Saturday 1 October 2016

12 - திருவொற்றியூர் வடிவுடையம்மன் - 2

துணையிருந்து  பகை விரட்டும் அம்மன்!  
சக்தி பீடங்கள் : திருவொற்றியூர் வடிவுடையம்மன் (தொடர்ச்சி) 12ஒருமுறை இக்காளியின் சினம் அதிகமானது. இதனால் ஊருக்குள் பல பிரச்னைகள் உருவாகின. காளியின் சினம் தவிர்க்க ஆடு, கோழி என்று ஊர் மக்கள் பலி  கொடுத்து வந்தார்கள். இதை விரும்பாத ஸ்ரீஆதிசங்கரர் தேவியின் உக்கிரத்தை தணிக்க அவள் சந்நதிக்கு எதிரே ஒரு ஸ்ரீசக்கரம் நிறுவினார். இதனால் காளியின்  சினம் தணிந்தது. தன்னை வணங்கும் பக்தர்களுக்கு துணையிருந்து, அவர்களை விரோதிகளிடமிருந்து காப்பாற்றுகிறாள் வட்டப்பாறை அம்மன்.

சுந்தரர்  திருவொற்றியூர் இறைவனை தரிசிக்க வந்தபோது, இறைவனுக்கு பூமாலை கட்டித் தரும் தொண்டினை செய்து வந்த சங்கிலி நாச்சியாரைக் கண்டார். அவளை  மணந்து கொள்ள விரும்பி இறைவனை அவளிடம் காதல் தூது செல்லும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி சங்கிலி நாச்சியாரின் கனவில் இறைவன் தோன்றி  சுந்தரரை மணந்து கொள்ளும்படி கூறினார். சுந்தரர் ஏற்கனவே திருவாரூரில் பரவை நாச்சியாரை திருமணம் செய்து கொண்டிருந்தார்.

ஆகையால் ‘என்னைவிட்டுப் பிரிந்து சென்று விடுவாரே’ என்று சங்கிலி நாச்சியார் கூறினார். இறைவன் இதை சுந்தரரிடம் கூறினார். அதற்கு சுந்தரர்  இறைவனிடம், “ஊர் ஊராகச் சென்று இறைவனைப் பாடும் நான், ஒரே ஊரில் இருப்பது இயலாத காரியம். இறைவன் முன் சங்கிலி நாச்சியாரிடம் உன்னைப்  பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தால் அதை மீற முடியாது. ஆகவே சத்தியம் செய்யும் சமயத்தில் சந்நதியில் இல்லாமல் மகிழ மரத்தடியில்  ஒளிந்து கொள்ளும்,’’ என்றார். இந்த விவரத்தை இறைவன் சங்கிலி நாச்சியாரிடம் தெரிவித்தார். எனவே திருமணம் நடக்கும் சமயம் சங்கிலி நாச்சியார்  சுந்தரரிடம் ‘‘மானிடராகிய நாம் தெய்வ சந்நிதானத்தில் சத்தியம் செய்வது முறையல்ல,’’ என்று கூறி மகிழ மரத்தடியில் சபதம் செய்து கொடுக்கும்படி  கேட்டுக் கொண்டார். சுந்தரரும் வேறு வழியின்றி மகிழ மரத்தடியில் ஒளிந்து இருந்த இறைவனை மூன்று முறை வலம் வந்து, “என்றும் உன்னைப் பிரிய  மாட்டேன்” என்று சத்தியம் செய்து சங்கிலி நாச்சியாரை மணந்து கொண்டார்.

தலமரமான இந்த மகிழமரம் வடக்கு வெளிப் பிராகாரத்தில் உள்ளது. இந்த சபத நிகழ்ச்சி இன்றும் மாசிப் பெருவிழாவின்போது “மகிழடி சேவை” விழாவாக  நடைபெறுகிறது. மேலும் கிழக்கு வெளிப்பிராகாரத்தில் நவகிரகங்கள், விநாயகர், பாலசுப்ரமணியர், குழந்தையீஸ்வரர் ஆகியோரின் சந்நதிகள் கிழக்கு நோக்கி  அமைந்திருக்கின்றன. மேற்கு வெளிச்சுற்றுப் பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் அண்ணாமலையாறும், பின்பு வரிசையாக ஜம்புலிங்கேஸ்வரர்,  நாகலிங்கேஸ்வரர், காளத்திநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகியோர் தனித்தனி சந்நதி கொண்டிருக்கிறார்கள். வடமேற்கு மூலையில் ஒற்றீஸ்வரர் சந்நதி தனி  முகப்பு மண்டபத்துடன் அமைந்திருக்கிறது. வடக்கு வெளிச் சுற்றுப் பிராகாரத்தில் பைர வரும், கல்யாணசுந்தரரும் தனிச் சந்நதிகளில்  அருள்பாலிக்கிறார்கள்.பைரவர் வடக்கு நோக்கி நின்ற நிலையில் தனது வாகனமான நாய் இல்லாமல் காட்சி தருகிறார்.

தொண்டை நாட்டில் தியாகராஜர் வீற்றிருக்கும் ஏழு சிவஸ்தலங்களில் திருவொற்றியூர் தலமும் ஒன்று. இத்தலத்தில் தியாகராஜர் ஆடிய நடனம் ஆனந்த நடனம்.  இவர் ஆனந்த தியாகேசர் என்று அழைக்கப்படுகிறார். இந்த தியாகராஜர் சந்நதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. திருநாவுக்கரசர் (5 பதிகங்கள்), திருஞான  சம்பந்தர்(ஒரு பதிகம்), சுந்தரர் (2 பதிகங்கள்) மூவராலும் பாடப்பெற்ற சிவத்தலம் இது.

27 நட்சத்திரங்களும் இங்கு வந்து, தம் நாயகனான சிவபெருமானை  வழிபட்டு ஒவ்வொன்றும் ஒரு சிவலிங்கமாக மாறி பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றன. அந்தந்த நட்சத்திரக்காரர்கள் தாம் பிறந்த நட்சத்திர நாளில் அந்தந்த  நட்சத்திர லிங்கத்தை வழிபடுவது இத்தலத்தில் மிகவும் விசேஷம். தெற்கு வெளிப் பிராகாரத்தில் 27 நட்சத்திர லிங்கங்கள் வரிசையாக உள்ளன. தமது நட்சத்திர  நாளில் தமக்கு வசதிப்படி, அந்த நாளில் அந்த நட்சத்திரம் நிலவும் நேரத்தில் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு பால் மற்றும் ஐந்து முகருத்ராட்சம்  ஒன்று (வசதியிருந்தால் ஒன்றுக்கும் மேல்) கொண்டு சென்று நட்சத்திர லிங்கங்கள் அமைந்திருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும்.

அங்கே இருக்கும் பூசாரியிடம் பாலைக் கொடுத்து நமது நட்சத்திரத்துக்கு உரிய லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யச் சொல்ல வேண்டும். அபிஷேகம் செய்யும்போது  அந்த லிங்கத்தின் மேல் நாம் கொண்டு வந்திருக்கும் ஐந்துமுக ருத்ராட்சத்தை வைக்க வேண்டும். பால் அபிஷேகம் செய்யும் போது மனதுக்குள் ‘ஓம் நமசிவாய  நம’ என்று ஜபிக்க வேண்டும். அபிஷேகம் முடிந்த பின்னர் நமது நட்சத்திர லிங்கத்திற்கு எதிராக அமர்ந்து நூற்று எட்டு முறை ஓம் நமசிவாய நம என்று ஜபிக்க  வேண்டும். பிறகு நேராக நமது வீட்டிற்கு வந்து விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஏழு மாதங்கள் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்து முடித்த நூறு  நாட்களுக்குள் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வதற்கு சந்தர்ப்பம் அமையும். வாழ்க்கையில் ஒரு சிறு முன்னேற்றம் கூட இல்லாதவர்களுக்கும் முன்னேற்றம்  கிடைக்க ஆரம்பிக்கும்.

ஆனால், இந்தப் பரிகாரத்தைச் செய்ய விரும்புவோர் கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டிருக்க வேண்டும். பட்டினத்தடிகளார் முக்தி பெற்ற தலம் இது.  கலிய நாயனார் இங்கே பெருமானார் தொண்டு செய்திருக்கிறார். கலையழகும், வரலாற்று சிறப்புமிக்கதுமான அழகிய சிற்பங்களை ஆலயம் கொண்டிருக்கிறது. இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு மேற்பட்ட இந்த ஆலயம் பூலோகத்தின் கயிலாயமாகப் போற்றப்படுகிறது. ஈசனை சுமக்கும் பாக்கியம் பெற்ற ஆதிசேஷன்  என்ற நாகராஜன் இந்த ஆலய ஈசனை வணங்கி வரங்களை பெற்றான். கோயிலுக்குள்ளே நந்தி தீர்த்தமும், வெளியே பிரும்ம தீர்த்தமும் அமைந்துள்ளன.  வேண்டுவோர் வேண்டியதை வேண்டு முன்னரே அருளும் வடிவுடையம்மனை வணங்கி வளங்கள் பெறுவோம்.
 
 

No comments:

Post a Comment