Monday 26 September 2016

6 - குற்றால நாயகி குழல்வாய்மொழி அம்மை!

சக்தி பீடங்கள் - 6 தன்னிகரற்ற தரணி பீடம்!தமிழகத்தில் அமைந்துள்ள குற்றாலம் பராசக்தி பீடம், அகத்தியரால் வழிபடப்பெற்ற சிறப்புடையது. தேவியின் சக்தி பீடங்களில் இது, பராசக்தி பீடம் என்று  வணங்கப்படுகிறது. திருக்குற்றாலத்தில் அருளும் அம்பிகை, குழல்வாய்மொழி அம்மை என்ற அழகுப் பெயர் கொண்டுள்ளாள். மூலவரான குற்றாலநாதரின்  சந்நதிக்கு வடதிசையில் 51 சக்தி பீடங்களில் ஒன்றான தரணிபீடம், யோகபீடம் மற்றும் பராசக்தி பீடம் என்றெல்லாம் அழைக்கப்படும் சந்நதி சிறுகோயிலாக  அமைந்துள்ளது. இது சிவன் சிற்பரையின் மந்திர சக்திகள் அடங்கிய ஆலயம். இங்கு பராசக்தியானவள் அரி, அயன், அரன் மூவரையும் படைத்து அருளினாள்.  இவளின் சந்நிதானத்தில் தாணுமாலயப் பூந்தொட்டில் ஆடிக்கொண்டே இருக்கிறது. மலையுருவாய் மிளிர்கின்ற அம்பிகை, ஆலயத்தினுள்ளே மேரு உருவாகவும்  திகழும் சிறப்பைக் கொண்டவள். திரிகூடமலை என்றும் இத்தலம் அழைக்கப்படுகின்றது. இங்கு நான்கு வேதங்களும் நான்கு வாயில்களாக விளங்குகின்றன.
திருக்குற்றாலம் முதலில் விஷ்ணுத் தலமாக இருந்து, அகத்தியரால் பின்னர் சிவத்தலமாக மாற்றப்பட்டது.

சுவாமிக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவியை குழல்வாய்மொழி அம்மையாகவும், பூதேவியை பராசக்தியாகவும் மாற்றினார் என்பார்கள். இங்கு பராசக்தி, ஸ்ரீசக்ரமேரு  அமைப்பிலுள்ள பீடத்தின் வடிவிலேயே அருட்சுடரை பரப்புகிறாள். பூமாதேவியாக இருந்தவளே இந்த அம்பிகை என்பதால் பூமி எனும் பொருளிலேயே தரணி பீடம்  எனும் பெயர் பெற்று விளங்குகின்றது. ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இப்பீடம் இருப்பதாக நம்பிக்கை. எனவே, பெளர்ணமி இரவில் நவசக்தி பூஜை  நடத்தப்படுகிறது. அப்போது, பாலும் வடையும் நிவேதனமாக படைக்கப்படுகின்றன. பராசக்தி உக்கிர ரூபியாக இருப்பதாலேயே இவளுக்கு எதிரேயே  காமகோடீஸ்வரர் எனும் திருப்பெயரில் ஈசன் லிங்கமாக பிரதிஷ்டை ஆகியுள்ளார். பெளர்ணமி, நவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரணி பீடத்திற்கு  பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனையோடு விசேஷ பூஜைகள் நிகழ்த்தி வழிபட்டால் எண்ணியது ஈடேறும். இங்கு நவராத்திரி விழா கோலாகலமாக  கொண்டாடப்படுகின்றது.

ஐப்பசி மாத பூர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தின்போது குற்றாலநாதர், குழல்வாய்மொழி இருவரும் அகத்தியர் சந்நதிக்கு அருகே  எழுந்தருளி, அகத்தியருக்கு திருமணக்காட்சி தந்தருள்கின்றனர். குற்றாலநாதர், குறும்பலாநாதர், திரிகூடநாதர், திரிகூடாசலேஸ்வரர் என்றெல்லாம் பல்வேறு  திருப்பெயர்களின் அழைக்கப்படுகின்றார் இத்தல ஈசன். சுயம்பு லிங்கமாக கிழக்கு திக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அதுபோல குழல்வாய் மொழியம்மை சந்நதி,  ஈசனின் சந்நதிக்கு வலதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னை அழகும் அருளுமாக கோலோச்சுகின்றாள். பிராகார வலம் வரும்போது அகத்தியர் பிரதிஷ்டை செய்ததாக சொல்லப்படும் பராசக்தி பீடத்தை தரிசிக்கலாம். அதிகாரநந்தி, சூரியன், கும்பமுனி, எதிரில் கோஷ்ட மூர்த்தமாகவுள்ள தட்சிணாமூர்த்தி,  விநாயகர், சப்தகன்னியர் முதலிய சந்நதிகளையும் தரிசிக்கலாம். பஞ்சபூத லிங்கங்கள், நன்னகரப் பெருமாள், சுப்பிரமணியர், சனிபகவான் சந்நதிகளும் உள்ளன.
தலதீர்த்தங்களாக சிவகங்கை, வட அருவி, சித்ரா நதி ஆகியவை விளங்குகின்றன.

தலவிருட்சம், குறும்பலா. இந்தப் பலா மரத்தில் வருடம் முழுவதும், பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை. இந்தப் பலாவிலுள்ள  சுளைகள், லிங்க வடிவிலிருப்பதைப் பார்க்க பரவசமாகிறது. இக்கோயில் சங்கு வடிவில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். குற்றால மலையிலுள்ள  செண்பகாதேவி கோயிலுக்குச் செல்லும் வழியில், அருவியின் மேற்பரப்பிலிருந்து இதைக் காணலாம். நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்திர  சபை இங்கே அமைந்திருக்கிறது. குற்றாலநாதர் கோயிலில் இருந்து 1 கி.மீ. தொலைவில் தனிக்கோயிலாக உள்ளது. இதன் எதிரே தெப்பக்குளம் இருக்கிறது.  சுற்றிலும் மதில் சூழ்ந்திருக்கிறது. மரத்தாலான, அற்புதமான வேலைப்பாடுகளுடன் திகழ்கிறது இந்த சித்திர சபை. மரக்கோயிலின் கூரை சிதம்பரத்தை  நினைவூட்டுகிறது. இந்த சபையில் இரண்டு மண்டபங்கள். ஒன்றில் நிறைய சாளரங்கள். இதன் நடுவே ஒரு சிறு மேடையைக் காணலாம்.

திருவாதிரை நாளில் நடராஜப் பெருமான் இந்த மேடையில் வந்தமர்ந்து காட்சி அருள்கிறார். கூடத்தின் நான்கு பக்கங்களிலும் அற்புதமான, அழகிய ஓவியங்கள்  வரையப்பட்டிருக்கின்றன. சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களையும் அந்தச் சித்திரங்களில் கண்டு மகிழலாம். கிழக்கு நோக்கியுள்ள சித்திர சபையின்  உள்ளேயிருக்கும் நடராஜர் தெற்கு நோக்கியுள்ளார். கயிலையில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தின்போது வடதிசை தாழ்ந்து தென்திசை  உயர்ந்தது. இறைவன் அகத்தியரிடம் தென்திசைக்குச் சென்று இரண்டு திசையையும் சமமாக வைக்குமாறு ஆணையிட்டார். ஆனால், இறைவனின்  திருக்கல்யாணத்தையும், திருநடனத்தையும் காண இயலாதே என வருந்தினார் அகத்தியர். இறைவன் திரிகூடமலையின் மகிமையைக் கூறி அங்கு விஷ்ணுவாக  இருந்த தம்மை சிவலிங்கமாக்கி மகுடாகமப்படி பூஜித்து வழிபட தம் கல்யாண வைபவத்தையும் நடனத்தையும் காணலாம் என்று கூறி அனுப்பி வைத்தார்.

அகத்தியரும் அவ்வாறே  சென்று வைணவர் வேடம் பூண்டு கோயிலுக்குள் சென்று திருமாலைக் குறுக்கி வேதமந்திரத்தால் சிவலிங்கமாக்கி வழிபட்டார், அன்று  முதல் இக்கோயில் சிவத்தலமாகியது. வைணவர்கள் விஷ்ணு மூர்த்தியை காணாது திகைத்து அகத்தியரை நிந்தித்தனர். அவர் அவர்களிடம் கோயிலின்  தென்மேற்கு மூலையில் விஷ்ணு மூர்த்தத்தை வைத்து பூஜை செய்யுமாறு அறிவுறுத்தினார். அதன்படி அவர்கள் சிவனுக்கும் திருமாலுக்கும் பொதுப் பெயர்களைச்  சொல்லி பாடி ஆலயத்திற்குள் சென்றனர். அகத்தியர் திருமாலை சிவனாக்க தன் கைகளால் தொட்டதால் சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் ஐந்து விரல்களும்  பதிந்த வடு உள்ளது. முனிவர் தொட்டு அமுக்கியதால் உண்டான தலைவலி நீங்கவே இன்றும் சிவலிங்கத்திற்கு தைலாபிஷேகம் நடைபெறுகிறது என்கிறார்கள்.

அபிஷேகிக்கப்பட்ட மகா சந்தனாதித் தைலம் கோயில் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. இது பல மூலிகைகள், வேர்கள் மற்றும் மருந்துகள் சேர்த்து  மருத்துவ முறைப்படி பக்குவமாக காய்ச்சப்படுவது. தலைவலி, வயிற்று வலி க்ஷயரோகம் (எலும்புருக்கி) முதலான கொடிய நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்  படுகின்றது. ‘குற்றாலநாதருக்கு வற்றாக் குடி நீரும் மாறாத் தலையிடியும்’ எனும் சொலவடை வழக்கில் உள்ளது திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்
ஆகியோர் பதிகம் பாடிய தலம். தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் 13வதாகத் திகழ்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென் காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையே தென்காசியில் இருந்து தென்மேற்கே 5 கி.மீ. தொலைவிலும்,  செங்கோட்டையிலிருந்து  7 கி.மீ. தொலைவிலும் குற்றாலம் அமைந்துள்ளது.

வட இந்திய அட்சர சக்தி பீடங்கள் (ஈம்)

பீடத்தின் பெயர் கரவீரம் எனும் சர்க்காராம். தேவியின் முக்கண்கள் விழுந்த இடம். பீட சக்தியின் நாமம் மஹிஷமர்த்தனி. அக்ஷர சக்தியின் நாமம் ஈஷித்ரி.   இப்பீடத்தை க்ரோதீசர் எனும் பைரவர் காவல் காக்கிறார். சர்க்காராம் என்றும், கரவீர பீடம் என்றும் வழங்கப்படும் கொல்ஹாபூர் மகாலட்சுமி ஆலயம்  மும்பையிலிருந்து 395 கி.மீ. தொலைவில் உள்ளது.

 

No comments:

Post a Comment