Tuesday 13 September 2016

தடைகள் அகற்றி நலன்கள் பொழியும் தாராதேவி!

தாரா தியானம்!

விச்வவ்யாபக வாரிமத்ய விலஸத் ச்வேதாம்புஜன்மஸ்திதாம்
கர்த்ரீம் கட்க கபால நீலநளினை: ராஜத்கரா மிந்துபாம்
காஞ்சீ குண்டல ஹார கங்கணலஸத் கேயூரமஞ்ஜீரதாம்
ப்ராப்தைர் நாகவரை: விபூஷிததனும் ஆரக்த நேத்ரத்ரயாம்
பிங்காக்ரைகஜடாம் லலத்ஸ்வரஸனாம் தம்ஷ்ட்ராகராளானனாம்
சர்ம த்வைபிவரம் கடௌ விதததீம் ச்வேதாஸ்தி பட்டாளிகாம்
அக்ஷோப்யேண விராஜமான சிரஸம் ஸ்மேரானனாம் போருஹாம்
தாராம் சாவஹ்ருதாஸனாம் த்ருடகுசாம் அம்பாம் த்ரிலோக்யா: ஸ்மரேத்

தாரா காயத்ரி!

ஓம் தாராயை வித்மஹே
மஹோக்ர தாராயை தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்.

தாரீ என்றால் படகு எனப் பொருள். படகு எவ்வாறு தன்னை நம்பி ஏறி அமர்வோரை தண்ணீரில் மூழ்காமல் காப்பாற்றுகிறதோ அதேபோல் இந்த தாராதேவியும் தன் பக்தர்களை சம்சாரம் எனும் கடலில் மூழ்காமல் காத்து, முக்தியை அருள்வாள் என ரிக்வேதத்தில் முதல் காண்டத்தில் 99வது அனுவாகத்தின் முதல் செய்யுளில் கூறப்பட்டுள்ளது. வேத காலத்திலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ள அற்புத உபாசனை, இந்த தாராதேவியின் உபாசனையாகும்.

கடல் நீரில் வெண் தாமரையில் வீற்றருளி சம்சார சாகர மத்தியில் உயர்ந்துள்ள தூய பிரும்ம ஞானம், தான்தான் என்பதை உணர்த்துபவள். வெண் தாமரையில் திடமாக அமர்ந்தும் நின்றும் அந்த பிரம்ம வித்யையிலேயே நடந்தும் நம்மை ஆபத்தான பந்தத்திலிருந்து காப்பதால் இத்தேவி தாரா எனப்படுகிறாள்.

பிரம்ம வித்யையின் வடிவமாய் இருப்பவர் ஈசன். அவர் தன் பதியானபடியால் அவர் மீது அமர்ந்தும் அவரில் உறுதியாக நின்றும் அவருக்கேற்ற பத்தினியாய்த் துலங்குகிறாள். ஈசனுக்கென்று அந்நியமானதொரு இடமோ பொருளோ இல்லையென்பதால் அவள் அவர் மீதே நடப்பதை உணர்த்து கிறது. நாம்கூட எங்கும் நிறைந்த ஆண்டவன் மீதுதான் நடக்கிறோம், நிற்கிறோம், படுக்கிறோம், வசிக்கிறோம். இவ்வுண்மையை உணர்த்தவே தாராதேவி ஈசன் மீது நின்றருள்வதாகக் கூறுவர்.

 இந்த தாரா தேவியை பல்வேறு மதத்தினரும் போற்றிவழிபடுகின்றனர். ஜைனர்கள் தாராவை ப்ரபாவதீ என்பர். பௌத்தர், தாரா என்பர். கௌலர் சக்ரா என்றும் சீனர் மஹோக்ரா என்றும் ஸ்ரீவித்யா உபாசனையில் மன்மதன் உபாசித்த காதி வித்யா உபாசகர்கள் காளீ என்றும்  லோபாமுத்திரா தேவி உபாசித்த ஹாதி வித்யா உபாசகர்கள் ஸ்ரீசுந்தரி என்றும் இத்தாராவை போற்றி வழிபடுகின்றனர். பராசக்தி எடுத்த தசமகாவித்யா வடிவங்களுள் இரண்டாவது வடிவாகப் பிரகாசிப்பவள் இவள்.

தன் நாதன் பசுபதி மீது நின்றருள்பவள் தாரா. ஆழ்ந்த யோக நித்திரையில் தபோ தியானத்தில் உள்ளபோது பரமசிவன் சவம் போல் அசையாமல் கிடப்பார். அர்த்தநாரீஸ்வரியான தாரா தம் இச்சா, ஞான, க்ரியா சக்திகளால் உலகை அப்போது நடத்துகிறாள். தன் நாதனை விட்டுப் பிரியாமல் அவள் தர்மபரிபாலனம் செய்கிறாள்.

ஈசனின் வலது கால் முட்டிக்குக் கீழே சிறு மணி கட்டப்பட்டுள்ளது. ஈசன் தியானத்திலுள்ள போது சேமிப்பு சக்தியாய் அமைதியாய் இருப்பார். அவரிடமுள்ள பிரம்மஞானம் அவர் அசையும் போது ரகசிய பிரம்ம வித்யையை போதமாக ஒலிப்பதை அந்த மணி குறிக்கிறது.

சிவமே ஆதாரம் என்பது, தாரா அவர் மீது நிற்பதிலிருந்து விளங்கும். மரம் நிற்க பூமி ஆதாரமாயிருப்பது போல், சிவம் சவம் போல் அமைதியாக, யோக நித்திரையில் இருப்பது விளங்கும்.

தேவி அமர்ந்திருப்பது நிலையாயுள்ளதையும் ஸ்திரத்தன்மையையும் குறிக்கும். நிற்பது உலகைக் காக்க சித்தமாவதைக் குறிக்கும். நடப்பது அவள் திருவருள் புரிய வருகிறாள், எங்கும் நடமாடுகிறாள் என்பதைக் குறிக்கும். அதனால்தான் ஆலயங்களில் தேவியை அமர்ந்த கோலத்திலும் நின்றகோலத்திலும் அலங்காரங்கள் செய்கின்றனர்.

குள்ளமான உருவம் கொண்டவள். கோரமான ஆபத்துகளிலிருந்து காப்பதால் மஹோக்ரா எனப்படுகிறாள். இத்தேவி கத்திரிக்கோல், கத்தி, கபாலம், கருங்குவளைப்பூ ஆகியன ஏந்திய நான்கு கரங்கள் கொண்டவள். உணர்வுகள் நசிக்கின்ற பேருணர்வு வடிவினள் என்பதை உணர்த்தவே தன் காலில் சிவத்தை மிதித்த நிலையில் தோற்றமளிக்கிறாள். வாழ்வின் பாச பந்தங்களை நறுக்க கத்திரிக்கோலையும் அகங்காரத்தை நீக்க மண்டை ஓட்டின் கபாலத்தையும் ஞானத்தை ஏற்படுத்துவதில் உள்ள இடையூறுகளை வெட்ட ஞானவாளாகிய வீரவாளையும் இந்த பயங்கரங்களுக்கு ஈடு செய்வது போன்று மற்றொரு கரத்தில் ஆன்ம மலர்ச்சியைக் குறிக்கும் நீலோத்பல மலரையும் தாங்கியுள்ளாள்.

மூவுலகத்தில் உள்ள அறியாமையையும் தன் கபாலத்தில் வாங்கிக் கொண்டு ஒரு நொடியில் நீக்கிவிடும் மகா காருண்யவாரிதி இவள். கடல் பிரயாணங்களை முடித்துத் தரும் காவல் தெய்வமும் இவளே. ஓம் எனும் ப்ரணவமே இவள் பீஜம். பாற்கடல் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை உட்கொள்வதற்கு ஈசனுக்குத் துணிவையும் சக்தியையும் தந்தவள் இவளே என தோடல தந்திரம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சந்திரன் போன்ற நிறத்தினள். சிறந்த நாகங்களையே ஒட்டியாணம், குண்டலம், ஹாரம், கங்கணம், தோள்வளை எனும் நூபுரம், பாதச்சலங்கை என்று ஆபரணங்களாகக் கொண்ட திருமேனியள். சிவந்த மூன்று கண்களைக் கொண்டவள். மஞ்சளும் சிகப்பும் கலந்த நிறம் கொண்ட முனையையுடைய ஒற்றைச் சடையைக் கொண்டவள். அசையும் நாக்கினள். தெத்திப் பற்களுடன் கூடிய விசாலமான முகத்தினள். இடையில் யானைத் தோலை ஆடையாக அணிந்தவள். முண்டமாலை தரித்தவள். ஒரு காலை முன்னும் ஒரு காலை பின்னும் வைத்தருள்பவள். 5 வெண்ணிற எலும்புகளை அணிந்த நெற்றியினள். இதை ஆதிசங்கரர், ‘‘விசித்ராஸ்திமாலாம் லலாடேகராளாம் கபாலம் ச பஞ்சான்விதம் தாரயந்தீம்’’ எனக் குறிப்பிடுகிறார். இதையே ஸ்ரீவித்யார்ணவ தந்த்ரம் ‘லலாடே ச்வேதாஸ்தி பட்டிகா சதுஷ்டயான்வித கபால பஞ்சகான்விதாம்’ எனக் குறிப்பிடுகிறது. 

அக்ஷோப்யர் எனும் ரிஷி இந்த தாராமந்திரத்தை ஜபித்து, நாகவடிவில் தேவியின் சிரசை அலங்கரிக்கும் வரத்தைப் பெற்றார். அந்த நாகவடிவமான ரிஷி அலங்கரிக்கும் சிரத்தை உடையவள். புன்சிரிப்பு தவழும் முகத்தினள். கடினமான திருமார்பகங்களைக் கொண்டவள். மூவுலகங்களுக்கும் தாயாய் இருப்பவள்.

காளீகாண்டம் 12ம் படலத்தில் இந்த தாராதேவியின் பெருமைகள் பேசப்படுகின்றன. யோகம் என்பது தாரா யோகமே; ஜபம் என்பதும் தாரா ஜபமே; மஹா மந்த்ரம் என்றால் அது தாரா மந்த்ரமே. இந்த மந்திரத்தை உபாசிப்பவனே மகாபாக்கியவான். அவனே ஞானி. அவனே சீலன். அவனே தீட்சை பெற்றவன். அவனே ஆத்ம ஸ்வரூபி. அவனே பிரம்மானந்தத்தில் திளைப்பவன் எனக் கூறப்பட்டுள்ளது.

காஷ்மீரில் பிறந்த குழந்தைகளுக்கு, பிறந்து மூன்று நாட்களுக்குள்ளாக தாராவின் மற்றொரு எழில் வடிவமான நீல சரஸ்வதியின் மந்திரத்தை தேனில் எழுது குச்சியைத் தொட்டு நாவில் எழுதிய தாய்மார்கள் இருந்ததாகக் கூறப்படுவதுண்டு. அவர்கள் பிற்காலத்தில் காஷ்மீரி பண்டிட் என சிறப்புடன் திகழ்ந்ததற்கு அதுவே காரணம் எனவும் நம்பப்படுகிறது.

லலிதா பரமேஸ்வரியின் 19வதான மனோமயமான பிராகாரத்தில் இத்தேவி வாசம் புரிகிறாள். இந்த மகாசக்தி தன் பதியுடன் சந்தோஷமாக அருளும் இடம் அது. அவளுக்குப் பணிவிடை செய்ய ஆயிரக்கணக்கான தோழிகள் உள்ளனர். செந்நிறம் கொண்ட கப்பல்கள் ஆயிரக்கணக்கில் அங்கு மிதக்கும். அவற்றில் தேவியும் தோழியரும் விளையாடி மகிழ்வர். அந்த இடத்தினுள் யாரும் எளிதில் பிரவேசிக்க முடியாது. மந்திரிணி தேவியும் தண்டினி தேவி எனும் வாராஹியும் அனுமதி தந்தால்தான் தாராவை தரிசிக்க முடியும். அவர்கள் அனுமதி இல்லாமல் முக்கண்ணனால் கூட தாராவை தரிசிக்க முடியாது என லலிதோபாக்யானம் வர்ணிக்கிறது. தாரிணீ எனும் தாரா மந்திரங்கள் சர்வ சித்திகளையும் அளிப்பவை. சாதகன் கவிதா சக்தி பெறுகிறான். வாக்கு வன்மை அளிப்பதில் இந்த தேவியின் மந்திரம் நிகரற்றது.  இவளே பராசக்தி. இவளே நித்யமானவள். இவளே தேவர்களுக்காக ஆவிர்ப்பவித்த காளராத்ரி.

சாக்த தந்திரங்களில் பதினோரு இரவுகள் அம்பிகைக்கு உரியனவாகக் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு மகாசக்திக்கு உரியனவாகும். அந்தந்த ராத்திரிகளில் அந்தந்த சக்திகளை உபாசித்து பேறுகள் பெறலாம். அவை: காளராத்ரி, வீரராத்ரி, மோஹராத்ரி, மஹாராத்ரி, க்ரோத ராத்ரி, கோர ராத்ரி, தாரா ராத்ரி, அபலா ராத்ரி, தாருணா ராத்ரி, சிவராத்ரி, திவ்ய ராத்ரி என்பனவாம். காளராத்ரியில் தாராதேவி தோன்றியதாக கூறப்பட்டுள்ளது.  நரகசதுர்த்தசி, தீபோத்ஸவ தீபாவளி அமாவாசை தொடர்புடைய இரவே காளராத்ரீ எனப்படும். இது காளிக்கும், தாராவிற்கும் பிரியமான இரவாகும். அன்று அவர்களை உபாசித்தால் அதிக வரங்கள் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. அதே போன்று செவ்வாய்க்கிழமை அமாவாசையும் அன்று கிரகணமும் நேர்ந்தால் அந்த ராத்ரி தாரா ராத்ரியாக போற்றப்படுகிறது.

தாரா தேவியின் புருஷ வடிவமே ராமர் என சாக்த தந்திரம் கூறுகிறது. இதற்கொரு சுவையான புராண சம்பவம் ஒன்றும் உண்டு. ராவணன் கைலயங்கிரியை பெயர்த்தெடுத்தபோது பார்வதி ஈசனை பயத்தால் கட்டித் தழுவினாள். அதனால் மகிழ்ந்த ஈசன் ராவணனை தண்டிக்காமல் விட்டான். அதற்கு பார்வதி ஈசனிடம், ‘‘நான் தங்களைத் தழுவ காரணமான ராவணனை ஏன் தண்டிக்காமல் விட்டீர்கள்?’’ எனக் கேட்க, ‘‘தேவி ஒரு பெண் தானாக ஆலிங்கனம் செய்யும் போது ஒரு புருஷனுக்கு அளவு கடந்த மகிழ்வைத் தரும்’’ என்றாராம். ‘‘அந்த சுகம் எப்படி இருக்கும்?’’ என பார்வதி கேட்க, ‘‘நீ ராவணனை வதம் செய்ய ராமனாக அவதாரம் செய். நான் சீதையாய் பிறக்கிறேன். கர வதத்தின் போது சீதையாக பிறந்த நான் ராமராகப் பிறந்த உன்னை ஆலிங்கனம் செய்வேன். அப்போது நீ அந்த சுகத்தை அறியலாம்’’ என்றாராம். அதன்படி தேவியே ராமராக அவதரித்தார். கரவதம் நிகழ்ந்ததும் சீதை ராமரை ஆலிங்கனம் செய்தது வரலாறு. இதை உறுதி செய்வது போல் வால்மீகி ராமாயணத்திலும் சீதா தேவி ராமரை நீ புருஷ வடிவில் வந்த ஸ்த்ரீ எனப்பொருள்படும் ‘ஸ்த்ரியம் புருஷ விக்ரஹம்’ எனும் வரி உள்ளது, குறிப்பிடத்தக்கது.

சீதாராமில் உள்ள இடையெழுத்துகளான ‘தாரா’ மங்கள நாமாவாகும். ஹரா சப்த கடையெழுத்தும் உமா சப்த கடையெழுத்தும் சேர்ந்தது ‘ராம’. ராமர் தாராவை வழிபட்டுத்தான் கடல் கடந்து சென்று ராவணனை வென்றார்.

இப்போதும் கடல் கடந்து அயல்நாடு செல்ல பாஸ்போர்ட், விசா வேண்டுவோர் ‘தாராயை நமஹ’ எனும் மந்திரத்தை மனமுருக ஜபித்தால் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் பாஸ்போர்ட், விசா, கிடைக்கும். இத்தேவி மஹாநீலசரஸ்வதி என போற்றப்படுகிறாள்.

அநேக பிரம்மரிஷிகள் இத்தேவியை வழிபட்டு சித்தி பெற்றுள்ளனர். இவளை உபாசிப்பதால் பலவித போகங்கள், வாக்குவல்லமை, கவிபாடும் ஆற்றல், ராஜ வெகுமதி, தனம், தான்யங்கள், அளவற்ற செல்வம், மகோன்னதமான உயர்பதவி போன்றவற்றைத் தந்து ஞானமும் அதனால் வாழ்வின் முடிவில் முக்தியும் பெறலாம்.

வசிஷ்டர் தாராதேவியின் மகிமையை அறிந்து அதை அடைய மகாசீனம் எனும் திபெத்திற்குச் சென்று முறையாக தாரா உபாசனையைக் கற்று கவுகாத்தியில் காமபீடம் அருகே உக்ரதாரா பீடத்தை நிறுவியதாக ருத்ரயாமளம் எனும் தந்த்ர நூலில் குறிப்பிட்டுள்ளது. தாரா மந்திரத்தைத் தெரிந்து கொள்வதாலேயே வெற்றிகள் குவியும் என ஸ்ரீவித்யார்ணவ தந்த்ரம் கூறுகிறது.

வாரணாசி எனும் காசியில் அநேக தாரா ஆலயங்கள் உள்ளன.

பைரவி தந்த்ரம் எனும் நூலில் தாராவின் முக்கியமான 30 நாமாவளிகள் அருளப்பட்டுள்ளன. அவற்றை தினமும் ஜபித்தால் கிட்டாதது எதுவுமே இல்லை என்று அந்த தந்திரம் குறிப்பிடுகிறது.

தாரிணீ, தரளா, தாரா, த்ரிரூபா, தரணிரூபா, ஸத்வரூபா, மஹாஸாத்வீ, ஸர்வஜனபாலிகா, ரமணீயா, ரஜோரூபா, ஜகத் ஸ்ருஷ்டிகரீ, பரா, தமோரூபா, மஹாமாயா, கோரரூபா, பயானகா, காலரூபா, காளிகாக்யா, ஜகத்வித்வம்ஸகாரிகா, தத்வஞானபரா, ஆனந்தா, தத்வஞானப்ரதா, அனகா, ரக்தாங்கீ, ரக்தவஸ்த்ரா, ரக்தமாலாப்ரசோபிதா, ஸித்தலக்ஷ்மீ, ப்ரம்ஹாணீ, பத்ரகாளீ, மஹாலயா என போற்றி தாராவின் தாள்களைப் பணிவோம்.

தடைகள் தகர்ந்துபோக, மங்கலங்கள் தங்க, அந்த மங்கை நல்லாளைத் துதிப்போம்.



 

No comments:

Post a Comment