Friday 16 December 2016

பிரத்யட்சமான தெய்வம் சுதர்சனர்!

 
சூரியன் ஒன்றுதான். ஆனாலும் அதிலிருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்களுக்குப் பல வண்ணங்கள். அதைப் போலவே பரம்பொருள் ஒன்றுதான். ஆனாலும், தத்துவ சொரூபமான அநேக வடிவங்களில் பல குண இயல்புகள் கொண்டு விளங்குகிறது. அப்பரம்பொருளை அணுகும் முறையிலும் உபாஸனையிலும் பல துறைகள்  நெறிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று சுதர்சன உபாஸனை.

மகாவிஷ்ணுவின் கரங்கள் ஒன்றில் காணப்படும் சக்கர ஆயுதத்தில் உறையும் தேவனே சுதர்சனர் எனப்படுகிறார். அந்தச் சக்கரம் சுதர்சன சக்கரம் எனப்படுகிறது. காத்தல், படைத்தல், அழித்தல் என்ற முத்தொழிலில் காக்கும் தொழில் கொண்ட விஷ்ணுவுக்கு, துஷ்ட நிக்ரஹத்துக்கு பொறுப்பு இருப்பதால் ஆயுதப்படை அவசியம். அத்தகைய ஆயுதங்களில் ராஜனாக இருப்பது சுதர்சனம். அதனால் அவரை 'ஹேதிராஜன்’ என்றும் கூறுவர். திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கரத்துக்கு உரிய தெய்வம் என்பதால், சுதர்சனர் உக்கிர வடிவினர். வைணவர்கள் விஷ்ணுவின் சக்கர சக்தியை 'சக்கரத்தாழ்வார்’ என்று கூறுவர். சுதர்சனருக்கு சக்கரராயர் என்றும் ஒரு பெயர் உண்டு.

சுதர்சனர் பிரத்யட்சமான தெய்வம். நெறிமுறைகளுக்கு ஏற்ப தீவிரமாக உபாஸிப்பவர்களுக்கு, உக்கிர வடிவம் கொண்ட சக்கரத்தாழ்வார் மங்கலம் நல்குவதாக பல நூல்களும் கூறுகின்றன.

சுதர்சனரின் வீரம் கிளர்ந்தெழும் வடிவத்தையும், மங்கல இயல்பு களையும், சுதர்சன வழிபாட்டில் ஏற்படும் அருள் நலன் களையும் கீழ்க்காணும் சுலோகம் வர்ணிக்கிறது:

சங்கம் சக்கரம்ச சாபம் பரதம் அஸிகதா
குந்தம் அத்யுக்ர தம்ஷ்ட்ரம் ஜ்வாலா
  கேசம் த்ரிநேத்ரம்
ஜ்வல லலனனிபம் ஹார கேயூர வக்த்ரம்
வந்தே ஷட்கோண சக்ரம் சகல ரிபுஜன
ப்ராணா ஸம்ஹார சக்ரம்

சுதர்சன உபாசனை வீரம் அளிக்கவல்லது. தீர்க்கவொண்ணா நோய்களும் சுதர்சனரின் கடாட்சத்தால் நீங்கப் பெறும் என்பது சுதர்சன உபாஸகர்களின் அனுபவம். போர் முனையில் வெற்றித் திருமகளின் கடாட்சத்தைப் பெறுவதையே லட்சியமாகக் கொண்டு வீர வாழ்வு வாழ்ந்த பல மன்னர்கள் சுதர்சன உபாஸிகளாக இருந்திருக்கின்றனர்.

'சுதர்சன சதகம்’ எனும் நூறு பாசுரங்கள் கொண்ட அருள் மாலையை நெறி தவறாது முறைப்படிப் பாராயணம் செய்வதனால், எத்தகைய ஆபத்திலிருந்தும் விடுபெறலாம் என்பது சுதர்சன உபாஸிகளின் நம்பிக்கை.

சுதர்சன உபாஸனையின் பெருமைச் சிறப்புகளை நாடறியச் செய்தவர்களாள் ஸ்ரீநிகமாந்த மகாதேசிகரின் பணி ஒப்பற்றது. ஸ்ரீ தேசிகர் சிறந்த சுதர்சன உபாஸியாக விளங்கியதுடன் 'ஸ்ரீ சுதர்சன அஷ்டகம்’ என்ற பாமாலையையும் சக்கரத்தாழ்வாருக்குச் சூட்டியிருக்கிறார்.

சுதர்சன வடிவங்கள்!

'சில்ப ரத்தினம்’ சுதர்சனரின் பல்வேரு வடிவங்களை வருணிக் கிறது. திருமாலின் சக்கரத்துக்கு உரிய தேவனை அந்நூல் 'சக்கர ரூபி விஷ்ணு’ என்று குறிப்பிடுவதுடன், சுதர்சனர் விஷ்ணுவின் அம்சமே என்பதையும் வலியுறுத்துகிறது. வேலாயுதத்தையே முருகனாக வழிபடுவதுபோல் சுதர்சனரையும் விஷ்ணுவாகவே பாவித்து வழிபடுவது மரபு. எண் கரங்கள் கொண்ட  சுதர்சனரையும், பதினாறு கரங்கள் கொண்ட வடிவையும், முப்பத்திரண்டு கரங்கள் கொண்ட வடிவையும், 'சில்பரத்தினம்’ குறிப்பிடுகிறது.

சாதாரணமாக ஆலயங்களில் சுதர்சனர் எட்டு அல்லது பதினாறு கரங்களுடன் வீறு கொண்டு எழும் தோற்றத்துடன் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் வடிவைக் கல்லிலும் செம்பிலும் காணலாம். ப்ரயொக அவசரத்தில் போர்க்கெழும் கோலத்துடன் பாய்வது போல் பதினாறு கரங்களுடன் காணப்படுகிறார்.

காஞ்சியில் உள்ள அஷ்டபுஜர், எண் கரங்கள் கொண்ட பெருமான்,  திருமாலின் சுதர்சன சக்தி எனப்படுகிறார். குடந்தையில் திருக்கோயில் கொண்டுள்ள சக்கரபாணி, சுதர்சனரின் வடிவமே ஆகும். சக்கரத்தை கரத்தில் கொண்டு சக்கரபாணி என்றே பெயர் பெற்றிருக்கும் அப்பெருமான் சுதர்சனராகவே காட்சி தருகிறார்.

சுதர்சன வழிபாடு பேராபத்துக்களிலிருந்தும், தீரா நோயிலிருந்தும், எடுத்த காரியத்தில் ஏற்படும் இடையூறுகளிலிருந்தும் காக்க வல்லது என்பதால், குரு முகமாக உபதேசம் பெற்று ஜப, தவ, ஹோம, மஹா மந்திரங்களைச் செய்து பயனடையலாம்.

 

No comments:

Post a Comment