Saturday 9 July 2016

கடல் மல்லை ஸ்தல சயனப் பெருமாள்!


திருப்பாற்கடலில் வைகுண்டநாதனாக, பாம்பணையின் மீது சயனித்து பக்தர்களின் பாவங்களைக் களைந்து வருகிறார் பள்ளிகொண்ட பெருமாள். ஆனால் கடல் மல்லையில், வெறும் தரையில் சயனித்தபடி பக்தர் களுக்கு திருமால் அருள்புரிந்து வருகிறார். இந்த கடல் மல்லை எங்கிருக்கிறது என்கிறீர்களா?... பல்லவர் கால சிற்பங்கள் பொதிந்து கிடக்கும் மாமல்லபுரம் தான் அந்த காலத்தில் ‘கடல் மல்லை’ என்று அழைக்கப்பட்டிருக் கிறது.

புண்டரீக மகரிஷி
முன்பு காடுகளால் சூழப்பட்டிருந்தது இந்த மாமல்லபுரம். இங்கு பல முனிவர்கள் தவம் இயற்றி வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் மகாவிஷ்ணு மீது அதீத பக்தி கொண்ட புண்டரீக மகரிஷி. ஒரு முறை வனத்தின் அருகில் இருந்த குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர், மகரிஷியின் கருத்தைக் கவர்ந்தது. புண்டரீகர் அந்த மலரைக் கொய்து, பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்க எண்ணினார்.

தன் எண்ணப்படியே மலரை பறித்துக் கொண்டு செல்லும் வழியில் கடல் குறுக்கிட்டது. பக்திப் பெருக்கால் கடலில் வழி ஏற்படுத்த தன் கைகளினால் கடல்நீரை இறைக்கத் தொடங்கினார். இரவு பகலாகத் தொடர்ந்து இறைத்தும், கடல்நீர் வற்றவில்லை. புண்டரீகர், ‘பெருமாளே! நான் உன் மீது கொண்டிருக்கும் அன்பு மெய்யானால், இந்த கடல்நீர் வற்றட்டும். எனக்கு வழி உண்டாகட்டும்’ என்று வேண்டியபடி தொடர்ந்து கடல்நீரை இறைக்கத் தொடங்கினார்.

அப்போது அவர் முன் முதியவர் வடிவில் பகவான் மகாவிஷ்ணு தோன்றினார். அவர், ‘முனிவரே! எனக்கு பசியாக இருக்கிறது. என்னால் சற்று தூரம் கூட நடக்க முடியவில்லை. எனக்கு ஏதாவது உணவு வாங்கித் தாருங்கள். நீங்கள் வரும்வரை உங்கள் பணியை நான் செய்கிறேன்’ என்றார்.

கடல் நீர் வற்றியது
முனிவரும் முதியவரின் பசி போக்குவதற்காக அங்கிருந்து சென்றார். முதியவர் வேடத்தில் இருந்த மகாவிஷ்ணு கடல் நீரை இறைக்கும் பணியில் ஈடுபட்டார். கடல்நீர் வற்றியது. உணவு வாங்கிக்கொண்டு திரும்பி வந்த முனிவர், கடல் நீர் வற்றியிருப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டார். அங்கிருந்த முதியவரைக் காணவில்லை. 


அப்போது திருமால் சங்கு சக்கரதாரியாக, முனிவர் தனக்காக கொண்டு வந்த தாமரை மலரை தன் திருவடிகளில் சேர்த்துக் கொண்டு புஜங்க (வெற்று தரையில் படுத்தப்படி) சயனத்தில் காட்சிக் கொடுத்தார். அந்த காட்சியைக் கண்டு அகமகிழ்ந்து போனார் புண்டரீக மகரிஷி.

இத்தல ஸ்தல சயனப் பெருமாள் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இவரை வியாழக்கிழமைகளில் வழிபட குருவருளும், திருவருளும் கிட்டும். கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கலாம். குருவாக அருள்வார் இந்த ஸ்தல சயனன். மேலும் கருவறையில் மூலவரின் பாதத்தின் அருகில் புண்டரீக மகரிஷி பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளார்.

இத்தல உற்சவர் திருநாமம் ‘உலகுய்ய நின்றான்’ என்பதாகும். இந்தக் கோவிலை எழுப்பிய மன்னன் பாராங்குசன், பாம்பு புற்றினுள் மறைந்திருந்த இந்த உற்சவரைக் கோவிலில் எழுந்தருள்வித்தான். கலிகாலத்தில் நம்மை எல்லாம் காத்து இந்தப் புவியை உய்விக்க வந்தவர் இந்த பெருமாள். இந்த உற்சவரின் கையில் புண்டரீகரின் தாமரை மலர் மொட்டு உள்ளது. அதனை உற்சவர், மூலவரின் பாதங்களில் சேர்ப்பிப்பதாக ஐதீகம்.

கல்கி அவதார காட்சி...
திருமாலின் கதாயுத அம்சமான பூதத்தாழ்வார் கி.பி. 7–ம் நூற்றாண்டில் ஐப்பசி வளர்பிறை நவமியில், அவிட்டம் நட்சத்திரத்தில் கோவில் முன்பு உள்ள பூந்தோட்டத்தில் குருக்கத்தி மலரில் அவதரித்தார். பூதத்தாழ்வார் தனது பாசுரத்தில் இத்தலத்தில் பெருமாள் விரும்பி உறைவதாகக் குறிப்பிடுகிறார். பூதத்தாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.


கலியுகத்தின் முடிவில்தான் மேற்கொள்ளப்போகும், கல்கி அவதாரத்தை இந்த ஸ்தல சயனப் பெருமாள் முன்னதாகவே திருமங்கையாழ்வாருக்குக் காட்ட ஆழ்வாரும் ஞானக் கண்ணால் கண்டு, ‘கடும்பரிமேல் கல்கியை நான் கண்டு கொண்டேன், கடிபொழில் சூழ் கடல்மல்லைத் தல சயனத்தே’ என்று தனது பாசுரத்தில் அருளியிருக்கிறார். இதன் மூலம் ஸ்தல சயனப்பெருமாளே கல்கி அவதாரம் எடுக்கப்போகிறார் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பூமி பிராட்டியை கடலின் அடியில் சென்று அழுத்திய அசுரணை, வராஹ அவதாரம் எடுத்து மீட்டருளினான் பகவான். வராஹமூர்த்தியால் மீட்கப்பட்ட பூமிப்பிராட்டி, நிலமங்கை என்ற பெயருடன் இங்கே எழுந்தருளியிருப்பது கூடுதல் சிறப்பு!



இவர்களோடு, பூமிப் பிராட்டியை தன் வலப்புறம் தாங்கி ‘திருவல எந்தை’யாக, ஞானப் பிரானான வராஹ மூர்த்தியும் இங்கே எழுந்தருளியிருக்கிறார்.


கலிகாலத்தில் நமக்கு வரும் கேடுகளைக் களைய இந்தப் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பானது.



இத்தலத்தில் தனிச் சன்னிதியில் பெருமாளின் இருபுறமும், நிலமங்கைத் தாயாரும், ஆண்டாளும் அருள் பாலிக்கிறார்கள். கோவில் வெளிச்சுற்றில் ஆஞ்சநேயர், ராமர், பூதத்தாழ்வார், கருடன், ஆழ்வார்கள் மற்றும் லட்சுமி நரசிம்மருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.

நிலமங்கைத் தாயார்
லட்சுமி நரசிம்மரின் சன்னிதியின் எதிரில் உள்ள சுவரில் லட்சுமி நரசிம்மரின் ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்’ பதிக்கப்பட்டுள்ளது. சுவாமி நட்சத்திர தினங்கள், பிரதோஷ காலங்கள், செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்திசாயும் மாலை வேளையில் லட்சுமி நரசிம்மருக்கு பானகம் படைத்து, நெய் தீபமேற்றி ‘ரிணவிமோசன ஸ்தோத்திரம்’ பாராயணம் செய்து வழிபட்டால் எத்தகைய கடன் தொல்லையானாலும் உடனே அகன்று விடும். வறுமை அகலும்.



இத்தல ஸ்தல சயனத்தாரையும், நிலமங்கைத் தாயாரையும் அர்ச்சித்து வழிபட்டால் வீடு, நிலம் வாங்கும் யோகம் அமையும். பூரம் மற்றும் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் இங்கு வழிபடல் மிகச் சிறப்பு. 108 திவ்ய தேசங்களில் இத்தலமும் ஒன்று.


முதலில் ஸ்தல சயனப்பெருமாளுக்கு கடற்கரை அருகில் ஆலயம் எழுப்பினான் ராஜசிம்ம பல்லவன். பின்பு ஆலயம் கடல் அலையால் தாக்கப்படும் என எண்ணி, 14–ம் நூற்றாண்டில் விஜய நகர மன்னனான பாராங்குசன் தற்போது இருக்கும் இடத்தில் கோவில் கட்டினான்.

மாமல்லபுரம் தல சயனப்பெருமாள் கோவிலில் மாசி மகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மாசி மகத்தன்று காலையில் பெருமாள் கடற்கரைக்கு எழுந்தருள்வார். பின்பு தீர்த்தவாரி நடைபெறும். புண்டரீக மகரிஷிக்காக திருமாலே கடல்நீரை இறைத்ததால் இது ‘அர்த்த சேது’ என அழைக்கப்படுகிறது. இங்கு நீராடினால் ராமேஸ்வரத்தில் நீராடிய பலனும், வறுமை விலகி செல்வமும் பெறுவர் என்பது ஐதீகம்.

சென்னை திருவான்மியூரில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் 55 கிலோமீட்டர் தொலைவில் கல்பாக்கத்திற்கு முன்பாக மாமல்லபுரம் உள்ளது. செங்கல்பட்டில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும், திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும் மாமல்லபுரம் உள்ளது.

ஆதிவராக பெருமாள்



தல சயனப்பெருமாள் தலத்தில் இருந்து கலங்கரை விளக்கம் செல்லும் வழியில், கலங்கரை விளக்கம் அருகில் ‘திருவிடந்தை ஆதிவராகப் பெருமாள்’ எழுந்தருளியுள்ளார். ‘திரு இட எந்தை’ என்னும் திருவிடந்தையில் தாயாரை தனது இடதுபுறத்தில் அமர்த்தியிருக்கிறார் வராகப் பெருமாள். இங்குள்ள உற்சவரின் நாமம், ‘நித்ய கல்யாணப் பெருமாள்’ என்பதாகும். அதனால் பெருமாளை திருவிடந்தையில் வழிபட்டால் உடனடியாக திருமண பாக்கியம் கிட்டும்.


ஒவ்வொரு மாதம் உத்திரட்டாதி நட்சத்திரம் அன்றும் திருவிடந்தை பெருமாளுக்கு மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை திருமஞ்சனமும், பூஜைகளும் நடைபெறும்.

அதில் கலந்து கொண்டால் படிப்பிலும், கல்வி ஞானத்திலும் மிகச் சிறந்து விளங்கலாம். மேலும் அசுரர்களிடம் இருந்து பூமித்தாயை மீட்டுக் கொண்டு வந்தவர் என்பதால் இத்தல திருவிடந்தை வராகரை வழிபட்டால் பூமி தோஷம், வாஸ்து கோளாறுகள் நீங்கும். 

ஆதிவராகப் பெருமாளையும் கடல்மல்லை பாசுரத்தில் போற்றிப் பாடியுள்ளார் திருமங்கையாழ்வார். மாமல்லபுரத்தில் முதலில் தோன்றிய ஆலயம் இதுவாகும். எனவே வராகப் பெருமாளை வணங்கியபிறகே, கடல்மல்லை ஸ்தல சயனப்பெருமாளை வணங்க வேண்டும். மாசி மகம் அன்று ஸ்தல சயனப் பெருமாளுடன் ஆதிவராகப் பெருமாளும் கடற்கரையில் எழுந்தருள்வார். திருவிடந்தை ஆலய சக்கரத்தாழ்வாரே தீர்த்தவாரியில் பங்கேற்பார்.

மூலவர் : ஸ்தல சயன பெருமாள்

உற்சவர்: உலகுய்ய நின்றான்

அம்மன்/தாயார் : நிலமங்கை தாயார்



மங்களாசாசனம்: திருமங்கை ஆழ்வார்:- 26 பாசுரம்


பூதத்தாழ்வார் - 1 பாசுரம்

1088
பார் ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணைப்* படு கடலில் அமுதத்தைப் பரி வாய் கீண்டசீரானை* எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே* முளைத்து எழுந்த தீம் கரும்பினை*போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினைப்* புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை*கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக்* கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே* 2.5.1

1089
பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டுப்* பொய்நூலை மெய்ந்நூல் என்று என்றும் ஓதிமாண்டு* அவத்தம் போகாதே வம்மின்* எந்தை என் வணங்கப்படுவானை* கணங்கள் ஏத்தும்நீண்ட வத்தைக் கருமுகிலை எம்மான் தன்னை* நின்றவூர் நித்திலத்தைத் தொத்து ஆர் சோலை*காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக்* கண்டது நான் கடல் மல்லைத் தலசயனத்தே* 2.5.2

1090
உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறாய்* உலகு உய்ய நின்றானை* அன்று பேய்ச்சிவிடம் பருகு வித்தகனைக்* கன்று மேய்த்து விளையாட வல்லானை வரை மீ கானில்*தடம் பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில்* தவநெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும்*கடும் பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன்* கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே* 2.5.3

1091
பேய்த் தாயை முலை உண்ட பிள்ளை தன்னைப்* பிணை மருப்பின் கருங்களிற்றைப் பிணை மான் நோக்கின்*ஆய்த்தாயர் தயிர் வெண்ணை அமர்ந்த கோவை* அந்தணர் தம் அமுதத்தைக் குரவை முன்னேகோத்தானை* குடம் ஆடு கூத்தன் தன்னைக்* கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக்காத்தானை* எம்மானைக் கண்டு கொண்டேன்* கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே* 2.5.4

1092
பாய்ந்தானைத் திரி சகடம் பாறி வீழப்* பாலகனாய் ஆல் இலையில் பள்ளி இன்பம்ஏய்ந்தானை* இலங்கு ஒளி சேர் மணிக் குன்று அன்ன * ஈர் இரண்டு மால் வரை தோள் எம்மான் தன்னை*தோய்ந்தானை நிலமகள் தோள் தூதில் சென்று* அப்பொய் அறைவாய்ப் புகப் பெய்த மல்லர் மங்கக்காய்ந்தானை* எம்மானைக் கண்டுகொண்டேன்* கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே* 2.5.5

1093
கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள் மேவிக்* கிளர் பொறிய மறி திரிய அதனின் பின்னேபடர்ந்தானைப்* படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தானைப்* பார் இடத்தை எயிறு கீறஇடந்தானை* வளை மருப்பின் ஏனம் ஆகி* இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்கடந்தானை* எம்மானைக் கண்டுகொண்டேன்* கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே*2.5.6

1094
பேணாத வலி அரக்கர் மெலிய அன்று* பெருவரைத் தோள் இற நெரித்து அன்று அவுணர் கோனைப்*பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லானைப்* பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை*ஊண் ஆகப் பேய் முலை நஞ்சு உண்டான் தன்னை* உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானை*காணாது திரி தருவேன் கண்டு கொண்டேன்* கடி பொழில் சூழ் கட மல்லைத் தல சயனத்தே*2.5.7

1095
பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானைப்* பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை*தண் ஆர்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும்* தட வரை மேல் கிடந்தானைப் பணங்கள் மேவி*எண்ணாணை எண் இறந்த புகழினானை* இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்டகண்ணானைக்* கண் ஆரக் கண்டு கொண்டேன்* கடி பொழில் சொழ்ழ் கடல் மல்லைத் தல சயனத்தே*2.5.8

1096
தொண்டு ஆயார் தாம் பரவும் அடியினானைப்* படி கடந்த தாளாளர்க்கு ஆளாய் உய்தல்விண்டானை* தென் இலங்கை அரக்கர் வேந்தை* விலங்கு உண்ண வழங்கைவாய்ச் சரங்கள் ஆண்டு*பண்டு ஆய வேதங்கள் நான்கும்* ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம் ஆறும்கண்டானைத்* தொண்டனேன் கண்டு கொண்டேன்* கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தல சயனத்தே*2.5.9


1097
பட நாகத்து அணைக் கிடந்து அன்று அவுணர் கோனைப்* பட வெகுண்டு இடை போய் பழன வேலித்*தடம் ஆர்ந்த கடல் மல்லைத் தல சயனத்துத்* தாமரைக் கண் துயில் அமர்ந்த தலைவன் தன்னைக்*கடம் ஆரும் கருங்களிறு வல்லான்* வெல் போர்க் கலிகன்றி ஒலி செய்த இன்பப்பாடல்*திடம் ஆக இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்* தீவினையை முதல் அரிய வல்லார் தாமே*2.5.10


1098
நண்ணாத வாள் அவுணர்* இடைப் புக்கு* வானவரைப்பெண் ஆகி *
அமுது ஊட்டும் பெருமானார்* மருவினிய
தண் ஆர்ந்த
கடல் மல்லைத்* தல சயனத்து உறைவாரை *
எண்ணாதே
இருப்பாரை* இறைப் பொழுதும் எண்ணோமே* 2.6.1

1099

பார் வண்ண மட மங்கை* பனி நல் மா மலர்க் கிழத்தி*நீர் வண்ணன் மார்வத்தில்* இருக்கையை முன் நினைந்து அவன்ஊர்* கார்வண்ண முது முந்நீர்க்* கடல் மல்லைத் தல சயனம்*ஆர் எண்ணும் நெஞ்சு உடையார்* அவர் எம்மை ஆள்வாரே* 2.6.2

1100

ஏனத்தின் உருவு ஆகி* நில மங்கை எழில் கொண்டான்*வானத்தில் அவர் முறையால்* மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள*கானத்தின் கடல் மல்லைத்* தல சயனத்து உறைகின்ற*ஞானத்தின் ஒளி உருவை* நினைவார் என் நாயகரே*2.6.3

1101

விண்டாரை வென்று ஆவி* விலங்கு உண்ண மெல்லியலார்*கொண்டாடும் மல் அகலம்* அழல் ஏற வெம் சமத்துக்*கண்டாரை கடல் மல்லைத்* தல சயனத்து உறைவாரைக்கொண்டாடும் நெஞ்சு உடையார்* அவர் எங்கள் குல தெய்வமே* 2.6.4

1102
பிச்சச் சிறு பீலிச்* சமண் குண்டர் முதலாயோர்*விச்சைக்கு இறை என்னும்* அவ் இறையைப் பணியாதே*கச்சிக் கிடந்தவன் ஊர்* கடல் மல்லைத் தல சயனம்*நச்சித் தொழுவாரை* நச்சு என் தன் நல் நெஞ்சே*2.6.5

1103

புலன் கொள் நிதிக் குவையோடு* புழைக் கை மா களிற்று இனமும்*நலம் கொள் நவமணிக் குவையும்* சுமந்து எங்கும் நான்று ஒசிந்து*கலங்கள் இயங்கும் மல்லைக்* கடல் மல்லைத் தல சயனம்*வலங்கொள் மனத்தார் அவரை* வலங்கொள் என் மட நெஞ்சே*2.6.6

1104

பஞ்சிச் சிறு கூழை* உரு ஆகி மருவாத*வஞ்சப் பெண்
நஞ்சு உண்ட* அண்ணல் முன் நண்ணாத*
கஞ்சைக் கடந்தவன் ஊர்*
கடல் மல்லைத் தல சயனம்*
நெஞ்சில் தொழுவாரைத்*
தொழுவாய் என் தூய் நெஞ்சே*2.6.7

1105
செழு நீர் மலர்க் கமலம்* திரை உந்த வன் பகட்டால்*
உழு நீர் வயல் உழவர் உழ* பின் முன் பிழைத்து எழுந்த*
கழு நீர் கடி கமழும்* கடல் மல்லைத் தல சயனம்*
தொழு நீர் மனத்து அவரைத்* தொழுவாய் என் தூய் நெஞ்சே* 2.6.8

1106
பிணங்கள் இடு காடு அதனுள்* நடமாடு பிஞ்ஞகனோடு*
இணங்கு திருச் சக்கரத்து* எம் பெருமானார்க்கு இடம்* விசும்பில்
கணங்கள் இயங்கும் மல்லைக்* கடல் மல்லைத் தல சயனம்*
வணங்கும் மனத்தார் அவரை* வணங்கு என் தன் மட நெஞ்சே*2.6.9
1107
கடி கமழும் நெடு மறுகின்* கடல் மல்லைத் தல சயனத்து*
அடிகள் அடியே நினையும்* அடியவர்கள் தம் அடியான்*
வடி கொள் நெடு வேல் வலவன்* கலிகன்றி ஒலி வல்லார்*
முடி கொள் நெடு மன்னவர் தம்* முதல்வர் முதல் ஆவாரே*2.6.10



No comments:

Post a Comment