Saturday 7 May 2016

திருச்சானூரில் திகழும் திரு!


செல்வ வளம் தரும் தாயார்! 

பெருமாள் கோவிலுக்குச் சென்றால், முதலில் தாயாரை வணங்கி, அதன் பிறகே பெருமாளை வணங்குவது மரபு. திருப்பதி செல்பவர்கள், நேராக வெங்கடாசலபதியைத் தரிசித்த பிறகே திருச்சானூர் செல்கின்றனர்; ஆனால், முறைப்படி திருச்சானூர் சென்று, அலமேலு மங்கை எனப்படும் பத்மாவதி தாயாரைத் தரிசித்த பிறகே, வெங்கடாசலபதியை தரிசிக்க செல்ல வேண்டும்.

முற்பிறப்பில் வேதவதி என்னும் பெயரில் பிறந்தாள் பத்மாவதி தாயார். அழகில் சிறந்த அவள், ஒரு தபஸ்வினியாகி காட்டில் தவமிருந்தாள். ஒரு முறை, அவளை பார்த்தான் ராவணன். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினான். ராமபிரானைத் தவிர, வேறு யாரையும் திருமணம் செய்யமாட்டேன் என்று அவனிடம் தெரிவித்த வேதவதியை பலவந்தப்படுத்தினான் ராவணன்.


அவனிடம், “பெண்ணிச்சையால் என்னைப் பலவந்தப்படுத்திய உனக்கு இதே இச்சையால் அழிவு நேரும்…’ என சாபமிட்டாள் வேதவதி. பின்னர் தன் கற்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அக்னியில் விழுந்த அவளை, எரிக்காமல் பாதுகாத்தார் அக்னிபகவான்.
ஒருமுறை, அவள் ராமபிரானைச் சந்தித்தாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டாள். “இப்பிறவியில் நான் ஏகபத்தினி விரதன். கலியுகத்தில், நான் திருமலையில் சீனிவாசன் என்ற பெயரில் தங்குவேன். நீ, அந்த மலையை ஆளும் ஆகாசராஜன்- தரணிதேவி தம்பதியருக்கு புதல்வியாகப் பிறப்பாய். அப்போது, உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்…’ என்று வாக்களித்தார் ராமபிரான்.


இதன்படி, திருமலைக்கு சீனிவாசன் வர, பத்மாவதியைச் சந்தித்தார். தன் காதலை அவளிடம் வெளிப்படுத்தினார். தன் முற்பிறவி வரலாறை மறந்துவிட்ட பத்மாவதி, அவரைக் கண்டு அஞ்சினாள். பத்மாவதியின் தோழிகள் அவர் மீது கல்லெறிந்து துரத்தினர். காயமடைந்த சீனிவாசன், தன்னை வளர்த்து ஆளாக்கிய வகுளாதேவியிடம் தன் விருப்பத்தை தெரிவித்தார்.


சீனிவாசனுக்காக ஆகாசராஜனிடம் தூது சென்றாள் வகுளாதேவி. தன் மகன் சீனிவாசன், நாராயணனின் அம்சம் என்பதை மன்னனிடம் தெரிவித்தாள். அதுகேட்டு ஆனந்தமடைந்தார் மன்னர். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்தன. சீனிவாசனுக்கும், பத்மாவதிக்கும் நடக்கவிருந்த திருமணத்தைக் காண தேவலோகமே கூடியது.


சீனிவாசன் ஏழை என்பதால், ராஜா வீட்டுப்பெண்ணை மணம் முடிக்க வேண்டிய நிலையில், திருமணச்செலவுக்காக குபேரனிடம் கடன் வாங்கினார்.
“குபேரா! என்னை வணங்குவதற்கு இந்த திருத்தலத்துக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அவர்களின் பாவக்கணக்குக்கு ஏற்ப அவர்களிடம் நான் செல்வத்தை வசூலித்து விடுவேன். அதை உனக்கு வட்டியாகத் தருவேன்! கலியுகம் முடியும் போது அசலை முழுமையாகத் தந்துவிடுவேன்…’ என்று எழுதிக்கொடுத்தார்.


சீனிவாசன்- பத்மாவதி திருமணம் இனிதே முடிந்தது. நாராயணன், இன்னொரு திருமணம் முடித்துவிட்டார் என்ற தகவலை லட்சுமியிடம் சென்று சிண்டுமுடித்தார் நாரதர். கோபமடைந்த லட்சுமி, சீனிவாசனிடம் வந்து நியாயம் கேட்டு அழுதாள். அவளைச் சமாதானம் செய்து விளக்கமளித்தார் சீனிவாசன்.


“லட்சுமி! முற்பிறவியில் நீ சீதையாக பிறந்த போது ராவணன் உன்னைக் கடத்த வந்தான். அப்போது அக்னியின் பாதுகாப்பில் இருந்த மாயசீதையான இவள், உனக்குப் பதிலாக ராவணனுடன் சென்றாள். உண்மையில் இவள் உன்னைக் காப்பாற்றியவள்…’ என்றார். சமாதானமடைந்த லட்சுமி, பத்மாவதியைத் தன் தங்கையாக ஏற்றாள்.
பின்னர், லட்சுமியிடம், “நீ என் மார்பில் அமர்ந்துகொள்.


என் மார்பில் வலப்பக்கம் பத்மாவதி இருப்பாள். அவளது மற்றொரு வடிவத்தை பத்மசரோவர தீர்த்தக்கரையில் அமையும் வகையில் ஏற்பாடு செய். நீங்கள் இருவரும் இங்கு வரும் பக்தர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப அருள் வழங்குங்கள்…’ என்றார் சீனிவாசன். பத்மாவதி அமர்ந்த இடமே அலமேலுமங்காபுரம் எனப்படுகிறது. பிற்காலத்தில் திருச்சானூர் என்ற பெயர் சூட்டப்பட்டது.

திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, குறத்தி ஒருத்தி குறி சொன்ன கதையை கேட்டாலோ, படித்தாலோ திருமணத் தடை நீங்குவதுடன், அவர்கள், வம்சாவளிக்கே, திருமணத்தடை நீங்கி விடும் என்கின்றனர் ஆந்திரத்து பெரியவர்கள்.
 
 


திருப்பதி திருமலையை, ஆகாசராஜன் என்னும் அரசன் ஆட்சி செய்து வந்தான். இவனுக்கு, லட்சுமி தாயாரே, பத்மாவதியாக அவதாரம் எடுத்து, மகளாக பிறந்திருந்தாள். இவளைத் திருமணம் செய்யும் நோக்கத்துடன், திருமால், ஸ்ரீநிவாசன் என்ற பெயரில் பரம ஏழையாக அவதாரம் செய்தார். ராஜா வீட்டுப் பெண்ணை, ஏழைக்கு, எப்படி திருமணம் செய்து வைப்பர்! எனவே, குறத்தி வேடமிட்டு, ஸ்ரீநிவாசன், பத்மாவதியின் அரண்மனைக்குள் நுழைந்தார்.


இங்கிருந்து தான், திருமணத்தடை உள்ளவர்கள், கதையை கவனமாக படிக்க வேண்டும்.


அந்தக் குறத்தி மிகவும் அழகாக இருந்தாள். அவளைப் பார்த்து, திருமலையில் வசிக்கும் மக்கள் மட்டுமல்ல, விண்ணில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தேவர்களும் அசந்து போய் விட்டனர். ஆகாசராஜனும், அவன் மனைவியும், குறத்தியைப் பார்த்தனர். அவளது பேரழகும், முகத்தில் இருந்த பிரகாசமும், அவர்களை அறியாமலேயே, அவளை, அரண்மனைக்குள் அழைக்க வைத்தது.


தங்களுடன் அழைத்துச் சென்று, தங்கள் மகள் பத்மாவதி முன் உட்கார வைத்தனர்.


‘குறத்தியே… உனக்கு எந்த ஊர்?’ என்று கேட்டாள் பத்மாவதி.


‘நான் முத்துமலையில் வசித்திருக்கிறேன்; குடகுமலையில் வாழ்ந்திருக்கிறேன்…’ என்று, சொல்லிக்கொண்டே போனவள், ‘இன்று, இந்த திருமலைக்கு வந்திருக்கிறேன். உலகிலுள்ள எல்லா மலைகளும், என் மலை தான்…’ என்றாள்.
‘ஓகோ… அப்படியானால், நீ குறி சொல்வாயா?’


‘என்ன… அப்படிகேட்டு விட்டீர்கள்… சிவனும், பார்வதியும் வசிக்கும் கைலாய மலைக்கு சென்று, அவர்களுக்கும் குறி சொல்லியிருக்கிறேன்; இந்திரலோகம் சென்று, தேவேந்திரனுக்கு
ம், இந்திராணிக்கும் குறி சொல்லியிருக்கிறேன்…’ என்று, பிரதாபித்தாள் குறத்தி.
 

‘உங்கள் நாட்டில் எல்லா
ரும் நலமா?’ என்று, கேட்டாள் பத்மாவதி.
‘இளவரசி… எங்கள் நாட்டில் எல்லாரும் நண்பர்களே… பகை என்ற சொல்லே அங்குள்ளவர்களுக்கு தெரியாது. புலியும், பசுவும் ஒரே ஓடையில் தண்ணீர் குடிக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! எங்கள் ஊரில், வாழை, கிழக்கு நோக்கி குலை தள்ளும்; பலாப்பழமோ மேற்கு நோக்கி காய்க்கும்…’ என்றாள்.

இவ்வாறு நடப்பது, ஒரு நாட்டிலும், வீட்டிலும், மங்கல நிகழ்ச்சி நடப்பதற்கான அறிகுறிகள்.


பின், பத்மாவதியின் கையைப் பார்த்த குறத்தி, ‘எந்தக் கை, இப்போது, உன் கையைப் பிடித்திருக் கிறதோ, அந்தக் கைக்கு நீ சொந்தமாவாய்…’ என்றாள்.

பத்மாவதி, ஏதும் புரியாமல், குறத்தியைப் பார்க்க, ‘இளவரசி… உன் மனதுக்குப் பிடித்தவனே, உனக்கு கணவன் ஆவான்…’ என்றாள்.
பத்மாவதிக்கு, நிம்மதிப் பெருமூச்சு.


ஆம்… அவளுக்கு, உலகையே காக்கும் அந்தக் கோவிந்தனே தன் மணாளன் ஆக வேண்டும் என்று ஆசை. அந்த ஆசை நிறைவேறி, பத்மாவதி தாயார் திருச்சானுாரில் குடியிருந்து, நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறாள். கார்த்திகை மாதத்தில், அவளுக்கு பிரம்மோற்சவம் நடக்கும்.


அவள், ‘அலர்மேல் மங்கை’ எனப்படுகிறாள். சொல் வழக்கில், அலமேலு என்பர். அலர் என்றால் தாமரை. ‘செந்தாமரை மலர் மேல் வீற்றிருப்பவள்’ என்று பொருள். பத்மம் என்றாலும் தாமரை. எனவே, அவளுக்கு, பத்மாவதி என்ற பெயரும் பொருத்தமாகிறது.


பெருமாள் குறத்தியாக வந்து குறி சொன்ன இந்தக்கதையைப் படிப்பவர்கள், அன்னையின் தேரோட்டத்தை தரிசித்து வாருங்கள். விரைவில், திருமணம் நடக்க, அந்த அலர்மேல் மங்கை அருள் செய்வாள்.
 
 
 
 

 
 
 

 

No comments:

Post a Comment