Tuesday 3 May 2016

திருவூடல் பார்த்தால் மறுவூடல் இல்லை!


கணவன்  - மனைவிக்குள் சண்டை வந்தால் வீட்டிற்குள் மட்டும் கேட்குமாறு பேசினால் நல்லது. தெருவில் உள்ள மற்றவர்களுக்கு கேட்கும் வகையில் சத்தமாகப் பேசினால்... அவ்வளவுதான். அண்டை வீட்டுக்காரர்கள் அத்தனை பேருடைய கண்ணும் தம்பதியினரை மட்டுமே மொய்க்கும்.

 

சாதாரண தம்பதியினருக்கே இப்படிதான் என்றால், தெய்வீகத் தம்பதியினருக்குள் சண்டையென்றால் கேட்கவே வேண்டாம். பக்தர்கள் திரண்டு வந்து விடுவார்கள்.

ஒருமுறை, திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரரும், உண்ணாமுலை அம்மனுக்கும் சண்டை போட்டுக்கொண்டார்கள். உடல் முழுக்க நகைகளைப் போட்டுக்கொண்டு, கிரிவலம் போகத் தயாராகிறார். அம்மன் அவரைத் திட்டுகிறார். ‘ஊரெல்லாம் திருட்டு பயம். அதிலும் கிரிவலப்பாதை என்பது காடு வேற, நகைகளெல்லாம் போட்டுக்கொண்டு போகாதீங்க’ என்று அம்மன் மன்றாடுகிறார். ஆனால் அருணாசலேஸ்வரர் கேட்பதாக இல்லை. ’உலகத்துக்கே நாயகனான என்னிடம் யார் கொள்ளையடிக்கப் போகிறார்கள் என்ற இறுமாப்பு அவருக்கு. அம்மனை ஒருவாறு சமாளித்துவிட்டு கிரிவலம் போகிறார்.

மறுநாள் காலையில் இறைவன் வரும் போது உண்மையிலேயே நகைகள் திருடு போயிருந்தன. அம்மனுக்கு கோபம் தாங்கவில்லை. ‘சொன்னதை கேட்காததால பார்த்தீங்களா, நகைகள் போயிடுச்சு. வீட்டுக்குள்ள வராதீங்க’ என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டு உற்சவ மூர்த்தியின் அறையைத் தாழ்ப்பாள் போட்டுக் கொள்கிறார். அருணாசலேஸ்வரர் விடுவாரா? அம்மனை ஒருவாறு சமாதானப்படுத்திவிட்டு, மீண்டும் ஒன்று சேர்கிறார்.

 

இந்த அழகிய உற்சவக் காட்சி, ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று மாலை திருவூடல் உற்சவம் நடைபெறுகிறது. அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனின் உற்சவ மூர்த்திகள் இரண்டும் குறுக்கும் நெடுக்குமாக பக்தர்கள் சூழ, சுற்றுவதே கண்கொள்ளா காட்சியாக இருக்கும். காண்போரையும் பரவசப்பட வைக்கும். அருணாசலேஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகளில் திருவூடல் தெரு என்று உள்ளது.

அன்று இரவு உற்சவமூர்த்தியான அண்ணாமலையார் கிரிவலம் செல்கிறார். மறுநாள் காணும் பொங்கல் அன்று காலை கோயிலில் உள்ள கருவறை மண்டபத்தில் உள்ள உற்சவமூர்த்தி சன்னதியில் மறுஊடல் என்ற உற்சவம் நடைபெறும்.

பக்தர்களை மட்டுமல்லாது காண்போரையும் பரவசப்படுத்தும் இந்த உற்சவம் ஒவ்வொரு ஆண்டும்   பொங்கல் பண்டிகை அன்றும்,  காணும் பொங்கல் அன்று நடைபெறுகிறது.



 

No comments:

Post a Comment