Friday 19 August 2016

மங்களமூர்த்தி மகாராஜா!


நாம் எந்த ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும்போதும், விக்கினங்களைத் தீர்த்து அருள்பவராகிய விநாயகக் கடவுளை வணங்கிவிட்டேஆரம்பிக்கிறோம்.



பிள்ளையார் சுழி

பிள்ளையார் சுழி என்பது அகரம் ( அ ), உகரம் ( உ ), மகரம் ( ம ) ஆகிய மூன்றையும் அடக்கியுள்ள ‘ ஓம் ‘ என்னும் பிரணவ மந்திரத்தின் ஆரம்ப வடிவம். அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம்; கோடு சிவலிங்கத்தைக் குறிக்கிறது.

எளிமையானவர் பிள்ளையார். ஏழை எளியவர்களுக்கெல்லாம் சுவாமி இந்த பிள்ளையார்தான். மற்ற தேவ விக்கிரகங்களை பிராணப் பிரதிஷ்டை செய்வதுபோல பிள்ளையாருக்குச் செய்ய வேண்டியதில்லை. மஞ்சளிலோ சாணத்திலோ பிடித்துவைத்து வேண்டினாலே போதும்; உடனே வந்து அருளைத் தந்துவிடுவார். பிள்ளையார் பூஜை ஆடம்பரமில்லாதது. நம்மால் முடிந்தவற்றை வைத்து எளிமையாக நைவேத்தியம் செய்துவிடலாம்.


விநாயகரின் திருவுருவம் விலங்கு, பூதம், மனிதன், தேவர் என்கிற நான்கின் இணைப்பாக காட்சி தருகிறது. இவருடைய யானைத் தலை, செவி, தும்பிக்கை- விலங்கு வடிவமாகும்.
 
பேழை வயிறு, குறுகிய கால்கள்- பூதவடிவமாகும். புருவம், கண்கள்- மனித வடிவமாகும். இரண்டிற்கும் மேற்பட்ட கைகள்- தேவ வடிவமாகும்.

இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மொழி, இன வேறுபாடின்றி கொண்டாடும் பண்டிகை பிள்ளையார் சதுர்த்தி.

மனிதர்கள் மட்டுமின்றி தேவர்களும் இவரை வழிபட்டே எச்செயலையும் தொடங்குவார்கள். நான்கு வேதங்களும், 18 புராணங்களும், இரண்டு இதிகாசங்களும் முழுமுதற் கடவுளான விநாயகரைப் போற்றுகின்றன.

இவரை நினைத்து அனுசரிக்க வேண்டிய விரதம்தான் விநாயகர் சதுர்த்தி விரதம். ஆவணி மாத அமாவாசையின் 4-ஆம் நாள், சுக்லபட்ச சதுர்த்தியன்று நம் முதல்வனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம்.

விநாயகர் சதுர்த்தி பூஜை!


விநாயகர் சதுர்த்தியன்று குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்று பிள்ளையாரை வணங்கியபின், நம்  வீட்டுப் பூஜைக்குரிய மண் பிள்ளையாரை வலஞ்சுழியாகப் பார்த்து வாங்கி வரவேண்டும். அதற்குமுன் நிவேதனப் பொருட்கள், பூஜைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துவிட்டு வரவேண்டும். பிள்ளையார் வாங்கி வந்தபின் தண்ணீர், எண்ணெய், சீயக்காய்ப்பொடி, கதம்பப் பொடி, பால், தயிர், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் வரிசைப்படி நிதானமாக அபிஷேகம் செய்யவேண்டும். அதன்பின் சந்தனம் இட்டு, அதன்மீது குங்குமப் பொட்டிட்டு, இடுப்பில் பிள்ளையார் துண்டுகட்டி, தொப்பை யில் காசு வைக்கவேண்டும்.

பூமாலை, வன்னி இலைமாலை, அறுகம்புல் மாலை, எருக்கம்பூ மாலை ஆகியவற்றுடன் முப்புரிநூலும் அணிவிக்கவேண்டும். பின்னர் பூஜையறையில் நாம் தயாராக வைத்திருந்த கோலமிட்ட மனைப்பலகையில் மெதுவாக பிள்ளையாரை அமர்த்தியபின், குன்றிமணியால் பிள்ளையாரின் கண்களைத் திறக்கவேண்டும். பின்னால் குடை வைக்கவேண்டும். இப்போது பூஜைக்கு பிள்ளையார் தயார்.


இருபுறமும் குத்துவிளக்கை வைத்து ஐந்துமுக தீபம் ஏற்றவேண்டும். நிவேதனப் பொருட்களை தட்டுகளில் பிள்ளையார்முன் வைக்கவேண்டும். கொழுக்கட்டை, சுண்டல், வடை ஆகியவை முக்கியம். அதன்பின் பொரி, கடலை, வெல்லம், அவல் ஆகியவையும் வேண்டும். பிறகு நம் வசதிப்படி போளி, அல்வா, லட்டு போன்றவற்றை வைக்கலாம். வாழைப்பழம், திராட்சை, ஆப்பிள், கொய்யா, விளாம்பழம், பேரிக்காய், நாவல்பழம், சோளக்கதிர், கம்பங்கதிர், கேழ்வரகுக் கதிர் போன்றவற்றை பிள்ளையார்முன் வைத்தபின் பூஜையை ஆரம்பிக்கலாம். சர்க்கரைப் பொங்கலும் வைக்கவேண்டும்.
எளிமையான பிள்ளையார் பாடல்களைப் பாடலாம். விநாயகர் துதி, விநாயகர் அகவல், நான்மணி மாலை போன்றவற்றைப் படிக்கலாம்.

முதலில்,
“சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் பிரசன்னவதனம்
யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே’
என்னும் விநாயகர் மந்திரம் கூறிவிட்டுதான் பூஜையை ஆரம்பிக்கவேண்டும்.

அதன்பின்,
“ஓம், ஸ்ரீம், ஹ்ரீம், க்லௌம், கம், கணபதயே வரவரத
சர்வஜனமேய வஸமானய ஸ்வாஹா’
என்னும் கணபதி மூலமந்திரத்தை 21 முறை, 108 முறை என நம் வசதிப்படி ஜெபிக்கலாம்.
 
குழந்தைகளையும் சொல்லச்செய்யலாம். பழக்கிவிட்டால் தானாக வந்துவிடும். அதன்பின் தூப, தீபம் செய்தபின் கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவுசெய்யவேண்டும்.

பூஜை முடிந்தபின் பலகாரங்களை அனைவருக்கும் கொடுத்துவிட்டு, நாமும் சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும். மண் பிள்ளையாரை நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து நீரில் கரைக்கவேண்டும்.
 
அதுவரை பிள்ளையாரை பின்னமாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அன்றேயும் செய்யலாம். 3-ஆம் நாள், 5-ஆம் நாள், 7-ஆம் நாள், 9-ஆம் நாள் என ஒற்றைப் படைநாளில் செய்யலாம்.

பிள்ளையாரை நீரில் விடும் நாள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமையாக இருக்கக்கூடாது. இவ்வாண்டு வியாழனன்று பிள்ளையார் சதுர்த்தி வருவதால், 3-ஆம் நாள், 5-ஆம் நாள், 7-ஆம் நாள் செய்யலாம். அப்படி செய்ய எடுத்துச் செல்லும்போது தொப்பை யிலுள்ள காசை எடுத்து பூஜையறையில் வைத்துவிடவேண்டும்.

“மங்களமூர்த்தி மகாராஜா, அடுத்த வருடமும் வா ராஜா’ எனக் கூறி வழியனுப்பி வைக்கவேண்டும். இதை ஆண்கள் மட்டுமே செய்யவேண்டும். எத்தனை நாள் பிள்ளையார் நம் வீட்டில் உள்ளாரோ, அத்தனை நாளும் விளக்கேற்றி மூன்று வேளையும் நிவேதனம் செய்யவேண்டும்
 
 

No comments:

Post a Comment