்தான் மாநிலத்தில் இந்நாளில் வகை வகையான உணவு வகைகளைத் தயாரித்து உண்பதிலும், பொது இடங்களில் பாடி மகிழ்வதிலும் மக்கள் நேரத்தைச் செலவிடுகின்றனர். அவர்கள் பாடும் பாடல்கள் இயற்கையையும் வசந்தத்தையும் போற்றுவதாக அமைந்துள்ளன. வட கிழக்கு மாநிலங்களில்- குறிப்பாக அசாமில் வசந்த பஞ்சமிக்குத் தனி இடம் உண்டு. மலைவாழ் மக்கள்- குறிப்பாக மலைவாசி இளம் பெண்கள் கூட்டம் கூட்டமாக கூடி, வட்டமாக நின்று ஆடிப்பாடி மகிழ்கின்றனர். அன்று சரஸ்வதிதேவிக்கு மிகச் சிறப்பாக வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.


 இந்த வசந்தகாலத்தில் ஏராளமாகக் காய்த்துக் குலுங்கும் பேரிக்காய்களும், வெள்ளை முள்ளங்கி விதைகளும் தாம்பாளத்தில் வைக்கப்பட்டு சரஸ்வதிதேவிக்குப்  பிரசாதமாக நிவேதிக்கப்படுகின்றன. இவற்றோடு படைக்கப்படும் லட்டு, பர்பி போன்ற இனிப்பு வகைகளும்கூட மஞ்சள் நிறம் சேர்த்தே தயாரிக்கப்படுகின்றன. வீடுகளில் கார்க்கி மீட்டா சாவல் எனப்படும் (பாஸ்மதி அரிசி, சர்க்கரை, நெய், குங்குமப்பூ, மஞ்சள் தூள் சேர்த்து செய்யப்படும் இனிப்பு மஞ்சள் பொங்கல்) சிறப்பு இனிப்பு மதிய உணவில் தவறாமல் இடம் பெறுகிறது.

பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் கூடி சரஸ்வதிதேவிக்குப் பூஜை செய்து வணங்குகின்றனர். அன்று பட்டங்கள் விடுவதில் போட்டிகளும் பரிசுகளும் வழங்குவதும் உண்டு. பெரியவர்களும் சிறுவர்களும் போட்டி போட்டிக் கொண்டு வண்ணமயமான பட்டங்களைப் பறக்கவிடுகின்றனர். அன்று சிறுவர்களின் கொண்டாட்டங்களுக்கும் அளவே இல்லை. பெற்றோர்களும் பெரியோரும் அன்று குழந்தைகளைக் கட்டுப்படுத்தாமல் சுதந்திரமாக இருக்க விடுகின்றனர்.

"வசந்த பஞ்சமி' என்றாலே வட மாநிலங்களில் இது சரஸ்வதிதேவியை வழிபடும் நாள் என்பதோடு  பங்குனி உத்திர நாளில் வட மாநிலங்களில் கொண்டாடப் படுகின்ற வண்ணமயமான ஹோலிப் பண்டிகைக்குக் கட்டியம் கூறும் ஒரு இனிய விழாவாக இந்த பஞ்சமி விளங்குகிறது.



 

No comments:

Post a Comment