Wednesday 14 September 2016

ஸ்ரீகமலாம்பிகா அஷ்டகம்!

51 சக்தி பீடங்களில் முதல் சக்தி பீடமாகத் திகழும் பெருமை பெற்றது, திருவாரூர் கமலை பீடம். இத்தலத்தில் உள்ள அட்சரபீடத்தில் சக்தியின் 51 அட்சரங்களும் இடம்பெற்றுள்ளன. இத்தலத்தை தரிசித்தாலே 51 சக்தி பீடங்களையும் தரிசித்த பலனைப் பெறலாம். தேவேந்திரனால் ஆராதிக்கப்பட்ட தியாகராஜ மூர்த்தி அருளாட்சி புரியும் இத்தலத்தில் தேவியும் கமலாம்பிகையாக திருவருள் பாலிக்கிறாள்.

சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர், இத்தேவியைக் குறித்து கமலாம்பாள் நவாவரணம் எனும் அற்புத கீர்த்தனைகளை இயற்றியருளியுள்ளார். அந்த கீர்த்தனைகள் ஸ்ரீவித்யா உபாசகர்களால் வழி வழியாக இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன. பொதுவாகவே கமலாம்பிகை அஷ்டகத்தை பாராயணம் செய்து வந்தால் கிட்டாதது எதுவும் இல்லை என்பது பெரியவர்களின் அனுபவம், நம்பிக்கை. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கீழ்காணும் அஷ்டகத்தைப் பாராயணம் செய்து, அம்பிகை அருளால் அனைத்து நலன்களும் பெறுவோம். இத்துதி நாராயண தீர்த்தர் எனும் யதியின் சிஷ்யரால் இயற்றப்பட்டது.

பந்தூகத்யுதிமிந்து பிம்ப வதனாம்
ப்ருந்தாரகைர்வந்திதாம்
மந்தாராதி ஸமர்சிதாம் மதுமதீம்
மந்தஸ்மிதாம் ஸுந்தரீம்
பந்தச்சேதன காரிணீம் த்ரிநயனாம்
போகாபவர்கப்ரதாம்
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் ஸிவாம்

 செம்பருத்தி மலர் போன்ற செவ்வொளி பூண்டவளே, ஒளிமிகு சந்திரன் போன்ற முகம் கொண்டவளே, தேவர்களால் வணங்கப்பட்டவளே, மந்தாரம் முதலான மலர்களால் பூஜிக்கப்பட்டவளே, மனதிற்கு எப்போதும் சந்தோஷம் அளிப்பவளே, நிலைத்த புன்சிரிப்புடன் திகழ்பவளே, அழகின் இலக்கணமே, கர்மபந்தத்தை போக்குகிறவளே, முக்கண்களை உடையவளே, இவ்வுலகில் எல்லா சுகங்களையும் அளித்து, நிரந்தர சந்தோஷமான மோட்சத்தையும் அளிப்பவளே, பக்தர் விரும்பியனவெல்லாம் நிறைவேற்றித் தருபவளே, மங்களமே வடிவானவளே, கமலாம்பிகையே, நமஸ்காரம்.

ஸ்ரீகாமேஸ்வர பீட மத்ய நிலயாம்
ஸ்ரீ ராஜராஜேஸ்வரீம்
ஸ்ரீ வாணீ பரிஸேவிதாங்க்ரியுகளாம்
ஸ்ரீமத்க்ருபாஸாகராம்
சோகாபத்ய மோசினீம் ஸுகவிதா
நந்தைக ஸந்தாயினீம்
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் ஸிவாம்

ஸ்ரீகாமகோடி பீடத்தின் நடுவில் அமர்ந்தவளே, ராஜராஜாக்கள், ஈஸ்வரி, மகாலட்சுமி, சரஸ்வதி இவர்களால் சேவிக்கப்பட்ட, தாமரை போன்ற மென்பாதங்களைக் கொண்டவளே, ஐஸ்வர்யத்தை அளிக்கும் கருணைக் கடலாக இருப்பவளே, மனக்கவலை, ஆபத்துகள், பயம் ஆகியவற்றைப் போக்குகிறவளே, நல்ல கவிதை உள்ளத்தை அளித்து, அதனால் பேரானந்தத்துக்கு வழி வகுப்பவளே,
கமலாம்பிகையே, நமஸ்காரம்.

மாயா மோஹவினாஸினீம்
முனிகணைராராதிதாம் தன்மயீம்
ஸ்ரேய: ஸஞ்சய: தாயினீம் குணமயீம்
வாய்வாதி பூதாம் ஸதாம்
ப்ராத: கால ஸமானஸோப மகுடாம்
ஸாமாதி வேதைஸ்துதாம்
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் ஸிவாம்

மாயையினால் ஏற்படும் அஞ்ஞானத்தை நீக்குகிறவளே, முனிவர்களால் ஆராதிக்கப்படுபவளே, பிரம்ம ஸ்வரூபமாக துலங்குபவளே, பலவித க்ஷேமங்களை மனம் மகிழ அளிப்பவளே, சத்குணங்கள் நிரம்பியவளே, சாதுக்களின் இதயத்தில் பிராணனுக்குக் காரணமான ஆகாச பூதமாக திகழ்பவளே, உதய காலத்திற்கு ஒப்பான சிவந்த ஒளியுடன் கூடிய கிரீடத்தை அணிந்தவளே, சாம வேதம் முதலான வேதங்களால் துதிக்கப்பட்டவளே, கமலாம்பிகையே, நமஸ்காரம்.

பாலாம் பக்தஜனௌக சித்தநிலயாம்
பாலேந்து சூடாம்பராம்
ஸாலோக்யாதி சதுர்விதார்தபலதாம்
நீலோத்பலாக்ஷீமஜாம்
காலாரிப்ரிய நாயிகாம் கலிமல
ப்ரத்வம்ஸினீம் கௌலினீம்
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் ஸிவாம்

சிறு பெண்ணாக இருப்பவளே, பக்தர்களின் சித்தத்தில் உறைபவளே, சந்திர கலையை சிரஸில் தரித்தவளே, பரப்ப்ரம்ம ஸ்வரூபிணியே, ஸாலோக்யம், ஸாமீப்யம், ஸாரூப்யம், ஸாயுஜ்யம் ஆகிய நான்கு புருஷார்த்தங்களைக் கொடுப்பவளே, நீலோத்பலம் போன்ற கண்களை உடையவளே, பிறப்பு அற்றவளே, காலனைக் காலால் உதைத்த பரமசிவனுடைய பிரிய மனைவியே, கலியால் ஏற்படும் பாவங்களைப் போக்குகிறவளே, சிவசக்தி ஸம்பந்தரூபமாக உள்ளவளே, விரும்புவோர் எண்ணங்களை ஈடேற்றுபவளே, கமலாம்பிகையே நமஸ்காரம்.

ஆனந்தாம்ருத ஸிந்து மத்ய நிலயாம்
அக்ஞான மூலாபஹா
க்ஞானானந்த விவர்தினீம் விஜயதாம்
மீனேக்ஷணாம் மோஹினீம்
க்ஞானானந்தபராம் கணேஸ ஜனனீம்
கந்தர்வ ஸம்பூஜிதாம்
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் ஸிவாம்

ஆனந்த சமுத்திரத்தின் நடுவில் இருப்பவளே, அஞ்ஞானத்தின் ஆதிகாரணத்தையே போக்குகிறவளே, ஞானம், ஆனந்தம், இவற்றை நன்கு மேலோங்கச் செய்கிறவளே, ஜயத்தைக் கொடுக்கிறவளே, மோகிக்கச் செய்கிறவளே, ஞானம் ஆனந்தம் இவற்றிற்குக் காரணமாக இருப்பவளே, ஸ்ரீமகாகணபதிக்குத் தாயாக இருப்பவளே, கந்தர்வனால் சிறப்பாக பூஜிக்கப்பட்டவளே, கோரிய பொருளை அளிப்பவளே, மங்களமே வடிவானவளுமான கமலாம்பிகையே, நமஸ்காரம்.

ஷட்சக்ரோபரி நாதபிந்து நிலயாம்
ஸர்வேஸ்வரீம் ஸர்வகாம்
ஷட் ஸாஸ்த்ராகம வேத வேதிதகுணாம்
ஷட் கோண ஸம்வாஸினீம்
ஷட் காலேன ஸமர்ச்சிதாத்ம விபவாம்
ஷட்வர்க ஸம்சேதினீம்
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் ஸிவாம்

ஷட்சக்ரத்தின் மீது நாதபிந்துவில் இருப்பவளே, யாவருக்கும் ஈஸ்வரியாய் விளங்குபவளே, எங்கும் வியாபித்திருப்பவளே, ஆறு சாஸ்திரம், ஆகமங்கள், நான்கு வேதங்கள், இவை போற்றும் குணங்களை உடையவளே, ஷட்கோணங்களில் இருப்பவளே, ஆறு காலங்களிலும் பூஜிக்கப்பட்ட ஸ்வரூபத்தை உடையவளே, காம, க்ரோத, லோப, மோக, மத, மாத்ஸர்யம் எனும் ஆறு வர்க்கங்களையும் அழிப்பவளே, கோரிய பொருளை அளிப்பவளே, மங்களமாய்த் துலங்குபவளே, கமலாம்பிகையே, நமஸ்காரம்.

யோகானந்தகரீம் ஜகத்ஸுககரீம்
யோகீந்த்ர சித்தாலயாம்
ஏகாமீஸ ஸுகப்ரதாம் த்விஜநுதாம்
ஏகாந்த ஸஞ்சாரிணீம்
வாகீஸாம், விதி, விஷ்ணு, ஸம்பு, வரதாம்
விஸ்வேஸ்வரீம் வைணிகீம்
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

தியான யோகத்தினால் ஏற்படும் ஆனந்தத்தை அளிப்பவளே, உலகத்திற்கு சுகத்தை அளிப்பவளே, யோகீந்த்ரர்களின் மனதைக் கோயிலாகக் கொண்டவளே, பரமசிவனுக்கு சுகத்தை அளிப்பவளே, வேதியர்களால் துதிக்கப்பட்டவளே, பிரளய காலத்திலும் தனித்து நிற்பவளே, வாக்கிற்கு ஈஸ்வரியாக விளங்குபவளே, பிரம்மா, விஷ்ணு, சிவன், இவர்களுக்கும் வரங்களை அளிப்பவளே, உலகங்களுக்கெல்லாம் ஈஸ்வரியாகத் திகழ்பவளே, வீணா வாத்யத்தில் தேர்ச்சி பெற்றவளே, மங்களமே வடிவானவளே, கமலாம்பிகையே, நமஸ்காரம்.

போதானந்த மயீம் புதைரபிநுதாம்
மோதப் ரதாமம் பிகாம்
ஸ்ரீமத் வேதபுரீஸ தாஸ வினுதாம்
ஹ்ரீங்கார ஸந்தாலயாம்
பேதா பேத விவர்ஜிதாம் பகுவிதாம்
வேதாந்த சூடாமணீம்
வந்தேஹம் கமலாம்பிகாம் அனுதினம்
வாஞ்சானுகூலாம் சிவாம்

ஞானானந்த ஸ்வரூபிணியே, அறிவாளிகளால் சிறப்பாக ஸ்தோத்திரம் செய்யப்பட்டவளே, சந்தோஷத்தை அளிக்கிறவளே, அம்பிகையே, வேதபுரீச தாஸரால் துதிக்கப்பட்டவளே, ஹ்ரீம், ஹ்ரீம் என்ற பீஜாக்ஷரத்தை ஆலயமாகக் கொண்டவளே, வேறுபட்டது, வேறுபடாதது இவ்விரண்டும் அற்றவளே, பலவிதமாய் காட்சி தருபவளே, வேதாந்தங்களுக்கு சிரோபூஷணமாய் இருப்பவளே, கோரிய பலனை அளிப்பவளே, மங்களமே வடிவானவளே, கமலாம்பிகையே நமஸ்காரம்.

இத்தம் ஸ்ரீ கமலாம்பிகாப்ரியகரம்
ஸ்தோத்ரம் படேத்யஸ்ஸதா
புத்ர ஸ்ரீப்ரதமஷ்டஸித்திபலதம்
சிந்தா வினாஸாஸ்பதம்
ஏதி ப்ரஹ்மபதம் நிஜம் நிருபமம்
நிஷ்கல்மஷம் நிஷ்களம்
யோகீன்த்ரைரபி துர்லபம்
புனரயம் சிந்தா வினாஸம் பரம்

இவ்விதம் சந்தானம், சம்பத்து இவற்றை அளிப்பதும், எட்டு வித சித்திகளின் பயனைக் கொடுப்பதும் கவலையைப் போக்கவல்ல முக்கிய ஸ்தானமாயும் ஸ்ரீகமலாம்பிகைக்கு பிரியத்தை உண்டு பண்ணுகிறதுமான, இந்த ஸ்தோத்திரத்தை எப்போழுதும் படிக்கிறவர்கள் அனைவரும் நிகரற்றதும் களங்கமற்றதும் அவயமற்றதும் சிறந்த யோகிகளுக்கும் எட்டாததும் நிரந்தர உற்சாகம் அளிப்பதும் மேன்மையானதுமான தன் ஸ்வரூபமான, பிரம்ம பதத்தையும் அடைவார்கள்.
 
 

No comments:

Post a Comment