Tuesday 19 July 2016

திருமண வரமருளும் திருமணஞ்சேரி!

"திருமணஞ்சேரி" அருள்மிகு கோகிலாம்பாள் சமேத உத்வாகநாதர்!
கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில், மயிலாடுதுறை வழித் தடத்தில் அமைந்துள்ள குத்தாலம் என்ற கிராமத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, திருமணங்கள் விரைவில் கைகூடி வர அருளும் திருமணஞ்சேரி.
மூலவர் ஸ்ரீஉத்வாகநாதர். தமிழில் அருள் வள்ள நாதர். கல்யாண சுந்தரர்.
அம்பாள் கோகிலாம்பாள். தமிழில் யாழினும் மென் மொழியாள்.

மணப்பெண் ஒருத்தி மண்டியிட்டு அமர்ந்திருப்பதைப் போன்று, சற்றே சிரம் தாழ்த்தி இள நகையுடன் காட்சி தரும் அம்பாளின் திருக்கோலம் காணக் கண் கோடி வேண்டும். வேறு எந்த ஒரு ஆலயத்திலும் இல்லாத ஒரு காட்சியை இங்கு காணலாம்.

மூலவரான உத்வாகநாதரின் முன்பாக,இறைவனும், இறைவியும் திருமணக்கோலத்தில் பஞ்சலோக விக்ரஹமாக காட்சி தருவதே அத் திருக்காட்சி. மற்ற ஆலாயங்களில் உற்சவ சமயங்களில் மட்டுமே திருக்கோல காட்சியை காண முடியும். இத் தலத்திலோ, அனு தினமும் இறையின் திருமணக் காட்சியை காணலாம். அம்பிகையை இத் திருத் தலத்தில் கை பிடித்ததால் இறைவன் "உத்வாகநாதர்" எனும் கல்யாண சுந்தரர் என்றானார். உத்வாகம் என்றால் திருமணம் எனப் பொருள்.
திருமணத் தடை நீங்கி புத்திர பாக்கியம் பெற்றிட

திருமணத் தடைகள் நீக்கி, மண வரம் அளித்து, குழந்தைப் பெறும் தந்திடும் இத் திருத்தலம் திருநாவுக்கரசராலும், திரு ஞானசம்பந்தராலும் பாடப்பெற்றது. மன்மதனை காமதகன் செய்திட்ட ஈஸ்வரன், பின்னர் மனம் இரங்கி மன்மதனை உயிர்ப்பித திருத்தலம் இது. மேலும் ஒரு முறை ஈசனை திருமணம் செய்திட வேண்டும் என்ற உமையாளின் விருப்பப்படி, பரத மகிரிஷியின் மகளாய் அவதரித்து ஈஸ்வரனை கைபிடித்திட்ட திருத்தலம்.

பூஜா வழிபாட்டு முறைகள்

கோகிலாம்பாள் சமேதராய் கல்யாண சுந்தரர் திருமணக் காட்சி அருளும் சந்நதியின் முன்பாக திருமணம் வேண்டும் பெண்களும், ஆண்களும் அமர வேண்டும். அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரின் பெயர், நட்சத்திரம் கேட்டு தேங்காய் உடைத்து அர்ச்சனை துவங்கும். நாம் கொண்டு சென்ற மாலைகள் சுவாமிக்கும் , அம்பாளுக்கும் சார்த்தப்படும். பின்னர் ஆண்களும், பெண்களும் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு விபூதி, குங்குமம் மற்றும் எலுமிச்சம் பழத்துடன் அர்ச்சனை பிரசாதங்கள் தரப்படும். பெண்களுக்கு மஞ்சள் சேர்த்து கொடுக்கப்படும்.
கன்னிப் பெண்களுக்கு கல்யாணசுந்தர் கழுத்திலுள்ள மாலையும், ஆண்களுக்கு கோகிலாம்பாள் கழுத்திலுள்ள மாலையும் கொடுத்து அணிந்து கொள்ள சொல்வார்கள். ஒரு சேர, கூடியிருக்கும் ஆண்களும், பெண்களும் மாலை அணிந்து கொள்ளும் பொழுது மிகச் சரியாக நாதஸ்வரத்துடன் கூடிய கெட்டி மேளம் முழங்கும். பின்னர் மாலை சகிதமாய் கோவிலை வலம் வந்து வழிபாட்டை நிறைவு செய்யவேண்டும்.
கோவிலில் கொடுத்த மாலையை வீட்டிற்கு கொண்டு சென்று மிக பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும். திருமணம் முடிந்த பின்னர் இந்த மாலையை, தம்பதி சமேதராய் திரும்பக் கொண்டு வந்து கோவில் குளத்திலோ அல்லது கோவிலின் அருகிலுள்ள ஆற்றிலோ விட வேண்டும். வீட்டிற்கு வந்ததும் நீராடி பூஜைகள் முடித்து, பிரசாதமாக கொடுக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தினை சாறு பிழிந்து வெறுமனே நீர் மட்டும் கலந்து அருந்த வேண்டும்.
பெண்கள் மஞ்சளை தீரும் வரை தினம் தேய்த்துக் குளிக்க வேண்டும். முடிந்தவரை கோவிலில் கொடுக்கப்பட்ட மாலையை தினந்தோறும் பூஜியுங்கள். இவ்வாறு முறைப்படி வழிபாட்டை மேற்கொண்டால் விரைவில் கெட்டி மேளம் கொட்டும் என்பது வெகு நிச்சயம். கீழ் கண்ட ஸ்தோத்திரங்களை சொல்லி தினம் வீட்டில் பூஜை செய்வது மிகச் சிறந்த பலன்களை தந்திடும். திருமணம் முடிந்தவுடன், மீண்டும் திருக்கோவிலுக்கு வந்து திருமணத்திற்கு முன்பு செய்ததைப் போன்றே பூஜை முறைகளை செய்திட வேண்டும்.

பூஜைகள் முடிந்தவுடன் திருமணத்திற்கு முன்பு கொடுக்கப்பட்ட மாலையை கோவிலின் சப்தசாகரக் குளத்தில் விட்டு விட வேண்டும். இப்பொழுது கொடுக்கப்பட்ட மாலைகளை விட்டிற்கு எடுத்து சென்று தம்பதியர் இருவரும் மாலைகளை மாற்றிக் கொண்டு, பின்னர் மறு நாளோ அல்லது ஒரு வார காலத்திற்கு முன்பாகவோ அருகில் உள்ள நீர் நிலையில் விட்டு விட வேண்டும். எலுமிச்சம் பழத்தினை சாறு பிழிந்து இருவரும் அருந்திட வேண்டும்,.
பெண்கள் மஞ்சளை தீரும் வரை அனு தினமும் பூசிக் கொள்ள் வேண்டும். இவ்வாறு முறையுடன் வழிபாட்டினை செய்திட்டால் திருமணத்தடைகள் அனைத்தும் நீங்கி விரைவில் திருமணம் கைகூடி வரும் என்பது தினந்தோறும் பல நூறு மக்கள் உணர்கின்ற ஒரு உண்மை.
நின்ற நிலையில் வீற்றிருக்கும் " திருமணஞ்சேரி ராகு பகவான் "

கல்யாணப் பேறு அளிப்பது " கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரர் " என்றால், இத் தலத்தில் மகப் பேறு அளிப்பது, தனி சந்நதி கொண்டு, நின்ற நிலயில், அருள்பாலிக்கும் " ராகு பகவான் ". அமாவசை தோறும் இங்கு, குழந்தைப் பேறு வேண்டி பூஜைகளும், அர்ச்சனைகளும் நடைபெறுகிறது.
தேங்காய், வெல்லசர்க்கரை மற்றும் எலுமிச்சம்பழம் கொண்டு அர்ச்கனை செய்யப்பட்டு, தேங்காய், வெல்லசர்க்கரை மற்றும் எலுமிச்சம்பழம் ஆகியவை அர்ச்சனை தட்டில் திரும்ப தரப்படும். பிரசாதமாக தரப்படும், பாயாசத்தையும், தேங்காயையும் உட்கொள்ள வேண்டும். எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து வெல்லசர்க்க்ரை சேர்த்து உட்கொண்டால் மகப் பேறு நிச்சயம். வழிபாடடை 3 அல்லது 5 அமாவாசைகள் செய்வது மிகச் சிறந்த பலன் அளிக்கும்.
 
 







 

No comments:

Post a Comment