Monday 11 July 2016

மயிலாடுதுறை அபயாம்பிகை!


அஞ்சு முகத்தி நவ முகத்தி
ஆறு முகத்தி சதுர் முகத்தி
அலையில் துயிலும் மால் முகத்தி
அருண முகத்தி அம்பரத்தி


பஞ்சா ஷரத்தி பரிபுரத்தி
பாசாங்குசத்தி நடுவனத்தி
பதுமா சனத்தி சிவபுரத்தி

பாரத்தனத்தி திரிகுணத்தி
கஞ்ச முகத்தி கற்பகத்தி 
கருணாகரத்தி தவகுணத்தி
கயிலாசனத்தி நவகுணத்தி


காந்தள் மலர்போல் சதுர்கரத்தி
மஞ்சு நிறத்திபரம்பரத்தி
மதுர சிவந்தி மங்களத்தி
மயிலாபுரியில் வளரீசன் 
வாழ்வே அபயாம்பிகை தாயே! 

அதாவது சிவனைப்போல ஐந்து முகமும், ஒன்பது சக்திகளின் முகமும், கௌமாரி நிலையில் ஆறு திருமுகமும், பிரமி நிலையில் நான்கு முகமும், கடலில் தூங்கும் திருமாலை ஒத்த முகமும், மகேஸ்வர நிலையில் சிவந்த முகமும் கொண்டவள் அபயாம்பிகை அம்மா. 

ஆகாயமே வடிவாகவும், பஞ்சாட்சரத்தை இடமாகவும் கொண்டவள் எங்கள் அவயாம்பா அம்மா. கையிலே பாசமும் உண்டு, அங்குசமும் உண்டு.  பூமிக்கு நடுவில் இருக்கும் விந்திய அடவியில் இருக்கின்றாள் எங்கள் அபயாம்பிகை அம்மா. 

தாமரையில் வீற்றிருப்பாள். சிவபுரத்தை ஆட்சி செய்வாள், கருணை மிகுந்த மார்பகங்களை கொண்டவள். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழிலையும் செய்வாள். 

தாமரை முகம், கற்பக மரத்திற்கும் சக்தி கொடுப்பவள், கருணை கொண்டவள், திருக்கயிலை மலையில் கூட இருப்பாள். நவரச குணங்கள் கொண்டவள், காந்தள் மலர் போன்ற நான்கு கரங்கள் கொண்டவள். மேகம் போன்ற நிறம், சிவந்த உதடுகள், இவ்வளவு அழகான எங்கள் அபயாம்பிகைத்தா ய் எங்கள் மயிலாடுதுறையில் வாழ்கின்றாள்.


ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பது மாயவரத்தைப் பற்றிய சொல் வழக்கு.


அம்பிகை மயில் உருவத்தில் பூஜை செய்த தலங்கள் இரண்டு. ஒன்று திருமயிலாப்பூர். மற்றொன்று பல்வேறு பெருமைகளையுடைய திருமயிலாடுதுறை. இந்த மயிலாடுதுறைத் தலம் காசிக்கு நிகரான தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. 



இவ்வூரைச் சுற்றியுள்ள சப்ததான தலங்கள்:
*அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில், மயிலாடுதுறை
*அருள்மிகு புனுகீஸ்வரர் திருக்கோயில், கூறைநாடு, மயிலாடுதுறை
*சித்தவனம் என்ற சித்தர்காடு, மயிலாடுதுறை
*அருள்மிகு மார்க்கசகாய சுவாமி திருக்கோயில், மூவலூர்
*புருஷாமிருகம் பூஜித்த அருள்மிகு அழகநாதர் திருக்கோயில், சோழன்பேட்டை
*அருள்மிகு வதானேஸ்வரர் திருக்கோயில், சேந்தங்குடி
*அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், துலாக்கட்டம் தென்புறம், மயிலாடுதுறை பெரியகடைவீதி

இத்தலத்து சித்தராகப் போற்றப் பட்டவர் நல்லத்துக்குடி கிருஷ்ணஸ்வாமி ஐயர். இத்தலத்து அம்பாள் அபயாம்பிகையைப் போற்றி இவரால் பாடப்பட்டது 100 பாடல் தொகுப்புகளைக் கொண்ட அபயாம்பிகை சதகம்.



திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : மயூரநாதர் (கௌரி மயூரநாதர், கௌரி தாண்டவரேசர்)
தல இறைவி : அபயாம்பிகை (மயிலம்மை, அஞ்சலைநாயகி, அஞ்சலை)
தல விருட்சம் : மாமரம்
தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்

திருத்தலம் அமைவிடம்:
இந்த அருள்மிகு அபயாம்பிகை சமேத மயூரநாதர் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாயவரம் என அழைக்கப்படும் மயிலாடுதுறையில் உள்ளது. 

ஆதி மயூரநாதர் திருக்கோயில்:
சுமார் 5000 வருடப் பழமையானது இந்த ஆதி மயூரநாதர் திருக்கோயிலில், சுவாமி சுயம்பு வடிவிலும், அன்னை மயில் வடிவிலும் காட்சி தருகின்றனர். பெருமானையும், அம்பாளையும் மயில் உருவமாக ஒன்றாகக் கண்டு ரசிப்பது இக்கோயிலில் மட்டுமே சாத்தியம். இத்திருக்கோயில் 3 பிரகாரங்களைக் கொண்ட அழகிய திருக்கோயில். இரண்டாவது பிரகாரம், மூன்றாவது பிரகாரம் ஆகியவற்றின் வெளிப் புறத்தில் 16 அடி உயரத்தில் செங்கல்லால் ஆன சுற்றுச் சுவர் உள்ளது. இக்கோயிலின் ஆதி மயூரநாதர் முன் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தேவாரப் பாடல்களை, பெருமான் நேரடியாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆதிமயூரநாதர் ஆலயத்தை திருக்கோயிலின் வடக்கு வாசல் வழியாக வந்தால் காணலாம்.



இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் 164 அடி உயரம் கொண்டது. ஒன்பது நிலைகளைகளுடனும் ஒன்பது கலசங்களுடனும் மிக அழகாக காட்சி தருகிறது ராஜகோபுரம்.  இக்கோபுரம் கட்டப்பட்ட காலம் கிபி. 1513, 1514, 1515-ம் ஆண்டுகளில் என்பது போன்ற விவரங்கள் இக்கோயில் கல்வெட்டுக்கள் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. 

தற்காலத்தில் இக்கோயில் சுவாமி கோயில், அம்பாள் கோயில் என்ற இரண்டு பகுதியாக காணப்படுகிறது. இத்தகைய பழக்கம் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.



அழகிய ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் பிரம்ம தீர்த்தக் குளம் உள்ளது. இத்திருக்குளம் பிரம்மனால் உருவாக்கப்பட்ட குளம். 



குளத்தின் நடுவே நீராழி மண்டபம்உள்ளது. மார்கழி மாத திருவாதிரை நாளிலும், சித்திராப் பௌர்ணமியிலும், வைகாசி விசாக தினத்திலும், அருள்மிகு மயூரநாதர், அபயாம்பிகை முன்னிலையில் இத்திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். 



இத்தீர்த்த குளத்தில் வைகாசி வசந்த உற்சவம் 10 நாட்கள் நடந்தபின் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது.



கோபுரத்தை அடுத்து கோயிலின் உள்ளே அழகிய 16 கால் மண்டபம் கட்டப் பட்டுள்ளது. சுவாமியின் திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை இங்கேதான் நடைபெறும். கோயிலின் உள்ளே முதல் தரிசனம் முக்குறுணி விநாயகர் என்றழைக்கப்படும் பெரிய விநாயகர் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளார். வடகிழக்கு மூலையில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் தரிசனம்.



அழகிய சித்திர வேலைப்பாடுகள் கொண்ட கற்ப கிரகத்தினுள் மயூரநாதர் எழுந்தருளியுள்ளார்.

கோயிலின் உள் பிரகாரத்தில் உற்சவர்களின் சன்னதி, நடராஜர் சன்னதி, விநாயகர், வித்யாக்ரபாதர், பதஞ்சலி முனிவர், சேக்கிழார், நால்வர், சப்த மாதாக்கள், அறுபத்து மூவர் போன்றோரது சன்னதிகளும் உள்ளன. இவற்றோடு அல்லாமல் சகஸ்ரலிங்கம், சட்டைநாதர் பலிபீடம், இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். இதை அடுத்து மகா விஷ்ணு , வாயுலிங்கம், வருணலிங்கம், மகாலெட்சுமி, பிரம்மலிங்கம் நந்தியுடன் காட்சி தருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி அன்று இங்கே எழுந்தருளியுள்ள 21 விநாயகர் திருவுருவங்களுக்கு மோதக நிவேதனம் செய்து சிறப்பு பூஜை நடைபெறும். 

இத்திருத்தல மயூரநாதரை திலீபன், திருமால், பிரம்மன், இந்திரன், அகத்தியர், கண்ணுவர், கவுண்டில்யன், சுசன்மன், நாதசர்மா, தருமன், லெட்சுமி, விசாலன், காமன், ஆகியோரும், அஃறிணை உயிர்களான, கழுகு, கிளி, காகம், குதிரை, நரி, யானை, வானரம், பூனை, கழுதை, போன்றவைகளும் வழிபடும் பேறு பெற்றனர். 

தெற்குப் பகுதியில் அகத்திய விநாயகர், நடராஜர், ஜுரதேவர், ஆலிங்கனசந்திர சேகரர் எழுந்தருளியுள்ளனர். இங்கே தனிச் சன்னதியில் சின்முத்திரையுடன் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார்.

தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு மேற்புறமாக குதம்பைச் சித்தர் ஸ்வாமிகள் ஜீவ சமாதி உள்ளது. இக்கோயிலில் நடக்கும் அர்த்தஜாமபூஜை மிகவும் விசேஷம் வாய்ந்தது. திருமணமாகாதவர்கள் திருமணம் வேண்டி நேர்ந்துகொண்டு, இந்த அர்த்த ஜாம பூஜையில் கலந்து கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.



இத்திருக்கோயிலில் அம்பாள் சன்னதி தனிச் சன்னதியாக காணப்படுகிறது. 



அம்பாள் 5 அடி உயரத்தில் 4 திருக்கரங்களுடன் அபயவரத முத்திரையுடன் எழுந்தருளி உள்ளார். 

அம்பாளுக்கு வலப்புறம் நாத சர்மாவின் மனைவி அநவித்யாம்பிகை இறைவன் காட்டிய இடத்தில் ஐக்கியமாகி லிங்க வடிவத்தில் காட்சி தருகிறார். இந்த லிங்கத்திற்கு சிவப்பு நிறத்திலேயே புடவை சாத்தப்படுகிறது. இந்தத் தலத்தில் மட்டுமே லிங்க உருவமாக உள்ள அம்மைக்கு புடவை சாத்தி வழிபடப் படுகிறது.



அம்பாள் கோயிலின் முன் மண்டப வாசலில் இத்தலத்தின் பதிகப் பாடல்களும், உள்ப்ரகாரத்தில் அவயாம்பிகை சதகப் பாடல்களும், அகவல் பாடல்களும் கல்வெட்டில் பொறிக்கப் பட்டுள்ளன.




இத்தல வரலாறு:

தட்சன் மகளான தாட்சாயணி தன் தந்தையின் மேல் கொண்ட கோபத்தைப் போக்கிக் கொள்ள நினைத்து மயில் வடிவம் கொண்டு பூஜித்து வழிபட்ட தலமே மயிலாடுதுறைத் தலம். அன்னைக்கு பெருமான் ஆண் மயிலாக வந்து ஆடி காட்சி கொடுத்து பின்னர் தாண்டவமாடி அருள் புரிந்தமையால் கௌரி மயூரநாதர் என்றும், கௌரி தண்டவரேசர் என்றும் மயூரநாதர் அழைக்கப்பட்டார். 


இந்த சபைக்கு ஆதி சபை என்றும், இத்தாண்டவத்திற்கு கௌரி தாண்டவம் என்றும் பெயர் வந்தது. இதற்குப் பின் இறைவன் அம்பாளைத் திருமணம் செய்து கொண்டார். 


திருமணம் நிகழ்ந்த தினம் ஐப்பசி மாதம் 27-ம் நாள். கௌரி தாண்டவம் ஆடிய நாள் ஐப்பசி மாதம் 25-ம் நாள். அம்பாள் மயில் உருவில் எழுந்தருளி மாலையில் நான்கு பிரகாரங்களிலும் மயிலாக ஆடி அம்பாளாக எழுந்தருளும் காட்சியும், இறைவனோடு சேர்ந்தும் காட்சி தருவதைக் காணக் கண் கோடி வேண்டும்.

ஐப்பசி கடைமுழுக்கு!

அனைவரும் தாம் செய்த பாவங்களை கங்கையில் நீராடி போக்கிக் கொண்டனர். இதனால் அப்பாவங்கள் அனைத்து ஒன்று சேர்ந்து கங்கையின் உருவையே மாற்றிவிட்டன. கங்கை தன் நிலையை இறைவனிடம் தெரிவிக்க, கங்கை தனது பழைய உருவம் கிடைக்க வேண்டுமென்றால் ஐப்பசி மாதம் கடைசி நாள் காவிரி விருஷப தீர்த்தத்தில் மூழ்கி எழவேண்டும் எனக் கூறினார். கங்கை காசியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்தது. காவிரியைத் தேடி காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி, துண்டி விநாயகர், காலபைரவர் ஆகியோரும் திருமயிலாடுதுரைக்கே வந்துவிட்டனர். அந்த நாள் ஐப்பசி மாதம் 30-ம் நாள். அன்று வந்தவர்கள் மயிலாடுதுறையிலேயே தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். திருவையாறில் இருந்து ஐயாறப்பரும் இங்கு வந்து அருள் பாலிக்கிறார். இந்நிகழ்ச்சியின் மூலம் மயிலாடுதுறையின் புனிதச் சிறப்பு அனைவருக்கும் புரியும்.

ஐப்பசி மாதம் முப்பது நாட்களும், கார்த்திகை மாதம் முதல் தேதி வரையிலும் இத்திருத்தலம் விழாக் கோலம் பூண்டிருக்கும். ஐப்பசி கடைசி நாள் மயிலாடுதுறை, வள்ளலார்கோயில், காவிரி வடகரை காசிவிஸ்வநாதர், தென்கரை காசி விஸ்வநாதர், ஐயாறப்பர், போன்ற 5 திருக்கோயில்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் ஐப்பசி முதல் நாள், ஐப்பசி அமாவாசை, ஐப்பசி கடைசி நாள்களில் தீர்த்தம் கொடுத்து அருள்வர். 

இவற்றுள் கடைமுழுக்குத் தீர்த்தமே மிக விசேஷமானது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து கடை முழுக்கு தீர்த்தத்தில் நீராடி இறைவனின் அருளைப் பெறுவர். 

****************


பாடல் பெற்ற ஸ்தலங்கள் 276. அவற்றில் 38-வது தலமாக இந்த திருமயிலாடுதுறை தலம் விளங்குகிறது.

திருஞானசம்பந்தர் பெருமானால் இத்தலத்தில் பாடப்பட்ட தேவாரப் பாடல்:

கரவுஇன் றிநன்மா மலர்கொண்டு
இரவும் பகலும் தொழுவார்கள்
சிரம்ஒன் றியசெஞ் சடையான் வாழ்
வரவா மயிலாடு துறையே !!

உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதிஎன்பர்
குரவம் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலாடு துறையே !!

ஊனத்து இருள்நீங் கிடவேண்டில்
ஞானப் பொருள்கொண்டு அடிபேணும்
தேன்ஒத்து இனியான் அமரும்சேர்
வானம் மயிலாடு துறையே !!

அஞ்சுஒண் புலனும் மவைசெற்ற
மஞ்சன் மயிலா டுதுறையை
நெஞ்சுஒன் றிநினைத்து எழுவார்மேல்
துஞ்சும் பிணிஆ யினதானே !!

தணியார் மதிசெஞ் சடையான்றன்
அணிஆர்ந் தவருக்கு அருள்என்றும்
பிணியா யினதீர்த்து அருள்செய்யும்
மணியான் மயிலாடு துறையே !!

தொண்டர் இசைபா டியும்கூடிக்
கண்டு துதிசெய் பவன்ஊராம்
பண்டும் பலவே தியர்ஓத
வந்தார் மயிலாடு துறையே !!

அணங்கோடு ஒருபா கம்அமர்ந்து
இணங்கி அருள்செய் தவன்ஊராம்
நுணங்கும் புரிநூ லர்கள்கூடி
வணங்கும் மயிலாடு துறையே !!

சிரம்கை யினில் ஏந் திஇரந்த
பரம்கொள் பரமேட் டிவரையால்
அரங்கஅவ் அரக்கன் வலிசெற்ற
வரங்கொள் மயிலாடு துறையே !!

ஞாலத் தைநுகர்ந் தவன்தானும்
கோலத்து அயனும் மறியாத
சீலத்தவனூர் சிலர் கூடி
மாலைத் தீர்மயி லாடுதுறையே !!

நின்றுஉண் சமணும் நெடுந்தேரர்
ஒன்றும் மறியா மைஉயர்ந்த
வென்றி அருளான் அவன்ஊரான்
மன்றல் மயிலாடு துறையே !!

நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன்
மயல்தீர் மயிலா டுதுறைமேல்
செயலால் உரைசெய் தனபத்தும்
உயர்வாம் இவைஉற்று உணர்வார்க்கே !!

திருச்சிற்றம்பலம் !!





No comments:

Post a Comment