Tuesday 26 July 2016

ஆடி பதினெட்டாம் பெருக்கு!



ஆடிப்பெருக்கு என்று சொல்லக்கூடிய ஆடி பதினெட்டாம் பெருக்கு விசே‌ஷத்திலும் விசே‌ஷமாகும். இந்த நாளில் காவிரி ஆறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் சிறப்பு பூஜைகள் செய்து நீராடுவார்கள்.

ஆறுகளில் புது வெள்ளம் பாயும். புதிய விளைச்சலுக்குக் கட்டியம் கூறும். வளமையின் அடையாளமான அந்த வெள்ளப் பெருக்கை மக்கள் படையல் இட்டு வரவேற்கிறார்கள். இந்த வரவேற்பு வைபவம்தான் தமிழ்நாட்டின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான பதினெட்டாம் பெருக்கு.

ஆடிப் பதினெட்டு என்னும் ஆடிப் பெருக்கு புராண காலத்திலேயே போற்றப் பட்டிருக்கிறது.
 

வருணனையும் தேவதைகளையும் வழி படும் நாள் என்றும்; நீருக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் இந்நாள் கருதப்படுகிறது.

உலகத்தில் எத்தனையோ புனித நதிகளும் தீர்த்தங்களும் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் இல்லாத தனிச்சிறப்பாக காவேரி நதிக்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பதினெட்டாம் நாளன்று "பதினெட்டாம் பெருக்கு' என்னும் விழாவானது தமிழகத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.




காவேரி நதியின் இருகரைகளிலும் பதினெட்டு முக்கியமான இடங்கள் உண் டென்றும்; அங்கே பதினெட்டு யோகியர்களும் மகரிஷிகளும் சித்த புருஷர்களும் பூமியினடியில் பிருத்வி யோகம் பூண்டு தவம் செய்கிறார்கள் என்றும் கூறுவர். அவர்கள் ஆடிப் பதினெட்டு அன்று யோகத்திலிருந்து மீண்டு, காவேரி நதியில் நீராடி, தங்கள் தவப்பயனை காவேரி நதியில் கலக்கும்படிச் செய்கிறார்களாம். சித்த புருஷர்களின் சக்தி பதினெட்டாம் பெருக்கு நாளில் காவேரியில் கலந்திருப்பதால், காவேரியானவள் அதிக சக்தி யையும் புனிதத்தை யும் பெறுகிறாள். ஆகவே, ஆடிப்பெருக்கு அன்று காவேரியில் நீராடி வழிபட்டால் புனிதம் பெறுவதுடன் நாம் செய்த பாவங்களும் நீங்கும் என்று சாஸ்திரங் கள் சொல்கின்றன.


வளம் பெருக்கும் திருநாள்:

ஆடிப்பெருக்கு அன்று துவங்கும் தொழில்கள் பலமடங்கு செல்வத்தை தரும் என்பது ஐதீகம்.

அட்சய திரிதியையை விட, ஆடிப்பெருக்கு நன்னாள் நகை வாங்க உயர்ந்த நன்னாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் துவங்கும் சேமிப்பும் பலமடங்காய் பெருகும் என்பர். 


 ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் துவங்குவதில்லை என்பர். ஆனால், ஆடிப்பெருக்கு நன்னாள் மட்டும் அதற்கு விதிவிலக்காக உள்ளது.

மறக்காம கோலம் போடுங்க!

 ஆடிப்பெருக்கன்று மாலையில் திருவிளக்கேற்றும் முன், வாசலில் பசுஞ்சாண நீர் தெளித்து, மாக்கோலம் இட வேண்டும். இவ்வாறு செய்தால் வீட்டில் திருமகள் நித்யவாசம் செய்வாள்.


கோலத்தில் மாக்கோலம், இழைக்கோலம், புள்ளிக்கோலம், ரங்கோலி என்று எத்தனையோ வகை உண்டு. கோலத்தை"சித்ரகலா' என்பர். இதற்கு "சித்திர தாமரை போன்ற லட்சுமி' என்று பொருள்

ஆடிப் பதினெட்டு அன்று காவேரி அம்மன் பூப்பெய்தியதாக ஒரு ஐதீகம் உள்ளது.



அன்று காவேரிக் கரைக்கோ அல்லது தங்கள் பகுதியில் உள்ள ஆற்றங்கரைக்கோ சென்று காதோலை, கருகமணி, மலர், மஞ்சள், பழங்கள், வெல்லம் கலந்த புட்டு அரிசி படைத்து, வழிபாட்டில் மாங்கல்ய சரடையோ அல்லது மஞ்சள் தடவிய சரட்டி னையோ வைத்துப் பூஜித்து தங்கள் கழுத்தில் பெண்கள் அணிந்துகொள்வார்கள். ஆண்கள் வலது மணிக்கட்டில் சரடு கட்டிக் கொள்வார் கள். அன்று புதுமணத் தம்பதிகளுக்குப் புத்தாடை மற்றும் பரிசுகள் கொடுத்து மரியாதை செய்வதும் உண்டு.

சில இடங்களில் காவேரித்தாய் மசக்கையாக இருக்கிறாள் என்ற அடிப்படை யில் சித்திரான்னங்களைப் படைப்பதுடன், புளிப்பான பழங்களையும் காவேரி நதிக்குப் படைப்பார்கள்.




இதற்கெல்லாம் சிகரம் வைத் ததுபோல் ஸ்ரீரங்கம் கோவிலின் தென்புறத்திலுள்ள அம்மா மண்டபத்தினையொட்டி ஓடும் காவேரி நதிக் கரையில், ஸ்ரீரங்கநாதர் ஆடிப்பெருக்கன்று எழுந்தருள்வார். அன்று ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து காவேரித் தாயாருக்கு சீர்வரிசைகளை யானைமீது கொண்டு வருவார்கள். அந்தச் சீர் வரிசைகளில் விதவிதமான மங்கலப் பொருட் கள், மாலைகள், புதிய ஆடைகள் ஆகியவற்றுடன் தாலிப்பொட்டு ஒன்றும் இருக்கும். இதனை அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் முன் னிலையில் அங்குள்ள காவேரித் தாயாருக்குப் படைத்து, காவேரி நதியில் சமர்ப்பிப்பார்கள்.


அதன்பின், பெருமாள் பல்லக்கில் ஏறி கோவிலை நோக்கிச் செல்வது வழக்கம். அன்று அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை விழாக்கோலம் காணும்.


பெருமாள் கோவிலில் நுழையும்போது, வெளியில் உள்ள ஆண்டாள் சந்நிதிக்கு முன் எழுந்தருள்வார். அங்கே ஸ்ரீஆண்டாளும் பெருமாளும் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். மங்கல வாத்தியங்களும் வேத கோஷங்களும் முழங்கும். இந்த அற்புத மான காட்சியை ஆடிப் பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும்பொழுது தம்பதியர் தரிசித்தால் வாழ்வில் வசந்தம் வீசும். கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்!




 




                                        

No comments:

Post a Comment