Saturday 1 October 2016

காசியில் அருள்புரியும் த்வாதச ஆதித்யர்கள்!

சூரிய பகவான் ஈசனை வழிபட்ட தலங்கள் அநேகம். அவற்றில் முதன்மையானது புனித கங்கை பாய்ந்தோடும் காசி. இத்தலத்தில் 12 ஆதித்யர்கள் அருள்புரிவதாக காசிகண்டம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களைத்தான் வேதங்கள் த்வாதச ஆதித்யர்கள் என்று குறிப்பிடுகின்றன. தை மாதம் பிறக்கும் இவ்வேளையில் காசியில் அருள்புரியும் அந்த 12 சூரிய பகவான்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

கங்காதித்யர் : பகீரதன் கடுந்தவம் செய்து கங்கையை பூமிக்குக் கொண்டு வந்த அதே சமயத்தில், காசிக்கு வந்து கங்கைக் கரையில் தங்கி, காசி விஸ்வநாதரை வழிபட்டான் சூரியன். அந்த சமயத்தில், ஆகாயத்திலிருந்து கங்கை பொழிவது கண்டு மகிழ்ந்த சூரியன், தானும் கங்கையை உளமாற வழிபட்டான். இதனாலேயே இவர் கங்காதித்யர் என அழைக்கப்பட்டார். காசியில் லலிதாகாட்டில் உள்ளது இந்த சூரிய பகவானின் ஆலயம்.

விருத்தாதித்யர் : நான்கு வேதங்களையும் கற்ற விருத்தன் என்பவன், சூரிய பகவானைக் குறித்து கடுந்தவம் புரிந்து தன் இளமை மீட்கப் பெற்றான். இந்த விருத்தனுக்கு அருளிய சூரிய பகவான், காசியில் மீர்காட் எனும் இடத்தில் நிலை கொண்டுள்ளார். இவரை தரிசித்தால் வயதான காலத்தில் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளிலிருந்து மீளலாம்.

திரௌபதி ஆதித்யர் : பஞ்சபாண்டவர்களின் மனைவியான திரௌபதி வழிபட்ட சூரியன் இவர். இவரிடமிருந்துதான் திரௌபதி அட்சய பாத்திரத்தைப் பெற்றதாக  ஐதீகம். இவரின் ஆலயம் விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் அட்சய பீடத்தில் அமைந்துள்ளது.

லோலார்க்கர் ஆதித்யர் : மாந்தரின் மன அழுக்குகளையும், சஞ்சலங்களையும் தனது ஞானத்தால் தீர்ப்பதால் லோலார்க்கர் எனும் பெயர் பெற்ற சூரியனின் ஆலயம் அதிசங்கமத்தில், லோலார்க்க குண்டம் அருகில் உள்ளது. அந்த குண்டத்தில் நீராடி அங்கு அருளும் சூரியபகவானை வணங்கினால் தீராத நோய்களும் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.

மயூகாதித்யர் : பஞ்சகங்கா காட் அருகில் மங்களாகௌரி ஆலயத்தில் அருள்கிறார் மயூகாதித்யர். முன்னொரு சமயம் ஈசனையும், உமையையும் மங்களாகெளரி, கபஸ்தீஸ்வரர் எனும் திருநாமமிட்டு காசியில் பிரதிஷ்டை செய்து கடுந்தவம் புரிந்தார் சூரியபகவான். அவரது தவத்தை மெச்சிய அம்மை-அப்பர், சூரியனுக்கு மயூகன் என பெயர் சூட்டி அருளினர். மயூகன் வழிபட்ட ஈசன் மயூகாதித்யர் ஆனார்.

அருணாதித்யர் : காஷ்யப மகரிஷிக்கும் வினதைக்கும் பிறந்த மூன்று முட்டைகளில் முதல் முட்டையில் இருந்து ஆந்தையும், இரண்டாவது முட்டையில் இருந்து ஊனமுடன் அருணனும், மூன்றாவது முட்டையில் இருந்து கருடனும் தோன்றினர். இம்மூவரில் ஆந்தையும், அருணனும் காசிக்கு வந்து சூரிய பகவானை வணங்கினர். அவர்களுக்கு அருள் புரிந்த சூரியன், அருணனை தனது தேரோட்டியாக நியமித்துக் கொண்டார். இந்த அருணாதித்யர், த்ரிலோசனர் ஆலயத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

ஸாம்பாதித்யர் : விஸ்வநாதர் ஆலயத்திற்கு மேற்கே உள்ளது இந்த சூரியனின் ஆலயம். ஸாம்பன் என்பவன் கிருஷ்ணரால் குஷ்டரோகியாகும்படி சாபம்  பெற்றான். பின் கிருஷ்ணர் இரக்கப்பட்டு சொன்ன ஆலோசனையின் பேரில், காசிக்கு வந்து சூரியபகவானை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றான். ஸாம்பன் வழிபட்ட ஆதித்யனாதலால் ஸாம்பாதித்யர் என பெயர் பெற்றார்.

உத்திர அர்க்கர் : காசிமாநகரின் வடக்கே அலேம்புரா எனும் இடத்தில் உள்ள சூரிய தீர்த்தமே உத்திர அர்க்க குண்டம். அதை வக்ரியா குண்டம் என்றும்  அழைக்கின்றனர். அங்கு ஒரு ஆட்டிற்கும், ஒரு பெண்ணிற்கும் அவர்கள் மேற்கொண்ட தவத்தை மெச்சி சூரியன் அருளிய இடம் அது. வக்ரி எனில் ஆடு என்று பொருள். இங்கு அருளும் சூரிய மூர்த்தி உத்திர அர்க்கர் எனும் திருப்பெயரோடு அருள்கிறார்.

சுஷோல்கா ஆதித்யர் காசியில் புகழ்பெற்ற த்ரிலோசனர், காமேஸ்வரர் ஆலய பிராகாரத்தில் அருளும் சுஷோல்கா ஆதித்யர் என்ற சூரிய பகவான் கருடனாலும்,  அவர் தாய் வினதையாலும் வழிபடப்பட்டவர்.

யம ஆதித்யர் : சூரிய பகவானின் புதல்வனான யமதர்மராஜன் காசியில் தன் தந்தைக்கு ஆலயம் அமைத்து தவமியற்றி, வரங்களைப் பெற்றதாக ஐதீகம். இந்த யம ஆதித்யர் ஆலயம் காசியில் சங்கடா காட் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

கேசவாதித்யர் : கேசவாதித்யர் என்ற இந்த சூரிய பகவான் வருணா சங்கமத்தில் உள்ள கேசவர் ஆலயத்தில் அருள்கிறார். கேசவனாகிய நாராயணனின் அருளால் லிங்கம் அமைத்து வழிபட்டதால் கேசவாதித்யர் எனப் புகழ் பெற்று விளங்குகிறார்.

விமலாதித்யர் : தொழுநோயால் பாதிக்கப்பட்ட விமலன் என்பவர் காசிக்கு வந்து சிவலிங்கத்தை நிறுவி ஈசனையும் சூரியனையும் வழிபட்டார். இதனால்  மகிழ்ந்த சூரியன், இனி உன் வம்சத்திற்கே தொழுநோய் வராது என வரமருளினார். கதோலியாவுக்கு அருகே ஜங்கம்பாடியில் இந்த விமலாதித்யர் அருள் புரிகிறார்.
 
 

No comments:

Post a Comment