Saturday 1 October 2016

19 - மங்காத வாழ்வருளும் மஹிஷாசுரமர்த்தினி!

சக்தி பீடங்கள் - 19
தேவிபட்டினம் ராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மஹிஷாசுரமர்த்தினி எனும் உலகநாயகி அம்மன் கோயில் இங்கு இருப்பதால் இது தேவிபட்டினம் என்று அழைக்கப்படுகிறது. அம்பிகையின் சக்தி பீடங்களில் இது வீரசக்தி பீடமாக வழிபடப்படுகின்றது. முதலாம் ராஜராஜ சோழனின் பட்டத்து அரசியான உலகமகாதேவியின் பெயரில் இவ்வூர் அமைக்கப்பட்டதாகக் கூறுவர். உலகமகாதேவி பட்டினம் என்பது நாளடைவில் தேவிபட்டினம் என இவ்வூரில் வீற்றிருக்கும் அம்மன் பெயரிலேயே அழைக்கப்படுகிறது பட்டினம் என்பது கடற்கரையை ஒட்டியுள்ள ஊர்களை குறிப்பதாலும் இது கடற்கரையை ஒட்டியிருப்பதாலும் தேவிபட்டினம் என அழைக்கப்படுகிறது. கோயில் நுழைவு வாயிலில் ஐந்து நிலை ஏழு கலசத்துடன் கூடிய பிரமாண்டமான கோபுரம் அமைந்துள்ளது.  மூலவருக்கு மேல் ஏகதள விமானம் அமைந்துள்ளது. கோயில் எதிரில் சர்க்கரை தீர்த்தம் அமைந்துள்ளது.

கோயில் உட்புறம் பலிபீடம், கொடிமரம்,  சிம்ம வாகனம் உள்ளது. கொடிமரம் அடுத்து பதினாறு கால் மண்டபம் உள்ளது. மண்டபத்தின் மேல்புறம் இருபுறங்களிலும் சிங்கம் வீற்றிருக்க அம்மன் உட்கார்ந்த கோலத்தில் சுதையால் ஆன சிற்பம் உள்ளது. அடுத்துள்ள பதினாறு கால் மகாமண்டபம் முழுவதும் கருங்கல் திருப்பணி. அதற்கடுத்து அர்த்தமண்டபம் தாண்டி, கருவறையில் அம்மன் அருட்பாலிக்கிறாள். சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், நாகர் சந்நதிகள் உள்ளன. தேவிபட்டினம் என்றாலே அனைவருக்கும் ராமர் கடலுக்குள் பிரதிஷ்டை செய்த நவகிரகம்தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால், ராமர் ராவணனை வதம் செய்ய இலங்கை செல்லும் முன் இங்குள்ள  உலகநாயகி அம்மனை வழிபட்டு சென்றுள்ளார். பராசக்தி, தன் ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக எடுத்த அவதாரமே, துர்க்கை அல்லது காளி. மஹிஷாசுரன் என்ற அரக்கன் சிறந்த சிவபக்தன்.

எருமைபோல உருமாறும் சக்தி கொண்ட இவன் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் அளவில்லா துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவனை அழிப்பதற்காக பராசக்தி, திரிகுணா என்ற பெயரில் தோன்றினாள். இவளுக்கு சிவபெருமான் சூலத்தையும், திருமால் சக்கரத்தையும், பிரம்மா கமண்டலத்தையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், அக்னியும், வருணனும் சக்தியையும், வாயு வில்லையும், ஐராவதம் மணியையும், எமன் தண்டத்தையும், நிருதி பாசத்தையும் கொடுத்தார்கள். தவிர, காலன் கத்தி, கேடயத்தையும், சமுத்திரம் தாமரை மலரையும், குபேரன் பாண பாத்திரத்தையும், சூரியன் ஒளிக்கதிர்களையும், ஆதிசேஷன் நாகாபரணத்தையும்  அளித்தார்கள். ஹிமவான் சிம்ம வாகனமானான். சர்வ சக்தி பொருந்திய இந்த தேவி தன்னுடைய பதினெட்டுக்கரங்களிலும் ஆயுதங்களை ஏந்தி சிம்ம வாகனத்தில் சென்று மஹிஷனை வதம் செய்ததால் மஹிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள்.

மஹிஷனை அழித்த அவள் கோபம் குறைந்து சாந்த நிலையில் சுயம்பு வடிவில் இத்தலத்தில் அருள்பாலிக்கிறாள். இந்த உலகை காப்பதற்காக மஹிஷாசுரனுடன் 9 நாள் போராடி 10ம்நாள் வெற்றி பெற்று இங்கு ஓய்வு எடுக்க சயன கோலத்தில் சுயம்புவாக உலகநாயகி என்ற திருநாமத்துடன் தங்கியதாகவும், சொல்லப்படுகிறது.  நவராத்திரி நாயகியான இந்த தேவியை வழிபடுவதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தல அம்மனுக்கு உருவம் ஏதும் கிடையாது. எதற்கெடுத்தாலும் பயப்படுபவர்கள், மன தைரியம் இல்லாதவர்கள், எதிரியின் தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வீரசக்தி பீடமான உலக நாயகி அம்மன் ஆலயத்துக்கு சென்று வணங்கி நல்லருள் பெறலாம் கடல் நடுவே அமைந்துள்ள நவபாஷாணம் எனப்படும் நவகிரகங்கள் அமைந்துள்ளது.

இந்துக்களின் புனித யாத்திரைத் தலம் ஆகும். இங்கு ஸ்ரீராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நவ பாஷாணம் (9 கற்கள்) என்ற நவகிரகங்கள் உள்ளன. இவை கரையிலிருந்து சுமார் 40 மீட்டர் தொலைவில் கடலுக்குள் அமைந்துள்ளன. இந்தியாவிலேயே இங்குதான் கடலில் நவகிரகங்கள் உள்ளன. சென்னையில் இருந்தோ மற்ற ஊர்களில் இருந்தோ செல்பவர்கள் ராமநாதபுரம் வந்து அங்கிருந்து திருச்சி, நாகப்பட்டினம் செல்லும் பேருந்தில் ஏறி 10 கி.மீ. தொலைவிலுள்ள தேவிபட்டினத்தை அடையலாம்.

காச்மீரம் பீடம்

தேவியின் கழுத்தின் மேல் பகுதி விழுந்த இடம். பீட சக்தியின் நாமம் மகாமாயா. அக்ஷர சக்தியின் நாமம் அஹ.  அக்ஷர தேவியின் நாமம் அக்ஷரா தேவி எனும் அஜாதேவி.மூன்று தலைகள், முக்கண்கள், ஆறு கரங்களுடன் சிவந்த மேனியில் மஞ்சள் பட்டாடை அணிந்து இடகரங்களிலே அங்குசம், கேடயம், அபயமுத்திரையையும், வலக்கரங்களிலே சூலம், பட்டாக்கத்தி, வரமுத்திரையும் தரித்து புலி வாகனத்தில் ஆரோகணித்து வருபவள் இத்தேவி. இப்பீடத்தை த்ரிசந்த்யேஸ்வரர் எனும் பைரவர் பாதுகாக்கிறார். காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகையில் இப்பீடம் உள்ளது.

 

No comments:

Post a Comment