Friday 23 September 2016

அகத்தியர் எழுதிய லக்ஷ்மி சுலோகம்!



அகத்திய முனிவர் தம்முடைய மனைவி லோபாமுத்திரையோடு கொல்லாபுரம் என்னும் ஊருக்குச் சென்றார். அங்கு திருமகள் திருக்கோயில் கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்றபோது திருமகள்மீது இப்பாடல்களைப் பாடிப்போற்றினார்.

அப்போது திருமகள் அகத்தியருக்குக் காட்சி கொடுத்து, "உன்னுடைய 'போற்றி' பாடல்களுக்கு நான் மனமகிழ்ந்தேன். இப்பாடலைப் பாடி போற்றினார் யாவரும்  அரிய, பெரிய இன்பங்களை நுகர்வார்கள்.

இப்பாடல்களை  எழுதப் பெற்ற ஏடானது இல்லத்திலே இருக்குமானால் அங்கே நான் நித்ய வாசம் செல்வேன்!என்று திருவாய் மலர்ந்தருளினாள்.

இப்பாடல்களை நாள்தோறும் படிப்பவர்கள் பெரும் செல்வத்தை  அடைந்து அச்செல்வத்தை நுகர்வர்.
 இப்பாடல்கள் அதிவீரராமபாண்டியரால் மொழிபெயர்க்கப்பட்ட காசி காண்டத்தில் அவரால் மொழி பெயர்த்துப் பாடப்பட்டவை.
   

மூவுலகும் இடறியற்றும் அடலவுணர்
    உயிரொழிய முனிவு கூர்ந்த
பூவையுறழ் திருமேனி அருட்கடவுள்
    அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவர் உலகினும் விளங்கும் புகழ்க் கொல்லா
    புரத்தினிது சேர்ந்து வைகும்
பாவையிரு தாழ்தொழுது பழமறைதேர்
    குறுமுனிவன் பழிச்சுகின்றான்
மூன்றுஉலகங்களுக்கும்துன்பத்தைச்செய்தவலிமைபொருந்தியஅசுரர்களுடைய உயிர்கள் உடலைவிட்டு ஒழியுமாறு சினம் கொண்ட காயாமலரை ஒத்த அழகிய உடலினை உடைய அருள் மிக்க திருமாலின் பரந்த மார்பினிடத்தில் விளங்கித் தோன்றி, தேவர்களுடைய உலகத்தைக் காட்டிலும் பெருமையில் சிறந்து திகழும் பெருமையை உடைய கொல்லாபுரம் என்னும் ஊரிலினிதாகச் சேர்ந்து வீற்றிருக்கின்ற பாவையாகிய திருமளின் இரண்டு திருவடிகளையும் பணிந்து பழமையான மறைகளையெல்லாம் ஆராய்ந்து உணர்ந்த அகத்திய முனிவர் புகழ்ந்து பாடலானார்


கொழுதியிசை அளிமுரலும் தாமரைமென்
    பொகுட்டி லுறை கொள்கைபோல
மழையுறலும் திருமேனி மணிவண்ணன்
    இதயமலர் வைகுமானே
முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே
    கரகமலம் முகிழ்த்தெந் நாளும்
கழிபெருங் காதலில் தொழுவோர் வினை தீர
    அருள்கொழிக்கும் கமலக்கண்ணாய்

"வண்டுகள் கிண்டிப் பண்களைப் பாடுவதற்கு இடமாக விளங்கும் தாமரை மலரின் மென்மையான பொகுட்டின்மீது வாழும்தன்மையைப்போல
கருமுகிலை ஒத்த அழகிய உடலினை உடைய மணிவண்ணனாகிய
திருமாலின் உள்ளத் தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் திருமகளே!
எல்லா உலகங்களையும் இனிதாகப் பெற்ற அருட்கொடியே! கையாகிய
தாமரை மலரைக் குவித்து, எந்த நாளும் மிகுந்த பேரன்பினோடு வணங்குபவர்களுடைய தீவினைகள் ஒழியுமாறு அருளைப் பொழியும்
தாமரை மலர் போலும் கண்களை உடையவளே!"


கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி
    செழுங்கமலக் கையாய் செய்ய
விமலை பசுங்கழை குழைக்கும் வேனிலான்
    தனையீன்ற விந்தை தூய
அமுத கும்ப மலர்க்கரத்தாய் பாற்கடலுள்
    அவதரித்தோய் அன்பர் நெஞ்சத்
திமிரமகன்றிட ஒளிரும் செழுஞ்சுடரே என
    வணக்கம் செய்வான் மன்னோ

"திருமகளே! அழகிய மறு அமைந்த மார்பினை உடையவனாகிய திருமாலின் இல்லக்கிழத்தியே! செழுமை வாய்ந்த தாமரை மலர்போன்ற கைகளை உடையவளே! செந்நிறமுள்ள விமலையே! பசுமையான கரும்பினை வில்லாக வளைக்கின்ற வேனிற் காலத்துக்கு உரியவனாகிய மன்மதனைப் பெற்ற திருமகளே!
தூய்மை வாய்ந்த அமுதம் நிறைந்த குடத்தை ஏந்திய தாமரை மலர் போன்ற கைகளையுடையவளே! திருப்பாற்கடலில் பிறந்தவளே! அன்பர் நெஞ்சத் திமிரமாகிய இருள் அகன்றிட விளங்குகின்ற செழுமையான பேரொளியே!"
என்று வணக்கம் செய்யலானான்.



மடற்கமல நறும்பொகுட்டில் அரசிருக்கும்
    செந்துவர் வாய் மயிலே மற்றும்
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன்
    உலகமெலாம் காவல் பூண்டான்
படைத்தனன் நான்முகக் கிழவன் பசுங்குழவி
    மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன் நின் பெரும்சீர்த்தி எம்மனோ
    ரால் எடுத்துச் சொல்லற் பாற்றோ


இதழ்களை உடைய மணமுள்ள தாமரைப்பூம்பொகுட்டில் அரசு வீற்றிருக்கின்ற செம்பவழம் போன்ற அதரத்தையுடைய மயில் போன்றவளே! உன்னுடைய கடைக்கண்ணின் அருள் பெற்றதனால் அல்லவா நீலமணி போன்ற வண்ணத்தையுடைய திருமால் உலகம் முழுவதையும் காத்தல் செய்யும் தொழிலை மேற்கொண்டான்? நான்முகனான பிரம்மன் படைத்தல் தொழிலை மேற்கொண்டான்?பசுமையான இளம்பிறையை அணிந்த சிவபெருமானும் அழிக்கும் தொழிலை மேற்கொண்டான்? உன்னுடைய பெரும் புகழானது எம்மைப் போன்றோரால் எடுத்துக்கூறுவதற்கு முடியக்கூடிய தன்மைபடைத்ததோ?


மல்லல்நெடும் புவியனைத்தும் பொதுநீக்கித்
    தனிபுறக்கு மன்னர்தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில்
    நிகரில்லாக் காட்சியோரும்
வெல்படையில் பகை துரந்து வெஞ்சமரில்
    வாகை புனை வீரர் தாமும்
அல்லிமலர் பொகுட்டு றையும் அணியிழை நின்
    அருள்நோக்கம் அடைந்து ளாரே


அகவிதழ்களையுடைய தாமரைப் பொகுட்டில் தங்கியிருக்கின்ற அழகிய அணிகலன்களை அணிந்த திருமகளே! பொதுவாக விளங்கும் தன்மையையுடைய வளம் பொருந்திய நெடும் உலகம் முழுவதையும் அதனுடைய அந்தப் பொதுவாக விளங்கும் தன்மையை நீக்கி, தமது தனியுடைமையாக்கி, அரசாட்சி செய்யும் மன்னர்களும், கல்வியிலும், பேரறிவிலும், மிகுந்த அழகிலும் ஒப்பில்லாத தன்மையைப் பெற்றவர்களும், வெல்லுகின்ற படையைக் கொண்டு பகைவர்களை விரட்டும் கொடிய
போரில் வெற்றிவாகை சூடும் வீரர்களும் உன்னுடைய திருவருள்
பார்வையைப் பெற்றவர்களே!


செங்கமலப் பொலந்தாதில் திகழ்ந்தொளிறும்
    எழில்மேனி திருவே வேலை
அங்கண்உல கிருள்துரக்கும் அலர்கதிராய்
    வெண்மதியாய் அமரர்க் கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே
    நெடுங்கானில் பொருப்பில் மண்ணில்
எங்குளை நீ, அவணன்றோ மல்லல் வளம்
    சிறந்தோங்கி இருப்ப தம்மா


செந்தாமரை மலரின் பொன்மயமாகிய மகரந்தத்தைப் போல சிறந்து விளங்குகின்ற அழகிய உடலினை உடைய திருமகளே! கடலால் சூழப்பட்ட அழகிய இடத்தை உடைய உலகத்திலுள்ள இருளை ஓட்டுகின்ற விரிந்த ஒளி உடைய சூரியனாக, வெண்மையான சந்திரனாக, தேவர்களுக்கு இன்பத்தைக் கொடுக்கும் பொங்கும் நெருப்பாக உலகத்தைக் காக்கின்ற பூங்கொடியே! நெடுக்கானகத்தில், மலையில், நிலத்தில், எங்கு நீ இருக்கின்றாயோ, அந்த இடத்தில் அல்லவோ புகழ்பெற்ற மிகுந்த செல்வமானது சிறப்படைந்து உயர்வாகத் திகழ்கின்றது, அம்மா!


 லக்ஷ்மி சுலோகம் பலன்

என்று தமிழ்க்குறுமுனிவன் பன்னியொடும்
    இருநிலத்தில் இறைஞ்ச லோடும்
"நன்றுனது துதி மகிழ்ந்தோம், நான்மறையோய்,
    இத்துதியை நவின்றோர் யாரும்
பொன்றலரும் பெரும்போகம் நுகர்ந்திடுவர்
    ஈங்கிதனைப் பொறித்த ஏடு
மன்றல்மனை அகத்திருப்பின் வறுமைதரு
    தவ்வை அவண் மருவல் செய்யாள்".

என்று கூறித் தமிழை உணர்த்திய அகத்திய முனிவர் தம்முடைய மனைவியோடு நிலத்தில் வீழ்ந்து வணங்கியவுடன் (திருமகள் அகத்திய முனிவரைப் பார்த்து கூறினாள்) "நான்மறைகளிலும் வல்லவனே! நல்லது. உன்னுடைய புகழ்ப் பாடலுக்கு உள்ளம் களித்தோம். இப்புகழ்ப் பாடல்களைப் பாடியவர்கள் எல்லோரும் பெரிய போகங்களை நுகர்வார்கள். இப்புகழ்ப் பாடல்கள் எழுதப்பெற்ற ஏடு, வளம்பொருந்திய வீட்டினிடத்தில் இருந்தால் அங்கே நான் (மஹாலக்ஷ்மி)  நித்ய வாசம் செல்வேன்!என்று திருவாய் மலர்ந்தருளினாள்.
 
 

No comments:

Post a Comment