Saturday 1 October 2016

17 - கவலைகள் தீர்த்து நிம்மதி அருளும் காளி!

சக்தி பீடங்கள் - 17

திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடப்பெற்ற திருவாலங்காடு ஆலய மூலவர் வடாரண்யேஸ்வரர், அம்பிகை வண்டார்குழலி. இக்கோயில் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் ஐம்பெரும் அம்பலங்களில் இது ரத்தின சபை ஆகும். இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்கப் பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, ஈசனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காளி பீடம். ‘தலைவலி மருந்தீடு காமாலை சோகை சுரம்’ என்று துவங்கும் பழனி திருப்புகழ் பாடலில் ‘மாகாளி நாண முளம் அவைதனில் நடித்தோனை’ என்ற அடிகளில் திருவாலங்காட்டில் சிவபெருமான் ஆடிய போட்டி நடனத்தில் காளியை தோற்கடித்த வரலாற்றை அருணகிரிநாதர் தெரிவிக்கிறார்.

சிவபெருமானின் தாண்டவக் கோலத்தைக் காணவிரும்பத் தவமிருந்த சுனந்த முனிவருக்கு திருவாலங்காடு தலத்தின் பெருமையை எடுத்துக்கூறி அங்கு சென்று தவமியற்றக் கூறினார் சிவபெருமான். அதன்படி சுனந்தர் திருவாலங்காடு வந்து கடும் தவமியற்றினார். நெடுங்காலம் செல்லவே அவரை மூடியபடி சுற்றிலும் புல் வளர்ந்து, உச்சியில் முஞ்சிப் புல்லும் (நாணல்) முளைத்தது. அதனால் அவருக்கு முஞ்சிகேசர் என்ற பெயரும் வந்தது. அதேநேரம் சிவனின் திருக்கரத்தில் ஆபரணமாக இலங்கிய கார்கோடகன் என்னும் பாம்பு ஈசனின் கையிலேயே நஞ்சைக் கக்கி விட்டது. அக்குற்றத்திற்காக அந்தப் பாம்பையும் திருவாலங்காடு சென்று தவமியற்றக் கட்டளையிட்டார் ஈசன். இதனிடையே நிசும்பன், சும்பன் என்ற அரக்கர்கள் தங்களுக்குள் தேவர்களுக்கு அதிகம் துன்பம் விளைவிப்பர் யார் என்று ஒரு போட்டி! இருவரும் ஒருவரையொருவர் மிஞ்சும் விதத்தில் தேவர்களைப் பெரிதும் வதைத்தனர்.

அவர்கள் உடனே ஓடோடிப்போய் பராசக்தியை சரணடைந்தார்கள். ‘உங்களைத் துன்புறுத்தும் அசுரர்களை ஒழிப்பேன், கவலை வேண்டாம்,’ என்று அவர்களுக்கு தைரியம் தந்து, அசுரர்கள் வசிக்கும் மலை அடிவாரத்தில் தவயோகினியாக அமர்ந்தாள். அப்போது சண்டன், முண்டன் என்ற வேறு இரு அரக்கர்கள், அம்பிகையின் தவக்கோலத்தையும் மீறி பிரகாசித்த அழகில் மயங்கி துர் எண்ணத்துடன் தேவியை அணுகினர். தேவி சிறிது சினம் காட்ட அவள் தோளிலிருந்து ஒரு சக்தியும், அனேகப் படை களும் தோன்றி அரக்கர்களை துவம்சம் செய்தன. ‘சண்டனையும் முண்டனையும் கொன்றதால் உனக்கு இன்று முதல் “சாமுண்டி’ என்று பெயர். உலகோர் உன்னை வணங்குவார்கள்,’ என்று தன் தோளிலிருந்து தோன்றிய சக்திக்கு அருள்பாலித்தாள் உமையம்மை.

சண்டன் முண்டனுக்கு நேர்ந்த கதியைக் கண்டு வெகுண்டு தேவியுடன் நேருக்கு நேராய்ப் போராட ஏராளமான அசுர சேனைகளுடன் நிசும்பனும் சும்பனும் வந்தனர். ஆனால், தேவியின் உடலில் இருந்து வெளிக்கிளம்பிய சப்த மாதர்களும் சிவகணங்களும் அந்த அசுரர்களையும் அவர்களது சேனைகளையும் தவிடு பொடியாக்கினர்! நிசும்ப, சும்பர்களுக்கு ஒரு தங்கை! குரோதி என்று பெயர். அவளுக்கு ரத்தபீஜன் என்று ஒரு பிள்ளை. மகா கொடூரமானவன். தன் மாமன்மார்களைக் கொன்றவர்களைப் பழி தீர்த்தே தீருவேன் என்று பெரும் அசுர சேனையுடன் வந்தான். சப்தமாதர் படை அவனுடன் போரிட்டது. ஆனால், அவனை அவர்களால் வெல்ல முடியவில்லை. காரணம் அவன் பெற்றிருந்த ஒரு விசித்திரமான வரம்!

அதன்படி ரத்தபீஜன் உடலிலிருந்து ஒரு சொட்டு ரத்தம் பூமியில் சிந்தினாலும் அந்த ரத்தத்திலிருந்து ஆயிரம் அசுரர்கள் தோன்றி அவனுக்குத் துணையாகப் போராடுவார்கள்! ரத்தபீஜனை வெட்டவெட்ட அவன் உடலிலிருந்து ரத்தம் வழிந்து பூமியில் சொட்ட, ஆயிரம் ஆயிரமாய் லட்சக்கணக்கில் அசுரர்கள் தோன்றி சப்தமாதர் படைகளை துவம்சம் செய்தனர்! இந்த அதிசயத்தை தேவியிடம் ஓடிச்சென்று சப்தமாதர் சொல்ல, அம்பிகை வெகுண்டு எழுந்தாள். உடனே தன் தோளிலிருந்து மகா உக்கிரம் பொருந்திய காளியைத் தோற்றுவித்து ‘ஏ காளி! நான் இப்போது அந்த ரத்தபீஜனை வெட்டி சாய்க்கப் போகிறேன். அப்போது அவன் உடலிலிருந்து வெளிப்படும் ரத்தம் துளிக்கூட பூமியில் சிந்தாமல் உன் கைகளால் ஏந்திக் குடித்து விடு!’ என்று ஆணையிட்டு, அதன்படியே செய்ய, காளி தன் எண்ணற்ற கரங்களால் அவன் ரத்தத்தை ஏந்திப் பருக அவன் மாய்ந்தான். தேவர்கள் துன்பம் தொலைந்தது.

காளிக்குப் பல வரங்களை அளித்து அவளுக்கு சண்டி என்னும் பெயரிட்டாள் தேவி. காளிக்கு இப்போது ஏக உற்சாகம். உமையிடம் பெற்ற வரங்களாலும் ஏராளமாய் அசுரன் ரத்தத்தைக் குடித்ததாலும் அவளுக்குள்ளும் அசுரத்தனம் மேலோங்க ஆரம்பித்தது. மோகினி, டாகினி என்று பல பூதப் பிள்ளைகள் புடை சூழ காடெல்லாம் சுற்றி இறுதியில் திருவாலங்காட்டுக்கு அருகில் வந்து தங்கி அனைவரையும் துன்புறுத்திக் கொண்டிருந்தாள். காளியின் இந்த துர்ச்செயல்கள் நாரதர் மூலம் திருமாலுக்கும் திருமால் மூலம் சிவனுக்கும் செல்ல, அவர் காளியின் செருக்கை அடக்கத் திருவாலங்காட்டுக்கு வந்தார். அவரது போர்க்கோலத்தைக் கண்டு அஞ்சிய காளி போரைத் தவிர்த்து விட்டு சிவனை நடனப் போட்டிக்கு அழைத்தாள்.

அவள் நடனத்தில் மகாநிபுணி. அந்தத் தைரியத்தில்தான் சிவனைப் போட்டிக்கு அழைத்தாள். போட்டியில் இருவரும் மாற்றி மாற்றி தத்தம் திறமையை காட்டினர். சிவன் எப்படி நடனமாடினாலும் காளி அதற்குச் சமமாகத் தன் திறமையை வெளிப்படுத்தினாள். அப்பொழுதுதான் சிவபெருமான், தனது பிரசித்திப் பெற்ற ஊர்த்துவ தாண்டவத்தை ஆடினார்! தன் காதில் இருந்த மணிக்குழைகளில் ஒன்றைக் கீழே வீழ்த்திப்பின் அதனைத் தன் இடக்கால் பெருவிரலால் எடுத்துக் காலை காதுவரை உயர்த்திக் காதில் பொருத்திக்கொண்டார். இப்படிக் காலை அவ்வளவு தூரம் உயர்த்தி ஆட முடியாத தன் இயலாமையை எண்ணி நாணப்பட்டு தோல்வியை ஏற்றுக்கொண்டாள் காளி.

அப்போது காளியிடம் இறைவன், ‘என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள், முதலில் உன்னையும், அடுத்து என்னையும் வழிபட்டால்தான் முழுப் பலன் கிடைக்கும். அதோடு அம்பிகையின் சக்திபீடங்களில் இது காளிபீடமாக பிரகாசிக்கட்டும்,’ என்றும் வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனி கோயில் கொண்டு வரப்ரசாதியாய் இத்தலத்தில் அருள்பாலிக்கிறாள். காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் பெற்ற சிறப்புடையது இக்கோயில். தாமரை மலர் விரித்தாற்போல் அமைந்து அதன் மேல் அமைந்துள்ள ‘கமலத்தேர்’ இக்கோயிலின் சிறப்பம்சம்.

ஜ்வாலாமுகி பீடம்

தேவியின் நாக்கு விழுந்த இடம். பீட சக்தியின் நாமம் ஸித்திகா. அக்ஷர சக்தியின் நாமம் ஒளம் எனும் ஒளஷதாதேவி.  பிளந்த வாய், நீண்ட தொங்கும் சிவப்பான நாக்கு, கடுமையான பார்வை, நெரித்த புருவங்கள் கொண்ட தோற்றத்தில் நீலமேகவர்ணத்துடன் ஆறு கரங்களில் சூலம், கட்கம், வரமுத்திர, கதை, ஜ் கேடயம், அபயமுத்திரை தரித்து பெரிய வயிற்றோடு பன்றியின் மீது அமர்ந்த திருக்கோலம் கொண்டவள் என சித்சாபர தந்திரம் எனும் நூல் குறிப்பிடுகிறது. இத்தலத்தை உன்மத்தர் எனும் பைரவர் காக்கிறார். இத்தலம் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ளது.
 

No comments:

Post a Comment