Tuesday 26 July 2016

சுபிட்சம் அருளும் சாகம்பரி தேவி!


அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியின் திருக்கோலங்களில் சாகம்பரி தேவியின் திருவடிவமும் ஒன்று.



சாகம்பரி தேவி யார்? அவள் மகிமைகள் என்ன?

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடுமையாக தவம் செய்து நான்முகனிடமிருந்து பெற்ற அரிய வரங்களால் துர்கமன் எனும் அசுரன் வேதங்களைக்  கவர்ந்து சென்றான். அதனால் வேதங்களும் மந்திரங்களும் அவனுக்கு அடிமையாயின. மேலும் அனைத்து உலகிலும் நடக்கும் நற்காரியங்களின் புண் ணிய பலன்களும் பூஜா பலன்களும் தன்னை வந்து அடைய வேண்டும் என்ற வரத்தையும் பெற்றிருந்தான் அவன். அதனால் ஆணவம் கொண்டு  முனிவர்களைத் துன்புறுத்தினான்; அனைவருக்கும் பல கொடுமைகள் இழைத்தான்.



அனைத்துமே அவன் வசமாகி விட்டதால் பக்தர்கள் செய்யும் எந்த  புண்ணிய செயல்களின் பலனும் அவர்களுக்குக் கிட்டவில்லை. முனிவர்களும் ரிஷிகளும் யாகம், பூஜை என்ற தம் நித்திய கடமைகளைச் செய்ய முடி யாமல், உயிருக்கு பயந்து குகைகளிலும் பொந்துகளிலும் மறைந்து வாழ்ந்தனர். அதனால் மழை பெய்விப்பதற்கான யாகங்கள் நடைபெறவில்லை.  அதனால் மழை பொய்த்துப் போனது. பயிரினங்கள் கருகின. தண்ணீருக்கும் உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. எங்கும் வறட்சி, பஞ் சம், அன்ன ஆகாரம் இன்றி உயிரினங்கள் மடிந்தன.



அதைக் கண்டு அஞ்சிய தேவரும் முனிவரும் இமயமலைச் சாரலில் ஒன்று கூடி பராசக்தியை நோக்கி, ‘‘தேவி! கருணையே வடிவான உனக்கு பக்தர் களின் கஷ்டங்கள் தெரியாதா? பக்தர்களின் மேல் கருணை கொண்டு திருவருள் புரியக் கூடாதா?’’ என வேண்டினர்.



இந்த பிரபஞ்சத்தையே படைத்த  பராம்பிகை அவர்கள் கோரிக்கையை ஏற்றாள். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேவி ஆயிரம் கண்களுடன் கைகளில் பச்சைப் பயிர், காய்கறிகளுடன் தோன்றி அனுக்ரஹம் செய்தாள். சில  நிமிடங்களில் காய்கள், கனிகள், தானியங்கள், உணவுப்பொருட்கள் போன்றவை அவள் உடம்பிலிருந்து பூத்துக் குலுங்கி தேவியின் அருள் மழையாகப் பொழிந்தன.

உணவுப் பஞ்சத்தைப் போக்கிய தேவி, தன் பக்தர்களின் கஷ்டங்களுக்குக் காரணமான துர்கமனை வதைக்கத் தீர்மானித்தாள். நெ ருப்பு வளையம் ஒன்றை உருவாக்கி, அதனுள் சென்று அமர்ந்து தன் உடலில் இருந்து பெரும் சக்தி சேனையை உற்பத்தி செய்தாள். 64000 தேவர் கள் மற்றும் பல்வேறு சக்திகள் அதிலிருந்து தோன்றினர். யாகமும் பூஜையும் செய்தால்தானே அதன் பலன் அந்த அசுரனுக்குச் செல்லும்! அதனால்  தேவி அழிக்கும் நெருப்பு வளையத்தை அமைத்தாள். அதுவே அவனை அழிக்கும் வளையமுமானது. தேவி தான் படைத்த படைகளுடன் சென்று  தேவர்களின் துணையோடு ஒன்பது நாட்கள் யுத்தம் செய்தாள். அதனால் பலன்களை இழந்த  துர்க்கமனை தன் சூலாயுதத்தால் அழித்தாள்.



உலக மக்களின் பஞ் சத்தைக் கண்டு மனம் வருந்தி, தேவி சிந்திய கண்ணீரே மாபெரும் வெள்ளமாகப் பெருக, ஒன்பதே நாட்களில் உலகமெங்கிலும் உள்ள ஆறு, ஏரி,  குளங்களையெல்லாம் நிரம்பின. தண்ணீர்ப் பஞ்சம் நீங்கியதால் பச்சைப் பயிர்களும் செழித்து வளர, உலகம் சுபிட்சமானது. தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேவி ஆயிரம் கண்களுடன் தோன்றியதால் அவளை சதாக்ஷி என்றும், கைகளில் பச்சைக் காய்கறிகளுடன் தோன்றியதால் சாகம்பரி என்றும் அழைத்து, பக்தர்கள் வணங்கி வழிபட்டனர். சாகம் எனில் பச்சைக் கறிகாய் என்று பொருள். அன்று முதல் சாகம்பரி தேவி வழிபாடு தொடர்கிறது. துர்கமனை அழித்ததால் துர்க்கா தேவி என்றும் இத்தேவிக்கு பெயருண்டு.

சாகா என்றால் மாமிசமில்லாத உணவுப்  பொருள் என்றுமொரு பொருள் உண்டு. காரி எனில் அதைக்கொண்டவள் எனவே சாகாரி எனும் பொருள்படும்படி மகாராஷ்ட்ராவில் இத்தேவி வணங் கப்படுகிறாள்.



நிறைமணிக்காட்சி!

அன்று முதல் புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தில் சிவனோடு கூடிய அம்பாள் ஆலயங்களில் நிறைமணிகாட்சி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. உலக மக்களின் பஞ்சத்தைப் போக்கியருளிய தேவியின் கருணைக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் இனியும் உலகில் கடும்பஞ்சம் தோன்றக் கூடாது  என வேண்டிக் கொண்டும் நிறைமணிக்காட்சி விழா நடத்தப்படுகிறது. எத்தனை உணவு பலகாரங்கள் உண்டோ, எத்தனை காய்கறி, கீரை வகைகள்  உண்டோ அத்தனை பொருட்களாலும் ஆலயத்தில் தோரணப் பந்தல் உருவாக்கி மகிழ்வர்.

சில ஆலயங்களில் அம்பாள், மற்றும் ஈசன் சந்நதியில்  பந்தல் போல மரக்கட்டைகளைக் கட்டுவர். பின் கயிற்றில் காய்கறிகளையும் பழவகைகளையும் மாலை போல் தொடுத்து அலங்காரமாகத் தொங்கவிடு வர். அனைத்து விதமான காய்கறிகளையும் கீரைகளையும் பசுமைத் தோரணமாகக் காண்பதே கண்களுக்கு விருந்தாக இருக்கும். நவராத்திரி கொலு பொம்மைகளைப் போல அம்பாளுக்கு முன்பு அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் காய்கனிகள் மனதைக் கவரும். இதைக் கண்டு களிக்கவே குழந்தைகளை அழைத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாய் பக்தர்கள் அன்று ஆலயத்திற்கு வருவார்கள்.



தங்கள் வசதிக்கேற்ப காய்கறிகளையும், உணவுப் பொருட்களையும் காணிக்கையாகத் தருவார்கள். அடுத்த நாள் அத்தனை உணவுப் பண்டங்களும் பிரசாதமாக அனைவருக்கும் பகிர்ந் தளிக்கப்படும். சென்னை சைதாப்பேட்டை காரணீசுவரர், மயிலை கபாலீஸ்வரர் - வெள்ளீஸ்வரர் - காரணீஸ்வரர், திருவாரூர் தியாகராஜர் ஆலயங் களில் நிறைமணி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.



சாகம்பரி த்யானம்

ஸங்கம் பாச கபால சாப குலிஸம் பாணாந் ஸ்ருணிம் கேடகம்
ஸங்கம் சக்ர கதாஹி கட்க மபயம் கட்வாங்க தண்டாந்தராம்
வர்ஷாபால வஸாத் ஹதாந் முநிகணாந் ஸர்கேந யா ரக்ஷதீ
லோகாநாம் ஜநநீம் மஹேஸ தயிதாம் தாம் நௌமி ஸாகம்பரீம்

சாகம்பரி காயத்ரி

ஓம் சாகம்பர்யை வித்மஹே
சதாக்ஷ்யை ச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.




சாகம்பரி தேவிக்கு கர்நாடகா, உத்திராஞ்சல், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், மகாராஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களில் ஆலயங்கள் உள்ளன.

சாகம்பரி சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால் உண்ண உடை, பருக நீர், உடுக்க உடை, இருக்க இடம் போன்றவை குறைவின்றிக் கிடைக்கும் என்பது ஐதீகம். வேண்டிய கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும் என்பதும் பலருடைய அனுபவபூர்வமான நம்பிக்கை.


 

No comments:

Post a Comment