Monday 26 September 2016

மைசூரு சாமுண்டீஸ்வரி!


 
மைசூரு மாநகரில் கால்பதிக்கும் ஒவ்வொருவரும் முதலில் கைகூப்பி வணங்குவது சாமுண்டீஸ்வரிதேவி குடி கொண்டிருக்கும் சாமுண்டிமலையை நோக்கிதான்.
 
 
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 486 அடி உயரத்தில் செங்குத்தாக காணப்படும் சாமுண்டிமலை தேவி குடி கொண்டிருக்கும் கோயிலாகவுள்ளது.
 

சாமுண்டிமலையின்  எழிலை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் மேலே சென்று என்ன இருக்கிறது என்று பார்க்க தோன்றும். மலைமீது சென்றால், உலகாளும் சாமுண்டீஸ்வரி தேவி 18 கரங்களுடன் எழிலுடன் காட்சி தருகிறார்.





கோயில் முற்றத்தில் பிரமாண்ட நந்திசிலையும், எதிர் வரிசையில் மஹிசாசுரன் சிலையும் வரவேற்கும். கஷ்டத்தோடு வரும் பக்தர்கள் மனமுருகி வேண்டினால், அதை நிறைவேற்றும் அன்னையாக தேவி விளங்குகிறார்.

 
மன்னர் ஆட்சிகாலம் தொடங்கி மக்களாட்சி காலம் வரை கர்நாடக மண்ணை ஆட்சி செய்வோர் சாமுண்டீஸ்வரியின் அருளாசியை பெறாமல் ஆட்சி நடத்துவதில்லை.

 
 
ஸ்தல புராணம் :

தற்போது மைசூரு என்று அழைக்கப்படும் நகரம் முற்காலத்தில் மஹிஷாசூர, மஹிஷா மண்டலம் என்ற பெயரில் இருந்தது. மஹிஷாசூரன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கி தவமிருந்தான்.



அவனின் தவத்திற்குமெச்சிய சிவன், நேரில் வந்து காட்சி கொடுத்ததுடன், என்ன வரம் வேண்டும் என்று கேட்டான். சிவனை அடிபணிந்த மஹிஷாசுரன், தனக்கு சாகாவரம் வேண்டும் என்றான். அவனின் வேண்டுதலை ஏற்று சாகாவரத்தை சிவன் வழங்கினார்.



சிவனிடம் வரம் பெற்றம ஹிஷாசுரன், தனக்கு மரணமில்லை என்பதால், அட்டகாசம் செய்து மக்களை அச்சுறுத்தி வந்தான். அவனின் கொடுமையை தாங்க முடியாமல், மக்கள் தேவர்களிடம் முறையிட்டனர். மஹிஷாசுரனை அழிக்க தேவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இறுதியாக சிவனிடம் சென்ற தேவர்கள், நீங்கள் வரம் கொடுத்ததால், மஹிஷாசுரன் அட்டகாசம் செய்கிறான். அவனுக்கு கொடுத்த வரத்தை திரும்ப பெறுங்கள் அல்லது அவனை அழிக்க மாற்று வழி சொல்லுங்கள் என்று முறையிட்டனர்.



தேவர்களிடம் பேசிய சிவபெருமான், நான் வரம் கொடுக்க மட்டுமே பிறந்தவன். கொடுத்தவரத்தை திரும்பபெற என்னால் முடியாது. அதே சமயம் என்னிடம் வரம் பெற்றுள்ள மஹிஷாசுரனுக்கு ஆண்கள், பிராணிகள், ஜலம் மூலம் மரணம் ஏற்படாது. ஆனால் பெண்ணால் கண்டிப்பாக மரணம் வரும். அதுபோன்ற வரத்தைதான் நான் கொடுத்துள்ளேன்.



அவனை அழிக்க வேண்டுமானால், பெண்கள் பக்தியுடன் பார்வதியிடம் முறையிட வேண்டும் என்றார். சிவனின் யோசனையை ஏற்று பெண்பக்தர்கள் பார்வதியிடம் பக்தியுடன் வேண்டி முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்று கொண்ட பார்வதிதேவி அசுரனை அழிக்க தீர்மானித்தாள். பிரம்மா, விஷ்ணு, மகேஷ்வரனின் வரம் பெற்றும் சாமுண்டீஸ்வரி தேவியாக ஆடிமாதம் வரும் மூன்றாவது வெள்ளிக்கிழமை மஹிஷாசுர மண்ணில் பிறந்தாள்.



மஹிஷாசூரன் வதம் :

சாமுண்டீஸ்வரிதேவி முப்பெரும் தேவர்களின் ஆசியுடன் 18 கைகளுடன் பிரமாண்டமாக காட்சியளித்தாள். ஒவ்வொரு கையிலும் கத்தி, சக்கரம், திரிசூலம் உள்பட பல ஆயுதங்கள் தாங்கி நின்றாள். மக்களை வாட்டிவதைத்து வந்த மஹிஷாசுரனிடம் போர் தொடுத்து அவனை வதம் செய்தார்.



அசுரனை அழித்த சாமுண்டீஸ்வரியை மக்கள் போற்றி வணங்கியதுடன், தங்களுக்கு துணையாக இதே இடத்தில் தங்கி அருள்பாலித்து ஆதரிக்க வேண்டும் என்று வேண்டி கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று சாமுண்டிமலையில் குடிகொண்டாள்.



சாமுண்டீஸ்வரி தேவியை யதுகுலத்தை சேர்ந்த உடையார் பேரரசர்கள் தங்கள் குலதெய்வமாக போன்றி வணங்கி வருகிறார்கள்.  அந்த குடும்பத்தை மட்டுமில்லாமல், மாநிலத்தையும் ஆசீர்வதித்து வருகிறாள்.



உடையார் பேரரசர்கள் கடந்த 1823ம் ஆண்டு திராவிட கலையில் கோயில் அமைத்தனர். பின் 16 அடி உயரம், 26 அடி நீளத்தில் நந்திசிலை அமைக்கப்பட்டது. கோயிலுக்கு வரமலையின் நான்கு திசையிலும் பாதை அமைத்துள்ளனர். கடந்த 1827ம்ஆண்டு கிருஷ்ணராஜ உடையார் கோயில் கோபுரத்தில் 7 தங்ககலசங்கள் பொருத்தி கும்பாபிஷேகம் நடத்தினார்.



ஆடிமாதம் வரும் 3வது வெள்ளிக்கிழமை சாமுண்டீஸ்வரி தேவி பிறந்ததால், ஒவ்வொரு ஆண்டுகள் ஆடிமாதம் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. மூன்றாவது வெள்ளிக்கிழமை தேவிபிறந்தநாள் என்பதால் மைசூரு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு அபிஷேகம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
 


 
 

No comments:

Post a Comment