Sunday 5 June 2016

அழகும், செல்வமும், அருளும் ரம்பா திருதியை!

dce5d8de-f426-40bb-82eb-d1448ad11fe4_S_secvpf


குடும்பத்தில் நலம், கணவன், மனைவி நல்லிணக்கம், குடும்ப முன்னேற்றம், நீண்ட ஆயுள் வேண்டி பெண்கள் விரதம் இருக்கும் நாள் ரம்பா திருதியை. அனைத்து வளங்களும் வேண்டும் என்று ரம்பா பூஜை செய்த நாள் என்பதால், இந்த நாளுக்கு ரம்பா திருதியை நாள் என்று பெயர்.

இந்த நாளில் பெண்கள் விரதமிருந்தால் அவர்கள் விரும்பியது கிடைக்கும் என்பது நீண்ட நெடுங்காலமாக இந்து மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கை.

அள்ள அள்ளக் குறையாத செல்வம் அட்சய திருதியை நாள் போல வேறு ஒருநாள் இருக்கிறதா? என்றால் அது ரம்பா திருதியை நாள் எனக் குறிப்பிடலாம். இந்த நாளில் பெண்கள் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்தும் பல்கிப் பெருகி, அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

அட்சய திருதியை, அனைவருக்கும் ஏற்ற நாள். ரம்பா திருதியை நாள், பெண்களுக்கு மட்டும் உரித்தான நாள். வாழ்வில் அனைத்து வளங்களும் வேண்டும் என்று விரும்பும் பெண்கள், இன்று விரதம் இருந்து, விரும்பிய வரங்களை அடையலாம்.

திருமணமான பெண்களும், திருமணத்தை எதிர் நோக்கியிருக்கும் பெண்களும் இந்த நாளில் விரதம் இருப்பது மிகுந்த பலனைத் தரும். இந்த நாளில் தங்கத்தை வாங்குவதும் வாங்கிய தங்கத்தை அணிந்து லட்சுமியை வணங்குவது மிகவும் சிறப்பானது.

வைகாசி மாத சுக்பல பட்ச திருதியை திதி ரம்பா திருதியை அன்று ரம்பாவிரதம் என்னும் விரதத்தை கடைபிடிக்க வேண்டும். ரம்பா என்றால் வாழை என்ற அர்த்தமும் உண்டு. நாலாபுறமும் வாழை மரங்கள் கட்டி, நடுவில் தேவியின் படம் வைத்து நிறைய வாழைப் பழங்களையும் நெய்யில் பக்குவப்படுத்தப்பட்ட பட்சணங்களையும் நிவேதனம் செய்ய வேண்டும். பூஜை செய்த பிறகு பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் நிவேதனம் செய்த வாழைப் பழங்களையும் பட்சணங்களையும் தானம் செய்ய வேண்டும்.


பெண்கள் தனியாகவோ கணவருடன் சேர்ந்தோ இந்த ரம்பா விரதம் பூஜைச் செய்யலாம். இந்த பூஜை செய்வதால் நல்ல கணவன், நீண்ட ஆயுள், நல்ல குழந்தை நல்ல வீடு, முதலியவற்றை அடைவார்கள். புதிதாக சிறிதளவு நகை வாங்கி பூஜை செய்து அணிபவர்கள், அருகில் உள்ள அம்மன் சன்னதிகளுக்குச் சென்று அம்மன் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வீட்டுக்கு வந்து ஆரத்தி செய்த பிறகு அணிதல் வேண்டும்.

இந்திரன் சபையில் இருந்த மூன்று நடன மங்கையரான ரம்பா, மேனகா, ஊர்வசி ஆகிய மூவருக்கும் ஆடல் போட்டி நடந்தது. மற்ற இருவரை விட, ஆட்டத்தில் அனைவரையும் மெய்மறக்க வைத்துக் கொண்டிருந்தாள் ரம்பா.

இது மற்ற இருவருக்கும் மகிழ்ச்சி அளிக்கவில்லை. ரம்பா தோல்வி அடைய வேண்டும் என்று அவர்கள் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தனர்.

அது போலவே, ஆடிக் கொண்டிருந்த ரம்பா திடீரென கீழே விழுந்து விட்டாள். இதைப் பார்த்த மேனகா, ஊர்வசி, சத்தமாக நகைத்தனர். அவர்களைப் பார்த்து சபையில் இருந்த பலரும் நகைத்து விட்டனர்.

இதை தன் புகழுக்கு களங்கமாக கருதிய ரம்பா, இந்திரனிடம் கோபப்படுகிறாள். இதனால் கோபடைந்த அவர், ரம்பாக்கு சாபம் இடுகிறார்.

பின்னர் மனம் மாறி, சாபத்தில் இருந்து விலகி பழைய நிலையை அடைய வேண்டுமென்றால் திருதியை நாளில் விரதம் இருந்தால் வெற்றி கிடைக்கும் என்ற வழியையும் இந்திரன் சொல்லிக் கொடுக்கிறார். அதன்படி, ரம்பா திருதியை நாளில் விரதம் இருந்து ரம்பா வேண்டிய வரங்கள் அனைத்தையும் பெற்றதோடு இழந்த அனைத்து புகழ், பெருமை போன்றவற்றையும் பெற்றாள்.

அதுபோல, சிவ பெருமானை கணவராக அடைய வேண்டும் என்று விரும்பிய பார்வதி தேவி, அதற்கான நோன்பு குறித்து விசாரித்தபோது ரம்பா திருதியை நாளில் விரதம் இருந்து நீ வேண்டியதைப் பெறுவாய் என்று கூறப்பட்டுள்ளார். அதன்படி ரம்பா திருதியை நாளில் விரதமிருந்து வணங்கிய பார்வதி தேவி, தன் கணவர் பரமசிவனுடன் இணைந்தார் என்றும் நம்பப்படுகிறது.

இப்படி பெண்களுக்கு வரமளிக்கும் நாளாக வாழ்வளிக்கும் நாளாக ரம்பா திருதியை நாள் விளங்குகிறது.

இந்த நாளில் கன்னிப் பெண்கள் லட்சுமி தேவியை பூஜை செய்து வணங்கினால் திருமணத்துக்குத் தேவையான தங்க நகைகள் சேரும் என்பது நம்பிக்கை. திருமணமான பெண்கள் வழிபட்டால் அவர்களுக்கு நீண்ட ஆயுளும் செல்வ வளமும் தேக ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நாள் பெண்களுக்கு சிறப்பு வாய்ந்த நாள் என்று ஸ்கந்த புராணம் முதல் பல புராணங்கள் கூறுகின்றன.

ரம்பா திருதியை நாளில் விரதமிருந்து வணங்கும் பெண்கள் தங்கள் கைகளில் தங்க வளையல்களை அணிந்து பூஜைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற ஐதீகமும் நிலவுகிறது. லட்சுமியின் வடிவமாகத் திகழும் தங்கத்தால் ஆன வளையல்களை அணிந்து லட்சுமி பூஜை, கவுரி பூஜை மேற்கொள்ளும்போது வளையல்களில் இருந்து எழும் இனிய ஓசை லட்சுமி தேவியை கவனத்தை கவர்கிறது என்ற நம்பிக்கையும் உள்ளது. அதனால் தான் பெண்கள் தங்கள் கைகளில் தங்க வளையல்களை அணிந்து ரம்பா திருதியை பூஜைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

ரம்பா திருதியை நாளில் தங்க வளையல்கள் அணிய வேண்டும் என்பது சமீபகாலமாக பெண்களால் கட்டாயம் பின்பற்றப்படும் பழக்கமாக மாறி வருகிறது. அந்தநாளில் கடைகளுக்குச் சென்று தங்க வளையல்களை வாங்கி அணிபவர்களும் உள்ளனர்.

அதற்கு முந்தைய நாட்களில் வாங்கி ரம்பா திருதியை நாளில் தங்க வளையல்களை பூஜித்து அணிந்து கொள்பவர்களும் உள்ளனர். இந்த நாளின் சிறப்பு லட்சுமி விரதம் இருப்பதுதான்.





No comments:

Post a Comment