Monday 1 August 2016

மீனாட்சிக்கு பூப்புனித நீராட்டு விழா!


 
அம்மனுக்கு பலவித திருவிழா நடக்கும் தலங்கள் எத்தனையோ இருக்கின்றன   ஆனால்  அவளுக்கு சந்தடியே இல்லாமல் பூப்புனித நீராட்டு விழா நடக்கும் தலம் மதுரை மீனாட்சியம்மன் கோவில்.
அம்பிகை அருளாட்சி செய்யும் தலங்களில் மதுரைக்கு மிகுந்த சிறப்பு உண்டு.  64 சக்தி பீடங்களில் முதல் பீடமானதால் எல்லா பூஜைகளும் தேவிக்கு நடந்த பின்னரே சுவாமிக்கு நடக்கின்றன.
 
 
ஆடிப் பூரம் நட்சத்திரத்தில் பார்வதி தேவி ருதுவானதாக ஐதீகம். பூலோகத்தில் அம்பிகையே மலையத்துவஜ பாண்டிய மன்னரின் மகளாக அவதரித்தாள். கன்னிப்பருவம் அடைந்த அவளுக்கு மானிடப் பெண் என்று அடிப்படையில் ஆடிப்பூரத்தன்று சடங்கு நடத்துகின்றனர்.

ஆடிப்பூர நாளில் கருவறையிலுள்ள அம்பாளுக்கும் உற்சவருக்கும் பூப்புனித நீராட்டு விழா நடக்கும். காலை 9.30 மணிக்கு மேல் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.  அப்போது திரைபோட்டு மறைத்து விடுவார்கள். மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடக்கும். பிறகு திரையை விலக்கி ஏற்றி இறங்கும் சடங்கு நடத்தப்படும்.

கன்னிப் பருவம் எத்திய அம்பாளுக்கு திருஷ்டி கழிப்பதற்காக இந்த 'ஏற்றி இறக்கும் சடங்கு' நடத்தப்படுகிறது. இதில் உற்சவர் மீனாட்சி அம்மனுக்கு நாழி(படி)யில் நெல் நிரப்பி, தீபம் ஏற்றி மூன்று முறை மேலும், கீழுமாக ஏற்றி இறக்குவது தான் 'ஏற்றி இறக்கும் சடங்கு'.

வயதுக்கு வந்த அம்பிகைக்கு திருஷ்டி கழிப்பதற்காக இந்தச் சடங்கு  செய்யப்படும்  உற்சவ அம்பாளுக்கு சம்பா சாதம்  புளியோதரை தேங்காய் சாதம் தயிர் சாதம்  சர்க்கரை பொங்கல்   இதில் ஏதாவது ஒன்றை பிரதானமாகப் படைப்பர். 

இவளது பாதத்தில் ஒரு முறத்தில் சட்டைத்துணி குங்குமச்சிமிழ் மஞ்சள் கிழங்கு   திருமாங்கல்யம் ஆகியவை வைத்து பூஜை செய்யப்படும். மூலஸ்தான அம்பாளுக்கு வழக்கமான நைவேத்தியம் தான்.

மதுரை பகுதி வீடுகளில் பூப்புனித நீராட்டு விழா நடத்தும்போது  பெண்ணை அமர வைத்து சாதம் ஒரு புறமும்  கறி வகைகளை ஒரு புறமும் வைப்பர். தாய்மாமன் மனைவியும் தந்தையின் சகோதரியும் தங்கள் கைகளை குறுக்காக வைத்துக்கொண்டு சாதத்தையும் கறியையும் மூன்று முறை எடுத்து பெண்ணுக்கு கொடுப்பது போல மேலும் கீழுமாக இறக்கி பாவனை செய்வர்   கைகள் மேலும் கீழும் செல்வதால் இதற்கு ஏற்றி இறக்கும் சடங்கு என பெயர்  இதே போல சிவாச்சாரியார்களால் ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி நடந்தபின் அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட கண்ணாடி வளையல்கள் பெண்களுக்கு பிரசாதமாக வழங்குவர்.

இந்த நிகழ்ச்சி எளிய முறையில் நடத்தப்படுவதால் வெளியே தெரியவில்லை.  எல்லாக் கோயில்களிலும் இந்த நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்படவேண்டும். சித்ரான்னம்  களி முதலியன படைத்து மக்களுக்கு வினியோகப்பட வேண்டும்.  கன்னிப் பெண்களுக்கு தாவணி புடவை தானமாக வழங்க வேண்டும்.
 

No comments:

Post a Comment