Monday 26 September 2016

10 - கவலைகள் போக்கிக் காத்தருள்வாள் காந்திமதி!

சக்தி பீடங்கள் - 10
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடிப் போற்றிய இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து அம்பலங்களில், இரண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன - ஸ்ரீநெல்லையப்பர் காந்திமதி ஆலயம், தாமிர அம்பலம்; ஸ்ரீகுற்றால நாதர் ஆலயம், சித்திர அம்பலம். முன்பொரு காலத்தில் அரண்மனைக்கு வாடிக்கையாகப் பால் ஊற்றிக் கொண்டிருந்தார் பட்டர் ஒருவர். ஒருநாள் அவர் சென்று கொண்டிருந்தபோது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். பட்டரை இடறிவிட்ட கல்லை அங்கேயிருந்து அகற்ற, கோடரி கொண்டு வெட்டினர்.

அப்போது அந்தக் கல்லிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அனைவரும் செய்வதறியாது அரண்டு போய் நிற்க ஓர் அசரீரி கேட்டது. அந்த வான்வாக்குப்படி அந்தக் கல்லை அகழ்ந்தெடுக்க, தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டது. (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) இந்த சுயம்பு சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது. இந்த இறைவன் நெல்லையப்பர், சுவாமி வேணுநாதர், வேய்த நாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். அதேபோல அம்பாளும் காந்திமதி அம்மை, வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்று அழைக்கப்படுகிறார். காந்திமதியம்மனுக்கு வெள்ளிக் கிழமைகளில் தங்கப் பாவாடை அலங்காரம் செய்யப்படுகிறது. அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் இது காந்தி பீடமாகத் திகழ்கிறது. காந்தசக்தி மிகுந்து, பிரகாசமாக அம்பிகை விளங்குவதாலும் இது காந்தி பீடமாயிற்று.

ஒரு மனைவி கணவனையும் விருந்தினர்களையும் உபசரித்துப் போற்றும் விதிமுறையை இத்தல உச்சிக்கால பூஜை நிகழ்ச்சியில் நிலைநாட்டப்படுகிறது. உச்சிக்கால பூஜையின் போது காந்திமதி அன்னை நைவேத்திய தட்டுடன் ஈசனை நோக்கிப் புறப்படுவாள். வெறும் சுத்த அன்னம் மட்டும் அல்ல; கூட்டு, பொரியல், என மேளதாளங்கள் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் தேவி ஈசன் சந்நதிக்குச் செல்வாள். அப்போது ஈசனுக்கு அபிஷேகம் செய்யப்படும். பின் தான் கொண்டுவந்த நைவேத்தியத்தை ஈசனுக்குப் படைத்து ஆராதிக்கிறாள் காந்திமதி. பின் ஆலயத்திலுள்ள அனைத்து பரிவார தேவதைகளுக்கும் நைவேத்தியம் செய்கிறாள். பின்னரே காந்திமதிக்கு நைவேத்தியம் படைக்கப்படுகிறது! கணவர் உணவு எடுத்துக்கொண்ட பின்னர் மனைவி உணவு புசிக்கும் பாரம்பரியத்தை இக்கோயிலில் அன்னை காந்திமதி தினந்தோறும் நிகழ்த்திக் காட்டுகிறாள்!

வருடா வருடம் புரட்டாசி மாத இறுதியில், ஐப்பசி மாத தொடக்கத்தில், காந்திமதி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் திருக்கல்யாண உற்சவம் தொடங்குகிறது. அதையொட்டி காந்திமதி ஈசனுக்கு சிவபூஜை செய்வது போன்ற அலங்காரம் செய்யப்படும். தேவி அந்த அலங்காரத்துடனே பல்லக்கில் திருவீதியுலா வருவாள். தம் பக்தர்களிடம் தர்மகுணம் தழைத்துச் செழிக்க வேண்டும் என்பதற்காக அம்பிகை 32 வகையான தர்மங்களைப் புரிந்ததாக தலபுராணம் கூறுகிறது. அதை நினைவூட்டும் விதமாக திருவிழாவில் 3ம் நாள் முதல் 7ம் நாள்வரை காந்திமதி கம்பை நதிக்கு நீராடச் செல்லும்போது அங்கே வரும் பெண்களை எல்லாம் அம்பிகையின் தோழியராக பாவித்து அவர்கள் நீராட, ஆலயத்தின் சார்பில் நல்லெண்ணெயும் பாலும் வழங்கப்படுகின்றன. இரண்டையும் சிரசில் வைத்து நீராட அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

அடுத்தடுத்த நாட்களில் இடக்கையில் கமண்டலம், வலக்கையில் தீர்த்தக் கெண்டி ஏந்தி எளிய  ஆடை உடுத்தி தவக்கோலம் பூண்டவளாய் ஆலயத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கோயிலுக்கு எழுந்தருள்வாள் அம்பிகை. நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் ஆரோகணித்து அக்கோயிலுக்கு சென்று காந்திமதிக்கு தரிசனம் தரப் புறப்படுவார். அவர் காந்திமதியுடன் மறுபடியும் ஆலயத்திற்கு வரும்போது நெல்லை கோவிந்தர் இருவரையும் ஆலய வாசலில் வரவேற்கும் வைபவம் நடைபெறும். பின் நெல்லையப்பருக்கும் காந்திமதிக்கும் விமரிசையாக திருமணம் நடைபெறும். ஸ்ரீகாந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தெற்கு-வடக்காக 756 அடி நீளமும், மேற்கு-கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாகத் திகழ்கிறது.

அம்பிகைக்கும், ஈசனுக்கும் தனித்தனி ஆலயங்கள். இந்த இரு ஆலயங்களும் இடையே அழகிய கல் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன. அம்பாள் சந்நதியில் ஆயிரம் கால் மண்டபம் உள்ளது. நெல்லையப்பர் கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை பிரமிப்பூட்டுகிறது. கொடிமரத்தைக் கடந்து உள்ளே சென்று மூலவரை தரிசிக்கலாம். கருவறைக்கு முன்னால் 9 அடி உயர மிகப் பெரிய விநாயகர் சிலை உள்ளது. மூலவரைச் சுற்றி 3 பிராகாரங்கள். முதல் பிராகாரத்தில் தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சந்நதிகள் அமைந்துள்ளன. கோவிந்தராஜப் பெருமாள், சிவனுக்கு அருகிலேயே சயனித்திருக்கிறார். இது சைவ-வைணவ ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இரு துர்க்கை சந்நதிகள் உள்ளதும் குறிப்பிடத்தகுந்தது.

இரண்டாவது பிராகாரம் சற்று பெரியது. இங்கு ஏழு ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள் உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்கள் இனிமையாக ஒலிக்கும். இந்தப் பிராகாரத்தில்தான் தாமிர சபை உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்டலக்ஷ்மி, சனீஸ்வரர், ஸஹஸ்ரலிங்கம் விக்ரகங்களும் அருள் வழங்குகின்றன. மூன்றாவது பிராகாரம் மிகவும் அகலமானது. இப்பிராகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நதிக்கு செல்ல வழி உள்ளது. இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நதிகள் உண்டு. கோயிலின் உள்ளே மிகப் பெரிய உள் தெப்பம் ஒன்றும் வெளியே அரை கி.மீ. தூரத்தில் வெளித்தெப்பம் ஒன்றும் உள்ளன.

முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்பவர் சிவபெருமானிடம் பெரும் பக்தி கொண்டிருந்தார். அவருடைய பக்தியை உலகோருக்கு வெளிப் படுத்த சிவபெருமான் ஒரு திருவிளையாடல் புரிந்தார். வேதபட்டர், இறைவனின் நைவேத்தியத்திற்காகத் தினமும் வீடு வீடாகச் சென்று நெல் சேகரித்து வருவார். ஒருநாள் அப்படிச் சேகரித்த நெல்லைச் சந்நதி முன் உலரப் போட்டுவிட்டு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று மழை பெய்தது. மழைநீரில் நெல் நனைந்துவிடப் போகிறதே என்று எண்ணி பதறியபடி வேதபட்டர் ஓடிவந்து பார்க்க, நெல்லைச் சுற்றி ஒரு வேலியிட்டாற்போல நெல் பரப்புக்கு வெளியே மழை பெய்வதையும், நெல் பரப்பப்பட்ட பகுதியில் மட்டும் வெயிலில் காய்வதையும் கண்டு திகைத்தார்.

இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவித்தார். மன்னன் ராமபாண்டியனும் ஓடோடி வந்து பார்த்து பிரமித்தான். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தான். அன்று முதல் இறைவனை நெல்வேலி நாதர் என்று அழைக்கலானான். அதுபோல் வேணுவனம் என்ற அப்பகுதியை நெல்வேலி எனவும் மாற்றியமைத்தான். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப் பெருந்திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. 10 நாட்களுக்கு நடைபெறும் இத்திருவிழாவில் தேரோட்டம் மிகச் சிறப்பான நிகழ்வு. ஆடிப்பூர உற்சவம், புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆகிய திருவிழாக்களும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. ஆடிப்பூரத்தன்று வளைகாப்பு அல்லது முளைகொட்டுத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

அன்று கருவுற்றிருப்பவர்கள் கொழுக்கட்டை போன்ற நைவேத்தியப் பொருட்களை காந்திமதியின் மடியில் கட்டி, வேண்டிக்கொள்கின்றனர். மகப்பேறு வேண்டும் மங்கையர் காந்திமதியின் மடியிலிருக்கும் வளையல் களைப் பிரசாதமாகப் பெற்று அந்த பாக்கியத்தை அடைகின்றனர். ஆனிப் பெருந்திருவிழாவின் நான்காம்நாள், சுந்தரர் குருபூஜை மற்றும் தை அமாவாசையன்று கொண்டாடப்படும் லட்சதீபவிழா போன்ற மூன்று நாட்களிலும் அறுபத்துமூவர் திருவுலா வருவது வழக்கம். திருவாதிரைப் பெரு விழாவில் தாமிரசபையில் ஈசன் நடனமாடும் போது சபையின் இரு பக்கங்களிலும் அறுபத்துமூவருடன் காந்திமதி அன்னையும் நின்று அத்திருக்கூத்தை ரசிக்கும் நிகழ்வு நடத்தப்படுகிறது.

அன்னையின் ரசனைமிக்க புன்னகை ஒன்றிற்குத்தான் ஈசன் இங்கு திருக்கூத்தாடினார் என்பது வரலாறு. இத்திருத்தலம் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அருணாசல கவிராயரால் வேணுவன புராணத்தில் பாடப்பெற்ற பெருமையுடையது. சொக்கநாத பிள்ளை, இத்தல அன்னையைப் போற்றி காந்திமதியம்மை பதிகம் பாடியுள்ளார். 32 தீர்த்தங்கள் கொண்டது இத்திருத்தலம். இத்தல தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது. தமிழ்நாட்டின் முக்கிய நகரமான திருநெல்வேலி மாநகரத்திற்கு தமிழ்நாட்டில் சென்னை மற்றும் அனைத்து முக்கிய நகரங்களிலுமிருந்தும் பேருந்து, ரயில் பயண வசதிகள் அதிக அளவில் உள்ளன.

கர்நாடக அக்ஷர சக்தி பீடம்

பீடத்தின் பெயர் கர்நாடகம். தேவியின் காதுகள் விழுந்த இடம். பீட சக்தியின் நாமம் ஜலதுர்க்கா. அக்ஷர சக்தியின் நாமம் (ரூம்) ரேணுகாதேவி. இத்தலத்தை அமீரு எனும் பைரவர் காவல் புரிகிறார். கர்நாடகத்தில் உள்ள கோகர்ணத்தில் இப்பீடம் அமைந்துள்ளது.பெங்களூர் சாகர் ரயில் நிலையத்திலிருந்து 95 கி.மீ பேருந்தில் பயணித்து சீர்சியை அடைந்து அங்கிருந்து 95 கி.மீ தொலைவிலுள்ள கோகர்ணத்தை அடையலாம். இத்தேவி ஷண்ட காமாக்ஷி என்றும் வணங்கப்படுகிறாள். இப்பீட சக்தி ஆணவம், மாயை, கன்மம் எனும் மும்மலங்களை அகற்றி அன்பர்களின் துயர் தீர்க்கும் பரமேஸ்வரியாகும். கலங்கித் தவிக்கும் சித்தத்தைத் தெளிய வைத்து அறியாமை இருளை விலக்கி ஞானப் பேரொளி வீச அருள்பவள். நன்மை தரும் நல்வழியைக் காட்டி சத்குருவாய் விளங்குபவள். பல ஜென்மங்கள் எடுத்தும் நற்கதி பெறாது வருந்துவோர்க்கு தொல்லைகளை நீக்கி பேரானந்தம் பெறச் செய்பவள். இந்த ஜென்மத்தில் எந்த ஆசையுமில்லை என ஆனந்தக் கடலில் மூழ்கிடச் செய்பவள். ஞானமானது ஒளிவீசபந்த பாசங்களை நீக்குபவள். உள்ளத்தில் அமைதியை ஏற்படுத்துபவள்.

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து, திருநெல்வேலி நகர்ப் பகுதிக்குப் பேருந்து வசதி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. கோயில் வாசலிலேயே இறங்கிக் கொள்ளலாம்.

 

No comments:

Post a Comment