Monday 26 September 2016

2 - ஒட்டியாண பீடம் - காஞ்சி காமாட்சி!

காஞ்சிபுரம் - ஒட்டியாண பீடம்
51 சக்தி பீடங்கள் :ஐம்பத்தோரு சக்தி பீடங்களுள் ஒன்றாகத் திகழ்வதும், காமகோடி பீடத்தினரால் உபாசிக்கப்படும் தேவியுமான காஞ்சி அன்னை காமாட்சி பேசும் தெய்வமாக போற்றப்படுகிறாள். வேண்டும் வரங்களை விரைந்து தரும் வரப்பிரசாதியும் இவளே. காமாட்சி எனும் திருநாமத்தில் கா என்பது சரஸ்வதியையும், மா என்பது லட்சுமியையும் குறிக்கும். அட்சி என்பது கண்ணாக உடையவள் என்று பொருள்படும். அதாவது, கலைமகளையும், திருமகளையும் தன் இரு கண்களாகக் கொண்டவள் காமாட்சி என்பதையே அவளது திருப்பெயர் உணர்த்துகிறது. நாடி வரும் பக்தர்களுக்கு கல்வியையும், செல்வத்தையும் ஒருங்கே தருபவளாக இந்த அம்பிகை விளங்குகிறாள். இக்கோயிலில் காமாட்சி அம்மன் இங்கே இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதொரு அம்சமாகும். அவரது ஒரு கையில் கரும்பு வில்லினையும், தாமரை மற்றும் கிளியினை இன்னொரு கையிலும் கொண்டுள்ளாள்.

தந்திர சூடாமணி எனும் நூலின்படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் இடுப்பு எலும்பு விழுந்த சக்தி பீடமாகும். இத்திருத்தலம் மகா சக்தி பீடங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது. காஞ்சிக்கு வந்து அன்னை கொலுவிருந்ததற்கு காரணம் உண்டு. கயிலையில் சிவனின் கண் பொத்தி விளையாடினாள் உமையவள். ஈசனின் நெற்றிக்கண் ஒளிபட்டு பார்வதி கருநிறம் கொண்டாள். சாபத்தின் விளைவாய் காசியில் சில காலம் அன்னபூரணியாகவும், மாங்காட்டில் பஞ்சாக்னி வளர்த்து அதன் நடுவே காமாட்சியாக தவமிருந்து, பிறகு சத்தியவிரத க்ஷேத்திரமான காஞ்சியில் மணலை லிங்கமாக பிடித்து பூஜித்தாள். அப்போது கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து வர மணல் லிங்கத்தை தன் திருக்கரத்தால் கரையாவண்ணம் காத்தாள். பஞ்சாக்னி வளர்த்து  தவமிருந்து காம இச்சையை சுட்டெரித்ததால் காமாட்சி எனும் பெயருடன் சாப விமோசனம் பெற்றாள். அதேசமயம் மன்மதனை ஈசன் எரித்த சாம்பலிலிருந்து உருவான பண்டாசுரன் எனும் அசுரனை அனைத்து தேவர்களின் துணையோடு வதைத்த லலிதா திரிபுரசுந்தரியின் வடிவினளாக இத்தலத்தில் நிலைகொண்டாள்.

தன் கணவரான ஈசன் அளித்த இரண்டு நாழி அளவு நெல்லினைக் கொண்டே  இவ்வுலகில் 32 அறங்களையும் வளர்த்ததால் அறம் வளர்த்த நாயகி என்ற சிறப்புப் பெயரும் இந்த அன்னைக்கு உண்டு. இத்தேவி அமர்ந்துள்ள இடம் காம கோட்டம் என அழைக்கப்படுகிறது. காம கோட்டம் என்றால் விரும்பியவற்றையெல்லாம் தருவது என்று பொருள். காமாட்சியை வலம் வந்து வரம் கேட்டால் தட்டாது தருவாள் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. ஆலயத்தில் பலிபீடம் அஸ்திரதேவி எனும் தேவியோடு அபூர்வமாக உள்ளது. முதல் பிராகாரத்தில் இருபத்து நான்கு தூண்கள் கொண்ட காயத்ரி மண்டபம் அமைந்துள்ளது. காமகோடி காமாட்சி, அஞ்சன காமாட்சி எனும் அரூப லட்சுமி, ஸ்ரீசக்ரம் என மூன்று வடிவங்களில் இங்கு தேவி ஆராதிக்கப்படுகிறாள். முதல் வடிவான காஞ்சி காமாட்சி, காயத்ரி மண்டபத்தின் நடுவில் தென் கிழக்கு திசையை நோக்கி நான்கு திருக்கரங்களுடன் பத்மாசனத்தில் தேவி அருட்காட்சியளிக்கிறாள்.

மற்ற அம்பிகை ஆலயங்களைப்போல அபயவரத முத்திரைகள் இல்லாது பாசம், அங்குசம், மலர்க்கணைகள், புஷ்ப பாணங்கள் போன்றவற்றை தன் திருக்கரங்களில் ஏந்தியுள்ளாள். அம்பிகையின் இடப்புற கோஷ்டத்தில் சேனா நாயகி எனப் போற்றப்படும் வாராஹியும், இரண்டாம் வடிவான அரூபலட்சுமியும் இடம் பெற்றுள்ளனர். வாராஹிக்கு முன்னே அம்பிகை பண்டாசுரனைக் கொன்று பூமியில் புதைத்ததின் நினைவாக ஜெயஸ்தம்பம் உள்ளது. இரு உருவில் பெரிய விநாயகர்களும் வாராஹிக்கு முன் அருள்கின்றனர். சௌந்தர்யத்திற்கே பொருள் தரும் லட்சுமி இத்தலத்தில் அரூபலட்சுமியாக அருள்கிறாள். வலப்புற கோஷ்டத்தில் திருமகளும் அந்தத் திருமகளைக்காண வந்த திருமாலான கள்ளவாரணரும் இடம் பெற்றுள்ளனர். நூற்றியெட்டு வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக இந்த சிறிய திருமாலின் சந்நதி இடம் பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் வடிவான ஸ்ரீசக்ரம், திருமியச்சூரில் லலிதா ஸஹஸ்ரநாமத்தை அரங்கேற்றித் துதித்த வசின்யாதி வாக்தேவதைகள் என்னும் எட்டு தேவிகளை உள்ளடக்கி காமாட்சியம்மனின் திருமுன் தரிசனமளிக்கிறது. ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட பெருமையுடையது இந்த ஸ்ரீசக்ரம். ஆதி சங்கரரால், எட்டாம் நூற்றாண்டில், இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார். இந்த சக்ரத்திற்கே அர்ச்சனை, வழிபாடு, பூஜை எல்லாம் நடக்கின்றன. ஆதிசங்கரரின் வருகையால் இத்தலம் மேலும் சிறப்படைந்தது. காமாட்சியின் பிரகாசமான முகத்தை தீர்க்கமாக தரிசிப்பவர்களுக்கு, அம்மனின் கண்கள் சிமிட்டுவது போன்றதான உணர்வினை ஏற்படுத்தும்.


 

No comments:

Post a Comment