Tuesday 9 August 2016

பூவனூர் ஸ்ரீசாமுண்டீஸ்வரிதேவி!


‘பூவனூர் புகுவார் வினை போகுமே’ என திருநாவுக்கரசரால் போற்றப்பட்ட திருத்தலம், திருப்பூவனூர்  ஸ்ரீசதுரங்க வல்லபநாதர் திருக்கோயில்.
திருவாரூர் மாவட்டம் நீடா மங்கலம் திருப்பூவனூரில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் மகோன்னதத்தை உணர்ந்த காஞ்சி மகாபெரியவர், இந்தத் தலத்து இறைவனைத் தரிசித்துச் சிலாகித்துள்ளார்.
நீடாமங்கலம்- மன்னார்குடி சாலையில்,  சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆலயம்.
ஸ்ரீசதுரங்கவல்லப நாதர், ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் இந்த இறைவனின் ஆலயத்தில், ஸ்ரீசாமுண்டீஸ்வரிதேவி தனிச்சந்நிதியில் எழுந்தருள்கிறாள் என்பதும் சிறப்புக்கு உரிய ஒன்று!
சிவனாரும் பார்வதிதேவியும் வேண்டி விரும்பித் தங்கி அருள்பாலிக்கும் தலம் இது என்கிறது ஸ்தல புராணம். பாம்பணி நதி (தீர்த்தம்), ஷீரபுஷ்கரணி (பாற்குளம்), குஷ்ட ஹர தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் கொண்ட பெருமைக்கு உரிய தலம் இது.



ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட இக்கோவில் 147 அடி அகலம், 304 அடி நீளம் கொண்டதாகும். நீண்டு நெடிதுயர்ந்த மதிற்சுவரும் கருத்தைக் கவரும் கல்மண்டபங்களும் அகன்று விரிந்த உள்-வெளிப் பிரகாரங்களும் கலை நுணுக்கமுள்ள விமானங்களும் இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும்.

வெளிப் பிரகாரத்தின் மத்தியில் உள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கிய சந்நிதிகளில் இத்தலத்தின் இரண்டு தேவியர் கற்பகவல்லியும் ராஜராஜேஸ்வரியும் கோவில் கொண்டிருக்கிறார்கள்.









உட்பிரகாரத்தில் புஷ்பவனநாதர் என்றும் சதுர்ங்கவல்லபநாதர் என்றும் அழைக்கப்படும் மூலவர் சந்நிதி உள்ளது. அகன்ற திறந்த வெளிப் பிரகாரத்தில் தெற்குப் பகுதியில் சாமுண்டீஸ்வரி சந்நிதி அமைந்திருக்கிறது.

அருள்மிகு சதுரங்க வல்லப நாதர் திருக்கோயில் தல வரலாறு!
வசுதேவன் என்ற மன்னன் மனைவி காந்திமதியுடன் குழந்தை பாக்கியம் வேண்டி சிவாலயங்கள் தோறும் சென்று வழிபாடு செய்தான். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று இருவரும் மனமுருகி வணங்கினர். இவர்களின் வேண்டுதலை ஏற்ற இறைவன் பார்வதியை அவர்களுக்கு குழந்தையாக பிறக்கும்படியும், பராசக்தியின் அம்சமாகிய சாமுண்டியை குழந்தைக்கு செவிலித்தாயாக இருக்கும்படியும் அருள்புரிந்தார்.
 
 ஒரு முறை மன்னன் தன் மனைவியுடன் தாமிரபரணி நதியில் நீராடும் போது பார்வதி தேவி அங்கிருந்த தாமரையில் சங்கு வடிவில் தோன்றினாள். மன்னன் அந்த சங்கை கையில் எடுத்தவுடன் அது குழந்தையாக மாறியது. இதனால் மன்னனும் ராணியும் மகிழந்து குழந்தைக்கு "ராஜராஜேஸ்வரி' என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். இறைவன் அருளின்படி சப்தமாதர்களுள் ஒருவரான சாமுண்டீஸ்வரி குழந்தைக்கு வளர்ப்புதாயாக இருந்தாள். குழந்தை சகல கலைகளையும் கற்று தேர்ந்தது. குறிப்பாக சதுரங்க விளையாட்டில் தன்னை வெல்பவர் யாருமில்லாதபடி திகழ்ந்தாள்.
 
 
இதையறிந்த மன்னன் தன் மகளை சதுரங்க விளையாட்டில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுக்கே மணமுடிக்கப்படும் என அறிவித்தான். ஆனால் இவளை சதுரங்கத்தில் யாரும் ஜெயிக்கவில்லை. அக்காலத்தில் முனிவர் ஒருவர் அறிவுரையின்படி தன் மகள், வளர்ப்புத்தாய் சாமுண்டி, ராணி மற்றும் பரிவாரங்களுடன் மன்னர் தல யாத்திரை மேற்கொண்ட போது பூவனூர் என்ற இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்தார். அப்போது இறைவன் சித்தர் வேடத்தில் வந்து மன்னனிடம் தான் சதுரங்க ஆட்டத்தில் வல்லவன் என்று தெரிவித்தார்.

 
மன்னன் தன் மகளுடன் விளையாடுமாறு வேண்ட இறைவனும் ராஜேஸ்வரியை சதுரங்கத்தில் வென்று தன் உண்மையான வடிவுடன் அனைவருக்கும் தரிசனம் தந்தார். இதனால் மகிழ்ந்த மன்னன் தன் மகளை இறைவனுக்கு மணமுடித்து கொடுத்தார்.



சிவனாரே மானுட உருவில் வந்து, சதுரங்கம் விளையாடி, இறைவி ராஜராஜேஸ்வரியை  மணந்தாராம். இதனால் அவருக்கு ஸ்ரீசதுரங்கவல்லபநாதர் என்று திருநாமம் அமைந்தது. இதனால் இத்தலத்து இறைவன் சதுரங்க வல்லப நாதர் எனப்படுகிறார்.

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

சதுரங்கத்தில் 64 சதுர கட்டங்களானது இறைவனின் 64 வடிவங்களையும் 64 நாட்டிய நிலைகளையும் குறிப்பது என்பதனை அம்பிகை மூலம் ஈஸ்வரன் நேரிடையாக புலப்பித்த தலம்.

64 விதமான கனிகள், காய்கள், பூக்கள், தான்ய திரவியங்கள், மூலிகை சமித்துக்கள் கொண்டு பஞ்சசக்திகளால் மகரிஷிகள் நவராத்திரி உற்சவத்தை கொண்டாடிய தலம். சுகபிரம்மரிஷி மலர்வனம் வைத்து வழிபட்ட தலம்.

காசிக்கு இணையான தலங்களிலும் காசியின் பெயரை கொண்டுள்ள தலங்களிலும் காஸ்ய மாமுனிவர் தன் தவத்தின் ஊடே வந்து செல்வார் என்பது ஐதீகம்.



மைசூர் நந்திமலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தனிக் கோவில் பூவனூர் திருத்தலத்திலும் சாமுண்டீஸ்வரி தனிச் சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சாமுண்டேஸ்வரி அம்மனிடம் பெண்கள் பிராது (ப்ராத்தனை) சீட்டு கட்டி 90 நாட்களில் நன்மை பெறுகின்றனர். இது உண்மை.
இறைவி ராஜ ராஜேஸ்வரியின்  வளர்ப்புத் தாயாக சப்த மாதர்களுள் ஒருத்தியான சாமுண்டீஸ்வரி திகழ்ந்தாள். எனவே, அவளுக்கும் இங்கே தனிச்சந்நிதி அமைந்துள்ளது.

அம்பிகைக்கு 27 விளக்கேற்றி, 27 முறை வலம் வந்து வணங்கினால், கேட்டது கிடைக்கும்; நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை!



விஷக்கடியால் அவதியுறும் பக்தர்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் தீர்த்தக் குளத்தில் நீராடி, ஸ்ரீசாமுண்டீஸ்வரியை அர்ச்சித்து வழிபட… விரைவில் குணம் பெறுவர் என்பது ஐதீகம்!

தொடர்புக்கு
அருள்மிகு சதுரங்க வல்லப நாதர் திருக்கோயில்,
பூவனூர்-612 803
நீடாமங்கலம் தாலுகா,
திருவாரூர் மாவட்டம்.-612803 தமிழ்நாடு.
கைபேசி  9442399273
 
 
 

No comments:

Post a Comment