Sunday 17 April 2016

சீரும் சிறப்பும் நல்கும் சித்திரை பௌர்ணமி!


"பருவங்களில் சிறந்த வேனில் பருவம்
மாதங்களில் சிறந்த மேஷ மாதம்
நட்சத்திரங்களில் சிறந்த சித்திரை
திதிகளில் சிறந்த பௌர்ணமி"



 சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று வரும் பௌர்ணமி சித்திரை பௌர்ணமி ஆகும்.

‘ராசிச் சக்கரத்திலுள்ள 12 ராசிகளில் 6 ஆவதான கன்னிராசியிலும், 7ஆவதான துலாராசியிலும் உள்ள நட்சத்திர மண்டலத்துக்கு ‘சித்திரை’ எனப் பெயர். அசுபதி முதலான 27 நட்சத்திரங்களில் 14 ஆவது நட்சத்திரம். சித்திரை பௌர்ணமியெனப் புகழ் பெற்ற தினத்தன்று சந்திரன் சித்திரை நட்சத்திரத்திலோ அதற்கு அடுத்தோ இருக்கும்’ எனக் கலைக் களஞ்சியம் கூறும்.

சித்ரா நதி

நெல்லை மாவட்டம் திருக்குற்றால மலையிலுள்ள சித்ரா நதி சித்திரை பௌர்ணமி அன்றுதான் உற்பத்தியானதாகக் கருதப்படுகிறது. அன்றைய தினம் அந்நதியில் நீராடுவது மிகச் சிறந்த பலன்களை அளிக்கும்.

சித்திரை மூலிகை

சித்திரை பௌர்ணமி அன்று நிலவின் ஒளியில் பூமியில் ஒருவகை உப்பு பூரித்து வெளிக்கிளம்பும். இதை பூமி நாதம் என்பர். இந்த உப்புத் தூள் மருந்துக்கு வீரியமளிக்கும். இளமையையும் மரணமில்லாத வாழ்வையும் கொடுக்கும். சித்தர்கள் இதை பௌர்ணமி என்பர்.

கன்னியாகுமரியில்...
கன்னியாகுமரியில் சந்திரோதயமும், சூரிய அஸ்தமனமும் சித்திரை பௌர்ணமி அன்று ஒரே நேரத்தில் நடக்கும்.

சித்திரகுப்தரும் சித்திரை பௌர்ணமியும்

சித்திரை பௌர்ணமியன்று தமிழகம் முழுவதும் சித்திரகுப்தர் வழிபடப்படுகிறார். யமதர்மராஜாவின் கணக்கரான இவர் சித்திரை பௌர்ணமியன்றுதான் அவதரித்தார் என புராணங்கள் கூறும்.


 சித்திரகுப்தர் தியானம்!

சித்ரகுப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபத்ர தாரிணிம்
சித்ர ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வதேஹினாம்”


சிவாலய வழிபாடு!
அசுரர்களின் கொட்டத்தை அடக்க சிவபிரான் தமது கோபத்திலிருந்து தமனர் எனும் பெயருடைய பைரவரை தோற்றுவித்தார். தமனரும் அசுரர்களை அடக்கினார். மனம் குளிர்ந்த சிவனார் தமனரை நோக்கி “நீ பூமியில் செடியாகத் தோன்றுவாய். உன் தளிர் இலைகளால் சித்திரை பௌர்ணமி அன்று எம்மை பூஜிப்பவர்கள் மேலான நிலையை அடைவார்கள்” என்று வரம் அருளினார்.

சித்திரை பௌர்ணமியன்று நாடு செல்வ செழிப்புடன் விளங்க தமன உற்சவம் செய்ய வேண்டும் என ஆகமங்கள் கூறுகின்றன. தமனம் என்றால் மருக்கொழுந்து. அன்றைய தினம் யாகசாலையின் மத்தியில் சர்வதோபத்திரம் எனும் குண்டம் அமைத்து அதில் சிவபிரானை அர்ச்சனை செய்து ஹோமம் செய்து மருக்கொழுந்தை பூஜித்து கோயிலை வலம் வந்து சிவபெருமானுக்கு சார்த்த வேண்டும்.

விஷ்ணு கோயில்களில் வழிபாடு!


ஒரு சமயம் ஹாஹா, ஹூஹூ என்ற இரு கந்தர்வர்கள் தமது மனைவிகளுடன் குளம் ஒன்றில் நீராடிக் கொண்டிருந்தனர். அச்சமயம் ஒரு முனிவர் அக்குளத்தில் நீராட இறங்கினார். ஹூஹூ ஒரு முதலை வடிவெடுத்து அவர் காலை கவ்வினான். இதை அறிந்த முனிவர் கோபம் கொண்டு அவன் முதலையாகட்டும் என சபித்தார்.

இந்திரத்யும்னன் என்ற மன்னன் நாராயண பூஜை செய்து கொண்டிருந்த போது அகத்தியர் அவனைக் காண்பதற்கு வந்தார். மன்னன் கவனிக்காததைக் கண்ட அகத்தியர் அவன் யானையாகப் போகட்டும் என சபித்தார்.

ஹூஹூ ஒரு குளத்தில் முதலையாக மாறி வசித்து வந்தான். யானையாக மாறிய மன்னன் அக்குளத்தில் இருந்த தாமரை மலரைப் பறித்து விஷ்ணுவிற்குப் பூஜை செய்வான். ஒருநாள் முதலை யானையின் காலைப் பிடித்து கவ்வ யானை “ஆதிமூலமே” என்று கதறியது. விஷ்ணு கருடன் மீது வந்து தமது சக்கராயுதத்தால் முதலையைக் கொன்று யானையை மீட்டார். இருவரும் சாப விமோசனம் எய்தினர்.

இந்த நிகழ்ச்சி ’கஜேந்திர மோட்சம்’ எனப் புராணங்களிலும் ஆழ்வார் பாசுரங்களிலும் பலபடியாக அனுபவிக்கப்பட்டுள்ளது. இது நடந்தது சித்திரை பௌர்ணமியன்று என்பதால் அன்று அனைத்து விஷ்ணுவாலயங்களிலும் கஜேந்திர மோட்ச விழா நடைபெறும்.

நெல்லை மாவட்டம் அத்தாள நல்லூரில் இந்த விழா வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது. அவ்வூர் பெருமாளுக்கு ‘கஜேந்திர வரதர்’ என்றே பெயர்.

No comments:

Post a Comment