Friday 19 August 2016

ஆனைமுகனின் ஆறுபடைவீடு!

 
முருகப் பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பதை எல்லோரும் அறிவோம். அதேபோல பிள்ளையாருக்கும் அறுபடை வீடுகள் உண்டு. பிள்ளையார் லீலா விநோதமாக சில தலங்களில் நிகழ்த்திய அற்புதங்களை கொண்டு இத்தலங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆற்றுப்படை என்பது ஆற்றுப்படுத்துதல், சாந்தப்படுத்துதல் எனும் பொருள்களில் வழங்கப்படுகிறது. அதிலிருந்துதான் அறுபடை வீடுகள் வந்ததாக சிலர் கூறுவர். ஆனாலும் இங்கு விநாயகரின் சாந்நித்தியம், புகழ், கீர்த்தி போன்றவை ஓங்கியிருக்கும் தலங்களில் முக்கியமானவையாக இந்த அறுபடை தலங்கள் விளங்குகின்றன.


பிள்ளையார்பட்டி. ஊரின் பெயரே இறைவனின் திருப்பெயரால் அழைக்கப்படுகிறது. ராஜகோபுரத்தோடு கூடிய பொலிவு மிக்க தலம் இது. வரலாற்றுப் பெருமையும் புராணத் தொன்மையும் சுமந்து நிற்கும் பூமி. முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன் அமைந்த கோயில். திருவீங்கைக்குடி மகாதேவர் எனும் திருவீசர், ஈசனாக அருளும் மகத்தான ஆலயமாகவும் இது விளங்குகிறது. இந்த ஆலயத்தில் குடைவரை அமைப்பிற்குள் கற்பக விநாயகர் அருட்காட்சி தருகிறார். மகேந்திரவர்மனின் வாதாபி வெற்றிக்குப்பின் பல்லவர் ஆட்சி மிகுந்த அமைதியோடு நடைபெற்றது. அந்த சமயத்தில்தான் நரசிம்மவர்மன் தன் தந்தை நிறைவேற்றி வந்த கோயில் திருப்பணிகளில் தன்னையும் முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்டான். மேலும் சிறுத்தொண்ட நாயனாரும், திருச்செங்காட்டங்குடி கணபதியும் இவன் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதால் கோயிற் பணிகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டான். அப்படி பிள்ளையாருக்கென அமைத்த இத்தலத்தில் பின்னாளில் பாண்டிய அரசர்களும் திருப்பணி செய்தார்கள்.

பிள்ளையார்பட்டியில் அருளும் பிள்ளையார் வலம்புரியாக இருப்பதால் மிகுந்த தத்துவம் பொதிந்த மூர்த்தமாக கருதப்படுகிறார். ஓங்கார ஒலியின் வரி வடிவம்தாம் ஓம் என்பதாகும். வலப்புற தந்தம் பகுதியிலிருந்து ஓ என்ற எழுத்தின் தொடக்கச் சுழி கிடைத்து விடுகிறது. அங்கிருந்து மேல்நோக்கி வலஞ்சுழித்து இடக்காது வரை சென்று, வளைந்த இடத்தந்தத்தின் வழியாக கீழ்நோக்கி துதிக்கை
நுனிவரை கோடிட்டால் ‘ஓ’ என்ற வடிவம் தோன்றுவதை காணலாம். கையிலுள்ள சிவலிங்கம் ‘ம்’ எழுத்தை உணர்த்துகிறது. இவ்வாறு வலம்புரி பிள்ளையாராகவே இத்தலத்தில் அருள்வதால் மற்ற மூர்த்தங்களை விட இவர் சிறப்பு பெற்று விளங்குகிறார். பொதுவாக மற்ற தலங்களில் இருப்பதைப்போல அல்லாமல், இரண்டு கரங்களோடு இங்கு விநாயகர் அருள்கிறார். அதனால் அங்குசம், பாசம் இல்லை. அர்த்தபத்ம ஆசனம் போன்று கால்கள் மடிந்திருக்க, வயிறு ஆசனத்தில் படியாமல் அமர்ந்தருள்கிறார். இடக்கரத்தை கடிஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலத்தில் தோன்றுகிறார். வலக்கரத்தில் சிவலிங்கத்தைத் தாங்கியிருக்கிறார். பிள்ளையார் வணக்கம் தமிழகத்தில் தோன்றிய ஆதிநாளிலேயே இந்த மூர்த்தம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கற்பக விநாயகரை தரிசிக்க வாழ்வு வளம் பெறும். காரைக்குடியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.



கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில். விருத்தாம்பிகை-பாலாம்பிகை சமேதராக அருள் பரப்பி வருகிறார் விருத்தகிரீஸ்வரர். நடுநாட்டு சிவாலயங்களில் ஒன்பதாவது திருத்தலம் இது. விருத்த காசி, பழமலை, திருமுதுகுன்றம் என்றெல்லாமும் அழைக்கப்படுகிறது. புராணப் பெருமையோடு வரலாற்றுச் செறிவும் நிறைந்தது. நால்வரால் பாடல் பெற்ற பெருமை கொண்டது. இத்தல ஈசனை
வள்ளலார், குருநமச்சிவாயர், குமாரதேவர் போன்ற ஞானியர் பாடிப் பரவியுள்ளனர். இத்தலம் ஐந்தின் சிறப்புகளை கொண்டது. இங்கு திருச்சுற்றுகள், கோபுரங்கள், கொடிமரங்கள், நந்திகள், தீர்த்தங்கள், மூர்த்திகள், லிங்கங்கள், தேர்கள், திருக்கோயில் உள்மண்டபங்கள், விநாயகர்கள் என்று எல்லாமே ஐந்தைந்து மயம்தான். கைலாச பிராகாரத்தில் ‘28 ஆகமக் கோயில்’ இருக்கிறது. இருபத்தெட்டு ஆகமங்களும் சிவலிங்கங்களாக அமைக்கப்பட்டு இத்தலத்தில் பூஜிக்கப்படுகின்றன. வடக்கு கைலாச பிராகாரத்தில் அன்னை பெரியநாயகி அருள் பொங்க தரிசனம் தருகிறாள். அன்னையின் தரிசனம் மன இருளை நீக்கி உள்ளத் தெளிவு தரும்.

பிள்ளையாரின் அறுபடை தலங்களில் இதுவும் ஒன்று. நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால், ஆழத்து பிள்ளையார், கிழக்கு முகமாக, 18 அடி ஆழத்தில் கோயில் கொண்டிருக்கிறார். மனம் என்பது பூமி. இவ்வாறு மனம் எனும் பூமியைத் தோண்டி ஆழமாகச் சென்று உற்று நோக்கின் அதையே இயக்கும் சக்தியாக பிள்ளையார் என்ற பரமாத்ம வஸ்துவை கண்டறியலாம். இதன் நிரூபணமாகவே இங்கு பூமியிலிருந்து 18 அடி ஆழத்தில் பிள்ளையார் அருள்கிறார். உள்சென்று அவரை தரிசிக்க 16 படிகளில் இறங்க வேண்டும். இந்த பதினாறு படிகளும் பிள்ளையாரின் முக்கியமான பதினாறு திருப்பெயர்களை சொல்வதாக அமைந்துள்ளன. இதை ஷோடச நாமாக்கள் என்பார்கள். ஷோடச என்றால் பதினாறு. அந்த பெயர்கள் என்னென்ன? ஸுமுகர், ஏகதந்தர், கபிலர், கஜகர்ணர், லம்போதரர், விகடர், விக்நராஜர், விநாயகர், தூமகேது, கணாத்யக்ஷர், பாலசந்திரர், கஜானனர், வக்ரதுண்டர், சூர்ப்பகர்ணர், ஹேரம்பர், ஸ்கந்தபூர்வஜர். எனவே, ஒவ்வொரு படிக்கட்டில் இறங்கும்போதும் இந்த விநாயகரின் திருநாமங்களை ஒவ்வொன்றாகச் சொல்லலாம். இப்படி இறங்கி, இந்த நாமத்திற்குரிய பெருமானை தரிசிக்கலாம். ‘திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்’ என்று தொடங்கி, ‘பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவோம்’ என்று முடியும் பதிகம் இந்த நாயகனைப் பற்றியதுதான். பொதுவாகவே வீட்டிலும் பிள்ளையார் கோயில்களிலுமே இந்த நாமங்களை கூறித்தான் அர்ச்சனையே செய்வார்கள். எனவே, ஆழத்துப் பிள்ளையாரை நம் ஆழ் மனதிற்குள் எப்போதும் பதித்துக் கொள்வோம்.


திருநாரையூர், பெருஞ் சிறப்பு வாய்ந்த தலமாகும். தமிழின் பொற்கிடங்கான தேவாரம் முதலான பதிகங்களை காட்டியருளிய திருத்தலம். பல்லவர்கள், முற்காலச் சோழர்களின் காலத்தில் தேவாரப் பாடல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் கோயில்களில் பாடப்பட்டன. பல பாடல்கள் மறைந்து விட்டிருந்தன. ராஜராஜசோழன்தான், பெரிய குழுக்களை அமைத்து விட்டுப்போன பதிகங்களை தேடச் செய்தான். இதற்காகவே ஏராளமான பொருட் செலவு செய்தான். இப்படி ஈசனோடு கொண்டிருந்த பக்தியால்தான் தன்னையே சிவபாத சேகரன் என்றும் அழைத்துக் கொண்டான். இறுதியில் நம்பியாண்டார் நம்பி எனும் சைவப் பெருந்தகையாரின் பெரும் உதவியோடு பதிகங்களை கண்டுபிடித்து சகலத்தையும் தொகுத்தான். இவ்வாறு ராஜராஜரும் நம்பியாண்டார் நம்பியும் செய்த முயற்சியைத்தான் திருமுறை கண்ட புராணம் என்று உமாபதி சிவாச்சாரியார் பாடி வைத்தார்.

தொடக்கத்தில், ராஜராஜருக்கு ஏன் இப்படி சில பதிகங்கள் மட்டும்தான் கிடைத்துள்ளன. மற்ற பதிகங்கள் எங்கேயிருக்கின்றன என்கிற குறை இருந்து கொண்டேயிருந்தது. அப்போதுதான் திருநாரையூரில் நம்பியாண்டார் நம்பி என்பார் தான் பாலகனாக இருந்தபோதே பாலசந்திரரான பிள்ளையாருக்கு அமுது படைத்து, அவரை உண்ணவும் செய்திருந்தார் என்பதையும் அத்தலத்திலுள்ள பொல்லாப் பிள்ளையாரின் அருள் பெற்றிருப்பதையும் அறிந்தார். உடனேயே அங்கு சென்று, ஆதியில் மகாபாரதம் எழுதிய விநாயகப் பெருமான்தான் இப்போதும் தேவாரம் உள்ளிட்ட திருப்பதிகங்களை கண்டுபிடித்துத் தர விரும்பினான் மன்னன். நம்பியாண்டார் நம்பியை வணங்கி, ‘‘தாங்கள் ஆதிநாயகனோடு அளவளாவுவதாக அறிந்தோம். தாங்கள்தான் பெருமானிடம் பதிகங்கள் எங்குள்ளன என்பதை கேட்டுச் சொல்ல வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டான். பொல்லாப் பிள்ளையாரிடம் அதீத நம்பிக்கை வைத்திருந்த நம்பியாண்டார், பெருமானின் கருணைப் பாதம் பற்றி, ‘‘எங்கேயிருக்கின்றன பதிகங்கள்?’’ என்று கேட்டார். ‘‘ஆதித்தலமான சிதம்பரத்தில், மேற்குப் பிராகாரத்தில் ஓர் அறையில் ஏடுகளாக உள்ளன’’ என்று பிள்ளையார் தெரிவிக்க, அதை மன்னரிடம் நம்பியாண்டார் கூற, எல்லோரும் சிதம்பரம் நோக்கி விரைந்தனர்.

தில்லை மூவாயிரவர்களிடம் இதைத் தெரிவித்தபோது அவர்கள் அனுமதி மறுத்தார்கள். ‘‘தேவாரம் படைத்த மூவர் வந்தால்தான் ஏடுடை அறையைத் திறப்போம்’’ என்றனர். ராஜராஜன் சிலா விக்ரகங்களாக மூவரையும் நிறுத்த, தில்லை அந்தணர்கள் என்ன செய்வதென்று அறியாது முதலில் திகைத்து பின்னர் திறந்தனர். ஏடுகளை கரையான் அரித்திருந்தது. வேண்டியதை மட்டுமே வைத்துவிட்டு, மீதியை மண்மூடச் செய்ததாக அசரீரி மூலமாக ஈசனே அப்போது அறிவித்தார். அதற்குப் பிறகு ஏடுகளை பத்திரமாக பிரித்து, பாடம் செய்து பதிகங்களாக தொகுத்து அளித்தார், நம்பியாண்டார் நம்பி. அவருக்குப் பின்னால் இருந்து எல்லாவற்றையும் செய்து பதிகங்களை கொணர்ந்ததே கஜமுகனான பொல்லாப் பிள்ளையார்தான் என்பதை சொல்லத்தான் வேண்டுமா? திருப்பதிகங்களை அளித்த வேழ முகத்தோனை மறவாது தொழுவோம். திருநாரையூர், சிதம்பரத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில்  உள்ளது.

திருக்கடையூர் கள்ளவாரணப் பிள்ளையார்

சிறந்த சிவபக்தனான மார்க்கண்டேயனை எமன் பாசக்கயிற்றால் சுருக்கிட்டார். ‘என் பக்தனையா பிடித்திழுத்தாய்’ என்று ஈசன் கொதித்தெழுந்தார். எமனான காலனையே சம்ஹாரம் செய்து காலசம்ஹாரமூர்த்தியாக இத்தலத்தில் அருட்கோலம் காட்டினார். எமனால் தீண்ட முடியாத தலமாக இது மாறியது. மேலும் ஈசனின் திருப்பெயரே அமிர்தகடேஸ்வரர் என்பதாகும். அம்பாளின் திருப்பெயரோ அபிராமியன்னை. அபிராமி பட்டர் நெக்குருகி துதித்த ஞானதேவதை இவள்.

ஒருமுறை தேவர்கள் விநாயகப் பெருமானை துதிக்க மறந்து, அமிர்தத்தை அடைய நினைத்தனர். கொழுக்கட்டைக்குள் பூர்ணமான அமுதத்தை ஏந்தி நிற்கும் விநாயகரை மறந்து, அமுதத்தைப் பெற முடியுமா என்ன? அமுதம் வேண்டும் என்கிறபோதே அதை கையில் கொண்டிருக்கும் விநாயகப் பெருமானும் நினைவுக்குள் வர வேண்டாமா? தன்னை நினைக்க மறந்த தகப்பனையே மண்டியிட வைத்த பெரிய கடவுளல்லவா அவர். எனவே, தேவர்களும் திசை தவறினார்கள். அதனால் ஆதிநாயகன் அமுதத்தை மறைத்தான். அதுவும் அமுத லிங்கமாக தன் தந்தை உறையும் அமிர்தகடேஸ்வரன் ஆட்சி செய்யும் தலத்திலேயே தன் லீலையை நிகழ்த்தினான்.

தேவர்கள் தொடர்ந்து தேடினார்கள். ஈரேழு லோகங்களிலும் அலைந்தார்கள். யாரை முதலில் தொழவேண்டுமோ அவரைத் தொழ மறந்தோமே என்று இறுதியாகத்தான் ஞானம் உதித்தது. உடனே, விநாயகரின் பாதம் பணிந்தார்கள். ஆதிநாயகன் அமுதக் கும்பத்தை கொடுத்தான். தேவர்கள் ‘இனி உம்மை மறக்காது துதிப்போம்’ என்றனர். இவ்வாறு விகடமாக பிள்ளையார் லீலை செய்த தலமே திருக்கடையூர். இவ்வாறு லீலைசெய்த தலங்களை ‘விகட விநாயகத் தலங்கள்’ என்பார்கள். அப்படி விகடமாகவும் விவேகத்தோடும் நிகழ்த்திய லீலையாதலால் கள்ளவாரணப் பிள்ளையார் எனும் திருட்டு பெயரையும் தன்னோடு விளையாட்டாகவே இத்தலத்தில் சேர்த்துக் கொண்டார் இவர். ஈசனின் சந்நதிக்கு வலதுபுறத்தில் நந்திக்கு அருகேயுள்ள வெளிப் பிராகாரத்தில் கையில் அமுத கலசத்தை ஏந்தியபடி மறைந்திருக்கிறார், இந்த உள்ளம் கவர் கள்வன். மயிலாடுதுறையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் திருக்கடையூர் உள்ளது. பொதுவாகவே இங்கு அறுபதாம் கல்யாணம் என்கிற சஷ்டியப்த பூர்த்தி திருமணத்தை நடத்துவர்.



ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பட்டாபிஷேகம் நிறைவுற்றது. விபீஷணன் உள்ளமும் கண்களும் குளிரக் குளிர ஸ்ரீராமரையும் சீதாப் பிராட்டியாரையும் தரிசித்தான். புறப்பட வேண்டுமே என்று கொஞ்சம் வருத்தமுற்றான். ஸ்ரீராமரும் பிரிய மனமிலாது விடையளித்தார். ஏதேனும் கொடுக்க வேண்டுமே என்று நினைத்தார். தன்னுடைய நினைவுப் பரிசாக தன் குலப்பதியான ஸ்ரீரங்கநாதரை அளித்தார். விபீஷணன் அகமகிழ்ந்து ஏற்றான். அயோத்தியிலிருந்து புறப்பட்டு திரிசிரபுரம் எனும் இன்றைய திருச்சிக்கு வந்தான். அகண்ட காவிரியையும் சுற்றிலும் இருந்த எழில் வனப்பையும் கண்டு மகிழ்ந்தான். அங்கேயே சற்று ஓய்வெடுக்கவும் நினைத்தான்.

காவிரிக்கு அருகேயே அங்கு சிறுவனாக வந்திருந்த விநாயகரிடம் ரங்கநாதரின் சிலையை கொடுத்து விட்டு சென்றான். இத்தலத்தில்தான் இந்த ரங்கநாதர் பிரதிஷ்டையாக வேண்டுமென்று அந்த ஞானமுதல்வனே தீர்மானித்துவிட்டான் போலிருக்கிறது! ஏனெனில் இப்போது விபீஷணன் ஓய்வுபெற வந்திருக்கும் கரையைத் தொட்டுக்கொண்டு ஓடும் காவிரியை கொண்டு வந்ததே பிள்ளையார்தானே! காக்கை உருவில் சென்று அகத்தியரை ஏமாற்றி அவர் கமண்டலத்திலிருந்து நீரை தட்டி விட்டவரே இவர்தானே! அதுபோல இங்கும் ஓர் விகட லீலையை நிகழ்த்தினார். விபீஷணன் கைகளில் கொடுத்த ரங்கநாதரை அங்கேயே வைத்தார். மறைந்தார். அருகேயுள்ள மலையின் உச்சியில் சென்று அமர்ந்து கொண்டார்.

விபீஷணன் திரும்ப வந்தான். சிறுவனை காணவில்லையே என்று அதிர்ந்தான். அருகேயே ரங்கநாதர் பிரதிஷ்டை ஆகியிருப்பது பார்த்து திகைத்தான். சரி, ரங்கநாதரை எடுத்துச் செல்லலாம் என்று நினைத்து முயன்றபோது அவ்வாறு செய்ய இயலவில்லை. இது அந்த ஆதிநாயகனின் லீலைதான் போலும் என்றுணர்ந்து அரங்கனை அங்கேயே - ஸ்ரீரங்கத்திலேயே விட்டுச் சென்றான். சிலையைப் பார்த்துக்கொள்வதாகச் சொன்ன சிறுவன் மலையின் மீதுள்ளதை அறிந்த விபீஷணன் அங்கு சென்று, ‘‘ஏன் அப்படி கீழே வைத்தாய்?’’ என்று பொய்க்கோபம் காட்டி குட்டு வைத்ததாகவும் உச்சிப் பிள்ளையாரின் தலையில் இன்றும் அந்த குட்டின் வடு உள்ளதாகவும் சொல்வார்கள். உச்சி என்பது எல்லாவற்றையும் கடந்து மேலேயுள்ள மகாசக்தி என்றும் பொருளுண்டு. திருச்சியின் அடையாளமாகவே இந்த உச்சிப் பிள்ளையார் ஆலயம் கொண்ட மலைக்கோட்டை அமைந்துள்ளது. காவிரியையும் ஸ்ரீரங்கத்தையும் இன்று முழு உலகமுமே தரிசிக்கச் செய்தவரே விநாயகப் பெருமான்தான். ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த குணாபரன் என்கிற மகேந்திர பல்லவர் ஆட்சியில் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆலயத்தின் கீழேயே தேவாரப் பாடல் பெற்ற தாயுமானவர் கோயிலும் மிகவும் சக்தி வாய்ந்த மாணிக்க விநாயகர் சந்நதியும் உள்ளன. உச்சிப்பிள்ளையை நினைக்க மெச்சும் வாழ்வு அமையும் என்பது அறிஞர்கள் வாக்கு.



‘அண்ணா’ என்றால் ‘தலைவன்’ என்று பொருள். திரு அண்ணா மலை என்றால் எல்லா மலைகளுக்கும் அரசனாக விளங்கும் மலை என்று அர்த்தம். ஏனெனில், இங்கு சிவன் மலையாக மாறியிருக்கிறார். அதனால்தான் ‘கிரியுருவாகிய கிருபைக் கடலே’ என்று பகவான் ஸ்ரீரமணர் உள்ளிட்ட ஞானியர் போற்றுகின்றனர். பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் ஈசனின் அடிமுடியை காணும் போட்டி முளைத்தது. பிரம்மா பறவையாகவும் விஷ்ணு வராகராகவும் உருவம் கொண்டார்கள். பறவை, ஈசன் முடி காணும் பொருட்டு, விண்ணுயறப் பறக்க, வராகர் ஈசன் அடி காணும் பொருட்டு பூமியை குடைந்து சென்றார். இருவராலும் ஈசனின் முடி-அடியைக் காண இயலவில்லை. அப்படியே ஈசன் அக்கினி ஸ்தம்பமாக நின்றான். இந்த புராண விஷயம்தான் லிங்கோத்பவர் எனும் சிலை வடிவில் பெரும்பாலான சிவாலயங்களின் கருவறை கோஷ்டத்தில் இடம்பெற்றிருக்கிறது. மேலும் அருணகிரிநாதரை முருகப் பெருமான் ஆட்கொண்டருளிய தலமும் இதுவேயாகும். ஞானத்தை தேடும் ஆன்மிக சாதகர்களை காந்தம் போல் இழுக்கும் மலையும் இதுவே. ஆதியில் நெருப்பாக இத்தலம் இருந்தது. ஈசன் கருணை கொண்டு குளிர்ந்து மண் மலையாக மாறினான். எல்லோரையும் அருகே அழைத்து ஞானத்தை ஈந்தளித்துக் கொண்டிருக்கிறான். இத்தலத்திலும், விநாயகரின் அறுபடை வீடுகளில் ஒன்றாக, அல்லல் போக்கும் விநாயகர் சந்நதி அமைந்துள்ளது.

ஆனால், திருவண்ணாமலை கோயிலில் அருளும் செல்வ கணபதி, சிவகங்கை விநாயகர், ஆனைத் திரை கொண்ட விநாயகர், செந்தூர விநாயகர் எனும் சம்பந்த விநாயகர், க்ஷேத்ர விநாயகர் என்று ஐந்து முக்கிய விநாயகர் சந்நதிகள் உள்ளன. இவற்றில் அறுபடை வீடாக எதைக் கொள்ளலாம் எனும் ஐயம் உள்ளது. ஆனாலும், விவேக சிந்தாமணி எனும் பழமையான நூலில் இத்தலத்திலுள்ள ஒரு விநாயகர் மீது இயற்றியிருக்கும் பாடலை ஆதாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ளலாம் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

அல்லல் போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்லகுணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வ கணபதியைக் கைதொழுதக் கால் -‘‘

எல்லாவிதமான தொல்லைகளும் போகும். நன்மை, தீமை போன்றவற்றால் விளையும் வினைகளும் போகும். பிறவி எடுக்கக் காரணமாக உள்ள, அன்னை வயிற்றில் பிறக்கும் தொல்லையும் இனி இருக்காது. அது எப்படியெனில் இந்தத் திருவண்ணாமலை எனும் அருணை கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வ கணபதியை தொழுது கும்பிட்டால் போதும்; உங்களின் சகல வினைகளும் தீர்ந்துபோகும். ஞானம் கைமேல் கனியாக வரும்’’ என்று சொல்கிறது. இப்படியாக அருணை கோபுரத்துள் என்று சொல்லும்போது கோயிலின் முக்கிய வாயிலான கிழக்கு ராஜகோபுரத்திற்குள்ளேயே அருளும் செல்வ கணபதியைத்தான் இப்பாடல் குறிப்பிடுகிறது. ஆகவே இவரே அறுபடைவீட்டு விநாயகர் என்றே கொள்ளலாம். அதோடு, அருணையின் வாயிலிலேயே முதல் தரிசனம் தருபவர், இந்த முழுமுதற் கடவுளாகவே இருப்பதால், இந்த செல்வ கணபதியைத்தான் ஆதியில் ஞானிகளும் தரிசித்து அந்த ஆனந்தத்தில் இந்தப் பாடலை பாடியிருக்கக் கூடும் என்பது துணிபு. அதனால் இந்த செல்வ கணபதியை தரிசித்து வணங்குவோம்; கோயிலின் இதர விநாயகர் சந்நதிகளையும் மறக்காது தொழுவோம்.




 

No comments:

Post a Comment