Saturday 1 October 2016

18 - அபயம் அளிக்கும் அபிராமியன்னை!

சக்தி பீடங்கள் - 18திருக்கடையூர் என்றால்,  அமிர்தகடேஸ்வரரை அடுத்து அனைவரின் நினைவுக்கும் வருபவள் அன்னை அபிராமி. தன் பக்தனுக்காக அமாவாசை நாளில் முழு நிலவை வானில் தோன்றச்  செய்த அற்புதம் நிகழ்த்திய தலம் இது.

யமதர்மராஜனை அழித்து, மார்கண்டேயருக்கு என்றும் பதினாறாய் இருக்கும் சிரஞ்சீவித் தன்மை அளித்து கால சம்ஹார மூர்த்தியாக அருள்பாலிப்பவர்  திருக்கடவூரில் (திருக்கடையூர்) உள்ள அமிர்தகடேஸ்வரர். எமபயத்தைக் கடக்க உதவும் ஊர் என்பதால் ‘கடவூர்’.

சுப்பிரமணியம் என்பவர் அபிராமி அம்மன் ஆலயத்தில் தினமும் பஞ்சாங்கம் படிக்கும் பணியைச் செய்து வந்தார்.அம்மன்  மீது கொண்டிருந்த அளவுகடந்த பக்தியின் காரணமாக, பஞ்சாங்கம் படித்து முடித்ததும், அபிராமியின் சந்நதி முன்பு யோக நிஷ்டையில் அமர்ந்து விடுவார்.
இவரது பக்தியை உலகிற்கு உணர்த்திட எண்ணம் கொண்டாள் அபிராமி. அன்றைய தினம் தை அமாவாசை.

தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னர், திருக்கடையூர் ஆலயம் வந்தார். அப்போது அம்மன் சந்நதியில் சுப்பிரமணியம், இவ்வுலகை மறந்து யோகநிஷ்டையில்  இருப்பதை கவனித்தார். அவர் யாரெனக் கேட்டுத் தெரிந்துகொண்டார். உடனே யோகநிஷ்டையில் ஆழ்ந்திருந்த அவரை அணுகிய மன்னர், ‘இன்று என்ன திதி?’  என்று கேட்டார். ஆனால், சுப்பிரமணியத்தின் காதிலோ அது ‘ஸ்திதி’ என்று விழுந்தது. ‘ஸ்திதி’ என்றால் ‘நிலை’ என்று பொருள். மன்னர் கேட்ட  சமயத்தில் சுப்பிரமணியம், பவுர்ணமி போன்ற ஒளி பொருந்திய அபிராமி அம்மனின் திருமுருக தரிசனத்தில் லயித்திருந்ததால், ‘பவுர்ணமி’ என்று கூறிவிட்டார்.  மன்னனுக்கோ கடுமையான கோபம். ‘இன்று இரவு பூரண சந்திரன் வானில் உதிக்காவிட்டால் உமக்கு மரண தண்டனை’ என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.  தன் நிலைக்கு திரும்பிய சுப்பிரமணியத்திடம், அர்ச்சகர்கள் நடந்ததைக் கூறினர்.

‘அமாவாசையில் எப்படி முழு நிலவு தோன்றும்?’ எனக் கேட்டனர். அதற்கு சுப்பிரமணியம், ‘என்னை அந்த நிலையில் இருந்து அப்படி பதில் சொல்ல  வைத்தவள் அன்னை அபிராமி. எனவே, அவளே இதற்கும் நிச்சயம் பதில் சொல்வாள்’ என்று உறுதியுடன் கூறினார். ஆலயத்தின் வெளியில் அக்கினிக் குண்டம்  வளர்க்கப்பட்டது. அதற்கு மேல் நூறு கயிறுகள் கொண்ட உறி தொங்கவிடப்பட்டது. நூறு கயிறுகளும் அறுக்கப்பட்டால் உறியில் இருப்பவர் அக்கினிக் குண்டத்தில்  விழுந்து உயிர் துறப்பார். அந்த உறியில் சுப்பிரமணியம் ஏற்றிவைக்கப்பட்டார். அபிராமி அம்மனின் கருவறை நோக்கி வணங்கிவிட்டு, சுற்றியிருந்த  பக்தர்களுக்கும், மன்னனுக்கும் வணக்கம் தெரிவித்தார். பின்னர் ‘தாரமர் கொன்றையும்’ எனத் தொடங்கும் விநாயகர் துதியைப் பாடி விட்டு, அபிராமியைப்  போற்றி பாடல்களைப் பாடினார். அதுவே அபிராமி அந்தாதியானது. ஒவ்வொரு பாடல் நிறைவிலும், ஒவ்வொரு கயிறாக அறுக்கப்பட்டது.

78 பாடல்கள் பாடிமுடித்து விட்டார். உறியிலும் 78 கயிறுகள் அறுக்கப்பட்டு விட்டன. 79வது பாடலாக ‘விழிக்கே அருளுண்டு’என்று பாடத் தொடங்கியதுதான்  தாமதம், அன்னை அபிராமி தன் காதில் இருந்த தாடங்கம் (தோடு) ஒன்றைக் கழற்றி வானில் வீச, அது முழு மதியாய் பூரண சந்திரனாய் பல மடங்கு  பிரகாசத்துடன் ஒளி வீசியது. ஆம்! அருமை பக்தனுக்காக, அமாவாசை நாளில் வானில் முழு நிலவு தோன்றியது. மன்னன் உள்பட அனைவரும் அன்னை  அபிராமியின் அருள்திறத்தையும், சுப்பிரமணியத்தின் பக்தியையும் எண்ணி மெய்சிலிர்த்தனர். மன்னன் சுப்பிரமணியத்தின் காலில் விழுந்து தன்னை
மன்னிக்கும்படி வேண்டி, ‘அபிராமி பட்டர்’ என்னும் திருப்பெயரைச் சூட்டினார். அப்போது வானில் அசரீரி எழுந்தது: ‘பக்தனே! நீ மன்னனிடம் கூறியச்  சொல்லை மெய்ப்பித்து விட்டோம். அந்தாதியைத் தொடர்ந்து பாடி முடிப்பாயாக!’ அதன்படி தொடர்ந்து 100 பாடல்கள் பாடி அந்தாதியை நிறைவு செய்தார்  அபிராமி பட்டர்.

சக்தி வழிபாடு என்பது மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டுடன் சம்பந்தப்பட்டது. அபிராமி பட்டர், “சௌந்தர்ய லஹரி”யை  அபிராமி அந்தாதி என்று தமிழில்  பாடினார். இது முழுவதும் மந்திர-தந்திர-யந்திர வழிபாடுதான். அன்னை அபிராமி மூன்றடி உயர பீடத்தில், நான்கு திருக்கரங்களுடன் கிழக்குப் பார்த்து நின்ற  திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். பாற்கடலில் கிடைத்த அமுதத்தை திருமால் தேவர்களுக்கு பகிர்ந்தளிக்குமுன், சிவபூஜை செய்தார். சிவபூஜையின்போது  அம்பிகையையும் பூஜிக்க வேண்டும் என்பது நியதி. எனவே, திருமால் தனது ஆபரணங்களைக் கழற்றி வைத்தார். அதிலிருந்து அபிராமி அம்பிகை தோன்றினாள்.  பின் பூஜை செய்து தேவர்களுக்கு அமுதம் பரிமாறினார். திருமால் மார்பில் அணிந்திருக்கும் ஆபரணங்களில், லட்சுமி வாசம் செய்வதாக நம்பிக்கை. அண்ணனின்  ஆபரணத்தில் இருந்து அபிராமி தோன்றியதால், திருமாலை அபிராமியின் அன்னையாகவும் கருதலாம்!

அபிராமி அன்னையை, சரஸ்வதிதேவி பூஜித்து அருள் பெற்றுள்ளார். கருவறையின் பின்புறம் சரஸ்வதி தேவிக்கும், அபிராமி பட்டருக்கும் தனிச் சந்நதிகள்  உள்ளன. திருக்கடையூரில் இன்றும் அபிராமி பட்டர் வாழ்ந்த வீடு இருக்கிறது. திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில், தை அமாவாசை அன்று இரவு 9  மணி அளவில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்க அபிராமி பட்டர் உற்சவம் நடைபெறும். அப்போது அபிராமி அந்தாதி பாடப்படும். அப்போது அபிராமி அம்மன்  நவரத்தின அங்கி அணிந்து வீற்றிருப்பாள். ஒவ்வொரு பாட்டின் நிறைவிலும் அபிராமி அம்மனுக்கு தங்கக் காசு சமர்ப்பித்து, தீபாராதனை செய்யப்படும். 79வது  பாடலின்போது ஆலய கொடிமரத்தின் அருகில் பவுர்ணமி தோன்றும் ஐதீகம் நடத்திக்காட்டப்படும். அபிராமி மிகவும் சக்தி வாய்ந்தவள். சக்தி பீடங்களில் இது  காலபீடமாக போற்றப்படுகிறது.

தன்னை வழிபடுபவர்களுக்கு செல்வ செழிப்பு, கல்யாண வரம், குழந்தை பாக்கியம், கல்வி கேள்விகளில் ஞானம் ஆகியவற்றை வாரி வழங்குகிறாள். மாங்கல்ய  தோஷம் உள்ள பெண்கள், புதுத்தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜித்து, அதை வாங்கி கட்டிக்கொண்டு, ஏற்கனவே கட்டியிருந்த தாலியை காணிக்கையாகச்  செலுத்துகின்றனர். திருக்கடையூரில் பூர்ணாபிஷேகம் (100வயது பூர்த்தி), கனகாபிஷேகம் (90 வயது), சதாபிஷேகம், பீமரதசாந்தி, மணிவிழா மற்றும் ஆயுள் நீடிக்க  யாகம் செய்து கொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. இந்த திருமணத்தின்போது 16 கலசங்கள் வைத்து, அருகில் நவதானியங்களில் நவகிரகங்களை  ஆவாகனம் செய்து, ஹோமம் செய்கின்றனர். கலசங்களில் உள்ள புனித நீரை உறவினர்களைக் கொண்டு, தம்பதியர் மீது ஊற்றுகிறார்கள். இவ்வாறு செய்வதால்  பாவங்கள் நீங்கிவிடுவதாக நம்பிக்கை.

சீர்காழியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் சீர்காழி - நாகப்பட்டினம் வழியில் இத்தலம் அமைந்துள்ளது.

ஜலஸ்தல பீடம்

தேவியின் முகவாய்க்கட்டை விழுந்த இடம். பீட சக்தியின் நாமம் பிராமரீ. அக்ஷர சக்தியின் நாமம் அம். அக்ஷர தேவியின் நாமம் அஞ்சனா எனும் அம்பிகாதேவி.  இவள் கரிய நிறத்துடன் முதிர்ந்த மெலிந்த தோற்றத்தில் பருத்த வயிற்றுடன் புலி வாகனத்தில் அமர்ந்தவளாக சூலம், பாசம், அபயம், வரமுத்திரை ஏந்திய  நான்கு கரங்களுடன் அருட்பாலிக்கிறாள். இத்தலத்தை விக்ருதாக்ஷர் எனும் பைரவர் பாதுகாக்கிறார். இத்தலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவலில்  உள்ளது.
 

No comments:

Post a Comment