Saturday 1 October 2016

13 - திருவையாறு அறம் வளர்த்த அம்பிகை!


சக்தி பீடங்கள் - 13காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் ஆறு சிவஸ்தலங்களில் திருவையாறு ஒன்று. மற்றவை: 1. திருவெண்காடு, 2. சாயாவனம், 3. மயிலாடுதுறை, 4. திருவிடைமருதூர், 5.திருவாஞ்சியம்.

திருவையாறு ஈசன் ஐயாறப்பர், பஞ்சநதீஸ்வரர் என்றும், இறைவி தர்மசம்வர்த்தனி, திரிபுரசுந்தரி என்றும் வணங்கப்படுகின்றனர். திருவையாறு மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்பும் கொண்டது. முதல் பிராகாரத்தில் எழுந்தருளியுள்ள தக்ஷிணாமூர்த்தி மிகச் சிறப்புடையவர். இவர் ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். வலது கரங்களில் கபாலம், அபய முத்திரை; இடது கரங்களில் சூலம், வேதச்சுவடிகள் தாங்கி காட்சி தருகிறார். இவர் மகாவிஷ்ணுவுக்கு குருவாக இருந்து வேதங்களை உபதேசித்த ஒப்பற்ற திருத்தலம் திருவையாறு. தட்சிணாமூர்த்தியின் பாதத்தின் கீழே கூர்மம் (ஆமை) அமைந்திருப்பது சிறப்பம்சம்.

இச்சுற்றின் நாற்புறங்களிலும் கோபுரங்கள் இருக்கின்றன. ஐந்தாம் பிராகாரத்தில் கிழக்கு நோக்கிய ஐயாரப்பன் சந்நதியும், திரிபுரசுந்தரி சந்நதியும் இருக்கின்றன. சுவாமி சந்நதியிலும், அம்பாள் சந்நதியிலும் தனித்தனியாக ராஜகோபுரங்கள் உள்ளன. மூலவர் ஐயாரப்பர் ஒரு சுயம்பு லிங்கம். இது பிருத்வி (மண்ணாலான) லிங்கம் என்பதால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை; ஆவுடையார்மேல் மட்டுமே செய்யப்படும். லிங்கத் திருமேனிக்கு புனுகுச் சட்டம் சாத்தப்படுகிறது.
இறைவி தர்மசம்வர்த்தினி காஞ்சி காமாட்சியைப் போன்றே இறைவனிடம் இருநாழி நெல் பெற்று 32 அறங்களையும் செய்தமையால் அறம் வளர்த்த நாயகி என்றும் அறியப்படுகிறாள்.  இந்த இறைவி இடக்கரத்தை இடுப்பில் ஊன்றியும், மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியும், மஹாவிஷ்னு ஸ்வரூபத்தில் தோற்றமளிக்கிறாள். அன்னையின் புன்னகை இதழ்களும், கருணை முகமும் நம்மை செயலிழக்க வைக்கின்றன.

தென்னாட்டுச் சிவன் கோயில்களில் ‘படிநெல் திருவிழா’ எனும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆலயத்திலும் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்தப் பிரபஞ்சத்தில் மனிதர்கள் கானகங்களில் கனிகளையும், கிழங்குகளையும் உணவாக உட்கொண்டு வருவதைப் பார்த்த உலகநாயகி, சிவபெருமானிடம் அந்தக் குழந்தைகளின் உணவுக்காக தானியங்களை உற்பத்தி செய்துதரும்படி கேட்டுக்கொண்டபோது, சிவபெருமான் அன்னையிடம் ‘இரு நாழி’ தானியத்தை அளந்து கொடுத்து, உலகிலுள்ள மனிதர்கள் உண்டு வாழ வழிவகுத்தாராம். அந்த இரு நாழி தானியத்தை அன்னை தன் மக்களிடம் கொடுக்க, அவர்கள் அதனை பூமியில் விதைத்து ஒன்றைப் பத்தாக நூறாகப் பெருக்கி இன்று வரை உணவாக உண்டு வருகிறார்கள்.

இப்படி அம்பிகை 32 வகையான அறங்களைச் செய்து மக்கள் குறைவின்றி வாழ வழிவகுத்ததால்தான் அந்த பராசக்தி  இங்கு “அறம் வளர்த்த  நாயகி” எனும் அரும்பெயர் பெற்றாள். ‘அபிராமி அந்தாதி’யில், அபிராமி பட்டர், திருக்கடவூர் அன்னை அபிராமியைப் போற்றி பாடும்போது “ஐயனளந்த படியிரு நாழிகொண்டு இவ்வண்டமெல்லாம் உய்ய அறம் செய்யும் உன்னையும் போற்றி ஒருவர் தம்பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்றன் மெய்யருளே” என்று பாடுகிறார். - ‘இப்படிப்பட்ட அறம்செய்த நாயகி நீ இருக்கும்போது, நான் கற்ற செந்தமிழ்ப் பாக்களால் வேறு எவரிடமெல்லாமோ சென்று பொய்யையும், மெய்யையும் சொல்லி முகஸ்துதி செய்து வாழ்வேனோ? இல்லை.

உன் புகழ்பாடி உன் சந்நதியில் உன் கோடி சூரிய பிரகாச முக தரிசனம் செய்வதையே பாக்கியமாகக் கருதுகிறேன்’ என்பது பொருள். அம்பாளுக்கு திரிபுரசுந்தரி, தர்மாம்பிகை எனும் திருப்பெயர்களும் வழங்கப்படுகின்றன. பார்ப்போர் மனம் தன் அருளில் ஆழ்ந்திடும் வண்ணம் அம்பிகையின் அணிகலன்கள், ஆடை அலங்காரங்கள் கொண்டு விளங்குகிறாள். நான்கு திருக்கரங்கள். பின் இரு கரங்களில் அக்கமாலை, கெண்டி தாங்கியும், முன்னிரு கரங்களில் ஒன்று அபயஹஸ்தமாகவும், மற்றொன்று வரதம் காட்டியும் அமைந்திருக்கிறாள். நின்ற கோலத்தில் முழு அலங்கார பூஷிதையாக அம்மனைக் காண்பதற்குக் கண்கள் கோடி வேண்டும்.  சக்தி பீடங்களில் இத்தலம் தர்மபீடம் என போற்றப்படுகிறது. இந்த தர்மசம்வர்த்தனி அம்பிகை மிகவும் வரப்ரசாதி. சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜருக்கு ஒருமுறை ஓயாத இருமல் ஏற்பட்டது.

வீட்டினுள் படுத்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார் அவர். அப்போது அவர் மனைவியிடம் ஐயாறப்பர் ஆலயத்தில் ஒரு பெண்மணி, தியாகராஜருக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் கஷாயம் வைத்துக் கொடுக்குமாறு யோசனை சொன்னாள். அதன்படி மனைவி கொடுத்த கஷாயத்தை குடித்த மறுநொடியே அவரின் இருமல் நின்றது. அப்போது யோசனை சொன்ன பெண்மணி அவர்கள் வீட்டைக் கடந்து சென்றாள். அவள் அணிந்திருந்த தங்க ஆரத்தை எங்கோ பார்த்த நினைவாக உள்ளதே என தியாகராஜர் யோசித்த மறுநொடியே அவர் நினைவில் தர்மசம்வர்த்தனி தோன்றி, தானே ஸ்ரீராமனின் உத்தரவுப்படி உனக்கு கஷாயம் தயாரித்துத் தரச் சொன்னேன் என்று கூறினாள். அதனால் மகிழ்ந்த தியாகராஜர் நிறைய கிருதிகளை தேவியின்மேல் இயற்றியருளியுள்ளார். ‘விதி சக்ராதுலகு தொரகுணா’ என்ற யமுனாகல்யாணி ராகக் கீர்த்தனையில், தர்மசம்வர்த்தனியான அன்னையின் வெள்ளிக்கிழமை தர்பார் வைபவத்தை மிக அழகான சொல்-இசை ஓவியமாகவே வர்ணிக்கிறார், தியாகராஜர்.

‘பிரம்மா, இந்திரன் முதலான தேவர்களுக்கும் காணக்கிடைக்காத தர்மம் என்னும் கடலில் துயிலும் அன்னையின் இந்த சேவையைக் காண வாரீர்! அன்னையின் வரவை எதிர்நோக்கி அனைவரும் காத்துள்ளனர். விருதுச் சின்னங்களை ஏந்தி நிற்கின்றனர். ஜய ஜய என்ற கோஷங்களை எழுப்புகின்றனர். நாட்டியமாடுகின்றனர். மலர்களைச் சொரிகின்றனர். அன்னை பராசக்தி (தர்மசம்வர்த்தனி) மஹாலட்சுமியுடன் சிரித்துப் பேசியபடி வருகிறாள்; அவளுடைய பிரகாசமான புன்னகையுடன் போட்டியிட்டபடி அவளணிந்துள்ள வைர வைடூரிய ஹாரங்கள் ஜொலிக்கின்றன,’ என்னவெல்லாம் நேர்முக வர்ணனையாளர் போல விவரிப்பவர், முத்தாய்ப்பாக, நம் உள்ளம் குளிர வைக்கிறார். அதாவது, தேவர்கள் ‘தடபட’ வென பூமியில் விழுந்து தண்டமிட்டு வணங்குவதை கடைக்கண்ணால் பார்த்து அங்கீகரித்துக் கொள்ளும் அழகை நமக்குப் பிடித்துக் காட்டுகிறார். ஆலயத்தின் தென்கோபுர வாசலில் உள்ள ஆட்கொண்டார் சந்நதி மிகவும் முக்கியமானது. இச்சந்நதியில் எப்போதும் குங்கிலியம் மணந்து கொண்டே இருக்கும்.

பக்தர்கள் இங்குள்ள குண்டத்தில் குங்கிலியத்தை சமர்ப்பிப்பார்கள். சிவபெருமான் சுசரிதன் என்ற சிறுவனை யமனிடமிருந்து காப்பாற்றிய சமயம் எடுத்த உருவமே ஆட்கொண்டார். இவரை வணங்கி விட்டு ஆலயத்திற்குச் செல்வது ஒரு மரபு. இவரை வணங்கினால் யமபயம் நீங்கும் என்பது நம்பிக்கை. சுந்தரரும், சேரமான் பெருமானும் திருவையாறு வந்தபோது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. கலங்கி அக்கரையில் நின்ற சுந்தரர் பதிகம் பாட, இக்கரையில் இருந்த விநாயகர் “ஓலம் ஓலம்” என்று குரல் கொடுத்து காவிரியில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி அவரை அழைத்து வந்ததால் இங்குள்ள விநாயகர் ஓலமிட்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். மூன்றாம் பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் நின்று வடக்கு நோக்கி ஐயாறா என்று அழைத்தால் ஏழு முறை அது எதிரொலிக்கும்! திருவையாறு செல்பவர்கள் இதனையும் அனுபவிப்பார்கள். ‘வர வேண்டும் வரவேண்டும் தாயே ஒரு வரம் தரவேண்டும் தரவேண்டும் நீயே’ எனும் பாடலின்படி ஒரு வரம் அல்ல ஓராயிரம் வரமருளும் தர்மசம்வர்த்தனியின் பதமலர்களைப் பணிவோம்.

தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் திருவையாறு இருக்கிறது. திருவையாற்றின் மையப் பகுதியில் இத்தலம் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment