Friday 16 December 2016

சுகம் நல்கும் சிம்ம சுதர்சனர்!


இரட்டை சிம்ம வாகனத்தில் அருள்பாலிக்கும் சுதர்சனரை (சக்கரத்தாழ்வார்)  திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் நீலமணிநாத சுவாமி கோயிலில் தரிசிக்கலாம். 

தல வரலாறு:

குருக்ஷத்திரப்போரில் வெற்றி பெற்ற அர்ஜுனன், வீரர்களைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக, தாமிரபரணியில் நீராடி பாவம் போக்கிவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். அவர் இத்தலம் அருகே வந்தபோது, ஒரு மருதமரத்தின் அடியில் சற்று நேரம் ஓய்வு எடுத்தார். அப்போது, மகாவிஷ்ணு அவனது கனவில் தோன்றி, ""தான்  மருதமரத்தின் அருகில் ஓரிடத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டி, அங்கு வந்து தன்னை வணங்கினால், பாவம் முழுமையாக நீங்கி விமோசனம் கிடைக்கும்'' என்றார். விழித்தெழுந்த அர்ஜுனன், மகாவிஷ்ணு கூறிய இடத்திற்கு சென்றபோது, பெருமாள் தாயார்களுடன் சிலை வடிவில் இருந்ததைக் கண்டான். பிற்காலத்தில், இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் இவ்விடத்தில் கோயில் எழுப்பினார்.

கறிவேப்பிலை சாதம்:

கருவறையில் நீலமணி நாத சுவாமி என்ற கரியமாணிக்கப்பெருமாள் ஸ்ரீ பூமி நீளா தேவியருடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். திருப்பதி வெங்கடாஜலபதியை போன்ற கோலத்தில் இவர் காட்சி தருவது சிறப்பு. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் சுவாமிக்கு "கறிவேப்பிலை சாதம்', திருவோண நட்சத்திர தினத்தில் "பாயாசம்' நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் தோஷங்கள் நீங்குவதாக நம்புகின்றனர். அர்ஜுனன் வழிபட்ட தலம் என்பதால் இவ்வூருக்கு, "அர்ஜுனபுரி ÷க்ஷத்திரம்' என்ற பெயரும் உண்டு.

சிம்ம வாகனத்தில் சுதர்சனர் :

இக்கோயிலில் உள்ள சுதர்சனர் தனிசன்னதியில் 16 கைகளுடன் இருக்கிறார். இவரது பீடத்திற்கு கீழே இரண்டு சிங்கங்கள் சுவாமியையும், அவருக்கு பின்புறம் இருக்கும் யோக நரசிம்மரையும் தாங்கியபடி இருக்கிறது. நரசிம்மருக்கு கீழே ஐந்து தலை நாகம் இருப்பது மற்ற இடங்களில் இல்லாத அதிசயம். இங்கு சுதர்சன ஹோமம் செய்து வழிபட்டால், பயம் நீங்கி, எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை.

சிறப்பம்சம்:

பெருமாள் கோயிலாக இருந்தாலும், சிவ அம்சமான தட்சிணாமூர்த்தியும் இங்கிருப்பது மற்றொரு சிறப்பு. சுவாமியின் கருவறை விமானத்தின் தென்புறத்தில் இருக்கும் இந்த தட்சிணாமூர்த்தி, மற்ற கோயில்களில் இருப்பது போல் அல்லாமல் இரண்டே சீடர்களுடன் இருக்கிறார். இவரது அமைப்பும் வித்தியாசமானது. மற்ற கோயில்களில் ஒரு காலை மடக்கி, ஒரு காலை தொங்கவிட்டு முயலகனை மிதித்தது போல் இருப்பார். இங்கோ இடது கையை தரையில் ஊன்றி, ஒரு காலை ஐயப்பனுக்குரியது போல், மடக்கி காட்சி தருகிறார்.

முன்மண்டபத்தில் பக்த ஆஞ்சநேயரும், அருகிலுள்ள ஒரு தூணில் வலது கையை மேலே தூக்கியும், இடது கையை மார்பில் வைத்தபடியுமான கோலத்தில் மற்றொரு ஆஞ்சநேயரும் உள்ளனர்.இந்த இரட்டை ஆஞ்சநேயர்களை வணங்கினால், வேண்டியது நிறைவேறும் என்கிறார்கள்.


திறக்கும் நேரம்: காலை 7.30 - 10 மணி, மாலை 5.30 - 8.30 மணி.

திருவிழா: சித்திரையில் பிரம்மோற்ஸவம்

இருப்பிடம்: மதுரையில் இருந்து தென்காசி செல்லும் ரோட்டில் 135 கி.மீ., தூரத்தில் இவ்வூர் இருக்கிறது.

போன்: 99657 61050





 

No comments:

Post a Comment