Thursday 21 April 2016

விஷூக்கனி!

 
 
இது மலையாளப் புத்தாண்டைக் குறிக்கும் பண்டிகையாகும். மலையாளிகள் இந்த நாளை வெகு சிறப்பானதாகக் கருதுகின்றனர். இது அறுவடை பண்டிகையாக கேரளாவில் கொண்டாடப்படுவதால் எல்லா மலையாளிகளுக்கும் இது முக்கியமான பண்டிகையாகக் கருதப்படுகிறது. இந்நாளில் சூரியன் இந்திய சோதிட கணக்கின் படி இராசி மண்டலத்தில்,
மீன ராசியிலிருந்து மேஷ இராசி க்குள் நுழைகிறார் (முதலாவது ராசி ).



"விஷூக்கனி" என்றால் விஷூ அன்று முதலில் காண்பது என்று பொருள்படும்.

இந்திய சோதிட சாத்திரத்தின் படி காலத்தின் கடவுளாக கால தேவர்களின்
தலைவனாக விஷ்ணு கருதப்படுகிறார். விஷூ இக்காலங்களின் ஆரம்பமாக விளங்குவதால் இத்தேவர்களுக்கு பூஜை செய்வது முக்கியமாகக் கருதப்படுகிறது.


மரபுவழி மலையாளிகள் விஷூ அன்று பொழுது புலரும் நேரம் முதற் பார்வையில் விஷூவைக் கண்டால் அவ்வருடம் முழுதும் சிறப்பானதாக இருக்கும் என நம்புகின்றனர்.
ஆகையினால் விஷூக்கனி யின் போது பூஜை அறை ஏற்பாட்டில் மிகுந்த அக்கறை செலுத்துகின்றனர்.  இதனால் அவர்களின் புதுவருடம் செழுமையானதாகவும், நேர்த்தியானதாகவும், சிறப்பானதாகவும் அமையுமென நம்புகின்றனர்!
 


பொதுவாக இந்த 'கனி ' என்கிற முதற்பார்வைக்கான விஷூக்கனியை ஏற்பாடு செய்யும் தாயோ அல்லது பாட்டியோ கிழக்கில் சூரியன் உதிப்பதற்கு வெகு நேரம் முன்னரே அவர் எழுந்திருப்பார் [மகோன்னதமான பிரம்ம முகூர்த்த காலத்தில் (காலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை)
 எழுந்து எண்ணெய் விளக்குகளை ஏற்றி அந்த கண் கொள்ளாக் காட்சியைக் காண்பர். பிறகு மற்ற குடும்பத்தவர்கள் உறங்கும் அறைக்குச் சென்று ஒவ்வொருவராய் எழுப்புவர். அவர்கள் கண்களை தன் கையால் மூடி பூஜை அறைக்கு அழைத்து வந்து அந்த தெய்வீகக் காட்சியைக் காட்டுவர்.



விஷூக்கனியின் ஏற்பாடுகள்
இந்நன்னாளில் அஷ்ட மாங்கல்யம் எனச்சொல்லப்படும்,

பஞ்சலோக பாத்திரம்
தாம்பூலம்
மஞ்சள் அரிசி
குங்குமம்
கண்ணாடி
புதிய துணி
கொட்டைப்பாக்கு
இந்து மதநூல்களுள் ஒன்று
மற்றும் பழவகைகளுள்,மாம்பழம்
தேங்காய்
முந்திரி
வாழைப்பழம்
பசுமையான காய்கறிகள்
இவைகளோடு சேர்த்து,தங்ககாசுகள்
வெள்ளிக்காசுகள்
நெல்மணிகள்
தூய நீர்!

 இது போன்ற பொருட்களை காண்பதன் மூலம் அந்த வருடம் மிக இனிமையான வருடமாக செல்வம் கொழிக்கும் வருடமாக, என்பது அவர்களின் நம்பிக்கையாம். கனி" பார்வைக்காக சராசரி அளவுள்ள உருளி உபயோகப் படுத்தப் படுகின்றது.


உருளி பாத்திரம் வட்டமாகவும் வாய் திறந்தும் இருக்கும். பொதுவாக வெண்கலத்தினால் ஆன உருளியையே இதற்குப் பயன்படுத்துகின்றனர். பாரம்பரிய வழக்கமாக உருளி பஞ்சலோகத்தால் செய்யப்பட்டு வந்தது. ஐந்து உலோகங்கள் சூட்சுமமாக அண்டத்தைக் குறிக்கின்றது அதாவது அதன் ஐந்து தத்துவங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்ற ஐம்பெரும் தத்துவங்களைக் குறிப்பனவாக அமைகின்றது.

கொல்லம் சார்ந்த பகுதிகளில் அட்சதம் எனப்படும் அரிசி, மஞ்சள் கலவை நெல்லாகவும் அரிசியாகவும் கலக்கப்பட்டு உருளியில் வைக்கப்படுகின்றது. ஆனால் கேரளாவின் மற்ற பகுதிகளில் அரிசி உருளிக்குள் செல்லும் முதற்பொருளாக உபயோகப் படுத்துகின்றனர். இது உருளிக்குள் மற்ற பொருட்களை வைப்பதற்கு அடித்தளமாக அமைகின்றது.

அரிசிக்கு மேல் புதிதாக சுத்தம் செய்யப்பட்ட வெள்ளை கசவு புடவையை (கேரளப்பாணி தங்க சரிகை கொண்ட புடவை) வைத்து அதன் மேல் உன்னதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கனி வெள்ளரியை (தங்க நிறத்திலான வடிவுள்ள வெள்ளரிக்காய்) வெற்றிலை, பாக்கு (கனிந்த மஞ்சள் கலந்த சிவப்பு நிறமுள்ள பாக்கு, தங்க நிறத்திலான மாம்பழம், கனிந்த மஞ்சள் பலாப்பழம் (இரண்டாக வெட்டியும்)  பளபளப்பான பித்தளையிலான வால் கண்ணாடி (கைக் கண்ணாடி) ஆகியவற்றையும் வைப்பர்.


 நீண்டு, ஒல்லியான கைப்பிடியுடன் கூடிய தங்கத்தினால் அலங்கரிக்கப்பட்ட வால் கண்ணாடியையும் நன்கு கஞ்சி போடப்பட்ட ஓர் துணியை விசிறி போல் மடித்து
பூஜையில் புனித நீர் விடுவதற்காக வடிவமைக்கப்பட்ட நன்றாக ஒளிரும் பித்தளை கிண்டிக்குள் வைக்கின்றனர். பிறகு இந்த கிண்டியை உருளிக்குள் அரிசி மேல் வைக்கின்றனர்.
பல இடங்களில் இராமாயணம் போன்ற புனித படைப்புகள் கொண்ட பனை ஓலைகள் (தலியோலா என அழைக்கப்படும்) கூட "கனி" பார்வைக்காக உருளியில் வைக்கப்படுகின்றது.

பிறகு ஒரு தங்க நாணயமோ அல்லது தங்க அணிகலனோ எல்லாவற்றிற்கும் மேலாக வைக்கப்படுகின்றது. பிறகு உடைக்கப்பட்ட தேங்காய் மூடிகளில் எண்ணெய் நிரப்பி, திரியுடன் கனி உருளியின் மேல் வைக்கின்றனர். இதற்கான திரி கஞ்சி போடப்பட்ட துணியால் செய்யப்படுகின்றது. இது மேல் பாகம் நீளமாகவும் அடிப்பாகம் தடித்தும் வடிவமைக்கப்படுகின்றது.  இதன் அடிப்பாகம் தேங்காய் மூடிக்குள் உள்ள தேங்காய் எண்ணெயில் வைக்கப்படுகின்றது. திரியின் மேல்பாகம் நேராக நின்று எரிகின்றது.
 


 இந்தத் தீபங்களை ஏற்றுவதன் மூலம் இறைவனை நம் வாழ்வில் அழைப்பதாக  நம்புகின்றனர். பிறகு ஒரு தட்டில் சிறிது அரிசி மற்றும் மலர்களுடன் வெள்ளி நாணயத்தை வைக்கின்றனர். கனி காணலுக்குப் பிறகு வேண்டியவாறு இந்த வெள்ளி நாணயத்தை எடுத்து பூ அல்லது தலை உள்ளதா என்பதைக் காண்கின்றனர். எப்பகுதி வருகிறதோ அதைக் கொண்டு ஒருவருடைய வேண்டுதல் நிறைவேறும் நிலையை அறிகின்றனர். பிறகு கனி உருளியை ஸ்ரீ கிருஷ்ண பகவானின் சிலைக்கெதிராகவோ அல்லது படத்திற்கு முன்னரோ  வைக்கின்றனர்.
 


பிறகு கொன்னைப் பூ கொண்டு கனி உருளி, படம் மற்றும் சுற்றுப்புறங்களை அலங்கரிக்கின்றனர்.
ஏற்றப்பட்ட நில விளக்கை (பித்தளை விளக்கு) இதற்கு அருகே வைத்து அதன் தங்க நிற ஒளிர்வை கனி பார்வைக்காக கூட்டுகின்றனர். கண்களைத் திறந்து காணும்போது இறைவனின் தரிசனத்தால் காண்பவர் பூரிப்படைவார்.
பகவதியை நினைவூட்டும் கண்ணாடி ஒளி பிரதிபலிப்பால் விஷூக்கனியை ஒளிரச் செய்வதுடன் அதில் அவரவர் முகங்களையும் காட்டுகின்றது.

பூஜை அறைக்கு வர முடியாதவர்களுக்காக கனி உருளியை  வெளியே கொண்டு வந்து காண்பிப்பர். மேலும் தன் வீட்டுப் பசுக்களுக்கும் இதைக் காண்பிக்க மாட்டு கொட்டகைக்கு கொண்டு வரும் போது அங்கே உள்ள மரம், செடி, பறவை மற்றும் இயற்கை அனைத்தும் காணும் வாய்ப்பு பெறும். குளக்கரைக்கு கொண்டு சென்ற பிறகு, வீட்டை மூன்று முறை சுற்றி வருவர்.
 


சில இடங்களில், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கனியை தயார் செய்த பின் அதனை தனது வீட்டைச் சுற்றியுள்ள இடங்களுக்கு கொண்டு செல்வர். அவ்வாறு கொண்டு செல்லும் போது இசைக்கருவிகளை இசைத்தபடி கீர்த்தனங்களைப் பாடிக் கொண்டே செல்வர். அவர்கள் செல்லும் வீடுகளில் அவர்களுக்கு கைநீட்டம் கிடைக்கும். குழந்தைகள் இந்தச் சடங்கிற்காக ஆவலுடன் காத்திருப்பர். வீட்டில் உள்ள பெரியவர்கள், தாத்தா அல்லது தந்தை வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு கைநீட்டம் வழங்குவர்.

கைநீட்டத்தில் உருளியிலிருந்து நாணயங்கள் (தற்போது ரூபாய் நோட்டுகள்), கொன்னை மலர்கள், அரிசி மற்றும் தங்கம் ஆகியவற்றை வழங்குவர். தங்கம் மற்றும் அரிசியை மீண்டும் உருளியில் வைத்து விடுவர். மலர்களை கண்களில் ஒத்திக் கொள்வர்

இப்பூஜை அறையில் நில விளக்கின் மகோன்னதமும், அதிலிருந்து உருளியில் பட்டு ஏற்படும் ஒளிச் சிதறல்களும், தங்க நிற கனி வெள்ளரி, தங்க ஆபரணங்கள், மஞ்சள் நிற கனி கொன்னை மலர்களின் அழகைக் கூட்டும் பளபளக்கும் பித்தளைக் கண்ணாடியும் மற்றும் இவை யாவும் சேர்ந்து உருவாக்கும் மஞ்சள் நிற ஆன்மீக ஒளிர்வு அந்த கிருஷ்ண பரமாத்மாவை நினைவுபடுத்துவதாக இருக்கும்.


தங்கம் விஷூக்கனியில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. தங்க மஞ்சள் நிறமுடைய கனிக்கொன்னை மலர்களைக் கொண்டு பூஜை அறையை அலங்கரிக்கின்றனர். இப்பூ சூரியன் உச்சத்தில் உள்ள அதாவது விஷூ ஏற்படும் மாதமாகிய மேஷ மாதத்திலேயே பூக்கின்றது.

பூஜை அறையில் இப்பூக்கள் விஷ்ணுவின் கண்களாகிய சூரியனையே குறிக்கின்றது.
தங்க நாணயம் அவரவரின் பொருளாதார நிலையையும் மற்றும் கலாச்சார ஆன்மீக வளத்தையும் குறிக்கின்றது. இப்பண்டிகையின் மற்றொரு அம்சம் விஷூக்கை நீட்டம் எனப்படும்

செல்வம் பகிர்ந்து கொள்ளும் வழக்கமாகும். செல்வம் கொடுப்பவர்கள் தடையின்றி எல்லோருக்கும் கொடுப்பர். பெறுபவர்கள் மிக்க மரியாதையுடன் அதனைப் பெறுவர்.
 விஷூ தினத்தன்று செல்வந்தர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மட்டுமின்றி
சுற்றத்தாருக்கும், சிலர் அவர் வாழும் கிராமம் முழுமைக்குமே தானமளித்து
மகிழ்வர்.

விஷூ படக்கம்

வட கேரளாவின் பல பகுதிகளில் பட்டாசு வெடிப்பது விஷு கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாகும்.

விஷூ அன்று காலையிலும் அதற்கு முந்தைய தின மாலையிலும் குழந்தைகள் பட்டாசுகள் வெடித்து மகிழ்வர்.

விஷூக் கஞ்சி

சத்யா கேரள பண்டிகைகளில் மிகப் பெரிய பகுதியாகும். விஷூவின் போது, விஷூ கஞ்சி மற்றும் தோரன் மிக முக்கியமானதாகும். கஞ்சி, அரிசி, தேங்காய்ப் பால் மற்றும் நறுமணப் பொருட்கள் கொண்டு செய்வதாகும். தொட்டுக் கொள்ள, தோரன் என்பதையும் குறிப்பிட்ட செய்பொருட்கள் கொண்டு செய்வர். விஷூ அன்று விருந்தும் அளிக்கப் படுகின்றது,
இதில் அனைத்து ருசிகளும் அதாவது உப்பு, இனிப்பு, புளிப்பு மற்றும்
கசப்புகளும் சம அளவில் இருக்குமாறு சமைக்கின்றனர்.

விருந்தில் வேப்பம்பூ ரசமும், மா ம்பழ பச்சடி யும் பரிமாறப்படுகின்றன. புனித புத்தகமாகிய இராமாயணத்தின் பகுதிகளை விஷூக்கனியைக் கண்டபின் படித்து மகிழ்வர். சிலர்  இராமாயணத்தின் எப்பக்கத்தை அவர்கள் திறந்து படிக்கிறார்களோ அது அவர்களின் புத்தாண்டின் தன்மையை ஒத்திருக்கும் என நம்புகின்றனர்.

அன்றைய தினம் பக்தர்கள் காலையில்
சபரிமலை    ஐயப்பன் , குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்று விஷூக்கனி காழ்சா" என்ற அவரின் காட்சியை தரிசிக்க முனைகின்றனர். 

 

No comments:

Post a Comment