Wednesday 19 October 2016

இல்லத்தில் மகிழ்ச்சி ஒளியேற்றும் இந்த்ராணீ !

 

இந்த்ராணீ இந்திரனின் சக்தி. ராஜ்ய லாபங்களைத் தருபவள். ஐராவதம் எனும் வெள்ளை யானையே இந்த தேவியின் வாகனம்.  தேவலோக ராஜ்யபாரத்தைத் தாங்கும் தேவதை இவள். அம்பிக்கைக்கு ஸாம்ராஜ்யதாயினீ என்ற ஒரு திருநாமம் உண்டு. ராஜசூய யாகம் செய்த மண்டலேஸ்வரனை அல்லது ராஜாதிராஜனை சாம்ராட் என்பர். அப்பேர்ப்பட்ட பதவிக்கு சாம்ராஜ்யம் என்றும் பெயர். இங்கு பக்தர்களுக்கு ராஜ்யம் அளிப்பது என்பது வைகுண்டம், கைலாசம்  இவற்றைக் குறிக்கும்.

அரச சம்பத்துகள் எல்லாம் இந்த சக்தியின் அனுகிரஹத்தால் ஏற்படும் என்கிறது லகு ஸ்துதி எனும் கீழ்க்கண்ட ஸ்லோகம்:

ஜாதோ ப்யல்ப பரிச்சதே க்ஷிதிபுஜாம்
 ஸாமாந்ய
மாத்ரே குலேநி: க்ஷோவனி சக்ரவர்த்தி
பதவீம் லப்த்வா ப்ரதா போன்னத:
யத் வித்யாதர ப்ருந்த வந்தித பத: வத்ஸ
 ராஜோ பவேத்
தேவி த்வச் ச்சரணாம்புஜ ப்ரண நிஜ
 ஸோயம் ப்ரஸாதோதய:

இந்திர பதவியை அடைய வேண்டும் என்றால் ஒருவன் ஆயிரம் அஸ்வமேத யாகங்களைச் செய்ய வேண்டும். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், அஷ்டதிக் பாலகர்களுக்கும் தலைவன் தேவேந்திரன். அவனது சக்தியே ஐந்த்ரீ எனும் இந்த்ராணீ. நான்கு தந்தங்களை உடைய ஐராவதம் எனும் வெண்ணிற யானையைத் தன் கொடியாகவும், வாகனமாகவும் கொண்டவள் இவள். அங்குசம், பாசம், வஜ்ராயுதம், தாமரைமலர், வரதம், அபயம் தரித்தவள். இந்திர நீலக் கல்லைப் போன்ற நீல நிறத் திருமேனி உடையவள். சகலவிதமான செல்வச் செழிப்புகளோடும், பூரண ஐஸ்வர்யங்களோடும் பொலிபவள்.

பச்சைநிறப் பட்டாடை அணிந்து பயிர்கள் நன்கு செழிக்க மழை பெய்விக்க வருணனுக்கு ஆணையிடுபவள். கற்பக விருட்சத்தின் நிழலில் ஐராவதமும், காமதேனுவும் சூழ வீற்றருள்பவள். கணிகையர்கள் எனும் ஆடற்பெண்டிர், ஆலயங்களில் சப்தமாதர்களில் இந்த்ராணீயை நடுவில் வைத்து வழிபட்டதாக பண்டைய நூல்கள் உரைக்கின்றன. இவளைச் சுற்றி அனவரதமும் அழகான தேவ மங்கையர்கள் வீற்றிருப்பர். தன்னை வணங்கும் பெண்களுக்கு மனோதைரியம், அழகு, வளமான வாழ்வு போன்றவற்றை தந்தருளும் தேவி இவள்.

ஆயிரம் தூண்கள் கொண்ட கற்பக விருட்சங்கள் நிறைந்த தேவலோக வனத்தில் உள்ள மணிமண்டபத்தில் சிம்மாசனத்தின் மீதுள்ள தாமரை மலரில் அமர்ந்த திருக்கோலம். இந்திரனைப் போன்றே ஆயிரம் கண்கள் கொண்ட தேவி இவள். இந்திரன் த்வஷ்டாவின் புத்திரர்களான விச்வரூபன், விருத்திரன் போன்றோரை ஒரு போரில் கொன்றான். அதனால் பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கப்பெற்று பலம், வீரம், தேஜஸை இழந்தான். மேலும் பீடைகள் பிடிக்காமல் இருக்க மானஸஸரஸ் என்ற இடத்தை அடைந்த இந்திரன் அங்கு தாமரைத் தண்டில் மறைந்து இருந்தான். இந்திரன் தலைமறைவானதால் வெற்றிடமான தேவேந்திர பதவிக்கு தேவர்களும் முனிவர்களும் சேர்ந்து ஆலோசனை செய்து, நஹுஷனை தலைவனாக்க முடிவு செய்து தேவலோகத்துக்கு அதிபதியாக்கினர். தற்காலிக இந்திர பதவியை அடைந்த இந்திரன், நிரந்தர இந்த்ராணீயின் அழகில் மயங்கி அவளை அடைய எண்ணினான்.

இந்த்ராணீ குரு பகவானைச் சரணடைந்து தனக்கு நேர்ந்த துன்பத்திலிருந்து மீள உதவும்படி கேட்டாள். நஹுஷனை அழைத்த குரு பகவான், ‘இந்திரன் இருக்கும்போது நீ அவன் மனைவியை அடைய நினைப்பது பாதகமான பாவச்செயல்,’ என அறிவுரை கூறியும் அவன் அதனை அலட்சியம் செய்தான். குரு பகவான் இந்த்ராணீயிடம், ‘நீ பராசக்தியைத் துதித்து வணங்கு. அவள் திருவருளால் உனக்கு இந்திரனும் கிடைப்பான். நஹுஷனும் அழிவான்,’ என்று கூற இந்த்ராணீயும் தேவியைத் துதிக்க தேவியும் அகமகிழ்ந்தாள். ‘இந்திரனின் மனைவியே நீ உடனடியாக மானஸஸரஸுக்குச் செல்வாயாக. அங்கு உபஸ்ருதி எனும் வித்தையை உபாஸிப்பாயாக உன் எண்ணங்களும், அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்,’ எனக் கூறி மறைந்தாள்.

அதன்படியே இந்த்ராணீயும் செய்ய அங்கு தடாகத்தில் ஒரு தாமரைப்பூ தண்டில் மறைந்திருந்த இந்திரனும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்று பழையபடி பலம், வீரம், வீர்யத்துடன் இந்த்ராணீ தேவியுடன் சேர்ந்தான். பராசக்தியின் தனிப்பெரும் கருணையால் மங்களகரமான வாழ்வு கிடைக்கப்பெற்றாள் இந்த்ராணீ.


தம்மைத் துதிக்கும் பக்தர்களுக்கும் சர்வ மங்களங்கள் உண்டாக அருள்பவள் இத்தேவி. வியாசர் பாரதத்தில் திரௌபதி, இந்த்ராணீயின் அம்சம் எனவும், பாண்ட வர்கள் இந்திரனின் அம்சம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


அதி சௌந்தர்யரூபம், எந்நேரமும் சிவ பூஜையில் ஈடுபாடு போன்ற பல வரங்களைப் பெற்றுத் திகழ்பவள் இந்த்ராணீ. தன்னை வழிபடும் மங்கையர்க்கு அவர்கள் விரும்பிய வரனுக்கு மாலையிட அருள்வாள்.

சதையின் அதிதேவதையான இவள் கோபம் கொண்டால் அம்மை நோய் ஏற்படும். வேப்பிலையால் விசிறி, சந்தனம் பூசி, பலாச்சுளையை நிவேதித்து தானமளித்தால் நலம் உண்டாகும்.

த்யானம்

அங்குசம் தோமரம் வித்யுத் குலசம்  பிரதீகரை:
இந்திர நீல நிபேந்த்ராணி த்யேயா ஸர்வ ஸம்ருத்திதா

மந்த்ரம்

ஓம் ஈம் இந்த்ராண்யை நம:
ஓம் ஐம் சாம் இந்த்ராணீ கன்யகாயை நம:

காயத்ரி

ஓம் ச்யாமவர்ணாயைவித்மஹே
வஜ்ர  ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்த்ரீ ப்ரசோதயாத்.

ஓம் கஜத்வஜாய வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ இந்த்ராணீ ப்ரசோதயாத்.
ஓம்! வெண்ணிற யானை ஓவியம் வரையப்பட்ட கொடியை ஏந்தி, கரத்தில் வஜ்ராயுதம் தரித்த இந்த்ராணீ என்னும் தேவியை த்யானிக்கிறேன். அவள் என் முன்னே தோன்றி அளவற்ற செல்வங்களையும் மேலான சுகங்களையும் மனதில் மகிழ்ச்சியையும் அருள்வாளாக.

பூரண த்யானம்

அம்பாயா ஸ்தன மண்டலாத் ஸ்முதிதாம்
சுவேதே த்வீபே ஸுஸ்திதாம்
ஹஸ்தை: அங்குச தோமரே சதத்தீம்
பாசாம்ச வஜ்ராயுதாம்

மாஹேந்த்ரோபல தேஹகாந்தி ருசிராம்
மாஹேந்த்ர சக்திம் பராம்
இந்த்ராணீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம்
ஸதபாதகு ஸௌபாக்யதாம்.

பூரண த்யானம் 1

ஏகவக்த்ராம் த்விநேத்ராம் ச சதுர்புஜ  ஸமன்விதாம்
ஸரத்ன மகுடோ பேதாம் ஹேம வர்ண ஸ்வரூபிணீம்

வராபயகராம் போஜாம் வஜ்ரம் சக்திம் ச தாரிணீம்
மாஹேந்த்ரீம் மாதரம் வந்தே கஜ வாஹன ஸம்ஸ்திதாம்.

ஒருமுகம், இரண்டு கண்கள், நான்கு கரங்களையுடையவளும், ரத்னங்கள் இழைக்கப்பெற்ற மகுடத்தை அணிந்திருப்பவளும், பொன்னிறமான மேனியை உடையவளும், வரதம், அபயம், வஜ்ராயுதம், சக்தி ஆகியவற்றைக் கரங்களில் கொண்டவளும், யானை வாகனத்தின் மீது வீற்றிருப்பவளுமான இந்த்ராணீ தேவியை வணங்குகிறேன்.

தேவி மஹாத்மியத்தில்,
‘இந்த்ராணீ கிரீடினி மஹா வஜ்ரே ஸஹஸ்ரநயனே  ஜ்வலே
வ்ருத்ர ப்ராணஹரே சைந்த்ரீ நாராயணீ  நமோஸ்துதே,’

என்று வருகிறது.


கிரீடம் தரித்து பெரிய வஜ்ராயுதம் தாங்கி, ஆயிரம் கண்களுடன் ஜொலிக்கும் இந்திரனின் மகாசக்தியே, விருத்தாசுரன் பிராணனைப் போக்கியவளே, உன்னை நமஸ்கரிக்கின்றேன்.

No comments:

Post a Comment