Friday 23 December 2016

திருச்சானூர் தேவிக்கு கார்த்திகை பிரம்மோற்சவம்!

 

பாற்கடலை கடைந்த பொழுது  பத்மசரோவரத்தில் ஸ்ரீ ஹரி தவப்பயனின் காரணமாக " ஸ்ரீ மஹா லக்ஷ்மி " அவதரித்தாள். பத்மாவதி தாயார் ஸ்ரீ ஹரியின் பட்டத்து ராணியாக தாமரை மலர்களை தம் திருக்கரங்களில் ஏந்தி பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தின் படி வழிபடப்பட்டு திருச்சானூரில் கோவில் கொண்டு அருள் வழங்குகின்றார்.
 
 
அருளே வடிவான பத்மாவதி தாயாருக்கு ஆகமத்தின் படி எத்தனையோ உற்சவங்கள் நடந்துவருகின்றன.

எத்தனை உற்சவங்கள் நடந்தாலும் திருமலை தேவஸ்தானம் நடத்தும் பிரம்மோற்சவம் தனிச்சிறப்பு. பஞ்சமி தீர்த்தம் சிறப்பாக கொண்டாடப்படும். தாயாருக்கு திருக்குளத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் விசேஷ திருமஞ்சனம் செய்யப்படும். இதை காண கோடானக் கோடி பக்தர்கள் திரண்டு தாயாரின் தரிசனம் காண்பர் பின் மனதார அலர்மேல் மங்கை தாயாரை சேவித்து பஞ்சமி தீர்த்த புனித நீராடலை மேற்கொள்வர்.

பஞ்சமி நாளன்று , திருவேங்கடமுடையான் கோவிலில் இருந்து மஞ்சள், குங்குமம், புடவை, ஆபரணங்கள் - திருச்சானூருக்கு அர்ச்சகர்கள் கொண்டு வருவர். அர்ச்சா மூர்த்தியாக இந்த க்ஷேத்திரத்தில் தோன்றிய தாயாருக்கு நடக்கும் உற்சவங்கள் , வாகன புறப்பாடு, திரு நீராடல் , ஊஞ்சல் சேவைகளோடு பிரம்மோற்சவம் மிக சிறப்பாக நடைபெறும்.


அலர்மேல்மங்கை அருளும் திருச்சானூர் திருத்தலத்தில் கார்த்திகை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆலய மண்டபத்தில்  நித்யமும் மங்களம் அருளும் மாதவன் பிரியைக்கு (உற்சவ மூர்த்திக்கு) வேத மந்திரங்கள் முழங்க லக்க்ஷ குங்கும அர்ச்சனை செய்யப்படும்.


திருமலை ஏழுமலையானின் பட்டத்து ராணியான திருச்சானூர் பத்மாவதித் தாயாருக்கு, ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 9 நாள்கள் வருடாந்திர பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறும்.

அதன்படி, தாயார் சன்னதிக்கு எதிரில் உள்ள கொடிமரத்தில்  தாயாரின் வாகனமான யானையின் கொடி ஏற்றப்படும்.

தேவர்களுக்கு அழைப்பு!

பிரம்மோற்சவத்தைக் காண வரும்படி தேவாதி தேவர்களுக்கு அழைப்பு விடுக்க பலவிதமான வாத்தியக் கருவிகள் வாசிக்கப்படும்.

இந்தக் கொடியேற்றத்தைக் கண்டவர்கள் அனைத்து தேவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றவர்களாவர் என்பது ஐதீகம். 
 
 
 

சின்னசேஷ வாகனம்!

கார்த்திகை பிரம்மோற்சவத்தை ஒட்டி, கோயில் முழுவதும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பிரம்மோற்சவத்தின் முதல் நாள் இரவு பத்மாவதித் தாயார் சின்னசேஷ வாகனத்தில் மாடவீதியில் வலம் வருவார்.

பத்மாவதித் தாயாரை, சின்னசேஷ வாகனத்தில் தரிசிப்பவர்களின் சர்பதோஷங்கள் விலகும் என்பார்கள்.

2ம் நாள்   காலை பெரியசேஷ வாகனத்தில் தாயார் வலம் வருவார்..

2ம் நாள் இரவு அன்னப்பறவை வாகனத்தில், தாயார் மாடவீதியில் வலம் வருவார்.

3ம் நாள்  காலை முத்துப் பல்லக்கு வாகனம்,

3ம் நாள்  இரவு சிம்ம வாகனம்,

4ம் நாள் காலை கற்ப விருட்ச வாகனம்,

4ம் நாள் இரவு அனுமன் வாகனம்,

5ம்  நாள் காலை பல்லக்கு வாகனம்,

5ம் நாள் இரவு ஸ்வர்ண கஜ (யானை) வாகனம்
 

மகாலட்சுமி பாற்கடலில் இருந்து வெளிப்பட்டதும், அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் அவளுக்கு மங்கல நீராட்டின என்று புராணங்கள் கூறுகின்றன. யானைகளின் பெயரால் அவள் கஜலட்சுமி என்றழைக்கப்படுகிறாள். யானைகளின் பிளிறலை லட்சுமி விரும்பிக்கேட்கிறாள் என வேதமந்திரமான ஸ்ரீசூக்தம் கூறுகிறது.
 
கஜ வாஹன புறப்பாட்டின் பொழுது தாயார் தரிசனம் சகல செல்வங்களையும் நல்கும்.

6ம் நாள் காலை சர்வ பூபாள வாகனம்,

6ம் நாள் மாலை தங்கத்தேரோட்டம்,


6ம் நாள் இரவு கருட வாகன சேவையும் நடைபெறும்.

7ம் நாள் காலை சூரிய பிரபை,

7ம் நாள் இரவு சந்திர பிரபை,

8ம் நாள்  காலை தேர்த் திருவிழா,
 

8ம் நாள் இரவு குதிரை வாகன சேவையும் நடைபெறும்.


விழாவின் நிறைவு நாளான 9ம் நாள்  காலை கோயில் வளாகத்தில் உள்ள பத்ம குளத்தில் பஞ்சமி தீர்த்தம் நடைபெறும்.

 
 



10 நாள்  பிரம்மோற்சவ நிறைவு நாளை  முன்னிட்டுதாயாருக்கு புஷ்பயாக நிகழ்ச்சி நடைபெறும்.   

 
 
 

No comments:

Post a Comment