Wednesday 10 August 2016

ஆடி பதினெட்டாம் பெருக்கு!

எண் பதினெட்டு என்பது, வாஸ்து சாஸ்திரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த எண்ணாக முக்கியத்துவம் பெறுகின்றது. பதினேழு, பத்தொன்பது என்ற இரண்டு ஒற்றைச் சாளர (எதனாலும் வகுக்க முடியாத) எண்களுக்கு இடையில் உள்ள பதினெட்டிற்குக் கோடானு கோடி எண் சக்தி மகத்துவங்கள் உண்டு.

இதனால்தான் எண் 18 ஆனது, அதிசாரம், அதிவேகம், அதிவாரம் போன்ற 18 முக்கியமான சாரங்களை உடைய எண்ணாக விசேஷமாக வழங்கப்படுகின்றது. மூல ஸ்தானத்திற்கு முன் பலகணி துவாரங்கள் கூடிய சுவர் உள்ள சாளரக் கோயில்களிலும், ஒன்பது, பதினெட்டு என்ற வகைகளில் சாளரங்கள் அமைந்திருக்கும்.



அக்காலத்தில் குளத்தின் படிக்கட்டுகள், ஆற்றுப் படிக்கட்டுகளைக் கூட, வாஸ்து இலக்கணங்களுக்கு ஏற்ப மன்னர்கள் அமைத்தமையால்தாம், ஆறுகளிலும், குளங்களிலும் வற்றாத நீர்வளம் பூரித்தது.

தற்காலத்தில் குளத்தைச் சீரமைப்பவர்கள், உத்தமப் பெரியோர்களை,  நாடி, குளம், ஆறு, ஏரிக்கான வாஸ்து இலக்கணங்களை அறிந்து, அதற்கேற்பச் செயல்படுதல் வேண்டும். குளம், ஆற்றின் படிக்கட்டுகள் 18 எண் என்ற வகையில் இருத்தலே சிறப்புடையது.


சபரி மலையிலும் பதினெட்டுப் படிகள் தாமே உள்ளன. பதனம்திட்டா என்ற மலைப் பகுதியில் அமையும் சபரிமலையானது, பதினெட்டுத் திட்டுக்களால் ஆக்கப் பெற்றதாகும். சபரி ஆற்றில் 18 + 28 தலைமுறைகளுக்குத் தர்ப்பணம் அளித்தல் மிகவும் விசேஷமானதாகும். சபரி ஐயப்ப சுவாமி புலிப் பால் கொணர்ந்த வேங்கை 18 அடி நீளமுடையுதாகும்.


ஆடி பதினெட்டாம் பெருக்கு என்பது மஹா விருத்தி நாளாகச் போற்றப்படுகின்றது. தொட்டதைத் துலங்கி விருத்தி செய்து தரும் நன்னாள். வறண்ட ஆற்றில் புதிதாக நீர் வரும் போது, இவ்வரிய காட்சியை, அதாவது முதன் முதலாக ஆற்றில் நீர் புரண்டு ஓடிவரும் வரும் காட்சிதனைக் காண்பது வாழ்வில் மிகச் சிறந்த பாக்யங்களுள் ஒன்றாகும். அனைவருக்கும் வாழ்வில் இது கிட்டி விடாது. இதற்கான முறையான பூஜைகளும் உண்டு.


வாழ்வில் எது பெருகுதல் வேண்டும், எது மறைதல் வேண்டும், எது மறைந்து தோன்றுதல் வேண்டும், எது முழுமையாகக் களையப் பெற வேண்டும் - என்று பதினெட்டு விதமான தாத்பர்ய விளக்கங்கள் ஒவ்வொரு பொருளுக்கும் உண்டு. உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும், இந்தப் பதினெட்டு உட்சாரப் பாங்கில் அமைத்து விடலாம்.


இவற்றின் விளக்கங்கள்தாம், தற்போதைய விஞ்ஞானத்தில் எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான் என்ற மூன்று விதமான அணுக்களாக (தொகுதிகளாக) வகுக்கப்பட்டுள்ளன. இவை எதிர்காலத்தில் 18 ஆக விரிவு பெறும். இவ்வாறு ஒவ்வொரு பொருளின் அணு விளக்கத்தையே ஆ(ற்)றுப் புலம் என்று மெய்ஞ்ஞானத்தில் உரைக்கின்றார்கள்.



இத்தகைய ஷட்புல சக்திகள் ஆடி பதினெட்டாம் நாளில் விருத்தி ஆகின்றன.

ஜோதிடக் கலையில் எண் சாஸ்திரமும் ஒரு முக்கியமான அங்கமே என்பதையே - பிற பண்டிகைகளைப் போல், நாள், திதி,நட்சத்திர வகையில் அல்லாது - தேதி எண்ணை ஒட்டிய இப்பண்டிகை சிறப்புடன் குறிக்கின்றது. இதே போல, தேதி மழை என்ற நாளும் வரும்.


பதினெட்டாம் பெருக்கு நாளன்று, ஓடுகின்ற புண்ணிய நதியைத் தரிசனம் செய்து, இயன்றால் ஓடும் ஆற்று நீரில் நீராடி, பதினெட்டு விதமான பொருட்களை, (எத்தகைய ஏழ்மையில் இருப்பவர்களும்) தானம் செய்து, பெருமாளை வழிபட்டால், பதினெட்டு விதங்களில் பொருட்கள், திரவியங்கள், ஆஸ்திகள் நன்கு விருத்தியாக, த்ரயஷட்காரப் பித்ரு மண்டல தேவதைகள் உதவுவர்.


ஒரு மனிதன் உயிர் வாழ, காற்று, உணவு, ஆடை போன்று பதினெட்டு விதமான மூலதாரப் பொருட்கள் தேவை. இவற்றில் சில விருத்தியாகும், சில குறித்த அளவில் போதுமானது. சிலவற்றில் ஒன்றே ஒன்று இருந்தால் போதும். இவ்வாறு பதினெட்டு வகை மூல ஜீவ சக்திகள் விருத்தியாகும் நாளில், தான்யம், தங்கம், வெள்ளி, பழம், அன்னம், காய், காலணி என்று பதினெட்டு விதமான தானங்களைச் செய்து பயன்பெறுக!



ழையாக, வசதியற்று இருப்போரும் கூட, தன்னிடம் இருப்பனவற்றில் சிலவற்றையாவது தானம் செய்திட வேண்டும். பல்வகைப் பூக்கள், தான்யங்கள், பொரி என 18 வகைகளைச் சிறிதளவிலாவது தானமளித்தல் கடினமானது அல்லவே!

18ஆம் படிக் கருப்பர், 18 படிகளுடன் அருளும் சாஸ்தா / ஐயப்பன், 18 கரங்கள் கூடிய தெய்வ மூர்த்திகள், 18 கோயில் கலசத் தரிசனம், 18 படிகள் உள்ள ஆறு, திருக்குளம் என்றவாறாக - 18 சம்பந்தப்பட்ட வழிபாடுகளை ஆற்றுதலால், குடும்பத்தில் முதியோர்களைப் பேணாது, வயதானோர், முதியவர்களின் சாபங்கள் அகல நல்வழிகள் பிறக்கும்.




உண்மையில் மிகச் சிறப்புடன் வாஸ்து இலக்கணங்களை இப்பூவுலகில் கடைபிடிக்கின்ற ஜீவன் யார் / எது தெரியுமா? நிச்சயமாக மனித குலத்தார் அல்லர்! ஆம், சிறப்பான பட்சியான தூக்கணாங் குருவியே, எந்த மரத்தில், எந்தத் திசையில், எவ்வாறு கூட்டைக் கட்டுவது என்பது முதலாக, தன் கூட்டைக் கட்டுவதில் ஓர் இம்மி கூடப் பிசகாமல், வாஸ்து லட்சணங்களைப் பரிபூரணமாக ஒட்டியவாறு தன் வீட்டுக் கூட்டைக் கட்டிக் கொள்கின்றது என்பது பலரும் அறியாப் பொருளாகும்.


அருணாசல கிரிவலத்திலோ, ஆலய வழிபாட்டிற்குச் செல்லும் போதோ, தம்பதியர் தூக்கணாங் குருவியின் கூடு தரிசனத்தை பெறுதல் உண்மையில் மிகவும் சுபசகுன, மங்களகரமானதாகும். எந்த மரக் கூடு, கூடு தொங்கும் திசை போன்ற நிலைகளைப் பொறுத்துப் பலாபலன்கள் அமையும். எனவே, புது வீட்டிற்கு அஸ்திவாரம் போடுபவர்கள், தூக்கணாங் குருவிக் கூடு உள்ள மரத்திற்குத் தக்க விருட்ச பூஜைகளை ஆற்றி, பதினெட்டு முறை வலம் வந்து வணங்கிய பின் பூஜையை தொடங்குதல் சிறப்பான வாஸ்துப் பலன்களைத் தரும். இதற்காகவே, அக்காலத்தில் புது வீடு கட்டுபவர்கள், விருட்ச பூஜைக்கான திரவியங்களை, ஒரு மஞ்சள் பையில் வைத்தவாறு, தூக்கணாங்குருவி கூடு உள்ள மரத்தைத் தேடிச் செல்வார்கள்.


ஒரு கூட்டைக் கட்ட, தூக்கணாங்குருவிக்கு சுத்தமாகப் பதினெட்டு நாட்களாகும். அதாவது, பதினெட்டாம் நாளில் இது தன் கூட்டிற்குக் கிரகப் பிரவேசம் கொண்டாடும்.

No comments:

Post a Comment