Monday 4 April 2016

வாரணமாயிரம் சூழவலஞ்செய்து


வாரணமாயிரம் சூழவலஞ்செய்து
நாரணநம்பி நடக்கின்றானென்றெதிர்
பூரணபொற்குடம் வைத்துப்புறமெங்கும்
தோரணம்நாட்டக் கனாக்கண்டேன்தோழீ! நான். (1)

நாளைவதுவை மணமென்றுநாளிட்டு

பாளைகமுகு பரிசிடைப்பந்தற்கீழ்
கோளரிமாதவன் கோவிந்தனென்பான் ஓர்
காளைபுகுதக் கனாக்கண்டேன்தோழீ! நான். (2)

இந்திரனுள்ளிட்ட தேவர்குழாமெல்லாம்

வந்திருந்தென்னை மகட்பேசிமந்திரித்து
மந்திரக்கோடியுடுத்தி மணமாலை
அந்தரிசூட்டக் கனாக்கண்டேன்தோழீ! நான். (3)

நால்திசைத்தீர்த்தங்கொணர்ந்து நனிநல்கி

பார்ப்பனசிட்டர்கள் பல்லாரெடுத்தேத்தி
பூப்புணைகண்ணிப் புனிதனோடென்தன்னை
காப்புநாண்கட்டக் கனாக்கண்டேன்தோழீ! நான். (4)

கதிரொளிதீபம் கலசமுடனேந்தி

சதிரிளமங்கையர்தாம் வந்தெதிர்கொள்ள
மதுரையார்மன்ன னடிநிலைதொட்டு எங்கும்
அதிரப்புகுதக் கனாக்கண்டேன்தோழீ! நான். (5)

மத்தளங்கொட்ட வரிசங்கம்நின்றூத

முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்தபந்தற்கீழ்
மைத்துனன்நம்பி மதுசூதன்வந்து என்னைக்
கைத்தலம்பற்றக் கனாக்கண்டேன்தோழீ! நான். (6)

வாய்நல்லார் நல்லமறையோதி மந்திரத்தால்

பாசிலைநாணல்படுத்துப் பரிதிவைத்து
காய்சினமாகளிறன்னான் என்கைபற்றி
தீவலஞ்செய்யக் கனாக்கண்டேன்தோழீ! நான். (7)

இம்மைக்குமேழேழ்பிறவிக்கும் பற்றாவான்

நம்மையுடையவன் நாராயணன்நம்பி
செம்மையுடையதிருக்கையால் தாள்பற்றி
அம்மிமிதிக்கக் கனாக்கண்டேன்தோழீ! நான். (8)

வரிசிலைவாள்முகத்து என்னைமார்தாம்வந்திட்டு

எரிமுகம்பாரித்து என்னைமுன்னேநிறுத்தி
அரிமுகனச்சுதன் கைம்மேலென்கைவைத்து
பொரிமுகந்தட்டக் கனாக்கண்டேன்தோழீ! நான். (9)

குங்குமமப்பிக் குளிர்சாந்தம்மட்டித்து

மங்கலவீதி வலஞ்செய்துமணநீர்
அங்கவனோடும் உடன்சென்றாங்கானைமேல்
மஞ்சனமாட்டக் கனாக்கண்டேன்தோழீ! நான். (10)

ஆயனுக்காகத் தான்கண்டகனாவினை

வேயர்புகழ் வில்லிபுத்தூர்க்கோன்கோதைசொல்
தூயதமிழ்மாலை ஈரைந்தும்வல்லவர்
வாயுநன்மக்களைப்பெற்று மகிழ்வரே. (11)

No comments:

Post a Comment