Wednesday 4 May 2016

திருக்கண் மலர் ஆயிரம் ஆழி அரங்கருக்கே!

எல்லா எண்களையும்போல் அதுவும் ஓர் எண்தான். தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பதுக்குப் பிறகு வரும், ஒன்று போட்டு மூன்று பூஜ்ஜியம். அவ்வளவுதானே?!

ஒரு பாறையைக் கல் என்று நினைத்தால், அது வெறும் கல், அதையே கடவுள் என்று எண்ணிப் பூஜிக்கும்போது, அதற்குத் தனி மரியாதை வந்துவிடுகிறதல்லவா? அதுபோல, ஆயிரம் என்பது சாதா ரண எண் அல்ல, அதற்கு இன்னொரு முக்கியமான பெருமை உண்டு.

‘ஆயிரம்’ என்ற சொல், கவிதைகளில் இடம்பெறும்போது, அதன் அர்த்தம், ‘மிகப் பெரிய எண்’. அதாவது, லட்சமும் ஆயிரம்தான், கோடியும் ஆயிரம்தான், லட்சம் கோடியும் ஆயிரம்தான்.

குறிப்பாக, பக்திப் பாடல்களில் இறைவனுக்கு ஆயிரம் துதி செய்வதாகச் சொல்வார்கள். அதன் அர்த்தம், அனுதினமும் அவனையே துதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான். இதற்கு உதாரணமாக,  ஆயிரத்தின் மகத்துவம் சொல்லுகிற இரண்டு பாடல்களைப் பார்ப்போம், ஒன்று சிவன் பாட்டு, இன்னொன்று, திருமால் பாட்டு!

முதலில், திருவாரூரில் எழுந்தருளியிருக்கிற சிவபெருமானைப் பணிந்து போற்றும் வகையில் அப்பர் எழுதிய அற்புதமான இந்தப் பாடல்:

ஆயிரம் தாமரை போலும்,
ஆயிரம் சேவடி யானும்,
ஆயிரம் பொன்வரை போலும்,
ஆயிரம் தோள் உடையானும்,
ஆயிரம் ஞாயிறு போலும்,
ஆயிரம் நீள் முடியானும்,
ஆயிரம் பேர் உகந்தானும்,
ஆரூர் அமர்ந்த அம்மானே!


ஆரூர் (அதாவது, திருவாரூர்) தலத்தில் எமக்கு அருள் புரியும் சிவனே, உனது திருவடிகள் இரண்டு மட்டுமல்ல, ஏகப்பட்ட திருவடிகள் உண்டு, அவை அனைத்தும் ஆயிரக்கணக்கான தாமரைகளைப் போலச் சிவந்திருக்கின்றன! உன்னுடைய தோள்கள் இரண்டுமட்டு மல்ல, பல தோள்களை உடையவன் நீ, அவை அனைத்தும் ஆயிரக்கணக்கான பொன் மலைகளைப்போல் வலுவோடு மின்னுகின்றன! உன்னுடைய திருமுடியும் ஒன்றல்ல, பலப்பல. அவை  அனைத்தும் ஆயிரக்கணக்கான சூரியன்கள் ஒரே இடத்தில் கூடியதைப்போல் பிரகாசிக்கின்றன. திருவடிகள், தோள்கள், திருமுடிகளைப்போலவே, உனக்குப் பல பெயர்களும் உண்டு. அவற்றை நாங் கள் பக்தியுடன் பாடித் துதிக்கிறோம், உன் கருணை வேண்டி நிற்கிறோம்!

இந்தப் பாடலில், ‘சிவனுக்கு இரண்டு கால், இரண்டு தோள், ஒரு தலைதானே இருக்க முடியும்? பிறகு எப்படி ஆயிரம் வந்தது? அப்படியே அவருக்கு ஆயிரம் தலை இருந்தாலும் இரண்டாயிரம் தோள், இரண்டாயிரம் கால் இருக்கவேண்டுமல்லவா?’ என்றெல்லாம் கால்குலேட்டரை எடுக்கக்கூடாது. எல்லாம் வல்ல இறைவனை உயர்வாக எண்ணிப் போற்றுகிறார் அப்பர்.  இங்கே ஆயிரம் என்பது  ‘மிகப் பெரிய ஓர் எண்’, அவ்வளவுதான்!

அடுத்து,  இதே பாணியில் அமைந்த இன்னோர் அழகான பாடல், வைணவத் தமிழ் இலக்கியங்களில் முக்கியமான நூல்களைக் கொண்ட ‘அஷ்டப் பிரபந்தம்’ என்ற திரட்டு. அதில் ‘திருவரங்கத்து மலை’யில் வரும் பாடல் இது. எழுதியவர் பெயர், திவ்யகவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.

புரம் ஆயிரம்,
திருக்கண் மலர் ஆயிரம்,
புண்டரிகக்கரம் ஆயிரம்,
கழல் கால் மலர் ஆயிரம்,
கண்ணி முடிச்சிரம் ஆயிரம்,
திருநாமமும் ஆயிரம்,
செய்ய கையில் அரம் ஆயிரம்
கொண்ட திண் திறல் ஆழி அரங்கருக்கே!


அங்கே திருவாரூர், இங்கே திருவரங்கம், அதாவது, ஸ்ரீரங்கம் ரங்கநாதருடைய பெருமையைப் பாடுகிறார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.

அரங்கத்துப் பெருமானே, உன்னுடைய திருமேனி பல ஆயிரம், மலர் போன்ற உன் திருக்கண்கள் பல ஆயிரம், தாமரை மலரைப் போன்ற உன் கைகள் பல ஆயிரம், வீரக் கழல் அணிந்த, மலர்  போன்ற உன் கால்கள் பல ஆயிரம், மலர் மாலையும் கிரீடமும் அணிந்த உன் தலைகள் பல ஆயிரம்!

இப்போது, அப்பர் சொன்னதுபோலவே, பிள்ளைப் பெருமாள் ஐயங்காரும் சொல்கிறார், ‘திருநாமமும் ஆயிரம்’, சிவனுக்கு மட்டுமல்ல, திருமாலுக்கும் பலப்பல பெயர்கள் உண்டல்லவா!

அடுத்து, இன்னும் நுட்பமான ஓர் அடி, ‘செய்ய கையில் அரம் ஆயிரம் கொண்ட திண் திறல் ஆழி’.  ரங்கநாதரின் சிவந்த கைகளில் வலிமை மிகுந்த சக்ராயுதம் இருக்கிறது, அதில் ஆயிரக்கணக்கான அரங்கள் இருக்கின்றன.

சக்கரத்தின் வடிவத்தை அப்படியே கற்பனை செய்து பாருங்கள், அதன் விளிம்பில் சிறு சிறு அரங்கள் நிறைய இருக்குமல்லவா? அவைதானே ஒன்று சேர்ந்து தீமையின் தலையைக் களைகின்றன?


ஒரு பொறியாளரின் லாகவத்தோடு இதை மிக அழகாகக் கற்பனை செய்கிறார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், ‘உலகில் அறங்கள் யாவும் புரியும் என் இறைவா, உன்னுடைய கையில் உள்ள சக்ரா யுதத்தில்தான் எத்துணை எத்துணை அரங்கள்!’ என்று வியக்கிறார்.

மற்ற எல்லா வரிகளையெல்லாம்விட, இங்கேதான் ‘ஆயிரம்’ என்ற வார்த்தையின் சிறப்புப் பொருள் கச்சிதமாகப் பொருந்துகிறது, எண்ணமுடியாத எண்ணிக்கையில் சிறு அரங்களைக் கொண்ட சக்கர  ஆயுதம் என்பதால்!

ஆயிரம் துன்பம் வந்தால் என்ன?


ஆயிரம் நாமம் கொண்ட இறைவன் பெயரைச் சொன்னால் போதும், ஆயிரம் இன்பம் நம்மைத் தேடி வரும்!


என்ன? இது ஆயிரத்தில் ஒரு வார்த்தை’ என்கிறீர்களா? சரிதான்!





No comments:

Post a Comment