Saturday 24 September 2016

ஞாயிறு கோயில்!

   

அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில், ஞாயிறு

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்திலிருந்து 10 கீ.மீ தொலைவில் உள்ள ஞாயிறு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில்.

 தல வரலாறு !

தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மகள் சமுக்ஞாவை சூரியன் மணந்து கொண்டார். நாளுக்கு நாள் சூரியனின் வெப்பத்தன்மை அதிகமாகவே சமுக்ஞா, தன் நிழலை உருவமாக்கி கணவனிடம் விட்டுச் சென்றுவிட்டாள். எமன் மூலமாக இதையறிந்த சூரியன், மனைவியை அழைத்து வரச் சென்றார். கிளம்பும்போது சிவபூஜை செய்தார். அப்போது ஒரு ஜோதி வானில் தோன்றி நகர்ந்தது. சூரியன் அதை பின்தொடர்ந்தான். அந்த ஜோதி, இங்கு தடாகத்தில் பூத்திருந்த தாமரை மலரில் ஐக்கியமானது. அதிலிருந்து தோன்றிய சிவன், சூரியனுக்கு காட்சி கொடுத்து, மனைவியுடன் சேர்ந்து வாழும்படியாக அருளினார். பின்பு சூரியனின் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார்.

சூரியன் பூஜித்த லிங்கம், தாமரை மலருக்குள்ளேயே இருந்தது. பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே சென்றான். அப்போது தடாகத்திலிருந்த ஒரு தாமரை மட்டும் மின்னிக் கொண்டிருந்ததைக் கண்டான். அதை பறிக்க நினைத்தவன், நெருங்கியபோது தாமரை நகர்ந்து சென்றதே தவிர, கையில் சிக்கவில்லை. ஆச்சர்யமடைந்த மன்னன், தன் வாளால் அதை வெட்டவே, ரத்தம் பீறிட்டது. இதைக்கண்ட மன்னன், பார்வை இழந்தான். வருந்திய மன்னன் சிவனை வேண்டினான். அவனுக்கு காட்சி தந்த சிவன், கண் பார்வை கொடுத்ததோடு, தான் அவ்விடத்தில் லிங்க வடிவில் இருப்பதாக கூறினார். அதன்பின் மன்னன் தடாகத்தின் கரையில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினான். தாமரை புஷ்பத்தில் எழுந்தருளியவர் என்பதால் சிவன், 'புஷ்பரதேஸ்வரர்'' என்று பெயர் பெற்றார்.

சுந்தரரின் மனைவி சங்கிலி நாச்சியார், இவ்வூரில் பிறந்தவர். புஷ்பரதேஸ்வரரை வழிபட்ட அவர், இங்கிருந்து திருவொற்றியூர் சென்று சிவசேவையில் ஈடுபட்டு, பின்பு சுந்தரரை மணந்து கொண்டார். இவருக்கும் இங்கு சன்னதி இருக்கிறது. அமாவாசை, மாசி மகத்தன்று சங்கிலியாருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது.மூலஸ்தானத்திற்கு முன்புள்ள மண்டபத்தில் சூரியன், புஷ்பரதேஸ்வரர் சன்னதியை பார்த்தபடி இருக்கிறார். இவர் எப்போதும் இங்கு சிவனை வழிபட்டுக்கொண்டிருப்பதாக ஐதீகம். சித்திரை பிறப்பின்போது, முதல் 7 நாட்கள் புஷ்பரதேஸ்வரர், சொர்ணாம்பிகை மீது சூரிய ஒளி விழுகிறது. அந்த நாட்களில் சிவனுக்கான பூஜையை, சூரியனே செய்வதாக ஐதீகம். எனவே, அன்று உச்சிக் காலத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்வதில்லை.

ஞாயிற்றுக்கிழமைகளிலும், சூரியன், வடக்கு நோக்கிய பயணத்தை (உத்தாரயண புண்ணிய காலம்) துவங்கும் நாளான மகர சங்கராந்தியன்றும் (தைப்பொங்கல்) சிவன், சூரியனுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. சூரியன், பிற கிரகங்களுக்கு தலைமை கிரகம் என்பதால், இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. பிற கிரகங்களால் தோஷ பாதிப்பிற்குள்ளானவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில் இவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, நெய் மற்றும் கோதுமையில் விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

பல்லவ விநாயகர் 

விநாயகர் தலையில் கிரீடத்துடன்தான் இருப்பார். ஆனால் இங்கு கிரீடம் இல்லாத விநாயகரை தரிசிக்கலாம். தந்தைக்கு மரியாதை செய்யும் விதமாக, இவர் இவ்வாறு காட்சி தருவதாக சொல்கிறார்கள். இவரை 'பல்லவ விநாயகர்' என்றழைக்கிறார்கள். இவரிடம் வேண்டிக்கொள்ள பொருளாசை, பதவி மீதான விருப்பம் குறையும் என்பது நம்பிக்கை. கண்வ மகரிஷி இங்கு சிவனை வழிபட்டிருக்கிறார். இவருக்கும் இங்கு சிலை இருக்கிறது. பல் தொடர்பான நோயுள்ளவர்கள் இவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். கோஷ்டத்தில் யோக தெட்சிணாமூர்த்தி, யோக பட்டையுடன் காட்சி தருகிறார். கால பைரவர்,

சூரிய வழிபாடு

 சித்திரை மாதம் முதல் வாரம் (1-7ம் தேதி), காலை 6:10 மணிக்கு சிவன் மற்றும் அம்பிகை மீது சூரிய ஒளி விழுகிறது. இத்திருத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய ஓரை சமயத்தில் (காலை 6-7, மதியம் 1-2, மாலை 6-7) வழிபாடு செய்வோர்க்கு ஜென்ம பாவம் நீங்கி மோட்சம் கிட்டும்.

பரிகார பூஜைகள்: 
 
சூரியன், கண் தொடர்பான நோய்களை நிர்ணயிக்கும் கிரகமாக இருப்பதால், பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் இங்கு சிவன், சூரியனுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட கண் நோய் நீங்க பெறுகிறார்கள்.
11 வாரங்கள் இத்திருத்தலத்தில் பூஜித்து, சர்க்கரை பொங்கல் அபிஷேகம் செய்து வர விவாகத் தடை நீங்கி திருமணம் நடைபெறும்.

தொழில் சம்பந்தமான பிரச்சனை/சொத்துப் பிரச்சனை: 11 வாரங்கள் இத்திருத்தலத்தில் பூஜித்து, தயிர் சாத அபிஷேகம் செய்து வர தொழில் பிரச்சனை/சொத்துப் பிரச்சனை நீங்கப் பெறும்.

 11 வாரங்கள் இத்திருத்தலத்தில் பூஜித்து, கோதுமை கேசரி அபிஷேகம் செய்து வர குழந்தைகளின் கல்வி மேம்படும்.

பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்க:
 
பிரகாரத்தில் கிரீடம் அணியாத பல்லவ விநாயகர் இருக்கிறார். தந்தைக்கு மரியாதை செயும் விதமாக, இவர் இவ்வாறு இருப்பதாக ஐதீகம். சிவனை வழிபட்ட கண்வ மகரிஷி கோயில் முன் மண்டபத்தில் இருக்கிறார். பல் நோயுள்ளவர்கள் இவருக்கு 6 வாரங்கள் 9 நெய் தீபம் ஏற்றி வழிபட பல் நோய் நீங்க பெறுவர்.
 
 
பஸ் ரூட்:
 
இத்திருத்தலம் செங்குன்றத்திலிருந்து 10 கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது. பாரீஸ் கார்னரிலிருந்து மாதவரம்- செங்குன்றம் வழியாக் பேருந்து இயக்கப்படுகிறது. பேருந்து எண்: T57, 58A & 58G

ஆலய நேரம்: காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை.
 

மூலவர்      :  புஷ்பரதேஸ்வரர்
அம்மன்      :  சொர்ணாம்பிகை
ஊர்               :  ஞாயிறு
மாவட்டம் :  திருவள்ளூர்
தீர்த்தம்       :       சூரிய தீர்த்தம்
விருட்சம்   :      செந்தாமரை
அவதாரம்   :     சங்கிலி நாச்சியார்
முக்தி           :     கன்வ மகரிஷி
 
 

No comments:

Post a Comment