Wednesday 19 October 2016

ஐப்பசி கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி-கர்வா சௌத்!



கணவருடைய நீண்ட ஆயுள், குன்றாத ஆரோக்கியம், குறையாத வளம், வெற்றிகள், சதிபதிகளின் மாறாத அன்னியோன்னியம் இவற்றை வேண்டிப் பெண்கள் இயற்றும் விரதம் இது.
 
இவ்விரதம் சாந்திரமான கார்த்திக மாதத்தில் (ஐப்பசி மாதம்) கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்று கொண்டாடப்படுகிறது.

 

நம் தென்னிந்திய மாநிலங்களில் காரடையான் நோன்பு மிகவும் முக்கியமானது. இதனைப் போன்று வட இந்தியாவில் (உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காச்மீரம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில்) கொண்டாடப்படும் விரதமே கர்வா சௌத்.

 
பாண்டவர்கள் வனவாச காலத்தின்போது அர்ஜுனன் திவ்யாஸ்திரங்களை வேண்டித் தவம் செய்யச் சென்றான். அப்போது தன் பர்த்தாக்களின் துயர்களை எண்ணி வருந்திய திரௌபதிக்குக் கிருஷ்ண பரமாத்மா இவ்விரத முறைகளை உபதேசித்து இதனை இயற்றுமாறு கூறினார்.
 
அவ்வாறே திரௌபதி இவ்விரதமிருந்து அதனால் பாண்டவர்கள் சகல சௌபாக்கியங்களையும் அடைந்தார்கள் என்று ஒரு கர்ணபரம்பரைக் கதை கூறுகிறது.

இவ்விரதம் சாந்திரமான கார்த்திக மாதத்தில் (ஐப்பசி மாதம்) கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்று கொண்டாடப்படுகிறது. சதுர்த்தி என்பதே சௌத் என்று திரிந்தது. இனிக் கர்வா என்ற பெயர் வந்த காரணத்தைப் பார்ப்போம்.
 
கர்வா என்று ஒரு பெண் இருந்தாள். அவள் மகா பதிவிரதை. அவள் கணவனை ஓர் நாள் முதலையொன்று பிடித்துக் கொண்டது. கர்வா தன் கற்பின் சக்தியால் அம்முதலையின் வாயை நூலாலேயே கட்டி, யமதர்மராஜனை அம்முதலையை நரகம் சேர்க்குமாறு கட்டளையிட்டாள். பதிவிரதையின் சாபத்திற்குப் பயந்த யமன் அவ்வாறே செய்வதாகக் கூறிக் கர்வாவின் கணவனுக்கு நீண்ட ஆயுளை வழங்கினார். அந்தப் பத்தினிப் பெண்ணின் நினைவாகவே கர்வா சௌத் மிகுந்த பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அக்காலத்தில் போர்வீரர்களின் பத்தினிகள் போருக்குச் சென்றிருக்கும் தங்கள் கணவன்மார்கள் எவ்வித ஆபத்துமின்றி வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டு இந்நோன்பு இயற்றியிருக்கிறார்கள். இது வட இந்தியாவில் கோதுமை விதைக்கும் காலம். கோதுமையைச் சேமிக்கும் பெரிய மட்பாண்டங்களைக் கர்வா என்றழைப்பார்கள். இந்த ஆண்டு கோதுமை அறுவடை நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டும் பெண்கள் கர்வா சௌத் விரதமிருக்கிறார்கள்.

மேலும் சிறிய வயதில் திருமணமாகிக் கணவன் வீடு செல்லும் மணப்பெண் தனிமையாலும் உற்றார் உறவினரைப் பிரிந்த துயராலும் வாடாதிருக்க, கணவனின் ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணப்பெண் தன் தோழியாக, சகோதரியாக ஏற்றுக் கொள்வாள். அவளை கங்கன் சஹேலி அல்லது தரம் பஹன் என்று அழைக்கிறார்கள். கர்வா சௌத் அன்று இப்பெண்கள் இருவருமே கர்வா எனும் மண்பாண்டங்களை வாங்கி அவற்றில் அழகாக வர்ணந்தீட்டி, அதனுள் வளையல்கள், தலை அணிகள், வீட்டில் செய்யப்பட்ட இனிப்புகள், அழகு சாதனங்கள் ஆகியவற்றை இட்டுத் தங்கள் சிநேகிதியின் வீட்டிற்குச் சென்று இக்கர்வாக்களைத் தங்கள் அன்புப் பரிசாக அளிப்பார்கள். இவ்வாறு நட்பினைக் கொண்டாடும் தினமாகவும் கர்வா சௌத் விளங்குகிறது.
 
இவ்விரதத்திற்குச் சில நாட்களுக்கு முன்பிருந்தே இதற்கான ஆயத்தங்கள் துவங்கிவிடும். அழகு சாதனங்கள், குங்குமம், உடைகள், நகைகள், வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கர்வா விளக்குகள் மற்றும் தட்டுகள் ஆகியவை வாங்கப்படும். பெண்கள் அன்று பொழுது புலருமுன்னரே விழித்தெழுகிறார்கள். கதிரவன் உதித்ததிலிருந்து உபவாசம் துவங்குகிறது.
 
அருகாமையில் வசிக்கும் பெண்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடுகிறார்கள். கை, கால்களில் மருதாணியிட்டுக் கொள்கிறார்கள். சாயங்காலம் அனைவரும் ஒருவர் வீட்டில் கூடிப் பூஜை செய்கிறார்கள். அப்போது பயா எனும் கூடையில் வைத்த பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். சூரியன் மறைந்து நிலவு உதித்ததும், ஒரு சல்லடை வழியே முதலில் நிலவைப் பார்த்துப் பின் எதிரில் நிற்கும் தங்கள் கணவனைக் காண்கிறார்கள். கணவன்மார்கள் மனைவிகளுக்கு விதவிதமான பரிசுகளை வழங்கி இனிப்பு உண்பிக்கிறார்கள். பின் பெண்கள் உணவு உட்கொள்கிறார்கள்.
 
இனி, இவ்விரதச் சிறப்பைக் கூறும் ஒரு கதையைக் காண்போம்.
மன்னர் ஒருவருக்கு ஏழு புத்திரர்களுக்குப் பின் பிறந்த ஒரே செல்ல மகள் வீரவதி. அவள்மீது அவள் பெற்றோர்களும் அண்ணன் மார்களும் உயிரையே வைத்திருந்தனர். உரிய காலத்தில் அவள் ஒரு மன்னனுக்கு மணமுடிக்கப்பட்டாள்.

வீரவதி ஒவ்வொரு ஆண்டும் கர்வா சௌத் விரதத்தை அதன் நியமங்களுடன் கடைப்பிடித்து வந்தாள். ஒரு ஆண்டு உபவாசத்தால் அவள் மிகவும் களைத்திருந்ததைக் கண்ட அவளுடைய அண்ணன்மார்கள், ஒரு கண்ணாடியில் ஒளியைப் பாய்ச்சி அதனை நிலவு என்று வீரவதியிடம் காண்பித்து அவளை உணவு உண்ணச் செய்தனர். விரத பங்கமானதால் வீரவதியின் கணவன் மரணமடைந்தான். இதனால் மிகவும் துயறுற்ற வீரவதி, அன்னை பார்வதியின் அறிவுரைக்கேற்ப கர்வா சௌத் விரதத்தை கடும் நியம நிஷ்டைகளுடன் நிறைவேற்ற, யமதர்மராஜன் அவள் கணவன் உயிரைத் திரும்ப அளித்து ஆசீர்வதித்தார். வீரவதி தன் கணவனுடன் பல்லாண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தாள்.
 
 

No comments:

Post a Comment